லெட்சுமணன் முருகபூபதி : ஒரு பன்முக ஆளுமை! - கிறிஸ்டி நல்லரெத்தினம் -
(அவுஸ்திரேலியாவில் தமிழ் எழுத்தாளன் எனும் அடையாளத்தின் முகவரியாளராக மிளிர்பவர் லெ.முருகபூபதி அவர்கள். அவரின் அகவை நாள் ஜூலை 13ம் நாளில், இச் சிறப்புக் கட்டுரை பிரசுரமாகிறது. எழுத்தாளர் முருகபூபதி அவர்களுக்குப் பதிவுகளும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.)
1951ம் ஆண்டு ஜுலை 13ம் திகதி..... நிசப்தமான அந்த வெள்ளி இரவில் நுரை தள்ளி கரைநனைக்கும் அலையோசையைத் தவிர எங்கும் அமைதி. நீர்கொழும்பு மகப்பேறு வைத்தியசாலையில் 'வீல், வீல்' எனும் ஒரு குழந்தையின் அலறல் அந்த இரவின் அமைதியை கலைத்தது!
ஒரு அன்புத் தாய் குழந்தையை வாரியணைத்து உச்சி முகர்ந்து தந்தை லெட்சுமணனின் கரங்களில் பாலகனை ஒப்புவித்தாள். குடும்பத்தின் முதல் மகன் என்ற பெருமிதம் அவர் கண்களில் ஒரு புது ஒளியை தோற்றுவித்தது. தந்தை குனிந்து மழலையின் காதருகில் ஒரு மந்திரம் போல் "முருக....பூபதி " என நீட்டி விளித்து அவனை மெதுவாய் தாயின் அரவணைப்பிற்கு சொந்தமாக்கினார்.
அன்று அம்மழலையுடன் ஒட்டிக் கொண்ட 'முதல்' எனும் வார்த்தை அவன் வாழ்வில் நிரந்தரமாகவே அழியாச் சுடராய் அன்று ஏற்றிவைக்கப்பட்டது.
இலங்கையில் வடமேல் மகாணத்தின் கம்பஹா மாவட்டத்தில் நீர்கொழும்பு நகரில் 1954ஆம் ஆண்டு இந்து தமிழ்ப்பிள்ளைகளுக்காக தொடங்கப்பட்ட ஆரம்பப்பாடசாலை விவேகானந்தா வித்தியாலயத்தில் முதல் மாணவனாக 1954 ஆம் ஆண்டு விஜயதசமி தினமன்று ஏடு துவக்கி வித்தியாரம்பம் செய்வித்து தன் கல்விப் பயணத்தை ஆரம்பித்தார் முருகபூபதி, இவரின் மாணவ பதிவு இலக்கம் : 1.