திருப்பூர் கிருஷ்ணனின் “சிவப்பாய்ச் சில மல்லிகைகள்” சிறுகதையில் குடும்ப உறவுநிலைகளும் கதைமாந்தரின் பண்புகளும் - முனைவர் கா.சுரேஷ், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (சுயநிதிப் பிரிவு), பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி, அவிநாசி ரோடு, கோயம்பத்தூர் - 14. -
தமிழ்மொழியில் தோன்றிய படைப்புகளில் ஆசிரியர்கள் மக்களின் சமுதாயப் பிரச்சினைகளையும், வாழ்வியல் நிலைகளையும் நேரில் கண்டும், தன் வாழ்வியல் நிகழ்ந்த நிகழ்வுகளையும் தம் சிறுகதைகளின் மூலம் வெளிப்படுத்துகின்றனர். அத்திறன் மிக்கவர்களில் திருப்பூர் கிருஷ்ணன் இலக்கியத் துறைகள் அனைத்திலும் ஈடுபாடு கொண்டு ஐநூறுக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரின் சிறுகதைகளில் குடும்ப வாழ்வியல், சமுதாய வாழ்வியலை மையமாகக் கொண்டும், பெரும்பாலான சிறுகதைகளில் பெண் கதைமாந்தரை முதன்மைப்படுத்தி எழுதியுள்ளார். ‘சிவப்பாய்ச் சில மல்லிகைகள்’, ‘பட்டொளி வீசி’ ஆகியன இவரின் சிறுகதைத் தொகுப்புகளாகும். 1981 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ‘சிவப்பாய்ச் சில மல்லிகைகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பை ஆராய்வதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.
சிறுகதை
அளவிற் சிறிதாக இருப்பது சிறுகதை, ஏறத்தாழ ஒரு மணி நேரத்திற்குள் படித்து முடிக்கக் கூடியதாகவும், ஒரே மூச்சில் படித்து முடிக்கக் கூடியதாகவும் இருப்பனவெல்லாம் இதிலடங்கும் என்பர். ஆனால் கால எல்லை மட்டும் அதன் முழு இலக்கணம் அன்று. சிறுகதை என்பது வாழ்க்கையில் நிகழும் ஒரு நிகழ்ச்சியை அல்லது ஓர் உணர்ச்சியைக் கருவாகக் கொண்டு பின்னப்படுவதாகும். ஒரு பாத்திரம், ஒரு மனவுணர்ச்சி, ஒரு நிகழ்ச்சி என ஏதேனும் ஒன்றை மட்டுமே நிலைக்களனாக வைத்துக் கொண்டு படைப்பது சிறுகதையாகும்.
சிறுகதை என்பது வாசிப்பவனின் மனதில் சோர்வு இல்லாமலும், அக்கதை படித்து முடிக்கும் வரை, அவன் மனதில் பல்வேறு சமுதாயக் கருத்துகளை எடுத்துக் கூறும் இலக்கிய வகை எனலாம்.