- இலங்கையிலிருந்து வெளிவந்த 'நந்தலாலா' , 'தீர்த்தக்கரை' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான திரு. ஜோதிகுமார் தனது பயணங்களில் சந்தித்த மனிதர்கள் பற்றிய கட்டுரைத்தொடர்  'என்  கொடைகானல்  மனிதர்கள்!  பிளம்ஸ் மரங்களும் சடை சவுக்குகளும்' .  அத்தொடரின் முதற் கட்டுரை இது. ஏனையவை 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளிவரும். - பதிவுகள்.காம் -


ஒரு காலத்தின் வாழ்க்கையை நான் இவ்விதமாக பதிவு செய்ய நேர்ந்தது. இது ஒரு கடந்த காலமா? இருக்கலாம். இருந்தும், இடைவிடாத இப்போராட்டத்தின் அடித்தளம், நாளைக்கும், நாளை மறுதினமும் முகிழ்க்க கூடிய, புது முளைகளுக்கு உயிர் தர கூடியவையே. நான் சந்தித்த அந்த மனிதர்கள் - அவர்கள் , இன்றும் எனக்கு உயிர் தரும் பெரியோர்கள். அவர்களுக்கு என் வணக்கம்.

சடை சவுக்கு

அந்த குளம் அப்படி கிடந்தது, யாதொன்றும் அறியாதது போல. அவரை தற்செயலாகத்தான் நான் சந்திக்க நேர்ந்தது. குளத்தின் சுற்றளவு, ஓர் ஆறு கிலோமீற்றர் என்றார்கள். குளத்தில் படகு சவாரி, அந்தக் காலை வேளையிலேயே ஆரம்பமாகியிருந்தது. மெல்லிய பனிபடலம் அவ்வப்போது குளத்தின் குறுக்காய், சில இடங்களில் தோன்றி, அவசரமற்று, மெது மெதுவாக, மெல்லிய ஒரு ஓவியம் போல் வழுக்கி, பின் கலைந்து அகன்றது.

சில சிறுவர்கள் தூண்டில்கள் போட்டவாறு ஓரங்களில் நின்றார்கள். இன்னும் சில, ஏழெட்டு வயது சிறுவர்களின் கூட்டமும், அவர்களது முழங்கால் வரை மட்டுமே நீராழம் இருந்த இடங்களில், இறங்கி சிறிய சிறிய பொலித்தீன் பைகளைக் கொண்டு, தம் சிறிய கரங்களாலும் கால்களாலும் தண்ணீரை உதைத்து, உதைத்து அதிர்வலைகளை உண்டுபண்ணி, குட்டி குட்டி மீன்களை விரட்டி அந்த பொலித்தீன் பைகளுக்குள் வரச்செய்து, அவற்றை பிளாஸ்டிக் போத்தலுக்குள் அடைத்து, பின் தூக்கி, அவற்றை தமது சிறிய முகங்களுக்கு நேராய் பிடித்து, அச்சிறிய மீன்கள் தமது சிறிய கண்களால் உற்றுப்பார்த்து, தமது சிறிய வாலை ஆட்டியவாறு நீந்துவதை கண்டு, சந்தோசமாய் ஆர்ப்பரித்தனர்.

இதைத்தவிர சில வயது வந்த இளைஞர்களும் முதியவர்களும் ஆங்காங்கே அக்குளக்கரையின் ஓரமாக இருந்த காங்கிரீட் திட்டுகளிலும், பைப்புகளிலும் அமர்ந்து ஆழ்ந்த சிந்தனையுடன் மிக அமைதியாக மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அவர்கள், மீன்கள் தம்மை ஏமாற்றி தின்று சென்றிருந்த தூண்டில்களை, ஓரளவு ஏமாற்றம் கலந்த சோர்வுடன் அவ்வப்போது இழுத்தெடுத்து, பின் அசராத ஓர் நம்பிக்கையுடன், மீண்டும் தேவையான மீன் தீணிகளை கவனமாக தம் இரண்டு விரல்களால் கோர்த்து, பின் வலது கையின் பெருவிரலையும் தம் சுட்டுவிரலையும் பயன்படுத்தி தூண்டிலை இரண்டொரு தடவை வட்டமாக ஒரு சுழற்று சுழற்றி நாசுக்காக நீரில் விட்டெறிந்தார்கள்.

அவை, நிதானமாக ஓர் இருபது முப்பது யார் தொலைவுக்கு சென்று விழுந்ததும், நூலை அப்புறமாயும் இப்புறமாயும் இழுத்து அசைத்து, ஓர் வசதியான இடத்தில் தூண்டிலை நிலைபெற செய்கின்றார்கள்.

குளிர்வாடை வீசிய அந்த காலைப்பொழுதில், இவற்றையெல்லாம் நோட்டமிட்டபடி வந்த பொழுது, தற்செயலாகவே இவர் என் கண்ணில் பட்டார். ஓர் அறுபது எழுபது வயதிருக்கும். குண்டாகவும் கட்டையாகவும் இருந்த அந்த மனிதர் குளத்தை ஒட்டி மிக செழிப்பாய் வளர்ந்திருந்த மெல்லிய புற்றரையின் ஓரமாய் கால்களை நீட்டி போட்டுக்கொண்டு தன்பாட்டில் மீன்பிடிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

நீள கால்சராய். முழு கை சட்டை. குளிரில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளும் குல்லாய். காதுகளை மறைக்கும் ஒரு வகை கவச ஸ்வெட்டர்கள் - கால்களிலும் வுலன் சாக்ஸ் - இப்படியாய் குளிருக்காய் அவர் கொண்டிருந்த ஏற்பாடுகள் பிரமாதமானவையாக தோன்றியது.

