மறக்க முடியாத சிரித்திரன் ஆசிரியர் சிவஞானசுந்தரம் அவர்கள் (சுந்தர்)! - வ.ந.கிரிதரன் -
- சிரித்திரன் ஆசிரியர் சிவஞானசுந்தரத்தின் நினைவு தினம் மார்ச் 3 -
இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் நகைச்சுவை என்றால் முதலில் நினைவுக்கு வருவது சிரித்திரன் சஞ்சிகைதான். சிரித்து இரன் என்னும் சொற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட சிறப்பான பெயர் மட்டுமல்ல சஞ்சிகையின் நோக்கத்தையும் சிறப்பாகவே வெளிப்படுத்தும் பெயர். யாழ் மாவட்டக் கரவெட்டியைச் சேர்ந்த சிரித்திரன் ஆசிரியர் சிவஞானசுந்தரம் (சுந்தர்) இந்தியாவுக்குக் கட்டடக்கலை கற்கச் சென்று சிறந்த கேலிச் சித்திரக்காரர்களிலொருவராகத் திரும்பி வந்தார். இந்தியாவில் 'பிளிட்ஸ்', 'கொஞ்ச்' சஞ்சிகைகளில் இவரது கேலிச்சித்திரங்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்தியாவின் பிரபல கேலிச்சித்திரக் கலைஞர்களாக விளங்கிய ஆர்.கே.லக்ஷ்மண், போல் தாக்கரே ஆகியோருடன் பழகும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.
இலங்கை திரும்பிக் கட்டடத்திணைக்களத்தில் படவரைஞராகப் பணியாற்றியவரைத் தினகரனில் கேலிச்சித்திரங்கள் வரைய அழைத்தவர் பேராசிரியர் க.கைலாசபதி அவர்கள். அப்பொழுது இவர் தினகரனில் சுந்தர் என்னும் பெயரில் வரைந்த 'சவாரித்தம்பர்' என்னும் தொடர் கேலிச்சித்திரங்களை மறக்கவே முடியாது. அவரது ஊரான கரவெட்டியில் வாழ்ந்த, அவருக்கு அறிமுகமான ஒருவரை ஆதர்சனமாகக்கொண்டே அவர் அப்பாத்திரத்தை உருவாக்கியதாக ஊடகக்கட்டுரைகள் வாயிலாக அறிந்துள்ளேன். அத்தொடரில் வரும் சின்னக்குட்டி, பாறி மாமி பாத்திரங்களும் கரவேட்டியில் வாழ்ந்தவர்கள் என்றும் அக்கட்டுரைகள் வாயிலாக அறிந்துள்ளேன். பின்னர் அவர் 1963இல் சிரித்திரன் சஞ்சிகையை கொழும்பில் ஆரம்பித்ததும், அதன் பின் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியிட்டதும் யாவரும் அறிந்ததே.