பகுப்புமுறைத் திறனாய்வினடிப்படையில் குரு அரவிந்தனின் சிறுகதைகள்
- எழுத்தாளர் ‘குரு அரவிந்தன் வாசகர் வட்டம்’ நடத்திய உலகளாவிய திறனாய்வுப் போட்டி - 2023இல் முதற்பரிசு பெற்ற கட்டுரை. -
குரு அரவிந்தன் அவர்கள் சமகாலத்து புலமை பெற்ற எழுத்தாளர்களில் ஒருவர். தமிழ் இலக்கிய படைப்புக்களில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்தவர் என்பதோடு பல துறைகளிலும் சிறந்து விளங்குபவர். இவர் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகக் கொண்டிருப்பினும் தற்போது புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வருகிறார். 'அணையா தீபம்' என்ற சிறுகதையுடன் ஈழநாடு வார மலரில் எழுத்துலகில் புகுந்த இவர் சிறுகதை, கட்டுரை, நாவல், ஒலிப்புத்தகம், மேடை நாடகம், திரைக்கதை போன்ற பல துறைகளிலும் சிறந்து விளங்கி தமிழ் இலக்கிய உலகை அலங்கரித்து வருகிறார். அறிவியல் சார்ந்த படைப்புக்களையும் தந்துள்ளதோடு பல விருதுகளையும் வென்று குவித்த ஒரு ஜனரஞ்சக எழுத்தாளர் ஆவார்.
குரு அரவிந்தன் அவர்களினுடைய சிறுகதை ஒன்றை முதன் முதலில் சிறுகதைகளுக்காக திறக்கப்பட்ட வாட்ஸ்அப் குழுமம் ஒன்றிலேயே காணக் கிடைத்தது. அன்றிலிருந்து குரு அரவிந்தன் அவர்களுடைய சிஷ்யாய் அவருடைய சிறுகதைகளை தேடித் தேடி வாசிப்பதில் நேரத்தை செலவிட்டேன். அவர் கதையை தொடங்கியிருக்கும் பாங்கும் அதன் முடிவில் வைத்திருக்கும் எதிர்பாரா திருப்பமும் என்னை மிகவும் ஈர்த்தது. அனேகமான கதைகள் மிகவும் சுவாரஷ்யமாகவும் விறுவிறுப்புடனும் நகர்த்திச் செல்லப்பட்டிருப்பதைக் கண்டு சில நேரங்களில் ஆசிரியரின் கதைகளில் வரும் கதாபாத்திரமாகவே என்னை நான் மாற்ற முயற்சித்திருக்கிறேன். அந்தளவுக்கு அவரின் படைப்புக்கள் எனக்குள் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தின என்பதை மறுதலிக்க முடியாது. குரு அரவிந்தன் அவர்களினுடைய 'அப்பாவின் கண்ணம்மா' சிறுகதையானது என்னை மிகவும் ஈர்த்த ஒரு படைப்பாகும்.
அந்த வகையில் நான் எழுத விழைந்த இக்கட்டுரையின் பிரதான நோக்கம் குரு அரவிந்தன் அவர்களினுடைய படைப்புக்களை பகுப்புமுறை அடிப்படையில் அலசுவதாகும். அதற்காக நான் சிறுகதைகளை தேர்ந்தெடுத்திருக்கிறேன். குரு அரவிந்தன் அவர்களினுடைய தமிழ்ப் புலமையை பகுப்பாய்வு செய்வதில் எவ்வித நியாயமுமில்லை. ஏனெனில் அதில் தவறுகளை காணவே முடியாத அளவுக்கு அவரின் கற்பனை மற்றும் சொல்லாடல் திறன் பரந்து விரிந்து இருப்பதாகும். இருந்தாலும் ஒவ்வொரு கதையின் மூலமும் அவர் வெளிப்படுத்தியிருக்கும் யதார்த்த மற்றும் கற்பனை விடயங்களை ஒரு ரசிகையாய் தானும் கற்றுக் கொள்ள முனைவதையிட்டு பெருமகிழ்ச்சி அடைகிறேன்.