கம்பராமாயணத்தில் சுவை அணி - முனைவர் க.மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II), மீனம்பாக்கம், சென்னை 600061, -
முன்னுரை’அணி’ என்ற சொல்லுக்கு ’அழகு’ என்பது பொருள். கம்பர் தம் காப்பியத்தில் வேற்றுமை பொருள் வைப்பணி, மடக்கணி, ஒப்புவினை புணர்ப்பு அணி, ஏகதேச உருவக அணி, உருவக அணி, உவமை அணி, அலங்கார அணி, குறிப்பு மொழி அணி, தன்மை நவிற்சி அணி, உடன் நவிற்சி அணி, பிற குறிப்பு அணி, மேல் மேல் முயற்சி அணி, அலங்கார வினோதங்கள், அவநுதி அணி, எடுத்துக்காட்டு உவமை அணி, உயர்வு நவிற்சி அணி என பல அணிகளைக் குறித்துள்ளார். அவற்றுள் ஒன்று சுவை அணி அணியாகும். தண்டியலங்காரத்தின் சுவை அணி குறித்துக் கூறியுள்ள கருத்துக்களை கம்பராமாயணத்தின் வழி ஆராய்வோம்.
சுவை அணி
உள்ளத்தில் நிகழும் தன்மை புறத்தில் புலனாக விளங்க எட்டு வகையான மெய்ப்பாட்டாலும் நடப்பது சுவை எனும் அலங்காரமாகும்.
“உண்ணிகழ் தன்மை புறத்துத் தோன்ற
எண் வகை மெய்ப்பாட்டின் இயல்வது சுவையே”
(தண்டியலங்காரம் 42)
சுவை அணியின் வகை
உள்ளத்தில் தோன்றும் உணர்வுகளை மெய் வழியாகப் புலப்படுத்தும் தன்மை மெய்ப்பாடு என விளம்புதலாயிற்று. இது எட்டு வகைப்படுதலாகும். இத்தன்மையினை
“அவை தாம்
வீரம் அச்சம், இழைப்போடு வியப்பே
காமம் அவலம் உருத்திரம் நகையே”
(தண்டியலங்காரம் 43)
இதையேத் தொல்காப்பியர் மெய்ப்பாட்டியலில்
“நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று
அப்பால் எட்டாம் மெய்ப்பாடு என்ப”
(தொல்காப்பியம்-மெய்ப்பாட்டியல் 3)
என்று கூறியுள்ளார்.