கிட்டத்தட்ட படுத்தமர்ந்து, கைகளை பின்னால் நீட்டி முட்டுக்கொடுக்க செய்து, குளத்து நீரை அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்கு பக்கத்தில், ஓர் ஐந்தடி நீளமான மெல்லிய இரண்டு மூங்கில் குச்சிகள் கிடந்தன. அவற்றின் நுனியில் இருந்து புறப்பட்ட நரம்புகள், குளத்தின் ஆழமான பகுதியை நோக்கி ஓடி, சென்று, நாணல்களைப் போல் செங்குத்தாய், அடித்த நீரின் மெல்லிய அலைகளில் ஆடிக்கொண்டிருந்த இரண்டு மிதப்பு கட்டைகளில் முடிவடைந்திருந்தன. நான் பாதையில் இருந்து இறங்கி குளத்தை நோக்கி சரிவாய் படுத்திருந்த அவரிடம் சென்றதை கூட அவர் பொருட்படுத்தவே இல்லை.

நானே வலிந்து ‘மீன் பிடிக்கிறீங்களா’ என்று கேட்ட போதும் கூட ‘ஆமாம்’ என்று கூறிவிட்டு, ஓர் பொருட்டில்லாதவராய் நீரையே பார்த்தவாறு இருந்தார் மனிதர். ‘ம்… இன்னுமொரு சுற்றுலா பயணி – இந்த கொடைக்கானலுக்கு’ என்ற அவரது முடிவு என்னில் எந்த ஒரு வருத்தத்தையும் ஏற்படுத்தவில்லை. ஒருவித அலட்சிய போக்குடன் இருந்த அவரிடம் மீண்டும், “இதுல மீன் இருக்கா… அகப்பட்டிருக்கா” என்று வலிந்து பேச்சு கொடுத்தேன். இப்போது மனிதர் சற்று அசைந்து கொடுத்தார்.

“எங்கிருந்து வர்றீங்க…” என்று வாய்க்குள்ளாகவே முணுமுணுத்தார்.

“சென்னை” என்றேன்.

“சென்னையில”

சற்று வேகமாக யோசித்து, புத்திசாலித்தனமாக என் நண்பனின் விலாசமான “தாயர் சாகிப்” என்றேன்.

“என்ன செய்றீங்க”

“பிசினஸ்”

“பிசினஸ் விசயமாகவா வந்தீங்க”

“இல்ல ஹாலிடே”

இப்போது மெல்ல யோசித்தவாறே கூறினார்:

“இல்ல…ஒங்க பேச்ச பார்த்தா சிலனிஸ் மாதிரி, நுவரெலியா காரவுங்க மாதிரி இருக்கே” என்றார்.

அசடு வழிய தலையை ஆட்டி முறுவலித்தவாறே “அட்டன்” என்றேன்.

“நான் ராகலை” என்றார்.

உடனடியாக என்னில் ஒரு சடுதியான கரிசனையும், பரிவும், ஈடுபாடும் அவரில் வந்து சேர்ந்துக்கொண்டது.

“உட்காருங்க” என்றார் மனிதர்.

வேறு ஒன்றையும் பேசாது பக்கத்தில் அமர்ந்துக்கொண்டேன்.

“அட்டன்ல எங்க”

“பிள்ளையார் கோவிலுக்கு மேல..”

“இந்து மகா சபைக்கு மேலயா”

அட்டன் இவருக்கு அத்துப்பிடி என்பது புரிந்தது.

“சித்திரப்புள்ள இடமா”

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் அவர் குறிப்பிட்ட இடம் இப்போதெல்லாம் அப்பெயரால் அழைக்கப்படுவதில்லை. கிட்டத்தட்ட நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன், ஹட்டன் நகரம் உருவாகிய காலங்களில் அவ்விடத்தை குறிக்க பாவிக்கப்பட்ட ஒரு பெயர் அது. இப்போது புழக்கத்தில் இல்லாத அப்பெயர் குறித்து ஒருசில பேரே இன்று அறிந்து வைத்திருந்தனர்.

“நான் ராகலையில் சுப்பர்வைசராக இருந்தேன்… இங்க வந்து ஒரு நாற்பது வருசம் இருக்கும்.”

திகைப்புடன் நானும் புல்தரையை நோக்கி அவருக்கு அருகே காலை நீட்டி இடது கையால் தலைக்கு முட்டுக்கொடுத்து கொண்டு ஒருவாறு ஒருக்களித்து படுத்துவிட்டேன். ஒரு நாற்பது வருடங்களின் முன் மாமனார் வீடு, இந்தியாத்தான் என்று முடிவு செய்ய, மனைவியின் இழுபாட்டுக்கு ஒப்ப சிறிமா-சாஸ்த்திரி ஒப்பந்தத்தின் கீழ் வந்த சேர்ந்திருந்த குடும்பம் அது.

“அவங்களுக்கு கொஞ்சம் நிலம் இருந்துச்சி… சிவகங்க பக்கம்…அங்க வந்து, வயல் உழுது அறுவட செஞ்சிகிட்டு இருந்தேன். அந்த வெயில எனக்கு தாங்கவே முடியல… சூடு… எங்க பாத்தாலும் எத பாத்தாலும் சூடு… பெறகு இங்க வந்து பாத்தேன்… நம்ம ஊர் மாதிரி… சரின்னு இங்கயே ஒரு வேல தேடிக்கிட்டேன்… லேபர்தான்… அங்கமாதிரி இல்ல… இங்க வேல கெடைக்காது… ஒரு ஃபெமிலி கார்ட் குடுத்தானுங்க… எங்கெல்லாமோ வேல தேடினேன்… கெடைக்கல… கடைசியில கெழங்கு தோட்டத்துல வேல கெடைச்சிச்சி… சரிதான்னு செய்ய தொடங்கினேன்…”

“அதுக்கு பெறகு வாட்சு மேனு-ஒரு கெழங்கு ஃபார்ம்ல”

வானத்தை அண்ணாந்து பார்த்தார். அவரது குரல் முனகல்களாய் அல்லது முறைப்பாடுகளாய் ஒலித்தது. வானம் அவரது முனகல்களை ஆழமாக, ஓர் வயது சென்ற தாயைப்போல கேட்டுக்கொண்டிருந்தது.

