கடல் நீலம் - கன்பரா யோகன் -
- ஓவியம் - செயற்கை அறிவு (AI) -
அன்று காலையில் புறப்படும்போது சூரியன் வரவில்லை. என்றாலும் மழை வரும் என்று காலநிலை அறிக்கையில் இருக்கவில்லை. ஆனாலும் வழமையான அதி எச்சரிக்கையுடன் குடையைக் கொண்டு போங்கள் என்று மனைவி தனது மடிக்கக் கூடிய கடல் நீல நிறக் குடையைத் தந்து விட்டாள். நான் மறுத்தும் கேட்கவில்லை. இப்போதே நீங்கள் ஊகித்திருப்பீர்கள் நான் குடையை மறந்து விட்டு வரப்போகிறேன் என்று. உண்மைதான். எனவே புதிய திருப்பங்களிலாத இந்தக் கதையை இப்போதே மூடி வைத்து விட்டாலும் உங்களுக்கு நேரம் மிச்சம்தான். இலகுவாக மறந்து விட்டு விடக்கூடிய அல்லது தொலைத்து விடக்கூடிய பொருட்கள் என்று அகில உலகத்துக்கும் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தினால் அதில் முதல் இடத்தில் இருக்கக்கூடியது குடைதான் என்று நினைக்கத் தோன்றுகிறது. மேகம் மூடிக் கொண்டிருக்க மழை என்று கொண்டு போவோம். பிறகு சூரியன் சிரித்துக் கொண்டே வரும். அன்றைக்கு பஸ் தரிப்பிடத்திற்கு நடந்த அந்த பதினைந்து நிமிடங்களில் ஒரு துளிதானும் மேலிருந்து விழவில்லை. பிறகு வெய்யில் வந்தாலும் அதுக்கு கொண்டு போன குடையைப் பிடிக்கவும் முடியாது. அதுவும் இந்தக் குளிர் தேசத்தில் வெயிலை ஆனந்தமாகத் தோலில் அள்ளிக் கொள்ள நினைக்கும் எவரும் வெயிலுக்கு குடை பிடிக்கும் யாரையும் பைத்தியங்கள் என்று எண்ணி விடலாமல்லவா?
அன்று மாலை வேலை முடிந்து நகரத்தில் பஸ் ஏறியபோது கிட்டத்தட்ட ஆசனங்கள் எல்லாம் நிரம்பியிருந்தன. கொண்டு போயிருந்த நாவலொன்றை காலையிலேயே பஸ்ஸில் யன்னல் வழி வந்த நல்ல காலைச் சூரிய வெளிச்சத்தில் சர சரவென்று பல பக்கங்களை வாசித்து விட்டிருந்தேன். இப்போது மிகுதியை இந்த மங்கலான சாயங்கால வெளிச்சத்தில் வாசிப்பது அவ்வளவு நல்லதாகப் படவில்லை. கண் பார்வையிலும் சில நாட்களாகப் பிரச்சினை ஒன்று ஏற்பட்டு சிறிய சிகிச்சையும் செய்திருந்ததுதான் காரணம்.