படித்தோம் சொல்கின்றோம்: அருந்ததியின் ஆண்பால் உலகு நாவல்! ஆணாதிக்கத்தினால் வஞ்சிக்கப்பட்ட பெண்ணின் உண்மைக் கதை ! - முருகபூபதி -
கனடாவிலிருந்து இயங்கிவரும் வசந்தம் தமிழ் உளவளத்துணை நிலையம் மெய்நிகர் வழியாக நடத்திவரும் தொடர் கருத்தரங்கில், கனடாவில் குடும்ப வன்முறை பற்றிய ஒரு நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்தவேளையில்தான், பிரான்ஸில் வதியும் எழுத்தாளர் நாடகக் கலைஞர் அருந்ததி எழுதிய ஆண்பால் உலகு நாவலையும் படித்து முடித்திருந்தேன். மெய்நிகர் கருத்தரங்கும், இந்த நாவலும் குடும்ப வன்முறை பற்றியே பேசியிருந்தமையால், அதற்கு அடிப்படைக் காரணங்கள் என்ன? என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. குடும்ப வன்முறையினால் (Domestic Violence) பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள்தான். அதற்கு ஆணாதிக்கம் மாத்திரம் காரணமில்லை. பெண்களின் அறியாமையும் மிக முக்கிய காரணம்.
கனடாவிலிருந்து இலக்கிய சகோதரி பார்வதி கந்தசாமி நடத்திய குடும்ப வன்முறை தொடர்பான கருத்தரங்கிலிருந்தும், அருந்ததி எழுதிய ஆண்பால் உலகு நாவலிலிருந்தும் பெண்களின் அறியாமையை ஆண்களின் உலகம் எவ்வாறு தனக்கு சாதகமாக்கிக்கொண்டு தப்பித்துக்கொள்கிறது என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.
அருந்ததியின் இயற்பெயர் அருளானந்தராஜா இரத்தினம். யாழ்ப்பாணம் நாவாந்துறையில் ஒரு மத்தியதரக்குடும்பத்தில் பிறந்திருக்கும் இவர், அளவையியல் ஆசிரியராகவும் பணிபுரிந்திருக்கும் நாடகக் கலைஞர், நாடக பிரதியாளர், இயக்குநர். 1984 இல் பிரான்ஸுக்கு புலம்பெயர்ந்து சென்றபின்னரும் தனது உள்ளார்ந்த ஆற்றல்களை வெளிப்படுத்தி வருபவர். பிரான்ஸிலும் நாடகங்கள் எழுதி இயக்கி தயாரித்து மேடையேற்றியவர். சமாதானத்தின் பகைவர்கள், இரண்டாவது பிறப்பு, கடல் முதலான கவிதைத் தொகுப்புகளை வரவாக்கியிருக்கும் அருந்ததி, முகம் என்ற திரைப்படத்தையும் ( 1996 ) எழுதி இயக்கியிருப்பவர். ஆண்பால் உலகு அருந்ததியின் முதல் நாவல். 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு கருப்புப்பிரதிகள் பதிப்பகத்தினால் வெளியாகியது. இந்நாவல் முழுக்க முழுக்க உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் எழுதப்பட்டிருக்கிறது.