முல்லை அமுதன்அப்பாவின் முகத்தில் எப்படி முழிப்பது?

பயத்தினால் கண்கள் இருண்டது.

'இண்டைக்கும் அடிவிழப்போகுது'

மாமி முந்தி அடிவிழாமல் தடுத்தவ.அவவும் உயிரோட இல்லை.அம்மா பாவம்..அப்பாவின் கோபத்திற்கு முன்னால் அவளால் ஒன்றும் செய்யமுடியாது.

அப்பாவும் கோபம் வந்தால் சப்பாத்துக் காலால்,தன் இடுப்பு பெல்ட்டைக் கழற்றி அதுவும் இல்லாட்டி கிடைக்கிற பொருளால் ஓங்கி விளாசுவார்.கோபம் வரும்போது என்ன செய்வதென்று அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.

முன்பொருமுறை கூட வின்ஸரில் படம் பார்த்துவிட்டு வெளியே வரவும்,சந்தியில் திரும்பிய பஸ்ஸுக்குள்ளிருந்த அப்பா காணவும் சரியாக இருந்தது..வீட்டுக்குப் போக 'ஒரே சமா தான்'

அடியில் முதுகு வலித்தது.அவரின் கோபம்நியாயமானதுதான் என்று அப்போது தெரிந்திருக்கவில்லை.பாடசாலைக்குப் போய் முதலாம் பாடம் முடிய ரிஜிஸ்தரில் பெயர் வந்தேன் மிஸ் சொன்னாப்பிறகு மெதுவாய் கன்ரீனுக்குப் போறமாதிரிப் போய் முன் தயார்நிலையில் இருந்த சைக்கிளில் காலைக்காட்சிக்குப் போய்விடுவோம்.தெரிந்தால் வீட்டில் அடிவிழும்..ஹெட்மாஸ்டரிடம் வாங்கிக் கட்டவேண்டிவரும். பெற்றோரைக் கூட்டைவரச் சொல்வதில்லை.கொண்டுபோய் அங்கு சேர்த்த மாமாவும் அங்குதான் உலோகவேலை கற்பித்துகொண்டிருந்ததால் அவர் குற்றச்சாட்டைக் கையிலெடுத்தபடி வீட்டை வந்துவிடுவார்.

'உந்தாள் எப்ப மண்டையைப் போடும்' என்று நினைக்காத நாளே இல்லை.மறுநாள் மறுபடியும் படம்தான்..மறுபடியும் மாமா வருவார்..அடிவாங்கித்தருவார்..

ஒருநாள் ரீகலில் படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது வேறொரு பாடசாலை அதிபர் தன் மாணவர்களைத் தேடி வந்துவிட்டார் என்ற செய்தி கிசுகிசுக்க மாணவர்கள் தப்பிக்கமுயற்சிக்க நாமும் வெளியேறிவிட்டோம். வெளியில் கனநேரம் காத்திருந்துவிட்டு படம் முடிய வந்து சைக்கிளை எடுக்கவேண்டிவந்துவிட்டது..

படங்களை முதல்நாள் பார்த்துவிட்டால்தான் மகிழ்ச்சி..அதுவும் முதல் டிக்கட் கிடைத்துவிட்டால் உலகமே கையில் கிடைத்துவிட்டது மாதிரி மனது குதூகலிக்கும்.

அப்பாவுக்கு ஏனோ நம்பிக்கை இல்லாமல் போய்விட்டதான சூழல்...'தண்டச்சோறு'என்று சொல்லாவிட்டாலும் அவரின் நடவடிக்கைகள் என் மனதுள் அப்படியொரு உணர்வை ஏற்படுத்தியிருந்தது.

அப்பாவிடம் கிட்டப்போய்'அம்மா எனிமேல் குளப்படி செய்யமாட்டன்' என்றுசொல்லும் தைரியமும் இருந்திருக்கவில்லை.

இரவு அல்லது காலை என சிப்ட் வேலையாதலாலும்,வீட்டுக்கு வந்ததும் ஆடு,மாடு பார்க்கவும்,,வேலியைச் சரிசெய்யவும் இப்படியாக தூக்கமும் குறைந்துபோக கோபம் தானாக அதிகமாக வரும் என்ற அறிவு கூட இல்லாமல் பொடியளோட சைக்கிளில சுற்றவேண்டும்..படம்,நாடகம்,கீரிமலை இப்படிக் கனக்க..இதுக்குள்ள சைட் அடிக்கிற நேரமும் உண்டு.வாசிகசாலை மதிலில குந்தியிருந்தா நாங்கள் தான் மன்னர்கள்' என்கிற கம்பீரம் வந்துவிடும்.படம் பார்க்கிறதில அதிகமாக நாட்டமாக இருந்தது..பைத்தியம் எண்டும் சொல்லலாம்.

