நான் சந்தித்த ஆளுமைகள் : Hugo Anthony - ஜோதிகுமார் -
1 அவரது முகத்தில் ஒரு சிறிய புன்னகை இழையோடிக் கொண்டிருந்தது. அப்பப்பா… பிய்த்து எடுத்து விட்டார்கள்… பிய்த்து! இப்போது, ஆழ்ந்த ஓர் அமைதி… நிம்மதி!! பெயர் தெரியாத ஒரு பயங்கர விலங்கின் கவ்வலில் இருந்து விடுபட்டு, அதன் கோரப் பற்களில் இருந்து தப்பி, … இப்போது அவரது இதழோரத்தில் அந்த நிம்மதி குடியிருக்க, அவரது இறுதிச்சித்திரம், அந்த கம்பீரமான, மிக மிக விலையுயர்ந்த அந்த சவப்பெட்டிக்குள், அடக்கமாய் கிடத்தப்பட்டிருந்தது. உண்மை. அவரது வாழ்க்கையும் ஒரு விதத்தில் அப்படித்தான் அமைந்திருந்தது.
2
“ஆ… நீங்கள்… உங்களுக்கு ஏற்கனவே அறையொன்று ஒதுக்கப்பட்டிருக்கின்றது… உள்ளே வாருங்கள்… இப்படி… இங்கே… சாப்பிடுவீர்களா…”
“ஓ… துறவறத்தை அவர் இருமுறை விட்டகர்ந்தார்… வலது கையை முன்னால் நீட்டி, நாயொன்று பாய்ந்து வெடுக்கென கவ்வுவதுப் போல், விரல்களை வெடுக்கென முன்னால் நீட்டி மடக்கி கூறினார் :
“எல்லாமே சாத்தான்தான்… சாத்தான் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மனிதனைப் பாய்ந்து கவ்வும். சாத்தானிடமிருந்து தப்புவது அப்படியொன்றும் எளிதான விஷயமல்ல. கடினமான காரியம்… அதற்கு தெரியும் - எப்படி வருவது – எப்படி கவ்வுவது என்பது…” முன்பு அது ஏஞ்சலஸ் ஆகத்தானே இருந்தது… அதன் பிறகுத்தானே… அதற்கும் ஆசை வந்தது… தானும் ஓர் கடவுளாக மாற வேண்டும் என்று… அப்படித்தானே இவரும்…“உலகை அழகாக்க கடவுள் மனிதனை அனுப்பினார் பின்னர், மனிதன், பாவம், தனியாக இருப்பானே என்று ஒரு பெண்ணை அனுப்பி வைத்தார்… அந்த இடத்தில்தான் சாத்தானும் வந்து புகுந்தது… அதனால்தானே இவ்வளவு கஷ்டமும் மனிதருக்கு…”
“கடவுள்தான் கூறிவிட்டாரே... மனிதா... உன்னை இவ்வளவு அறிவுடன் படைத்துவிட்டேன்... சாத்தானும் இருக்கின்றான். நானும் இருக்கின்றேன்... இனி தேர்வு செய்ய வேண்டியது நீ... ஹீயூகோ பாவம்... அவர் துறவறத்தை விட்டகன்று... அந்நேரம் நான் இந்தியாவில் படித்துக்கொண்டிருந்தேன்... அவர் பெரியவராய் இருந்த போது நாங்கள் எல்லோரும் சின்னஞ் சிறுசுகள்... உயர்ந்த வளர்ந்த மனிதர் அவர்... சுற்றி சுற்றி வருவார்... அனைத்தையும் பார்க்கும் திறன் கொண்ட ஒரு மனிதர்... நம்ப முடியவில்லை... கேள்விபட்டதும்...’