நவஜோதி ஜோகரட்னம் (லண்டன்) கவிதைகள்!
1. உலகின் பெரிய ஆயுதம்
காலையில் கண்விழிக்கிறேன்
வெற்றிடம் தான் என் வீடாகத் தெரிகிறது
பானைக்குள் இருக்கும் வெற்றிடம்போல்...
குளிப்போடு தண்ணீரை ரசிக்கிறேன்
குளியலறையில் தனிமையில் தினசரி
மர்மமான தண்ணீர்
மூடித் திறக்கிறது பிரபஞ்சம்
விபரிக்க முடியாத விந்தை அது!
குளியலறையில் காமங்களும்
கண்ணீர்ப்பாடல்களின் முணுமுணுப்பும் தான்!
நீருக்குள் என் பாடல்களை ஓசையாக்குகின்றேன்!
சாதாரணம் அது அசாதாரணம் போல் தெரிகிறது!
நீரின் ஓசையுள் என் கோபத்தையும் இசைக்கிறேன்
நிகழ்வுகள் சுருதியாகி கவிதைக்குள் இனிக்கிறது
தனிமை காணும் கனவு வெறும் வனப்பூச்சி அல்ல
தண்ணீரைத் தொடும் அழகிய என் அனுபவம்
அந்த ரசனை! ஆ...அற்புதம்!
தண்ணீர்தான் உலகின் மிகப் பெரிய ஆயுதம்
திறக்க முடியாத யன்னல்களை
மூடிவிரிக்கும் உலகின் கண்ணாடி அந்தத் தண்ணீர்தான்!
30.1.2022.