நீளமான தடியை அளவுக்கு வெட்டிச் சீவி பால்மாவிற்குள் வரும் வட்டமான அலுமினியத் தகட்டை பொருத்தி மடித்து கொஞ்சம் வெள்ளிப் பெயின்றை அடுச்சுவிட்டால் வாள்தான்.

விஜயபுரிவீரன் ஆனந்தன் மாதிரி,நீரும் நெருப்பும் எம் ஜி ஆர் மாதிரி,ரஞ்சன் மாதிரி வாள் பையிற் பிடிக்கிற மாதிரி அபிநயிப்பதே ஒரு சுகானுபவம்தான்.

உடைஞ்ச கிளாசை கைவிளக்கில பிடிக்க கறுப்பாயிடும்.அதில ஏதாவது எழுதி இருட்டான பகுதியில் உள்ல சுவரில் டோர்ச் லையிற்றால் பிடிக்க எழுதியது சுவரில் தெரியும்.நாலைஞ்சு கண்ண்டாடித்துண்டுகளில் தொடர்ச்சியாக செய்ய சிஅன்மிமா மாதிரித் தெரியும் எண்டு தங்கச்சிமாரை பேய்க்காட்டினதும் உண்டு.தியேட்டரில விளம்பரங்கள் இப்படித்தான் போடுகினம் எண்ட நினைப்பு..வேட்டி படச்சுருள் துண்டுகளைக் கண்டாலும் இப்படித்தான்..

ஒரு நாள் தமயந்தியோட நாதன் பிரச்சினைப்பட்டிட்டான்..காதல் கடிதம் கொடுத்திட்டான்..ஏப்ரல் பூலுக்கு சட்டையில் மை அடிச்சுட்டான் எண்ட கோபம்..ஒளிச்சுவைச்சிருந்த சைக்கிள் கேபிளுடன் போய் சண்டை பிடித்ததும் .யாரோ 'உவனுக்கு எம் ஜி ஆர் எண்ட நினைப்பு' என்று புறுபுறுத்துச் சென்றதும் ஞாபகம்.

அப்பாவின் கண்டிப்பு என்னை ஒண்டும் செய்யேல்லை.

படம் பார்க்கிற ஆர்வம் குறையாமல் அதிகரித்தே வந்தது..இப்படியொரு நாளில வாசிகசாலை ஆண்டுவிழாவும் வந்தது. கதாநாயகனாகவே நடிப்பேன் என்று அடம்பிடித்து மனக்கோயில் நாடகத்தில் நடித்தேன்.ஆடல் பாடல் அன்றை சினிமா மாதிரியே காதல் காட்சிகள்..சனம் சொல்லாட்டிக்கும் எனக்குள் நானே கதாநாயகன் என்ற நினைப்பும் வளர படத்துக்கு ஆக்கள் எடுக்கினமெண்டு நண்பனும் சொல்ல வீட்டில் 'இன்ரவியூ'' எண்டு பொய்சொல்லிவிட்டு சென்றிவிட்டேன்.ஆனாலும் ஒரு பயம்.அந்த பயம் அப்பா சார்ந்ததாகவே இருந்தது..'உவன் நல்லா வரமாட்டான்..கெட்டுக் குட்டிச்சுவராகத்தான் போறான்'

பயணம் சுகமாக இருந்தது..படத்தில நடிச்சிட்டாப் போதும்..எம் ஜி ஆர் மாதிரி வந்துவிடலாம்..வாள் சண்டை போடலாம்.காதல் காட்சிகளில் நடிக்கலாம்.கனவுலகில் மிதக்கவைத்தது.

உற்சாகமும் அதிகரித்தது.

