ஆய்வு: தமிழ் பிராமி கல்வெட்டு விளக்கம்! - சேசாத்திரி -
தமிழ் பிராமி கல்வெட்டுகள் சற்றொப்ப 38 ஊர்களில் மலை சார்ந்த குகைத் தளங்களிலும் திறந்தவெளியிலும் கண்டறியப்பட்டு உள்ளன. இம் 38 இடங்களில் சற்றொப்ப 100 கல்வெட்டுகள் அறியப்பட்டுள்ளன. ஒரே இடத்தில் குறைந்தது 1 முதல் அதிகமாக 12 கல்வெட்டுகள் வரை என இம் 38 இடங்களில் காணப்படுகின்றன. தமிழ் பிராமி கல்வெட்டுகள் தமிழ் மொழியின் தொன்மைக்கும் தமிழ் எழுத்து வட்டெழுத்தாகி அடுத்து சோழர் கால எழுத்தாகி பின் இந்நாள் எழுத்தாக உருத்திரிந்ததற்கு சான்றாக உள்ளன. திரு. ஐராவதம் மகாதேவன் பெருமுயற்சி எடுத்து இவற்றை எல்லாம் அடர்வு செய்து தென்னகத்திற்கு சமணர் வச்சிர நந்தி தலைமையில் வடக்கே இருந்து வந்ததை ஒட்டி தமிழகத்தில் மதுரையைச் சுற்றியுள்ள இடங்களில் அமைந்த தமிழி கல்வெட்டுகள் கி.மு. 2 ம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ம் நூற்றாண்டு வரையான காலத்தன என்று காலவரையறை செய்தார். எனினும் புதுக்கோட்டை த் தமிழ் பிராமி நடுகல் கல்வெட்டு கங்கரை குறிப்பது 5 -ம் நூற்றாண்டு வரை தமிழ் பிராமியின் பயன்பட்டை உறுதி செய்கின்றது. இக்கல்வெட்டுகள் உள்ள தளங்களை சமண துறவிகளின் படுக்கை என்று ஐராவதம் மகாதேவன் கூறினாலும் மேட்டுப்பட்டி தமிழி கல்வெட்டு "அமணன் மதிரை அத்திரன் உறை உதயனஸ" என்பதிலும், புகளூர் தமிழி கல்வெட்டு "மூதா அமண்ணன்" என்பதிலும் தான் சமணர் பற்றிய தெளிந்த குறிப்பு உள்ளது மற்றவற்றில் அவ்வாறு தெளிவாக இல்லை. இதனால் இவற்றை ஆசீவகர் படுக்கைகள் என்று பேரா. க. நெடுஞ்செழியன் கூறுகிறார். ஆனால் அதற்கும் தெளிவான கல்வெட்டுக் குறிப்பு ஏதும் இல்லை. இக்குன்றுகளின் இருப்பிடத்தில் பிற்காலத்தே சமண புடைப்பு சிற்பங்கள் அமைந்ததாலும் ஐயனார் கோவில்கள் அமைந்ததாலும் இக் கல்வெட்டுகள் சமணர்க்குரியன ஆசீவகர்க்குரியன என்பது தவறு. இக்கல்வெட்டு விளக்கம் அந்த தவற்றை வெளிப்படுத்தவே அமைந்ததாகும். இக்குகைகளில் அமைந்த கற்படுக்கைகள் மருத்துவம் மேற்கொள்ளப்பட்ட நோயாளிகளுக்கான படுக்கைகள் என்றே எண்ணத் தோன்றுகின்றன. ஏனென்றால் முற்றும் துறந்த சமண, ஆசீவக முனிவர் ஒரே இடத்தில் நிலையாகத் தங்கப்போவதில்லை. இடைவிடாமல் இடம்பெயர்வது தான் முற்றத் துறந்தவரின் பண்பு.