மூடியிருந்த சாம்பல் மேகங்கள் நேரம் செல்ல மழை வரும் என்பதை உரைத்தவாறு இருந்தது.

மனிதர் காற்சட்டை பைக்குள் கையைவிட்டு ஒரு பீடியை தேடிப்பிடித்து எடுத்து கைகளால் பொத்தி பற்றவைத்துக் கொண்டார்.

எங்களின் சம்பாசனைகளின் இடைநடுவே, எங்களுக்கு அருகாக, இரண்டு வாண்டு பையன்கள், அங்கு வந்து சேர்ந்து, மீன்பிடிப்பில் ஈடுபட முயற்சி செய்து கொண்டிருந்தார்கள்.

சுற்றுலா விடுமுறையின் ஆர்வம், இந்த குளம் – இந்த சுவாத்தியம் – இந்த மீன்பிடிப்பு – இந்த புதுமைகள் அனைத்தும் ஒன்று திரண்டு அவர்களில் ஏற்படுத்தியிருந்த குதூகலம், பரபரப்பு - எம்மை அவர்களிடம் ஒரு பொருட்டில்லாமல் ஆக்கி விட்டிருந்தது. ஒருவன் பெரியவன். பதிமூன்று வயதிருக்கும். நேர்த்தியாக தீண்போட்டு வளர்க்கப்பட்ட பன்றிகுட்டியைப்போல் கொழுத்து காணப்பட்டான். மற்றவன் சிறியவன். ஓர் ஒன்பது வயது மதிப்பிடலாம்.

எந்த ஒரு லட்சியமும் செய்யாமல் பெரியவரின் நீட்டப்பட்ட கால்களை தாண்டித் தாண்டி அப்பக்கமும் இப்பக்கமுமாய் தாவி திரிந்தார்கள். போதாதற்கு, அவ்வப்போது எமது தலைகளுக்கருகே வேறு, பரபரத்து ஓடினார்கள் – கையில் தூண்டில்களோடு.

பின் பெரியவரை தொட்டுவிடும் அருகில், தூண்டிலை வேகமாக, வீசுவதற்கு தோதாக, ஒருவன் சுழற்ற துவங்கினான். தூண்டிலின் கொக்கி சற்று பிசகினாலும் எம் கன்னங்களை பதம் பார்த்துவிடும், என்பது தெளிவாக தெரிந்தது.

பெரியவர் அனத்தியவாறே முறையிட்டார்.

“அப்பா அப்பா… தூர போயிருங்க… தம்பீ… தூர போயிருங்கய்யா”

பின்னர் தலையை ஆட்டியவாறே கூறினார்: “அப்பறம் ஒப்ரேசன் பண்ணித்தா எடுக்க வேண்டி வரும்”

பெரியவனுக்கு புரியவில்லை. அல்லது புரிந்தும் புரியாமல் இருக்கின்றான். தாமரைக்கொடியில் சிக்கிக்கொண்ட தூண்டிலை ஒருவாறு இழுத்தெடுத்து இப்போது பெரியவரின் கால்மாட்டருகே நின்றுக்கொண்டு, மீண்டும் முரட்டுத்தனமாய் சுழற்றத்தொடங்கினான்.

“தம்பி சொல்றது விளங்கலையா….” இப்போது மெலிதான ஆனால் கரகரத்த குரலில் அதட்ட தலைப்பட்டேன் நான்.

பதிலுக்கு அவன், நான் எதிர்ப்பார்க்காதப்படி, “எவ்வளவு நாள் கழிச்சி மீன் பிடிக்க வந்திருக்கோம்” என்று முனகினான். இவனது இந்த சுரணையற்ற பாவத்தை காண எனக்கோ– அப்படியே பற்றிக் கொண்டு வந்தது.

பெரியவரோ, என்னைப்போல் அலட்டிக்கொள்ளாமல் ஆறுதலாக கையை ஊன்றி மெதுவாக எழுந்தார்.

அரவணைக்கும் ஒரு குரலில் ஓர் தாயைப் போல் பேசினார்.

“வா தம்பி… இங்கத்தா… அப்படியில்ல… இப்பிடி வீசனும்… அட இது என்ன பிழையா இல்ல கோத்து வச்சிருக்க…” என்று தூண்டிலை வாங்கி அனைத்தையும் ஒட்டுமொத்தமாய் கழற்றி திருத்த ஆரம்பித்தார். “தக்க” இவ்வளவு தூரத்துல இருக்க கூடாது… இந்தா புடி… இந்தா இங்கன கட்டு… இதென்னா… பன்னா… ப்ரெட்டா… ம்.. ஹிம்… இதெல்லாம் போட்டா இந்த மீனு திங்காது… இரு நா தர்றேன்…” தன் பையில் கையை விட்டு தான் கையோடு கொண்டு வந்திருந்த தட்டப்பட்ட ஒருவித ச்சீஸ் போன்ற மீனை கவரும் தீண்பண்டத்தை தேடி எடுத்து, அதில் ஒரு சிறிய துண்டை லாவகமாக ஓர் சிறிய பிளேட் துண்டால் வெட்டி எடுத்து, பிடித்திருந்த தூண்டில் கொக்கியை துப்புரவு செய்து, அச்சீஸ் ரொட்டியால் தூண்டியின் முனையை மீனுக்கு தெரியாதவாறு மாட்டி மறைத்து, “இப்ப இங்கிட்டு வந்து, மத்தவங்கள டிஸ்டப் பண்ணாதவாறு போடு” என்று ஓர் வாய்ப்பான இடத்தையும் தேர்வுசெய்து தந்தார் மனிதர்.

