எழுத்தாளரும், சமூக, அரசியற் செயற்பாட்டாளருமான திருமதி வள்ளியம்மை சுப்பிரமணியம் மறைவு!
எழுத்தாளரும், சமூக, அரசியற் செயற்பாட்டாளரும், ஓய்வு பெற்ற நெசவு ஆசிரியையும், இலங்கை அரசியலில் நன்கறியப்பட்ட பொதுவுடமைவாதியான கே. ஏ. சுப்பிரமணியம் அவர்களின் மனைவியாருமான திருமதி வள்ளியம்மை சுப்பிரமணியம் மறைந்த செய்தியினை முகநூல் தாங்கி வந்தது. இவர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்துடன் இணைந்து செயற்பட்ட மீரான் வாத்தியின் தாயார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முதுமைக்காலத்திலும் சத்தியமனை நூலகச் செயற்பாடுகளில் இயங்கிக்கொண்டிருந்தவர். நாட்டின் பிரதமர் உட்படப் பலர் தம் யாழ் மாவட்டப் பயணங்களின்போது செல்லுமிடங்களில் ஒன்றாகச் சத்தியமனை நூலகம் அமைந்திருப்பதற்கு முக்கிய காரணம் இவரது அந்நூலகச் செயற்பாடுகளே.
இவர் பாடசாலைக் காலத்திலேயே எழுத்திலார்வம் மிக்கவராகத் திகழ்ந்தவர். பாலபண்டிதரும் கூட. தேசிய கலை இலக்கியப் பேரவையின் செயற்பாடுகளில் ஈடுபட்டவர். இலங்கையிலிருந்து வெளியாகும் தாயகம் சஞ்சிகையின் ஆசிரியர் குழுவிலும் இணைந்து பணியாற்றியவர்.