அஞ்சலி: 'சித்திரா' மரியதாஸ் - வ.ந.கிரிதரன் -
- 'சித்திரா' மரியதாஸ் -
எழுத்தாளர் சிவராசா கருணாகரன் யாழ் சித்திரா அச்சக உரிமையாளராக எண்பதுகளில் அறியப்பட்ட 'சித்திரா' மரியதாஸ் அவர்கள் 8.11.2024 மறைந்த செய்தியினைப் பற்றிய குறிப்பினைப் பகிர்ந்திருந்தார். இவர் இழப்பால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்.
'சித்திரா' மரியதாஸ் அவர்களுடனான எனது தொடர்பு மிகவும் குறுகியது, ஆனால் நினைவில் நிலைத்து நிற்பது. 1980/1981 காலகட்டத்துக்குரிய மொறட்டுவைத் தமிழ்ச் சங்கத்தின் இதழான 'நுட்பம்' சஞ்சிகையின் இதழாசிரியர் குழுத்தலைவராக இருந்த சமயம், அதற்கு ஆக்கங்கள் தேடி யாழ் பல்கலைக்கழகத்துக்கும் சென்றிருந்தேன். அங்கு அப்பொழுது பணியாற்றிக்கொண்டிருந்த விரிவுரையாளர் மு.நித்தியானத்தனைச் சந்தித்தேன்.
அப்பொழுது அவர் யாழ் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த மலையகத் தமிழ் மாணவர்களின் அமைப்பொன்று வெளியிட்ட தமிழ்ச் சஞ்சிகையொன்றினைக் காட்டினார். அதன் வடிவமைப்பு, அச்சமைப்பு பிடித்துப்போகவே அதை அச்சடித்த அச்சகம் பற்றிக் கேட்டேன். அப்பொழுதுதான் அவர் சித்திரா அச்சகம் பற்றிக் குறிப்பிட்டார். அங்கே நுட்பம் சன்சிகையினை அச்சடிப்பதற்கு முடிவு செய்தேன்.