“நீங்களே வீசுங்க தாத்தா” என்றான் பெரியவன். “எங்களுக்கு ஆழமா போட முடியல… எல்லாம் தாமர கொடியிலேயே சிக்கிக்குது” என்றான் அவன்.

“சரி… தா…”என்று தூண்டிலை வாங்கி இரண்டு சுழற்று சுழற்றி வீசியெறிந்தார் மனிதர்.

தூண்டில் அவர் சொல்வதை எல்லாம் அப்படியே அச்சொட்டாக கேட்டு விட்டாற்போல் ஓர் அழகாய் நீண்டு பறந்து அவர் சொன்ன இடத்தில் நல்ல பிள்ளையாய் விழுந்து மிதக்க தொடங்கியது. பெரியவர் அதை மெல்ல அப்புறமாயும் இப்பறமாயும் இரண்டொரு இழுப்பு இழுத்து தக்கையை ஓர் வாய்ப்பான இடத்தில் நிலை பெற செய்தார்.

“இப்ப பாரு தம்பி. தக்க – அதுதான் அந்த குச்சி – ஆடயில மீன் கடிக்குதுன்னு அர்த்தம் - அப்ப என்ன கூப்புடு – கடிச்ச ஒடன பட்டுனு இழுத்துறாத…” என்றெல்லாம் விளக்கம் தந்து விட்டு இருந்த இடத்திற்கு வந்து அமர்ந்துக் கொண்டார் பெரியவர்.

“தூண்டில்னா வெளாட்டு வெசமா மாறுற விஷயம். ஓப்ரேசன் பண்ணித்தான் எடுக்கனும்”

“அப்படித்தான் ஒருமுறை” புல்லில் அசைந்து சரியாக வசதியாக அமர்ந்தவாறே என்னை நோக்கி தன் இடக்கரத்தை சற்று முன்னால் நீட்டி, சுட்டுவிரலாலும் பெருவிரலாலும் தூண்டிலொன்றை பிடிப்பதை போல் பிடித்துவைத்துக் கொண்டு கூறினார்.

“இந்த தூண்டில் இருக்குதுல்ல… அதுல அடி பாகத்துல… இந்தா இங்கன்ன…” இப்பொழுது வலது கரத்தையும் துணைக்கு கொண்டுவந்தார். அவ்வலக்கரத்தின் சுட்டுவிரல் சற்று பருத்தும் முரடுதட்டி போயும் அதன் நகம் உருகுலைந்தும் இருந்தது. “இங்கன நரம்ப இறுக்கமா கட்டனும்…” வலகரத்தின் இரு விரல்களும் இடக்கை தூண்டில் அருகே வந்து நான்கைந்து முறை இறுக்கமாக காற்றில் சுழற்றி கட்டியது.

“இது அவுந்துச்சின்னா கவ்வுன மீனு அப்படியே தூண்டியோட கழட்டி கிட்டு ஓடிரும்… தூண்டிலும் போச்சி மீனும் போச்சி…”

“அதனால மீன் புடிக்கிறவங்க இந்த, கட்ற வி~யத்துல கவனமா இருப்பாங்க – பொதுவா அந்த நரம்ப வாயில வச்சி, பல்லுல கடிச்சி இழுத்து டைட் பண்ணுவாங்க” இப்போது விரல்கள் அவரது வாயருகே செல்ல ஏற்றாற்போல் பல்லும் முகச்சுளிவுடன் இறுக்கி கடிபட்டது.

“இப்படித்தான் ஒருத்தன். எனக்கு பக்கத்துல நின்னு டைட் பண்ணிக்கிட்டு இருந்தான். அவன் கெட்டநேரம். நரம்புவுட்டு ஒரு நுனி, பல்லுல வழுக்கிட்டு வந்து – இழுத்த வேகத்துல தூண்டில் அவன் ஒதட்டுல – இங்கன – அப்படியே ஆழமா குத்தி மாட்டிகிச்சி…”

“அவென் ~ர்டெல்லாம் ரத்தம், கொட்டுது… கத்துறான்… எடுக்க முடியல… நான் ஓடினேன்”

“நானும் என்னென்னவோ செஞ்சி பாக்குறேன்…ஒன்னுமே செய்ய முடியல… அப்படி ஆழமா மாட்டியிருக்கு… ஒன்னுமே தோணல… டக்குன்னு ரோட்டுக்கு ஓடிப்போயி போற வார காரெல்லாம் நிப்பாட்டுறேன் – எவென் நிப்பாட்டுவான் – டூரிஸ்ட்டுங்க – அவென் கொடைக்கானல சுத்தி பாக்க வந்தானா – இல்ல, இவன ஆஸ்பத்திரிக்கு இழுத்துக்கிட்டு திரிவானா – கடைசில ஒரு மாதிரியா ஒரு கார கும்புட்டு நிப்பாட்டி இவன ஏத்தி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வச்சேன்… அங்கேயும் நான் நெனைச்ச மாதிரியே தூண்டில ஆப்ரே~ன் செஞ்சுதான் எடுத்துருக்கிறானுங்க… இது நடந்து – என்னா இப்ப ஒரு வரு~ம் தான் ஆகப் போகுது…”

மேலும் தொடர்ந்த சம்பாஷனையின் பின் அவரே அழைத்தார். “வாங்க ஒரு தேத்தண்ணி சாப்பிட்டு வந்துடுவோம்…”

ரோட்டுக்கு மறுபுறமாய் எதிர்த்தாற் போல இருந்த பெட்டிக்கடைக்கு சென்றோம். பிடிவாதமாய் பணம் செலுத்தினார் மனிதர்.

மீண்டும் வந்து அமர்ந்துக் கொண்டோம், வசதியாய்.

