கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ - 2023 - குரு அரவிந்தன் -
*புகைப்படங்களைத் தெளிவாகப் பார்ப்பதற்கு ஒருமுறை அழுத்தவும். -
கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் விருதுவிழா சென்ற சனிக்கிழமை 28-10-2023 ரொறன்ரோவில் உள்ள ஸ்காபரோ சிவிக்சென்றர் அரங்கத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. காலை 9:30 மணியளவில் விழாவிற்கு வருகை தந்தோருக்குத் தேநீர், சிற்றுண்டி வழங்கப் பெற்றது. 10:00 மணியளவில் நிகழ்வில் கலந்து கொண்ட சில பிரமுகர்களால் மங்கள விளக்கேற்றப் பெற்றதைத் தொடர்ந்து, கனடா பண்ணும், தமிழ்த்தாய் வாழ்த்தும் செல்வி சோலை இராச்குமார், செல்வி சென்னி இராச்குமார் ஆகியோரால் இசைக்கப்பெற்றது. தொடர்ந்து அமைதி வணக்கம் இடம் பெற்றது. அதைத் தொடர்ந்து கனடா பழங்குடி மக்களின் அங்கீகாரம் வாசிக்கப் பெற்றது.
எழுத்தாளர் இணையத்தின் முன்னாள் தலைவரும் தற்போதைய துணைத்தலைவருமான எழுத்தாளர் குரு அரவிந்தனின் வரவேற்புரையைத் தொடர்ந்து தேனுஜா திருமாறன் ஆசிரியையின் மாணவிகளின் வரவேற்பு நடனம் இடம் பெற்றது. தொடர்ந்து இணையத்தலைவர் கவிஞர் அகணி சுரேஸ் அவர்களின் தலைமையுரை இடம் பெற்றது. அதைத் தொடர்ந்து ‘கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் கடந்து வந்த பாதை’ என்ற தலைப்பில் உதயன் பத்திரிகை ஆசிரியரும், துணைச் செயலாளருமான ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்களின் உரை இடம் பெற்றது. அதைத்தொடர்ந்து விருது விழா மலர் வெளியிட்டு வைக்கப்பெற்றது. இந்த நிகழ்வில் வர்த்தகப் பிரமுகர்கள் சிலர் சிறப்புப் பிரதிகளைப் பெற்றுக் கொண்டனர்.