
- சுப்ரபாரதிமணியனின் ' சிலுவை ' நாவல் 300 ஆண்டுகளுக்கு மேலான கொங்கு பகுதியின் சரித்திர, கலாச்சார வாழ்வை காட்டும் நாவல் இது. திப்பு சுல்தான் வருகை , கிறிஸ்தவர்களின் குடியேற்றம் தொடங்கி ஒரு கிறிஸ்துவ குடும்பத்தின் நீண்ட வாழ்க்கை இதில் இடம் பெற்றிருக்கிறது. சோமனூர் வாழ் நெசவாளர் வாழ்வியல், மில் தொழிற்சங்க இயக்க செயல்பாடுகள் என்று தொடங்கி நவீனப் பின்னலாடை தொழில்சார்ந்த வாழ்க்கை முறை என்று சமீப காலம் வரை நீள்கிறது. அந்தக் கிறிஸ்தவ குடும்பத்தின் முழு உலகமும் தனித்து ஒரு தீவாய் தள்ளப்பட்டாலும் சமூக மனிதர்களின் தொடர்புடன் அடிவானத்தை நோக்கிப் பயணப்படுகிற கப்பலை போல் ஆழ்கடல் நடுவில் கரை எதுவும் காணாதபடி இருத்தலியல் சிக்கல்களுடன் சென்று கொங்கு பகுதி மக்களின் வாழ்க்கையின் உண்மை தன்மையையும் மதிப்பீடுகளையும் சொல்கிறது இந்த நாவல். 'சிலுவை' நாவல் சுப்ரபாரதிமணியனின் இருபத்தைந்தாவது நாவலாகவும், நூறாவது புத்தகமாகவும் இது அமைகிறது. நியூ செஞ்சுரி புக்ஸ் ஹவுஸ் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. -
( ஈரோடு புத்தக கண்காட்சியில் நடைபெற்ற புத்தக நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தின் 25 நூல்கள் வெளியிட்டு விழாவில் சிலுவை வெளியிட்ட போது பேசியது.)
என் 'சிலுவை' நாவல், என் நாவல்களின் பட்டியலில் இருபத்தைந்தாவது என்றும் புத்தகங்களின் எண்ணிக்கையில் நூறாவது என்றும் எதேச்சையாக அமைந்திருக்கிறது. பத்து ஆண்டுகளின் கனவுகளாக இருந்து இப்போது இந்த நாவல் வெளியாகி இருக்கிறது. இன்று வெளியாகி இருக்கிற மற்ற நூல்கள் பல ஆய்வுகள், ஆராய்ச்சிகள் என்ற ரீதியில் அமைந்திருக்கின்றன. இந்த ஆய்வுகள் பொதுமக்களிடம் செயல் சென்று சேர வேண்டும் என்று ஸ்டாலின் குணசேகர் அவர்களும் ஓடைத்துரையரசன் அவர்களும். சொன்னார்கள்
பொதுவாக இத்தகைய ஆய்வுகள் கல்வித்துறை சார்ந்தவர்களுக்கும் மாணவர்களுக்கும் என்று இருப்பதாகும். இது பொது மக்களிடம் சென்று சேர வேண்டும் என்ற ஆசைப்படுவது வினோதமாக தான் இருக்கிறது. ஆனால் எல்லா படைப்புகளும் இதுபோல் பொதுமக்களிடம் சென்று தான் அடைய வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசையாக கூட இருக்கிறது.