‘மனிதர்களா…’ தலையை குனிந்து சம்மணமிட்ட நிலையில், புல்தரையை பார்த்து ஒருவித கனைப்புடன் “ஹ்…ஹ்…ம்ம்..ம்…” என்று சப்பற்ற ஒருவித சிரிப்பை உதிர்த்துக்கொண்டு கூறத்தொடங்கினார்.

“அங்க – அதாவது இலங்கையில் – ஒரு சின்ன வட்டத்துக்குள்ள நம்ம தமிழ் மக்கள் எல்லாம் இருக்கிறாங்க… சு…த்;…தி சிங்களவங்க. அவங்க எங்கள கோவத்தோட பாக்குறாங்க… அப்ப நம்ம என்ன செய்யலாம்… ஒற்றுமையா இருக்கலாம்…”

“இங்க சுத்தி பிரிட்டி~;காரனுங்க இருந்தானுங்க… அப்ப அவனுக்கு எதிரா எல்லாரும் ஒத்துமையா இருந்தானுங்க…”

“அவங்க எல்லாம் போனவுடன, ஒவ்வொருத்தனும்… அதாவது நீங்களும் நானும் குரோதமா பாக்க ஆரம்பிக்கிறோம்…”

“குரோதமா… உண்மையில அப்படி குரோதத்துடன் தான் பார்க்கிறானா” என்று சந்தேகமுற அவரிடம் வினவினேன்.

“பின்ன வேற எப்படி” என்று பதிலுக்கு அவர் என்னிடம் வினவினார். பின் தொடர்ந்தார்.

“நீங்க வர்றீங்க… உக்காருறீங்க… ஒங்க பைல ஒரு நூறு ரூவா நீட்டிக்கிட்டு இருக்கு… அத என் பைக்கு எப்படி மாத்துறது…? மாத்தியாச்சா… சரி, அப்ப நாம கௌம்ப வேண்டியதுதான்…” இப்படி ஒரு மனுசன் யோசிச்சா – அதுக்கு குரோதம்ன்னு இல்லாம என்னன்னு சொல்றது…”

தொடர்ந்தாற்போல் ஒரு கடுமையான விதிவிலக்கை கூறுவது போல் கூறினார்.

“ஆனா… அது வந்து…” சற்று தாமதித்து நிதானித்து கூறினார் – மீண்டும் கையால் காற்றில் ஓர் அடி அடித்து காட்டி “ஒரு அறுபது அறுபத்தைஞ்சு பர்ஸண்டுதான். ஒரு முப்பது முப்பத்தைஞ்சு நல்ல மனுசங்களும் இல்லாம இல்ல…”

“அப்ப வாழ்க்கைங்கறதே ஒருத்தன ஒருத்தன் ஏமாத்துறது தானா…”

என்னை ஒரு கணம் திடுக்கிட்டு நிமிர்ந்து ஏறிட்டு நோக்கினார். பின் மெல்ல சிந்தனையுடன் கூறினார்:

“எத்தன பேரு இந்த வார்த்தைய சொல்லுவாங்க…”

ஆழமான இந்த கேள்வியில் ஒரு கணம் அதிர்ந்து போனேன் நான்.

தொடர்ந்து, அவரது இந்த முடிவுக்கு சில உதாரணங்களை கேட்டேன். “இந்தா இதே மாதிரி… இப்படி மீன் பிடிச்சிக்கிட்டு இருந்தேன்… ஒருத்தன் வந்தான்… ஒங்க மாதிரின்னு வைங்களே… என்னோட பேச்சுக் கொடுத்தான். பெறகு நின்னான்… இந்தா, இப்பிடி, பக்கத்துல, ஒரு புது ஜெக்கட் – மழைக்காக வாங்கி வச்சிருந்தேன்… குனிஞ்சி எடுத்து போட்டுப்பார்த்தான்… சரி எளவயசு… ஒரு ஆசைக்கு போட்டு பாக்குறான் போல அப்படின்னு பேசாம இருந்தேன்… பேசாம அப்படியே ஏறி மோட்டார் பைக்கில விருட்டுன்னு ஓடிட்டான்… மத்தவங்க எல்லாம் சொன்னாங்க… ஓர் அடி அடிச்சு பிடிங்கியிருக்கனும்னு… இல்லென்னா சத்தம் போட்டு ஊர கூட்டியிருக்கனும்னு… எந்த ஊர… மத்தது எனக்குத்தான் அப்ப வேகமா எழும்பவும் ஓடவும் முடியாதே… போகட்டும்… எவ்வளவு… ஒரு இருநூறு ரூபா… அந்த ஒரு இருநூறு ரூபாவுக்கு – இப்பிடி” பெருமூச்சுவிட்டார் கிழவர்.

இப்போது, மெலிந்த தோற்றத்தில், கலைந்த தலைமயிருடன், சிறுவன் ஒருவன் வந்து சேர்ந்தான். சற்றே சோர்வு அவன் களைத்த முகத்தில் படர்ந்திருந்தது. இவருடன் வந்து ஒட்டிக்கொண்டான், பாசத்துடனும் உரிமையுடனும்.

“வாடா, எங்கடா போன” என்று அவனது கரத்தை பிடித்திழுத்து தலையைக் கோதி அன்பொழுக கேட்டார் பெரியவர்.

“வாந்தி தாத்தா…”

“வாந்தியா… எப்பிடி… என்ன ராசா சாப்பிட்ட…” கரிசனையுடன் விசாரிக்க ஆரம்பித்தார்.

