சிறுகதை: துலக்கம் - கன்பரா யோகன் -
மாலை வெயில் திண்ணையில் விழுந்திருந்தது. சின்னப்பா திண்ணையில் ஏற்றி வைத்திருந்த சைக்கிளை படியால் இறக்கி முற்றத்தில் நிற்பாட்டி விட்டு பெடலுக்கு மேலே V வடிவில் சந்திக்கும் உலோகத் தண்டுகளுக்கிடையில் அமுக்கி வைத்திருந்த அழுக்குத் துணியை எடுத்து துடைக்கத் தொடங்கினான். வாயில் சிகரட் புகைந்து கொண்டிருந்தது.
அது திண்ணையில் ஏற்றி வைக்குமளவுக்கு அப்படி ஒரு புது சைக்கிள் இல்லை. ஆனால் முற்றத்தில் நின்றால் அயலிலுள்ள நாய்கள் வந்து சில்லில் மூத்திரம் பெய்து விட்டுப் போகின்றன. அதனால் றிம்மில் பொருத்தியுள்ள கம்பிகள் கறல் பிடித்துப் போகின்றன.
தகர பேணிக்குள்ளிருந்த கொஞ்சத் தேங்காயெண்ணெய்க்குள் போத்தலிலிருந்த மண்ணெணெயில் கொஞ்சம் கலந்தான். மண்ணெணெயின் நாற்றம் மூக்கிலடித்தது. வெள்ளைத்துணியைப் பேணிக்குள் ஒற்றி மட்காட் வளைவுகளைத் துடைக்கத் தொடங்கியபோது பொக்கற்றுக்குள் இருந்த கைத்தொலைபேசி அழைப்பு நெஞ்சில் கிறு கிறு என்று கீச்சம் காட்டியது.
இடக்கையால் அதை எடுக்க தொலைபேசியில் கோமதி
" சின்னா ஒருக்கா ஆஸ்பத்திரிக்குப் போய் வாடா" அவள் இப்படிக் கெஞ்சுவதற்கு ஒரு ராகம் இழுத்தாள்.
“ஏன் உன்ரை புருஷன் எங்கை?"
“கொழும்புக்கு அவர் வான் கொண்டு போய் ஒரு கிழமையா இன்னும் வரேல்லை. அங்கயிருந்து வேற ஒரு ஹயர் வந்ததால கதிர்காம பக்கம் போக வேண்டி வந்திட்டுதாம்”.