முதலில பேசுவினம்..பிறகு அமைதியாகிவிடுவினம்.நடிச்சுப்போட்டு வந்து வாசிகசாலை மதிலில் குந்தியிருந்து ஒருதடவை புகையை இழுத்து வெளியில ஹீரோமாதிரி விடலாம்.கள்ளடிக்கப் போகாமல் ஹோட்டலில வெளிநாட்டுச்சரக்கடிக்கலாம்...555 சிகரட் பிடிக்கலாம்.சனம் வரும்..உவள் தமயந்தியும் ஓட்டோகிராப் வாங்க வருவாள்..காதலையும் சொல்லுவாள். கனவைக் கலைத்தது டிக்கட் செக்கரின் குரல்..

அனத இயக்குனரின் படங்கள் எல்லாம் சுப்பர் ஹிட்டாம்..யாரோ பேசிக்கொண்டனர்.

ஹீரோவும்,ஹீரோயினியும் பந்தாக்களுடன் வந்திறங்க மனது சப்பென்றது.

ஹீரோவாக நடிக்கமுடியாதா?

ஹீரோவுடன் ஓரிரு காட்சியில் நடிக்கலாம் என்று சொன்னார்கள்.சரி..பரவாயில்லை..பல நடிகர்கள் துணை நடிகர்களாக இருந்தே உயர்ந்தார்கள்.அப்படி நானும்..மனது ஆறுதல் அடைந்தது.

எட்டாப்பழமாகிவிடுமோ? பயமும் எழாமலில்லை..பலரும் தெரியாத முகங்களாகவே இருந்தமையும் பயத்திற்க்கான காரணமாக இருந்ததுவோ தெரியவில்லை.

அமைதியாகவே இருந்துகொள் என்றது மனம்.எனினும் பரபரப்பாகவே இருந்தது சூழல்.

மறுநாள் ஓரிரு காட்சிகளில் நடிக்கவைத்தார்கள்.

ஆகா நடித்துவிட்டேன்..

திரையில் முகம் தெரியும்...ஆயிரம் பட்டாம் பூச்சிகளுடனும் கூடவே பயணிப்பதான உணர்வு.

ஊருக்கு வந்துவிட்டேன்..

வீட்டில் யாரும் பேசிக்கொள்ளவில்லை.கோபத்தில் இருப்பது புரிந்தது..

மாட்டிற்குத் தவிடு பிண்ணாக்கு கரைத்துவைத்தபோது அம்மா அதிசயமாய் குசினிக்குள் இருந்தபடியே பார்த்தாள்.

வேலிக்கறையானைத் தட்டியபோது தங்கைகள் யன்னலுக்கால பார்ப்ப்பது தெரிந்தது.வழமைக்கு மாறாக நாயும் வந்து காலை நக்கியது.அதுக்கும் அதிசயமனிதனாய் தெரிந்தேனோ?

அப்பா சந்தைக்குப் போயிந்தார்.

அப்பாவிடமிருந்து தப்பவேண்டும்.கொஞ்சமாவது அடிவிழாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் அதுக்குத்தான் இந்த நடிப்பெல்லாம்..அம்மாவுக்கு இது நடிப்பென்று தெரிந்திருக்காது.ஆனால் தங்கச்சிகளுக்கு இது நடிப்பு எனத்தெரிந்துவிடும்..எனது நடிப்பை முதலில் கண்டுபிடித்து அம்மாவிடம் போட்டுக்கொடுப்பதே அவர்கள்தானே.. பாவிகள்..

'நாடகம் போடவேண்டும்'வாசிகசாலை ஆண்டுவிழா பற்றி நண்பர்கள் சொன்னபோது நினைவுக்கு வந்தது.நாடகம் போட்ட கையோடு நடிச்ச படமும் வந்திட்டால் போதும்...பிறகு அப்பா எதுவும் சொல்லமாட்டார்.அம்மா திட்டமாட்டாள். ஊர் சுற்றித்திபவனை 'காவாலி'என்று சொல்லும் சனம் ஒண்டும் சொல்லமாட்டினம்.படத்தில பிஸி ஆகிவிட்டால் நாடகம் நடிக்கவேண்டியதில்லை.நாடகம் பழகுகிற காலத்தில திருட்டுக்கோழி அடிச்சு சாப்பிடவேண்டி வராது...பிரஸ்டீஜ் வந்துவிடும்..புதுக் கார்...ஒழுங்கைக்குள்ள வாராது..ஒழுங்கையை பெருப்பிக்கவேண்டும்.ஒரு படம் நடிச்சவனே பங்களா மாதிரி வீட்டில் வாழேக்க நான் எப்படி? வானிக்கு,ரீவீக்கென சந்திப்பு என பத்திரிகைக்காரர்கூட வலிய வருவினம்.. கனவு காணும் சுகம்..அதற்கும் சுதந்திரமான சூழல் வேண்டுமல்லவா.அம்மாவின் சத்தம் கனவுடன்,நித்திரையும் குழம்பிட்டுது.