“எத சாப்பிட்டாலும்…”

“ச்சா… கூடாதுடா… தாத்தா பாரு… காலையில சாப்பிட்டேன்… பெறகு ஒன்னுமே இல்ல… ஒரு டீ குடிப்பேன்… கண்டதெல்லாம் வாங்கி சாப்பிட கூடாது…”

“பிஸ்கட் வாங்கி தரட்டா…”

“இல்ல தாத்தா எத சாப்பிட்டாலும் வாந்தி வருது… ஒரு பத்து ரூவா தா… எதையாச்சும் குடிக்கிறேன்… என் ஃபிரன்ட்ஸ{ம் வந்துருக்காங்க” என்று சற்று தூரத்தில் நின்ற அவன் வயது பையன்கள் இருவரை சுட்டிக்காட்டினான்.

“இந்தா… அப்படின்னா இருபதா வச்சிக்க…” என்று பையிலிருந்து எடுத்து கொடுத்தார் பெரியவர்.

பின் கூறினார்:

“எல்லாமே ஒரு பொறாமத்தான்… அவன்கிட்ட இல்லாதது, ஒங்ககிட்ட இருக்கு… பொறாமையில ஒங்கள பேசுறான், ஏசுறான் குத்த வர்றான்… வெறியோட திரியுறான் - மனுசன்”

முடிவாய் கூறினார்:

“எல்லாமே ஓர் இல்லாத கொறத்தான்.”

பின் அவரது அகதி வாழ்வு குறித்து கேட்டபோது கூறினார். “அகதின்னா என்னா? ஒன்னுமே இல்லாதவன்னு அர்த்தம். அதாவது உரிமை இல்லாதவன் – அப்படின்னு அர்த்தம். நம்ப மாட்டீங்க… எங்க மக்கள் இங்க வந்து ரொம்ப ரொம்ப பாவப்பட்டுட்டாங்க…”

“அவங்கள அடிக்கிறது… கூலி தராம விரட்றது… கூலிய அடிமட்டம் வரைக்கும் கொறைச்சி குடுக்கிறது… அத்தன அநியாயமும் இங்க நடந்துச்சி…”

“இங்குள்ளவங்க மேல பெழ சொல்ல மாட்டேன். இங்குள்ளவங்களுக்கே இல்ல. அப்ப அவன்தான் என்ன செய்வான். அதுல வர்ற குரோதம்… வன்மம்… வெறி…”

“இப்படித்தான் நான் வாட்சுமேனா இருந்தேன்னு சொன்னேனே – ஒரு ஃபார்ம் – அதுல அப்படித்தான் – அங்க நம்மாலு ஒருத்தன் கெழங்கு புடுங்குற வேல செஞ்சிக்கிட்டு இருந்தான். வேல செய்யிறவங்களுக்கு சில சில ஆயுதங்கள் புடிச்சி போயிரும்… அதாவது, அவுங்களே அத தினமும் பாவிச்சி பாவிச்சி, அவுங்கவுங்க கைக்கு தோதா வந்துரும். அது மேல ஒரு ஆசையும் வந்துரும்… அதையே அவங்க தேடுவானுங்க… ஒரு பாசம்னு கூட சொல்லிக்கலாம்ன்னு வைங்களே…”

“அப்டி இவனுக்கும் ஒரு கத்தி புடிச்சி போயிருச்சி. இவன் அத தினமும் நல்லபடியா தீட்டி, கழுவி, சொனப்போட வச்சிருப்பானோ என்னவோ… காலைல ஃபார்ம்ல வேலைக்கு வர்ற சனம், அவங்கவங்களுக்கு தேவையான ஆயுதங்கள எடுக்கும்… அங்க எஸ்டேட் பெரட்டுல போயி எடுப்பாங்களே – அது மாதிரின்னு வச்சிக்கிங்களே…”

“ஒரு நாள் இரவு காவல முடிச்சிட்டு, காலையில வெளிய வர்றேன். இவனும் இன்னொரு பொம்பளையும் – அந்த ஆயுதத்த இழுத்து புடிச்சிக்கிட்டு மல்லுக்கட்டிக்கிட்டு இருக்காங்க…”

“சரின்னு அப்படியே தடுத்துட்டு நா வந்துட்டேன்…”

“இவென் ஆயுதத்த எடுத்திட்டான் போல. வி~யம் அத்தோட முடிஞ்சதா இல்ல…”

“அந்த பொண்ணு அவுங்க ஊர்க்காரங்ககிட்ட இவென் அவள கெடுக்க மல்லு கட்டிட்டானு புகார் கொடுத்திருச்சி. ஆயுதத்துக்காக இழுப்பறி பட்டத கண்ணால கண்டவன் நான்”

“அப்படி இருக்க ஒரு முப்பது பேரு வந்து, இவன அடியா அடிச்சி தொவச்சி மரத்துல கட்டி வச்சிருக்கானுங்க…”

“எனக்கும் தெரியாது… என் வீடும் கொஞ்சம் தள்ளி இருந்துச்சி… ஏவுட்டு மக – சின்னவ – கடைக்கு போவயில பாத்துட்டு வந்து சொன்னா – இப்படி அடிச்சி கட்டிவச்சிருக்காங்கப்பானு – அப்பத்தான் எனக்கே தெரியும்… ஓடி பாத்தா இப்பிடி”

“ஒருத்தன் சொல்றான் – என்ன காட்டி – இவனும் அந்த ஊருத்தான் – சிலோன்காரன் - இவனையும் அடிக்கனும்…”

“நான் வெளக்கமா சொன்னேன்…” ஒருத்தன் வந்து என் கைய புடிச்சி முறுக்குறான்.

