ஆய்வு: நற்றிணையில் ஊர்ப் பெயர்கள்! - முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (சுழற்சி – 2),குருநானக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை-42. -
முன்னுரை
ஆதி காலத்தில் மனிதர்கள் குகைகளிலும், காடுகளிலும் வசித்து வந்தனர். நாளடைவில் நாகரீக வளர்ச்சியின் காரணமாக ஆற்றங்கரைகளில் வீடுகளை அமைத்துக் கூட்டமாக வாழ்ந்தனர். காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றத்தினால் மக்கள் ஊர், சிற்றூர், பேரூர், நகரம், பட்டினம் என்ற அமைப்பு முறைகளைத் தோற்றுவித்தனர். இதனை அக்காலத்தில் எழுந்த நூல்களில் பதிவு செய்துள்ளனர். தமிழ்மொழிக்குச் செம்மொழி உயர்வினைத் தேடித்தந்த சங்க இலக்கியம் ஒரு தொன்மையான இலக்கியமாகும். சங்க இலக்கியத்தில் ஒன்றான எட்டுத்தொகையில் இடம்பெற்றுள்ள நற்றிணையில் காணப்படும் ஊர்ப் பெயர்கள் பற்றி இக்கட்டுரை அமைந்துள்ளது.
அரிசில்
அரிசிலங்குமரனார் என்னும் புலவர் நற்றிணையில் பாடல் பாடியுள்ளார். அரிசில் என்ற ஊர்ப்பெயர் இவ்வூரைச் சேர்ந்த புலவர் பெயருடன் இணைத்துக் கூறப்பட்ட நிலையில் சங்க இலக்கியங்களில் இப்பெயர் பெறப்பட்டது.
அரிசிலற் தென்றல் அன்ன இவள்
விரை யொலி கூந்தல் விட்டமை கவனே (நற்.141)
என்று அரிலங்குமரன் அரிசிலாற்றைப் பற்றி பாடியுள்ளார். அரிசில் தற்போது தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்தில் தென்கிழக்கே நாலரை மைல் தொலைவில் அரிசிலாற்றங்கரையில் அரிசில் கரைப்புத்தூர் என்ற ஓர் ஊர் உள்ளது.