கனடாவில் சூரியனைத் தேடிய பயணம் - குரு அரவிந்தன் -
கனடா நாட்டிலே பனிக்காலத்தில் சூரியனைக் காண்பது என்பது அரிதாகவே இருக்கும். வெளியே வெய்யில் எறிப்பது போல இருந்தாலும், வெளியே சென்றால் சில சமயம் கடும் குளிராகவும் இருக்கும். காலநிலை காரணமாக இம்முறை கனடாவில் பனி கொட்டுவது மிகக் குறைவாகவே இருந்தது. வழமைபோல ஆய்வாளர்கள் பல காரணங்கள் சொன்னாலும், இந்த மாற்றத்திற்கு எல்நினோ (El Nino) என்ற பசுபிக்சமுத்திர நீரோட்டமும் இம்முறை ஒரு காரணமாக இருந்தது. சில வருடங்களுக்கு ஒரு முறை டிசெம்பர் மாதத்தில் எல்நினோவின் இதுபோன்ற பாதிப்பை எங்களால் இங்கே அவதானிக்க முடிகிறது.
ஏப்ரல் 8 ஆம் திகதி சூரிய கிரகணம் நடக்கப் போவதாகவும், வட அமெரிக்காவில் அதை முழுமையாகப் பார்க்க முடியும் என்றும் ஊடகங்கள் பல செய்திகளை வெளியிட்டிருந்தன. சூரிய கிரகணம் என்பது எப்போதாவது நடக்கும் ஒரு சிறப்பு வானியல் நிகழ்வாக இருக்கின்றது. சில சமயங்களில் சந்திரன், பூமி, சூரியன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது இத்தகைய நிலை ஏற்படுகின்றது. முக்கிமாக சூரியன் மற்றும் பூமிக்கு இடையே ஒரே நேர்கோட்டில் சந்திரன் வரும்போது சூரிய கிரகணமும், இவற்றுக்கு நடுவே ஒரே நேர்க் கோட்டில் பூமி வரும்போது சந்திர கிரகணமும் ஏற்படுகிறது.
அனேகமான கனடியர்கள் போலவே நாங்களும் இதற்கான ஆயத்தங்களைச் செய்திருந்தோம். சூரியனைப் பார்ப்பதற்கான விசேட கண்ணாடி, நிகழ்வைப் படம் பிடிப்பதற்கான கமெரா எல்லாம் தயாராக வைத்திருந்தோம். நாயாகரா நீர்வீழ்ச்சிப் பகுதிதான் இதற்குச் சிறந்த இடம் என்று ஊடகங்கள் தெரிவித்திருந்தன. பிள்ளைகளும் எங்களுடன் வந்ததால், நாங்களும் அங்குதான் போவதாக இருந்தோம். அதே நேரம் கூட்டத்தைச் சமாளிக்க அனேகமான வீதிகளின் போக்குவரத்தைத் தற்காலிகமாக மூடப்போவதாக நயாகரா பொலீஸார் அறிவித்திருந்தார்கள்.