“நல்ல வேள.. அந்த ஃபார்ம்ல என்னோட வேல செஞ்ச இன்னொரு ஆள் – அங்க வந்து சொன்னான். ‘இனி நாங்க பொறுக்க மாட்டோம். ஒங்கள ஒதப்போம். இவரு எங்களோட இருக்கிறவர்னு…”

“இப்படி சொன்னோன கொஞ்சம் அடங்குனானுங்க… பெறகு போலிசுக்கு போன் போட்டு போலிச வரவழச்சி இவன போலிசுக்கு அனுப்புனாங்க…”

“நேரம் கழிச்சி நானும் போனேன் ஸ்டேசனுக்கு. பாத்தா இவன ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பி எடுத்து கட்டெல்லாம் போட்டு வச்சிருக்கானுங்க… நடந்ததெல்லா எடுத்து சொல்லி, அந்த பொண்ணு சொன்னதும் பொய்யி, அதுக்கு நான் நேரடி சாட்சி – இவன உட்டுருங்க சார் –இப்படி அடிச்சவங்களுக்கு எதிரா எக்~ன் எடுங்க சார்ன்னு சொன்னா, அவென் சொல்றான் ‘நிப்பாட்டு. ஒன்னையும் ஒதச்சி உள்ளபோட்டு, முன்னூத்தி எழுபத்தைஞ்சு நாள் உள்ள தள்ளுவேங்றான்.”

“நா கௌம்பி வந்துட்டேன். பெறகு இன்னுமொரு மூணு பேர கூட்டிக்கிட்டு போய் இன்ஸ்பெக்ட்டர கண்டு முழு விவரத்தையும் ரிப்போர்ட் செஞ்சேன்”

“அவரு ஓரளவு நல்ல மனு~ன். நெறைய பொலிச ஏத்திக்கிட்டு போயி, அவ்வளவு பேத்தையும் அடிச்சி இழுத்துக்கிட்டு வந்தாரு ஸ்டேசனுக்கு. பின்ன போலிச கூப்பிட்டு சொன்னாரு. சிலோன்காரங்கள தொடக்கூடாது – அரசாங்கம் அப்டித்தான் சொல்லியிருக்கு… வி~யம் என்னென்னா அவரு மண்டபம் கேம்ப்ள இன்ஸ்பெக்டரா மிச்சநாளா தொழில் பாத்துருக்காரு… அப்ப அவருக்கு எல்லாமே தெரிஞ்சிருக்கு… நம்ம மக்கள் பட்ட கஸ்டம் வேதன… அழுத அழுக… எல்லாமே அவருக்கு தெரிஞ்சிருக்கு…”

பிறகு சற்று தாமதித்து, தயங்கி தயங்கி பெரியவரிடம் மேலும் ஒரு வினாவை தொடுத்தேன். “இங்க வந்த பெறகு, பிழை செய்து விட்டோமே என்று எப்போதாவது நினைக்க தோன்றியதா” என்று.

அமைதியாக ஒரு பெருமூச்சை விட்டார.; யோசித்தார். பின்னர் கூறினார், ஒரு சிறு கனைப்புடன்.

“நினைக்காம… அப்படி நினைப்பு வராம இருக்குமா… ஒரு சுகமில்லனு படுத்துருவோம். யாரு இங்க வரப்போறா? அங்கன்னா அம்மா, அப்பா, உறவு, சுத்தியிருக்கவுங்க – அத்தனை பேரும் வருவாங்க…”

“நா அங்க இருந்த காலத்துல அங்க ஒரு நாள் சம்பளம் நூறு ரூபாதான். ஆனா ஒரு கல்யாணம் சடங்குன்னா, ஒரு அம்பது அறுபது பேரு, பரிசோட வந்து நிப்பாங்களே – இங்க யாரு வருவா – அப்ப அந்த நெனைப்பெல்லாம் ஒங்களுக்கு வருமா வராதா… அத இப்படி சொல்லலாம். நீங்க எங்க பொறந்தீங்களோ அங்கத்தான் நீங்க வாழனும். சுகமோ துக்கமோ அந்த மக்களோட வாழ்றதுதான் முறை.”

“இத பாருங்க. இந்த நாத்த பாருங்க” குளக்கரை ஓரமாக வளர்ந்திருந்த மூன்றடி நீளமான பச்சை நாத்துக்களை சுட்டிக்காட்டினார். அவை அடித்த காற்றில் தமது தலைகளை ஆட்டி வணக்கம் தெரிவித்தன. “இதுல ஒரு பத்து நாத்த புடுங்குங்க. அங்க இலங்கையில கொண்டுபோயி வைங்க. தண்ணி ஊத்துங்க. ஏதேதோ செய்ங்க. எத்தன பொழைக்கும். அதான் மனுசன் கதையும். எங்க பொறந்தியோ அங்கேயே வாழு…”

“நாளைக்கு வருவீங்களா… சரி… அப்படின்னா என் மீன் பிடிக்கிற எடத்த காட்டிர்றேன்… நாளைக்கு அங்கத்தான்… நம்ம ஊர் காரவுங்கள கண்டாலே வர்ற சந்தோசம்… நிம்மதி…” பிறகு ஓர் பெருமூச்சு.

இருவரும் மெதுவாக எழுந்து நடக்கத் தொடங்கினோம். சிறுவனிடம் குடை, தூண்டில்கள், பை –இவற்றையெல்லாம் ஒப்படைத்துவிட்டார். அவன் ஒரு ஐந்தடி தூரம் எமக்கு முன்னால் நடந்தான்.

குளம். குளத்தை சுற்றி இந்நடைப்பாதை. அதை ஒட்டி ரோடு. அதை ஒட்டி குன்றின் சரிவு – புதர்கள் – மரங்கள் – பெரிய பெரிய வீடுகள் – பூந்தோட்டங்கள். ரம்மியமான இடம்தான் இது. சந்தேகமில்லை. ஆனால் அதைவிட ரம்மியமானது வீசும் காற்று. அதிலும் கோடை காலத்தில் சொக்க வைக்கும்.
“இது ரிட்ரீட் ஹவுஸ்” – கூறினார் பெரியவர். முன்னால் செல்லும் பேரனிடம் கூவி கேட்டார். “தம்பீ… தெரியுதாடா இது எந்த எடமுன்னு…”

“தெரியும் தாத்தா…” அவன் திரும்பாமல் நடந்து கொண்டே பதில் அளித்தான்.

