(தொடர் கட்டுரை) ஜெயமோகனின் வெள்ளையானை நகர்த்தும் அரசியல் (8 & 9) - ஜோதிகுமார் -
8
ஆங்கிலேயர் ஆட்சியின் மீது இந்திய மக்களுக்கு ஏற்பட்ட ஆத்திரங்களின் பிரதிபலனாய் பல்வேறு எழுச்சிகள் இந்தியாவில் நடந்தேறுகின்றன. 1857 முதல் 1859 வரை நடந்த சிப்பாய் கலகம் முதல் (8லட்சம் மக்களை பலி கொண்ட இக்கிளர்ச்சி கங்கை-யமுனை நகரங்களிலும் அவத்தை, புந்தல்காண்ட், அலிகார், லக்னோ, கான்பூல், அலகாபாத் போன்ற நகரங்களில் வரி கட்டாமலும் காலணியாட்சி அதிகாரிகளை விரட்டியடித்தும் பதிலுக்கு தத்தம் நிர்வாக அமைப்புகளை நியமித்தும்) பின் 1876-1878இல் நடந்தேறிய உப்பு வரி எதிர்ப்பு போராட்டம் மேலும் 1889 இல் சென்னை மாகாணத்தின் கோதாவாரி ஆற்றின் கரையில் நடந்தேறிய ராம்பா விவசாயிகளின் கிளர்ச்சி இவை அனைத்திலும் இந்திய மிதவாத சக்திகள், ஆங்கிலேயரின் நண்பர்களாகவே செயல்பட தலைப்பட்டனர். அவர்களின் நலன்கள் ஆங்கிலேய நலன்களுடன் பிண்ணி பிணைந்ததாய் இருந்தன. எனவேத்தான் இவர்களுக்கு சுதேசியம் என்பது முக்கியமற்று போனது.
வெள்ளையானை கூறுகின்றது:
“டியூக்கின் உதடுகள் திறந்ததும் எய்டன் நிறுத்தினான்… நீ சொன்னது சரித்தான்… இந்த சந்தர்ப்பத்தில் நம்முடைய மொத்த நீதியுணர்வும் சோதிக்கப்படுகின்றது… நம்முடைய யதார்த்தமும் நம்மை சோதிக்கின்றது… நம்முடைய யதார்த்தம் மதராசையோ அல்லது இந்தியாவையோ மட்டும் கருத்தில் கொள்வதல்ல. நாம் உலகம் முழுவதை கருத்தில் கொண்டு சிந்திக்க வேண்டியிருக்கிறது…” (பக்கம் - 264)
அண்மையில் பி.ஜே.பி யின் மூத்த தலைவர்களில் ஒருவரான அமித்ஷாவும், பா.ஜ.க வானது இலங்கையிலும் நேபாளிலும் தோற்றுவிக்கப்படும் என அறிவித்திருந்தார்.