தொடர் நாவல்: கலிங்கு (2006 - 7) - தேவகாந்தன் -
வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர் தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது. 'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com
அத்தியாயம் ஏழு!
கண்டி-கொழும்பு பெருவீதியில் பயணித்திருக்கக் கூடியவர்களுக்கு, கேகாலை தென்பட்டிருக்க முடியுமாயினும், நகரத்திலிருந்து உள்ளே சுமார் பதினைந்து கிமீ தொலைவிலிருந்த அரநாயக்க கிராமம் அந்தச் சாத்தியமும் அற்றிருந்தது. அதுவே ஒரு சிற்றரசாயிருந்த சரித்திரத்தைக் கொண்டிருந்தது. மண்படையும், அதன் மேல் கல் படையும், அதற்கு மேலே இன்னொரு மண்படையுமாய் அந்த மேட்டுப் பூமியின் நிலவியல் அமைந்திருந்ததில், சமாந்தரத்தில் அமைந்திருக்காத வீடுகளைக் கொண்டிருந்தது அது. அது ஒரு கூம்பு வடிவ அடுக்கு வீட்டுத் திட்ட குடியிருப்புப்போல தூரத்திய பார்வைக்குத் தென்பட்டது. நடுப்பகுதியிலிருந்த ஒரு வீட்டிலிருந்து பார்த்தால் பின்னாலிருந்த வீடுகள் மேலேயாய்த் தெரிய, முன்புறத்திலுள்ள வீடுகள் பள்ளத்தில் கிடப்பனவாய்த் தோன்றின. அவற்றின் கூரைகளும், முற்றத்தில் நடமாடும் மனிதர்களின் உருவங்களும்கூட துல்லியமாக காட்சிப்பட்டன. மேலேயுள்ள வீடுகளுக்குச் செல்ல அதற்கென அமைந்த வட்டப் பாதையிருந்தது. அப்பாதையில் அரை மணி நேரத்தில் செல்லும் ஒரு தூரத்தை, குறுக்கு வழியில் பத்தே நிமிஷங்களில் அடைந்துவிட முடியும். மழை பெய்யாத காலங்களில்தான் அது சாத்தியமாயிருந்தது. எங்கேயிருந்து வருகிறதெனத் தெரியாதபடி மழைகாலம் சகல இடங்களிலும் சிற்றாறுகளைத் தோற்றுவித்து, சேற்றுக் குட்டைகளை உண்டாக்கி குறுக்குப் பாதைகளை அழித்துவிடும். அப்போது அவை செந்நிற ஓடைகளாய் ஓடிக்கொண்டிருக்கும். அரநாயக்கவிலிருந்து அசுபினி நீர்வீழ்ச்சியைக் காணமுடியும். அது அரநாயக்க விரித்த காட்சிப் புலத்தின் இன்னொரு அழகு.
அருவிகளும், சிற்றோடைகளுமாய் அப்பிரதேசம் வளப்பமாக இருந்தது. வீதிகளின் ஓரமெங்கும் மரங்களின் சாமரை வீச்சு. நிலம் படர்ந்து கொழுத்த புல்லினம். நீர்க் குழிகளில் மதர்த்து வளர்ந்து மேலெழத் துடித்துநிற்கும் நீர்த் தாவரங்கள். கல்வேலிகளுள் குட்டி வேலிகளாய் பூஞ்செடிகள். மல்லிகை, நந்தியாவெட்டை, தேமா, சூரியகாந்தி என அச்செடிகளில் வாசம் தெறிக்கும் பூக்களின் சிரிப்பு. இடையிடை உயர்ந்து வளர்ந்த ரப்பர் மரக் காடுகள். இன்னும் தொட்டம் தொட்டமாய் பாகினி, கித்துல், புருத்தை ஆதிய மரங்களின் செறிவு. நீரும் நிலமும் செழிப்பின் ஆழத்தையும், காற்றும் வானும் பூக்களின் வாசத்தையும் அங்கே சுமந்திருந்தன.
அந்த அழகுகளின் பின்னாலேதான் அதன் அழுகுரல் இருந்தது.