கோவிட் 19: அறிவியலும், "அவியல்" இயலும்! - யோ.அன்ரனி யூட் -
ஒரு ஐரோப்பிய தமிழ் வானொலியில் இருந்து கொரனா வைரஸ் தொற்றுத் தொடர்பாகவும் தடுப்பு முறைகள் தொடர்பாகவும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துரைக்குமாறு அழைப்பு வந்தது. ஐரோப்பா வாழ் தமிழர்களிடையே கொரனா வைரஸ் விழிப்புணர்வை உருவாக்குவது உயிர்களைக் காக்கும் என நம்பி நானும் கலந்து கொண்டு நிரூபிக்கப் பட்ட விஞ்ஞான மருத்துவத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டேன். சில வாரங்களின் பின்னர் தமிழகத்தில் சின்னக் கலைவாணர் நடிகர் விவேக் மாரடைப்பினால் காலமானார். தடுப்பூசியை முதல் நாள் போட்டுக் கொண்டதால் விவேக் காலமானார் என சமூக வலை ஊடகங்களில் "இணையவெளி டாக்டர்கள்" நோய் நிர்ணயம் செய்ய ஆரம்பித்தார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் நானும் அதே ஐரோப்பிய வானொலியை செவி மடுத்த போது கோவிட் தடுப்பூசிகள் பற்றி விஞ்ஞான, மருத்துவத் தரவுகளுக்கு மாறான கற்பனைகளை ஒலி பரப்பிக் கொண்டிருந்தார்கள். இப்படியான ஒரு "சிறு பிள்ளை வேளாண்மை" நிகழ்ச்சியில் என் பெயரை இணைத்துக் கொண்டமைக்காக என்னை நானே நொந்து கொண்டு இதற்கு என்ன பரிகாரம் செய்யலாம் என யோசித்த படி இதை எழுதுகிறேன்.
எங்கள் தமிழ் ஊடகப் பரப்பில் - அது யூ ரியூப் சனல்களாகவோ அல்லது சில வானொலிகளாகவோ இருப்பினும்- அறிவியலை விட அறிவியல் போல தோற்றமளிக்கும் "அவியல்கள்" மேலோங்கியிருப்பதாக நான் கருதுகிறேன். இதற்கான எண்ணிக்கை ரீதியான (quantitative) தரவு என்னிடம் இல்லாவிட்டாலும், அனுபவ ரீதியான (empirical) ஆதாரங்கள் பல என்னிடம் உண்டு. இந்த போலி அறிவியல் கருத்துகளின் மேலாண்மைக்கு காரணங்கள் எவை, தரவுகளின் அடிப்படையிலான அறிவியலை எப்படி மேலோங்க வைப்பது என்று சுருக்கமாகப் பகிர்வதே இந்தக இரு பாகத் தொடர் கட்டுரையின் நோக்கம்.