சிறுகதை ஒன்றே வேறே - ஸ்ரீரஞ்சனி -
சருகுகள் சரசரத்திருந்த தரையை நிர்மலமற்ற வெண்மையாக்குவேன் எனக் கங்கணம் கட்டிக்கொண்டதுபோலத் தொடர்ந்து பனி கொட்டிக்கொண்டிருந்தது.
உண்மையிலேயே இப்படிப் பனியில் நனைந்திருந்தால், “புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது, இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது, இங்கு சொல்லாத இடம்கூடக் குளிர்கின்றது,” எனச் சந்தோஷமாக அரவிந்தசாமியும் மதுபாலாவும் ஆடிப்பாடியிருக்க முடியுமா? இந்தப் பனிக்குளிரை அனுபவித்திருந்தால் அந்த வரிகளை கவிஞர் வைரமுத்து நினைத்துக்கூடப் பார்த்திருப்பாரா என அவள் நினைத்துக்கொண்டாள்.
கையுறைகளை ஊடறுத்து நரம்புகளைச் சீண்டிய அந்தக் குளிரில் அவளின் விரல்கள் ஜில்லிட்டன. கைகளை ஜக்கற் பொக்கற்றுக்குள் வைத்துக்கொண்டு நடக்கலாமென்றாலும் முடியவில்லை, குவிந்திருந்த பனிக்குள் புதைந்துகொண்டிருந்த காலடிகளை மேலெடுப்பதற்குப் பெரிதாகப் பிரயத்தனம் வேறு செய்யவேண்டியிருந்தது. விழுந்துபோய்விடுவேனோ என்ற பயம் அவளைப் பற்றிக்கொண்டது. ஜக்கற்றுக்குள் கைகளை வைப்பதும் எடுப்பதுமாக, பார்த்துப் பார்த்து அடி மேல் அடி வைத்து அவள் மெதுவாக நடந்தாள்.
எதிர்திசையில் வேகமாக வீசிக்கொண்டிருந்த காற்று, அவளின் முகத்திலும் பனியை வீசி அழகுபார்த்தது. பார்வைப்புலத்தை மங்கலாக்கிக் கொண்டிருந்த நீர்த்திவலைகளுடன் போராடிக்கொண்டிருந்தவளைக் கடந்துசென்ற பெரிய வான் ஒன்று குவிந்திருந்த பனியை அவளின்மீதும் வீசியிறைத்து அகன்றது.
வாகனத்தரிப்பிடத்திலிருந்து ஒஷாவோ ஆஸ்பத்திரியின் அந்தப் புற்றுநோய்ப் பிரிவை அடைவதற்கிடையில் அவளுக்குப் போதும் போதுமென்றாகிவிட்டது. மூக்கால் தண்ணீர் ஓடியது. கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.