தீக்குள் விரலை வைத்தால் ! - கிறிஸ்டி நல்லரெத்தினம் -
போர் ஆரம்பம்!
இந்த இரு வார்த்தைகளின் பின்னே உள்ள சோகங்களையும் இழப்புகளையும் வேதனை வடுக்களையும் பற்றி சொற் சுனாமிகள் இனி கரைதட்டத் தொடங்கும். 'ஏன் போர்?' என்பதற்கான வியாக்கியானங்களை போர் ஆராய்வாளர்கள் எம்முன் படைக்கத் தொடங்கிவிட்டனர். எந்தப் போருக்கும் பல பரிமாணங்கள் உண்டு. இப்பரிமாணங்கள் முற்றிப் பழுத்து போராய் வெடிக்கும் போது நிகழும் இழப்புக்கள் மீட்டெடுதலுக்கு அப்பாற்பட்டவை! நேட்டோவில் (NATO) இணைவதற்கான உக்ரையினின் நகர்வு, ரஷ்ய ஆதிக்கத்தை விஸ்தரிக்க ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் முன் நகர்வு, அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்குமான பனிப்போரின் உச்சம் என பல பரிமாணங்கள் இங்கு உண்டு. இப்பரிமாணங்களின் தொகுப்பை ஆராய்ந்து அவற்றை ஒரு கட்டுரையில் அடக்கிவிட முடியாததால் ரஷ்ய- உக்ரைன் போரின் ஒரு பரிமாணத்தை மட்டும் இங்கே பார்ப்போம்.
இன்று உலகில் நிகழும் அனர்த்தங்களுக்கும் போர்களுக்கும் இறைவன் இயற்கை வளங்களை சமமாக பங்கிடுவதில் விட்ட தவறுதானோ என எண்ணத்தோன்றுகிறது. இன்றய மனித இனம், காட்டுவாசிகள் வேட்டையாடிய மாமிசத்திற்காக அடித்துக்கொண்டது போல், இயற்கைச் வளங்களுக்காய் கையில் ஆயுதமேந்தி போராடுவதை பார்த்து அந்த இறைவன் தலையிலடித்து தன் பிழையை நொந்து கொள்வானோ என எண்ணத் தோன்றுகிறது.