அம்மா பத்திரகாளிமாதிரித் தெரிந்தாள்.

அம்மா அதிகாலையில எழும்பி அடுப்புச்சாம்பல் அள்ளி,தேத்தண்னி போட்டு எல்லாரையும் எழுப்பிக் கொடுத்துவிட்டு முற்றம் கூட்டப் போவாள்.அம்மாவின் தேநீர் சுவையானது.அவளின் கைப்பக்குவம் அப்படி.யாரிடம் சமையல் கலைகளைக் கற்றுக்கொண்டாளோ?தங்கைகளுக்குச் சமைக்கத்தெரியாததினால் தப்பித்துக் கொண்டேன். அம்மாவின் கைகள் மிருதுவானவைகள்.அப்பாவின் கைகள் அப்படியில்லை.அம்மா முதுகில் மொத்தும் போது வலிக்காவிட்டலும் ஆ ஊ என்று அழுவது மாதிரி பாசாங்கு பண்ண 'அம்மா..நடிக்குது' தங்கை சொல்லுவாள்.

அப்பா கன்னத்தில் ஒன்றுவிட்டால் சுருண்டுவிழுந்துவிவேன்..வலிக்கும்.அழுகை தானாவே வந்துவிடும்.இரத்தம் வராத குறையாக இருக்கும்..அப்படி நோகும்.கன்னத்தில் அறைந்ததின் அடையாளம் மறைய இரண்டு மூன்று நாட்களாகும்.

அன்று சனிக்கிழமை.

வயிரவருக்குப் பொங்கிவிட்டுவந்தார் அப்பா.

'என்ன சொல்லிவிட்டுப் போகலாம்?'

அப்பாவைப் பார்க்கும்போதெல்லாம் பயமும் கூடவருகிறது.பொய் சொல்லிவிட்டுத்தான் போகமுடியும்.அப்பா பொய்யெனக் கண்டுபிடித்துவிடுவார்.

'முந்தியும் பதிபக்தி படம் மெட்னி சோவிற்குப் போக அது கொஞ்சம் பெரிய படம்..நேரமாகிவிட்டது..வீட்டுக்கு வர அப்பா கிடுகு பின்னிக்கொண்டிருந்தார்..பின் பக்கமாகப் போய் அம்மாவிற்குமட்டும் கேட்கக்கூடியமாதிரி 'இண்டைக்கு ஸ்பெஷல் கிளாஸ்.அதுதான் பள்ளிக்கூடம் விட்டவுடனே அதால போட்டுவந்தனான்'

நம்பியிருக்க வாய்ப்பில்லை.முகம் சொல்லியது.அம்மா திட்டியது அப்பாவிற்குக் கேட்டிருக்கும்.எதுவும் பேசவில்லை.எல்லாத்தையும் சேர்த்து ஒருநாள் சாத்துவார் எண்டுமட்டும் புரிந்தது.

பயமாக இருந்தது.

எப்படிக் கேட்பது?

தங்கை ரியூசனுக்கு ஆயத்தமானள்.

ஒருநாளுமில்லாமல் 'நான் கொண்டுபோய்விடட்டே'

தங்கையின் பார்வை சரியில்லை..

'ஏதோ பிளான் பண்ணிவிட்டான்' என்று நினைத்திருப்பாள்.

சைக்கிளில் டபிள்ஸ் போகும்போதே சூசகமாக சொல்லிவிட்டேன்.ஒரு மாதிரி தோழியுடன் வீடுதிரும்பிவிடுவாள்..அப்பாடாவென்றிருந்தது.

