காலத்தால் அழியாத கானம் - 'கவிதை அரங்கேறும் நேரம்' - ஊர்க்குருவி -
'அந்த 7 நாட்கள்' திரைப்படத்தில் இடம் பெறும் இப்பாடல் எனக்குப் பிடித்த பாடகர் ஜெயச்சந்திரனின் இன்னுமொரு பாடல். மெல்லிசை மன்னரின் இசையில் , எஸ்.ஜானகியுடன் இணைந்து பாடும் இப்பாடலை எழுதியவர் கவிஞர் வாலியோ, கவிஞர் கண்ணதாசனோ அல்லர். எனக்கு அறிமுகமில்லாத கவிஞர் குருவிக்கரம்பை சண்முகம். இப்பாடலை அடிக்கடி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச் சேவையில் அந்திப்பொழுதுகளில் எண்பதுகளில் கேட்டு மகிழ்ந்திருக்கின்றேன். ஆறு மணியுடன் தமிழ்ச்சேவையை நிறுத்தி விடும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் அப்பொழுதுதான் அதனை இரவு பத்து மணி வரையென்று நினைக்கின்றேன் நீடித்திருந்தது. 'பொக்கற் சைஸ் டிரான்சிஸ்டர் ரேடியோ'வில் அச்சேவையில் ஒலிக்கும் பாடல்களை எப்பொழுதும் கேட்டுக் கொண்டிருந்த காலகட்டம். இப்பாடலை எழுதிய கவிஞர் குருவிக்கரம்பை சண்முகம் வேறு ஏதாவது பாடல்கள் எழுதியிருக்கின்றாரா?