இந்து மதமும் ராஜராஜனும் - காவடி மு. சுந்தரராஜன், கோவை -
சமீப காலத்தில் பொன்னியின் செல்வன் திரைப் படம் குறித்தும், அதனைத் தொடர்ந்து மாமன்னர் ராஜராஜன் குறித்தும் பலராலும், பலவகைகளிலும் கருத்துகள் வெளியிடப் படுகின்றன. நானும் சில வார்த்தைகள் சொன்னால் குறைந்தா விடப் போகிறது?
நான்கு விஷயங்கள் குறித்துத் தான் விவாதங்கள் அதிகம் நடந்தன.
1. பொன்னியின் செல்வன் படம்
2. ராஜராஜன் தன் தமையன் ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்கள் விஷயத்தில் மனு தர்மத்தைக் கடைப் பிடித்தார்.
3. ராஜராஜன் காலத்தில் இந்து மதம் என்ற பெயர் இருந்ததா? இல்லையா?
4. திரு கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ராஜராஜனின் கொலையாளிகள் பிராமணர்கள் என்பதை மறைத்தாரா ?
பொன்னியின் செல்வன் திரைப்படம் படத்தையும், கதையையும் ஒப்பிடுவது தவிர்க்க முடியாதது என்ற போதிலும் தேவையற்ற ஒன்று. அந்தக் கதையில் மூழ்கிப் பாத்திரங்களோடும், ஓவியங்களோடும் ஒன்றி விட்டவர்களால் நிச்சயமாக அப்படி ஒப்பிடுவதே “ நினைத்துப் பார்க்கக் கூடாத ஒன்று “ என்ற மன நிலையில்தான் இருக்க முடியும். படம் திரைப் படம் என்ற அளவில் மிக அருமையாக இருந்தது. அதனைக் கதையுடன் ஒப்பிட்டுக் குறை, நிறை கூறுவதை, அதிலும் குறை கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.