காலத்தால் அழியாத கானம் - எங்கிருந்தபோதும் உன்னை மறக்க முடியுமா? - ஊர்க்குருவி -
மானுடரின் முதற் காதல் அனுபவமென்பது வளர்ச்சியின் ஒரு படிக்கட்டு. பெரும்பாலும் நிறைவேறுவதில்லை. காரணம் முதிர்ச்சியடையாத மானுடப் பருவத்தில் ஏற்படும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளை மையமாக வைத்து உருவாகும் அனுபவம் அது. ஆனால் அதுவே அதன் சிறப்பம்சமும் கூட. அவ்வனுபவத்தில் உள்ளங்கள் உணர்வை மட்டுமே மையமாக வைத்துச் செயற்படுகின்றன.அதற்குப் பின் வளர்கையில் இலாப, நட்டங்களைச் சீர் தூக்கிப் பார்க்கும் பக்குவத்துக்கு அவை மாறி விடுகின்றன. இதுவே பெரும்பாலும் முதற் காதல் நிறைவேறாமல் போவதற்கு முக்கிய காரணம்.
சமூக, பொருளியல் தாக்கங்களுக்கு உட்படாத உள்ளங்களில் ஏற்படும் காதலென்பதால் பெரும்பாலும் நிறைவேறாவிட்டாலும் வாழ்வு முழுவதும் நினைவுகளில் தொடருமோர் அனுபவமாக நிலைத்து விடுகின்றது அது. அதனைத்தான் இவ்வகையான காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல்களைக் கேட்பவர்கள் எழுதும் எதிர்வினைகள் வெளிப்படுத்துகின்றன, உதாரணத்துக்கு இப்பாடலை யு டியூப்பில் கேட்டுச் சிலர் எழுதிய எதிர்வினைகளைப் பார்ப்போம்:
இப்பாடலின் சிறந்த வரி 'அன்பு உண்மையாயிருந்தால் உன்னை அழைக்கும்'. உளவியல் அடிப்படையில் உண்மையான வரி. ஒருவர் அன்புக்குரியவரை மனப்பூர்வமாக, மனமொன்றி நினைத்தால் அவர் எத்தனை ஆயிரம் மைல்களுக்கப்பால் இருந்தாலும் அதைப் புரிந்து கொள்வார் என்பது உளவியல் அறிஞர்கள் சிலரின் கருத்து.