(பயணக் கட்டுரைகள்) என் கொடைகானல் மனிதர்கள் (7) பெருமாள் மலை! - எல்.ஜோதிகுமார் -
- இலங்கையிலிருந்து வெளிவந்த 'நந்தலாலா' , 'தீர்த்தக்கரை' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான திரு. ஜோதிகுமார் தனது பயணங்களில் சந்தித்த மனிதர்கள் பற்றிய கட்டுரைத்தொடர் 'என் கொடைகானல் மனிதர்கள்! - பதிவுகள்.காம் -
பெருமாள் மலை
நண்பகல் வேளை, நான் பெருமாள் மலை போய் சேர்ந்திருந்தேன், பேச்சிப்பாறை நீர்வீழ்ச்சியை காணும் பொருட்டு. வானம் மேகமூட்டமாய் இருந்தது. மழை அல்லது தூறலாவது, மாலை வேளையில் சாத்தியம் என்பது போல இருந்தது. பிரதான பாதையில் இருந்து கீழிறங்கி, ஓர் இரண்டு கிலோமீற்றர் நடந்தாக வேண்டும் – பள்ளத்தாக்கை நோக்கி. சுகமான நடை. கீழிறங்கும் போது, ஓர் அரை கிலோமீற்றர், ஒரு சிறிய நீரோடையுடன் அதன் கரையை ஒட்டினாற்போல், பெரிய பெரிய மரங்களின் கீழாக, அவற்றின் நிழலில் நடக்கும் போது நீர்வீழ்ச்சியில் இருந்து வரும் மென் காற்று, சில்லென முகத்திலறைந்து நடந்த நடைக்கு மேலும் உற்சாகம் தருவதாயிருந்தது. நீர்வீழ்ச்சி ஒன்றும் அவ்வளவு பிரமாதம் என்று சொல்வதற்கில்லை. செங்குத்தான பாறையில் விழும் ஓர் சிற்றோடை. அவ்வளவே. ஒரு வேளை, வருடத்தின், வேறுபட்ட காலத்தில் நீர் அதிகமாக வந்து விழுவதாய் இருக்கக்கூடும். இருந்தும், முக்கியமானது, நீர்வீழ்ச்சியை கீழிருந்து தரிசிக்கவில்லை என்ற உண்மையாகும். மேலிருந்து பார்க்கும் போது எந்த ஓர் நீர்வீழ்ச்சியும் தன் உண்மை பரிமாணத்தை வெளிப்படுத்தாது என்பது தெளிவு, சில மனிதரை போன்று. அதாவது குறித்த புள்ளிகளில் நின்று நோக்கினாலன்றி, அது நீர்வீழ்ச்சியானாலும் சரி மனிதர்கள் ஆனாலும் சரி அவையவை தத்தம் உண்மை பரிமாணங்களை வெளிப்படுத்துவதில்லை போலும். மொத்தத்தில் அந்த நீர்வீழ்ச்சி, என் கால்களை, கூச வைத்ததுடன் சரி. மடிப்பு மடிப்பாக, ஒன்றன் பின் ஒன்றாக, அடுத்தடுத்து ஒன்றை ஒன்று முந்துமாப் போல் முண்டியடித்து வருமே, பிரமாண்டமான நீர்படைகள்– அதொன்றும் இங்கே காணமுடியவில்லை – இப்படி மேலிருந்து பார்த்ததால். ஆனால், கீழிருந்து பார்த்திருந்தால் கூட, இந்த வற்றிய காலத்தில் அப்படி எதையும் நான் பெரிதாக கண்டிருக்கவே போவதில்லை என்பதும் புரிந்தது. மொத்தத்தில், என்னை கவர்ந்தது நீர் வீழ்ச்சியின் பிரமாண்டம் என்பதை விட இப்பாறையின் பிரமாண்டம் என கூறுவதே சரி. மேலும், இதுதான், பேய்ச்சி பாறையோ என்பதனையும் நான் விசாரித்தேனில்லை – துரதிர்ஷ்டவசமாக.