பயனுள்ள மீள்பிரசுரம் (முகநூற் குறிப்புகள்) : இ.பா.வுக்கு சாகித்ய அகாதமி ·பெல்லோஷிப்! (மாபெரும் அகில இந்திய அங்கீகாரம்!) - - திருப்பூர் கிருஷ்ணன் -
- எழுத்தாளரும், 'அமுதசுரபி' சஞ்சிகையின் ஆசிரியருமான திருப்பூர் கிருஷ்ணன் தனது முகநூற் பக்கத்தில் அண்மையில் இந்திய மத்திய அரசின் சாகித்ய அகாதமி ·பெல்லோஷிப்! விருது பெற்ற எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி பற்றி எழுதிய கட்டுரையிது. இதன் பயன் கருதி இதனை நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள்.காம் -
பிரபல எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கு சாகித்ய அகாதமி ·பெல்லோஷிப் என்ற அகில இந்திய அளவிலான உயரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. மார்ச் 29 அன்று அதற்கான விழா சென்னையில் நடைபெற்றது. சிற்பி பாலசுப்பிரமணியம், ம. ராஜேந்திரன், மாலன் போன்றோரோடு நானும் அந்த விழாவில் கலந்துகொண்டு இந்திரா பார்த்தசாரதியின் எழுத்துகள் குறித்துப் பேசினேன். விருதைப் பெற்றுக்கொண்டு விழா நிறைவடையும் வரையில் (மாலை 6 முதல் இரவு 8 மணி வரை) இ.பா. மேடையில் வீற்றிருந்தது குறிப்பிடத் தக்கது. (வயது 91.) இ.பா.வின் மிக முக்கியமான கருத்துச் செறிவு நிறைந்த ஏற்புரையை அவரது மாப்பிள்ளை ராமநாதன் தங்குதடையற்ற குரலில் பிசிறில்லாமல் வாசித்தார். விழாவுக்கு இ.பா.வின் புதல்வி திருமதி பத்மாவும் வந்திருந்தார். அரங்கம் சென்னையின் முக்கியப் பிரமுகர்களால் நிறைந்திருந்தது.
இந்திரா பார்த்தசாரதியின் படைப்புகளை ஆய்வு செய்துதான் நான் முனைவர் பட்டம் பெற்றேன். அதன்பொருட்டு அவர் நாடகங்களையும் நாவல்களையும் சிறுகதைகளையும் பலமுறை மீண்டும் மீண்டும் படித்தேன். ஒவ்வொரு முறை படிக்கும் போதும் புதிது புதிதான அனுபவங்களை அந்தப் படைப்புகள் கொடுத்ததுதான் ஆச்சரியம். இ.பா.வின் நாடகங்கள் மேடையேறும்போது பலமுறை பார்த்திருக்கிறேன். கே.ஏ. குணசேகரன், ராஜு, அ.ராமசாமி உள்ளிட்ட பலர் அவரது நாடகங்களை இயக்கியிருக்கிறார்கள். வசனம் இ.பா.வின் அதே வசனம்தான். ஆனால் இயக்குநரின் கண்ணோட்டத்தில் அதே வசனங்களால் ஆன அதே நாடகம் வேறு வேறு பரிமாணங்களைப் பெறுவதுதான் வியப்பு. நந்தன் கதையில் கோபாலகிருஷ்ண பாரதியார் பெரியபுராணத்தில் இல்லாத வேதியர் பாத்திரத்தைப் புகுத்தினார். அதுபோலவே நந்தன் கதையில் இ.பா. புகுத்திய புதிய பாத்திரம் அபிராமி என்ற நடனமணி. இ.பா.வின் நந்தன் கதை மேடையேறும்போது அதில் நடிக்க நடனம் தெரிந்த ஒரு நாடக நடிகை தேவைப்படுவார். ஒருமுறை நந்தன் கதை நாடகத்தில் அபிராமி பாத்திரமேற்று நடித்தவர் நடனமும் அறிந்தவரும் எழுத்தாளர் லட்சுமி ராஜரத்தினத்தின் புதல்வியும் குமுதம் ப்ரியா கல்யாணராமனின் மனைவியுமான சகோதரி ராஜசியாமளா.