கனடா வரலாற்றில் தமிழர் படகுகள் - குரு அரவிந்தன் -
சென்ற சனிக்கிழமை 16 ஆம் திகதி ஸ்காபரோவில் உள்ள ஸ்காபரே சிவிக் சென்றர் மண்டபத்தில் பண்டிதர் ச.வே. பஞ்சாட்சரம் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்ட ‘கனடா வரலாற்றில் தமிழர் படகுகள்’ என்ற நூல் சிறப்பாக வெளியிட்டு வைக்கப்பெற்றது. இந்த நூலில் புகைப்படங்களுடன் தமிழ் மொழியிலும், ஆங்கிலத்திலும் தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.
மங்களவிளக்கேற்றல், கனடியதேசிய பண், தமிழ்த்தாய் வாழ்த்து ஆகியவற்றைத் தொடர்ந்து ச. சாந்தினியின் வரவேற்புரை இடம் பெற்றது. அடுத்து தேவா சபாபதியின் வரவேற்புரையும், தொடர்ந்து கனடா தமிழ் எழுத்தாளர் இணையத் தலைவர் அகணி சுரேஸின் தலைமையுரையும் இடம் பெற்றன. அவர் தனது உரையில் இந்த நூலை வெளிக்கொண்டு வந்தவர்களையும், நிதி உதவி செய்தவர்களையும் பாராட்டி, கனடியத் தமிழர்பற்றி அடுத்த தலைமுறையினர் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான ஆவணம் இது என்பதையும் குறிப்பிட்டார்.
வெளியீட்டுரை நிகழ்த்திய செல்வி ருக்ஸா சிவானந்தம் மற்றும் ஆய்வுரை நிகழ்த்திய திரு. பொன்னையா விவேகானந்தன் ஆகியோர் நூலின் உள்ளடக்கத்தில் உள்ள கட்டுரைகள் பற்றிக் குறிப்பிட்டு உரையாற்றினார்கள். செல்வி ருக்ஸா சிவானந்தம் விழாவில் பங்குபற்றிய புதிய தலைமுறையினருக்காக ஆங்கிலத்திலும் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். பொன்னையா விவேகானந்தன் ஒரு குறும்படக் கதைபோலப் படகில் நடந்த சில சம்பவங்களைத் தமிழில் எடுத்துச் சொன்னார்.