நனவிடை தோய்தல் (1) - நினைத்தாலே இனிக்கும் நினைவுகள்: யாழ் இந்து மைதான வைரவர் -இந்து.லிங்கேஸ் (ஜேர்மனி) -
யாழ்.இந்துக்கல்லூரிக்குள் 70களில் இளவட்டங்களாக காலடி எடுத்துவைத்த பொற்காலம்.இந்துவின் மைதானத்துடன் உறவாடியபடி பச்சைப்பசேலென முப்பெரும் மரங்களுடன் நாமும் ஒன்றிப்பிணைந்து,ஒட்டுண்டு கிடந்த காலமது.மரங்கள் பகிர்ந்த நிழல்களே எமக்கான இளைப்பாறும் கூடுகள்.நீட்டி நிமிர்ந்து சாய்ந்து சல்லாபிக்க தோள்தந்த மதில்கள்.காற்று அள்ளி வந்து மைதான மணலை எம்மில் தூவி,முகங்களை வருடிவிட்டுப்போன கணங்கள்கூட நினைவிலிருந்து அழியாத கோலங்கள் அவை.
கல்லூரி மணி அடித்து ஓயும்.வெள்ளியென்றால் அந்த மணியோசை மனசைப்பரவசப்படுத்தும்.2 நாட்கள் விடுமுறை என்ற சந்தோசமது.தவிர,அன்று மாலை எமது மைதானத்தில் கிரிக்கெட் மச்சென்றால் அந்தக்குதூகலம் இன்னும் ஒருபடி மேல. நல்ல இடம்பிடிக்க ஓடிவந்து,மதில்களில் பாய்ந்து ஏறியிருந்து ரசித்த அன்றைய துடுப்பாட்டப்போட்டிகளின் வெற்றிகள் மனத்திரைக்குள் கறுப்புவெள்ளைக்காட்சிப்படிமங்களாக ஓடிக்கொண்டேயிருக்கின்றன.வெள்ளி இருள,மச்சும் முடிய புத்தகங்களுடன் வீட்டுக்குச்சென்று அந்த இனிய நாளை அரங்கேற்றியதையும் இளம்பருவத்தை அனுபவித்த எவராலும் மறக்க முடியாது.
"சீக்கிரமா விடியாதா சனி?"
விடிந்தவுடன்;காலைச்சாப்பாட்டை முடித்துவிட்டு சைக்கிளை எடுத்து கால்கள் மிதிக்க,கிரவுண்ட் நோக்கி சைக்கிள் பறக்கும்.