லண்டனில் ஆனந்தலயாவின் கலை அஞ்சலி! - நவஜோதி ஜோகரட்னம், லண்டன். -
லண்டனில் மிருதங்க இசையின் தனிப் பெரும் ஆசானாகத் திகழ்ந்த ஸ்ரீ கந்தையா ஆனந்த நடேசன் அவர்கள் கொரோனாவின் ஆரம்பத்தாக்குதலில் மறைந்த செய்தி துரதிஷ்டமானதாகும். குறிப்பாக அவரிடம் மிருதங்கக் கலையைப் பயின்று இன்றும் அக்கலையை ஆர்வத்தோடு முன்னெடுத்துக் கொண்டிருக்கும் மாணவர்களின் குமுறல்கள் மனதை உருக்கும் செய்தியாகும். இவ்விதம் அவரிடம் மிருதங்ககலையைப் பயின்ற இளம் கலைஞர்கள் அவரது 2ஆவது வருட நினைவை கலை வடிவங்களாக்கி பல்வேறு தடங்கல்களின் பின்னர் வெளிப்படுத்தியிருந்தார்கள்.
கடந்த வாரம் லண்டன் ‘ஹரோ ஆட் சென்ரறில்’ ஸ்ரீ ஆனந்தநடேசன் அவர்களிடம் மிருதங்கக்கலை பயின்ற மாணவர்கள் ஒன்றிணைந்து கலை நிகழ்வை நடாத்தியமை தமது குருவின் மீதுள்ள அன்பை நினைவிருத்தி விளம்பி நின்றது. ஸ்ரீ ஆனந்தநடேசன் அவர்கள் மிருதங்கக்கலை மாத்திரமன்றி கஞ்சிரா, கடம், முகர்சிங், தபேலா, தவில் போன்ற தாள வாத்தியங்களிலும் தேர்ச்சி பெற்றவராவார். இத்தகைய கலைகளை தமது மாணவச்செல்வங்களுக்கும் பயிற்றுவித்திருக்கிறார் என்பதை இவருக்கான அஞ்சலியின்போது கலை ரசிகர்களால் அவதானிக்க முடிந்தது.
ஸ்ரீ ஆனந்த நடேசன் அவர்களின் அன்பு மகள் சௌமியா அவர்களின் முன்னெடுப்பில் நடாத்தப்பட்ட இசைக்குழுவில் மகள் சௌமியாவின் பாடலுக்கு, அவரின் தந்தையின் மாணவர்கள் தத்தமது கலைவடிவங்களினூடாக அஞ்சலித்து அசத்தியிருந்தமை நெஞ்சை உருக்கியதொன்றாக அமைந்திருந்தது. ஸ்ரீ ஆனந்தநடேசன் அவர்களால் மிருதங்க அரங்கேற்றம் கண்டுகொண்ட இளம்கலைஞர்கள் இணைந்து இசைக்கருவிகளை நேர்த்தியாகவும், இணக்கமுடனும் வாசித்து செவிக்கினிய இசையை அமைத்திருந்தமை மிகப் பாராட்டுக்குரிய விடயமாகும். இந்தவேளையில் எமது மகன் அகஸ்ரி யோகரட்னத்தின்; மிருதங்க அரங்கேற்றத்தை அவனின் பதினாறாவது வயதில் ஸ்ரீ ஆனந்தநடேசனின் அவர்களின் பதினாறாவது அரங்கேற்றத்தில் அமைந்து மிகச் சிறப்பாக லண்டனில் இடம்பெற்றதை இங்கு நன்றியுடன் குறிப்பிட விரும்புகின்றேன்.