லாவகமாக தந்திக் கம்பிகளில் கால்களை அழுத்தியபடி உட்கார்ந்திருக்கும் பறவைகளின் துணிச்சல் ஏன் மனிதர்களுக்கு இல்லாமல் போனது.எதிலும் பயம்..பயம்...அப்பாவிற்கான பயம்..அப்பாவின் மீதான பயம்...சாணேற சறுக்குகிற வாழ்க்கையை அனுபவித்தவனிடம் நம்பிக்கையாக எதுவும் வந்துவிடப்போவதில்லை.உயரே பறக்க நினைக்கின்ற நினைப்பு மட்டுமே உள்ளது.பறவைக்கான நம்பிக்கை எதனிடமிருந்து கிடைத்தது..அப்பாவின் பயம் அவரின் அப்பாவிடமிருந்து ஆரம்பித்திருக்கலாம்.அதனால் அந்தப் பயம் 'மூத்த பெடியன்' என் மீதும் இருந்தது.அந்தப் பயம் எல்லார்மீதும் எனக்கிருக்கிறது.இதனால் நம்பிக்கையற்றிருக்கிறது பாதைகள்.

கைக்கிளை நிறுத்திவிட்டு பூட்டியது சரிதானா என்று மீளவும் பார்த்துவிட்டு நுழைந்தேன்..அசட்டையாக நிறுத்திவிட்டு வந்த சைக்கிள் காணாமல் போயிருந்த அனுபவம்.அப்பா தன் சைக்கிளை தொட விடுவதில்லை.இன்று தந்துவிட்டார்.

இருக்கையில் அமர்ந்தேன்.பரபரத்தது.வியர்த்துக் கொட்டியது.

விளக்குகள் அணைய படம் தொடங்கியது. கதிரையில் சாவகாசமாய் உட்காரமுடியாமல் தவிப்பு மேலோங்கியது.காட்சிகள் மாற மாற கதாநாயகன் காட்சியில் தோன்ற விசிலடித்து ஆரவாரித்தனர் ரசிகர்கள்.அடுத்த காட்சி,அடுத்த காட்சி நட்சத்திரங்கள் கண்சிமிட்டியமாதிரி மனதுள் ஒரு உணர்வு.. சண்டைக்காட்சியில் கதாநாயகன் தூள் கிளப்பியிருந்தார்.புதுமுக நடிகையுடனான காதல் பாடலிலும் பரவசப்படுத்தினார்...அடுத்து அடுத்து என நினைப்புடனே படம் முடிந்தது.

மனம் இறந்து வீழ்ந்தது போலிருந்தது.கனவுகள் காலுக்கடியில் பொலபொலவென உதிர்வதுபோலிருந்தது.அத்திவாரமே பெரும் பூகம்பம் வந்து நொருங்கியது போலிருந்தது.'நாலைந்து காட்சியிலாவது தோன்றுவீர்கள்' என்றார்களே..

கூட்டத்துள் ஒருவனாகக் கூட நான் இல்லையே.

முகம் இருண்டது..

சோர்ந்து போய் வெளியேறினேன்.உள்ளே விசில் சத்தங்கள் ஓயாமல் ஒலித்துக்கொண்டிருந்தன.காலுக்கடியில் கச்சான் கோதுகள்,குறை சிகரட்டுக்கள்,விளம்பர நோட்டீஸுகள்,,,கைதுடைத்த பேப்பர்கள்..மிதித்தபடி சைக்கிளை நோக்கியபடி நடந்தேன்..

சினிமாக் கனவு?

ஆயிரம் அடிகளாவது எடுத்திருப்பார்கள் என்ற மகிழ்வில் தன் பெயரில் சங்கம் அமித்து பின் ஒரு காட்சியில் கூட்டத்தில் ஒருவனாக வந்து போன நடிகர் ஞாபகத்திற்கு வந்தார்.பலகோடிக்கனவுகளுடன் வந்து ஏமாந்து போன கலைஞர்கள் தற்கொலைசெய்துகொண்டதாய் பத்திரிகைச் செய்திகளை வாசித்த ஞாபகம் வந்தன..ஏன் இதுவெல்லாம் இப்போது வரவேண்டும்.

வேண்டாம்.. நம்பிக்கையை விதைத்து ஏமாற்றிவிட்டார்கள்..'

சைக்கிளை உருட்டினேன்.

பாலத்திற்கடியில் யாரோ தற்கொலை செய்துகொண்டதாக சனக்கூட்டம் நிறைந்திருந்தது.

அம்புலன்ஸ்..பொலிஸ் என்பன கண்ணில் தெரிந்தது.சனங்களை விலக்கி இறந்த உடலைப் பார்க்கும் தைரியம் வரவில்லை..வெக்கையாக இருந்தது.

நடந்தேன்...அப்பாவின் முகமே பெரிதாய் தெரிந்தது.


(யாவும் கற்பனையே)

12/07/2020

- இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்