தொடர் கதை: கலிங்கு (2012 -1) - தேவகாந்தன் -
1
2012 ஏப்ரல் 12ம் தேதி வியாழக் கிழமை காலை 10 மணியளவில் வவுனியா பூங்காப் பகுதி தடை முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட முப்பத்தொரு பெண்களில் சங்கவி ஒருத்தியாக இருந்தாள். அவர்களில் நான்கு பேர் குழந்தைகளோடு இருந்தார்கள்.
முதல் நாள் மதியத்துக்கு மேல் அலுவலகத்துக்கு அழைக்கப்பட்ட முப்பத்தொரு பேரும், அதிகாரபூர்வமாக விடுதலையின் திகதியும் நேரமும் அறிவிக்கப்பட்டனர். புனர்வாழ்வுக் காலத்தில் அவர்கள் கற்றிருந்த சிங்கள மொழி அறிவு அவர்களுக்கு எதிர்காலத்தில் வேலை வாய்ப்பு, இன சௌஜன்யம் போன்றவற்றிற்கு உதவியாயிருக்குமெனவும் சொல்லப்பட்டது.
இருட்டு முழுவதும் கலைந்திராத ஒரு பொழுதில் எழுந்து, அதுவரை யார் யாருக்கோ திறந்த ராணுவ காவல் கதவுகள் தனக்காகத் திறக்க சங்கவி காத்திருந்தாள். அது திறக்கும்வரைகூட அது திறக்குமாவென்ற சந்தேகம் அவளிடமிருந்தது. அவள் அறிந்திருந்த தகவலின்படி அவள் இயக்கத்திலிருந்த காலத்தில் அரசாங்க அமைச்சர், ராணுவ மேலதிகாரிகளின் தாக்குதல் குழு ஏதாவதில் அவள் பங்குபற்றியிருந்தாளா என்று அவர்களால் திட்டமாக அறியமுடியாதிருந்தும், இயற்பெயராகவோ இயக்கப் பெயராகவோ சொரூபாவென பெயர் கொண்டிருந்த ஒரு கரும்புலிப் பெண்ணுடன் அவளை அவர்கள் குழப்பிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் சொன்ன அந்தத் தாக்குதல் கொழும்பில் நடைபெறவிருந்த காலத்தில் தனக்கு திருமணமாகி குழந்தையை வயிற்றிலே சுமந்துகொண்டிருந்தாளென்ற வாதம் ஒப்புக்கொள்ளப்படக் கூடியதாக இருந்தும், ஏனோ அவளை விடுவிக்க தடுப்பு முகாமில் அவள் இரண்டு வருஷங்களைக் கழித்திருந்த நிலையிலும் ராணுவ விசாரணைக் குழு தயக்கம் காட்டிக்கொண்டிருந்தது. இறுதியில் விடுதலையின் நாள் அவளுக்கும் குறிக்கப்பட்டது.