இலங்கைத் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் ஏன் தோல்வியில் முடிந்தது? ஒரு பார்வை! - நந்திவர்மப் பல்லவன் -

அரசியல் ஆய்வாளர் என்றறியப்பட்ட ஊடகவியலாளர் யதீந்திராவின் , இலக்கியா இணைய இதழில் வெளியான 'நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?' என்னும் கட்டுரையினை வாசித்தேன். இது ஓர் அரசியல் ஆய்வுக்கட்டுரை அல்ல. மேலோட்டமான சில உணர்வுகளை வெளிப்படுத்தும் பத்தி எழுத்து. இதில் இலங்கை ஒப்பந்தம் பற்றியும், 13ஆவது திருத்தச்சட்டம் பற்றியும் குறிப்பிடுகின்றார். இருந்தாலும் நாம் ஏன் தோற்றுக்கொண்டேயிருக்கிறோம் என்பதற்குரிய முக்கிய காரணங்களை இக்கட்டுரையில் காணவில்லை.
இலங்கைத் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் ஏன் தோல்வியில் முடிந்தது?
முக்கிய காரணங்கள்:
1. சக அமைப்புகளுக்கிடையிலான மோதலக்ள்.
2. இயக்கங்களுக்கிடையில் நிகழ்ந்த உட்பகையும், மோதல்களும்.
3. அமைதிப்படையாக நுழைந்தபோது வரவேற்ற இந்தியப் படையினருடனான மோதல்கள். மோதல்களுக்கான அடிப்படைக்காரணங்கள் எவையாகவிருந்திருந்தாலும், அவை கண்டறியப்பட்டு , முளையிலெயே கிள்ளி எறியப்பட்டிருக்க வேண்டும். அப்படிச் செய்யப்பட்டிருந்தால் அம்மோதல் தவிர்க்கப்பட்டிருக்கும். இன்றுவரை மாகாணசபை இயங்கிக்கொண்டிருந்திருக்கும்.
4. ஜனதிபதி பிரேமதாசவுடன் இணைந்து, 'நாங்கள் அண்ணன் தம்பிகள். அன்னியருக்கு இங்கென்ன வேலை? எம் பிரச்சனையை நாமே தீர்த்துக்கொள்வோம்' என்று இயங்கியமை.
5. தேர்தலில் மீண்டும் இந்தியப்பிரதமராக ராஜிவ் காந்திவரவிருந்த நிலையில், இந்திய மக்களின் அமோக அவர் மீதான ஆதரவு உச்சத்திலிருந்த சமயத்தில் அவரைப் படுகொலை செய்தமை. இதற்குக் காரணங்கள் அக்கால உபகண்டச் சூழல், சர்வதேச சூழல், இவற்றின் விளைவாக சர்வதேச , உபகண்ட அரசியல் சக்திகள் தம் நலன்களுக்காக விடுதலைப்புலிகளைப் பாவித்ததானால் இக்கொலை நிகழ்ந்திருக்கலாம். அதே சமயம் புலிகளும் தம் நலன்களுக்காக இதைச் செய்திருக்கலாம். எது எப்படியோ? ராஜிவ் படுகொலை என்பது 2009இல் விடுதலைப்புலிகளை யுத்தத்தில் இலங்கை அரசு வெல்வதற்குரிய முக்கிய காரணமாக அமைந்து விட்டதை அரசியல் ஆய்வாளர்கள் எவரும் கவனிக்காமல் இருக்க முடியாது. இந்தப் படுகொலையைத் தொடர்ந்து இந்திய அரசின் இலங்கைத் தமிழர் மீதான அணுகுமுறை மாறியது. இந்தியாவின் கடற்படை புலிகளுக்கு வந்திறங்கும் ஆயுதக்கப்பல்களை இலங்கை அரசு தொடர்ச்சியாகத் தாக்கி அழிப்பதற்கு மிகவும் உதவியாகவிருந்தது.









பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









