நனவிடை தோய்தல் (21): நினைத்தாலே இனிக்கும் நினைவுகள் - நயினை நாகபூசணியின் அருளும்,அழகும்! - இந்து.லிங்கேஸ்-
கடல் அலையெழுந்து இடையிடையே வள்ளத்தைப் பக்கவாட்டில் ஆட்டிக் கொண்டேயிருக்குது.காற்றும் கொஞ்சம் கூடுதலா அடிக்குது.கைகூப்பிக் கும்பிட்டுக்கொண்டே,பக்தர்களும் பயத்தில்;"அம்மாளாச்சி,ஈஸ்வரி, பார்வதிதாயே,நாகதம்பிரானே,எங்களைக்காப்பாற்றும்" என வேண்டுதல்களாக உரத்துக்கத்தும் ஒலிகளே வள்ளத்திற்குள் நிரம்பி அதிருது. இந்தச் சத்தத்தையும் தாண்டி,வள்ளத்துக்குள்ள மாறி,மாறி தேவாரம், திருவாசகம் என பெரியவர்கள் பாடிக்கொண்டே இருக்கின்றார்கள்.
" ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே
உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே"என்று
அப்பாவும் பாடுகின்றார்.அதுக்குள்ள இருந்த குழந்தைகளும் வீரென்று கத்தி அழுகின்றன.
இப்படியான அவலம் நிறைந்த சந்தர்ப்பத்திற்கு காரணம்; விடிஞ்சா நயினாதீவு நாகபூஷணி அம்மாள் தேர்.அம்பாளைப்பார்க்க வெளிக்கிட்டு வள்ளத்தில போய்க்கொண்டிருக்கின்றோம்.
அப்போதுதான் இப்படியாக எல்லாமே நடக்குது.
"நான் அப்பவே சொன்னனான்,இந்தக்காத்துக்குள்ள 'இறுப்பிட்டி'யிலயிருந்து இப்ப வெளிக்கிடுவது எனக்கு நல்லதாப்படேல்ல.விடிய நேரத்துக்கு வெளிக்கிட்டாலும் தேர் ஓட்டம் பார்த்திடலாம்.தம்பி நான் சொல்றதைக்கேளுங்கோ"என்று அப்பா வள்ளத்தின்ர சுக்கான் பிடிப்பவரிடம் சொன்னதை நானும் கேட்டனான்.