நான் நினைவில் வைத்துக்கொள்கிறேன் கோமகன்! - நெற்கொழுதாசன் -
- எழுத்தாளரும் , 'நடு' இணைய இதழ் ஆசிரியருமான கோமகன் (தியாகராஜா ராஜராஜன்) மறைந்து ஒரு வருடமாகின்றது. அவரது நினைவாக எழுத்தாளர் நெற்கொழுதாசன் எழுதிய அஞ்சலிக் குறிப்பிது. கோமகனின் சகோதரரான எழுத்தாளர் வடகோவை வரதராஜன் தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதனைக் கோமகனின் நினைவாக பதிவுகள் இணைய இதழும் இங்கு பகிர்ந்துகொள்கின்றது. மின்னலைப் போல் ஒளி வீசி மறைந்த கோமகனை வரலாறு அவரது இலக்கியப் பங்களிப்புகளூடு நினைவில் வைத்திருக்கும். - பதிவுகள்.காம் -
கோமகன் மறைந்து ஆண்டு ஒன்றாயிற்று. பாரிஸின் ஆரம்பகாலங்களிலேயே உருவாகிய உறவு அவரது. எப்போது கோமகனை சந்தித்தாலும் ஒருவகையறியாத மகிழ்வு உண்டாகும். அவரது குரலில் இழையும் சொற்கள் மிதப்பான வெள்ளந்தித்தனத்தை உருவாக்கும். அது அவரது உரையாடல் பாணி. அல்லது தனிக்கதை. ஓராண்டாக ஒலிக்காத, பிசுறு தட்டாத அவரது குரலைக் கொண்டுவந்து மனத்தில் நிகழ்த்திப் பார்க்கிறேன். வெறுமை. அந்த இடம் கோமகனுக்கானது. யாராலும் நிரப்ப முடியாதது.
யாழ் இணையத்தில் நானும் எழுத்தாளன்தான் என்ற கோதாவில் எழுதிக்கொண்டிருந்த நாள்களில், பாராட்டும் சின்ன சின்ன சீண்டல்களுமென கருத்துக்களை எழுதுவார். ஒருநாள் உங்களோடு கதைக்கவேண்டும் என்று தொலைபேசி இலக்கத்தை அனுப்பியிருந்தார். அழைத்தேன். பேசினோம். சந்தித்தோம். பாரிஸில் நான் அமைத்து வைத்திருந்த நட்பு, உறவு வட்டத்திற்கு வெளியேயான இன்னொரு தளத்தில் உருவாகிய நெருக்கம் அது. இறுதிவரை விலக்கமும் நெருக்கமுமாக தொடர்ந்துகொண்டு தானிருந்தது.