“இங்கனத்தான் ஒரு தடவ மீன் பிடிச்சிக்கிட்டிருந்தேன்… அப்ப ஒரு வெள்ளகாரன்… இந்த ரிட்ரீட் ஹவுஸ்ல தங்கியிருக்கவனா இருக்கனும்…” – ரிட்ரீட் ஹவுஸை நோக்கி கையை உயர்த்தி, விரலால் சுட்டி கூறினார்.

“வெளில நடக்க வந்திருக்கான் இவென் – பேரன காட்டி – அஞ்சி ஆறு வயசு – என்னோட மீன் பிடிக்க கூட்டிக்கிட்டு வந்திருக்கேன். மீன் பிடிச்சிக்கிட்டிருக்கோம்…”
“ஒரு பருந்து – இந்தா பறக்குதுல்ல – அதுல ஒன்னு – அத என்ன நெனச்சுச்சோ… அது பறந்த வேகத்துல ஒரு மரத்துல தொங்கின தேன் கூட்ட கலைச்சிருச்சி – அது வேனுமினு கலைச்சிச்சா – தெரியல…”

“தேன் பூச்சியெல்லாம் வெளிய வந்துருச்சி… அந்த வெள்ளக்காரன் மேல – அப்படியே – மொகம், ஒடம்பு எல்லாம் – மொச்சு மொச்சு கொத்துது. அவன் கத்துறான்… ஹெல்ப் மீ… ஹெல்ப் மீ… கத்திக்கிட்டு என்கிட்ட ஓடி வர்றான்… நான் என்னான்னு ஹெல்ப் பண்ணலாம்… இவன் அஞ்சு வயசு கொழந்த… ஜெக்கட்ட கழட்டி கொழந்த மேல மூடி அவன படுக்க போட்டு நானும் குப்புற படுத்துட்டேன் புல்லுல, மொகத்த மூடிக்கிட்டு. அவன் எப்படியோ தப்பிச்சி, ஹாஸ்பிட்டலுக்கு போயி, ஒரு எட்டு நாள் இருந்து, கடைசியில தப்பிச்சிட்டான்…”

“நான் எப்படி அவன காப்பாத்தியிருக்கலாம்…? என்னால முடியல – அங்கிட்டு தண்ணி – இவென் கொழந்த – நான் என்ன செய்யலாம் – ஆனா இன்னைக்கி வரைக்கும் மனசு தாங்கல. மனசுல அத நெனைக்கயில எல்லாம் வலி – ஒரு வேதன – ச்சா… இப்படி ஒதவி கேட்டவனுக்கு, எனக்கு ஒதவ முடியாம போயிருச்சேன்னு…”

அவர் வழமையாக மீன் பிடிக்கும் இடம் வந்ததும் பிரிந்தோம்.

“நாளைக்கு இங்கன்ன மீன் பிடிச்சிக்கிட்டு இருப்பேன். வந்தீங்கன்னா, சந்திக்கலாம்…”

சிறுவனிடம் இருந்து தூண்டிலை வாங்கி எடுத்தார். இருவரும் நடைப்பாதையை ஒட்டி போடப்பட்டிருந்த உலோக வேலியின் திறந்திருந்த இடைவெளிக்கூடாக குளத்தின் புல்தரையை நோக்கி நுழைந்தனர். நான் நடந்தேன். “ரிட்ரீட்” என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் அந்தப்பதம் அடித்த வாடையுடன் சேர்ந்து சுழன்றது.
ஆனால் அன்றோ நான் புறப்பட வேண்டிய நாள். அவரிடம் ஃபோனோ நம்பரோ இருக்கவில்லை. நான் தங்கியிருந்த விடுதியில் இருந்து வாகனத்தில் பஸ் நிறுத்தத்திற்கு போவதற்கு முன்னால், இவரை சந்தித்து விடைபெறுவது என முடிவெடுத்தேன்.

அது கொடைக்கானலின் கோடை அல்ல. விரைவாகவே இருட்ட தொடங்கி இருந்தது. மாலை ஐந்து மணி. பனி மூடி, காற்று பனியோடு முகத்தில் வேகமாய் அடித்து கொண்டிருந்தது, தலைமுடியை எல்லாம் கலைத்து பறக்க செய்தது..

நான் வாகனத்தில், இவருக்கென சில பதார்த்தங்களை வாங்கி கொண்டு குளத்தை சுற்றி, இவர் “வழமை” என குறிப்பிட்ட இடத்தை அடைந்தேன். அங்கே காணவில்லை. யார்த்தான் இவ்வளவு நேரம் கடந்து, இந்த இருட்டும் தருவாயில், இந்த காற்றில் மீன் பிடித்துக்கொண்டிருப்பார்கள்? என்னை நான் நொந்துக்கொண்டு புறப்பட்டு, வரும் வேளையில் இன்னுமொரு வளைவில், வீசிய பனிமூட்டத்தில், ஒரு ஓவியம் போன்று இவர் குல்லாய், ஜக்கெட் என கவசம் பூண்டு தூரத்தில் மீன் பிடித்து நின்றிருந்த தோற்றம் அந்த பனியிடையே தென்பட்டது.

நிறுத்த சொல்லி இறங்கி ஓடினேன். விடைபெற்று வந்து மீண்டும் வாகனத்தில் ஏறி, அந்த டக்ஸி ஓட்டுனரிடம் விசாரித்தேன்.

“இவரை தெரியுமா…”

“தெரியும்…” என்றான் தலையை ஆட்டி.

“சோ~ல் வெர்கர் சார்…”

“எப்படிப்பட்ட ஆள்” என்றேன்.

“கிடைக்கமாட்டாத ஆள்” என்றான் பதிலக்கு.

பஸ் புறப்பட்ட போது யோசித்தேன்.

ஏன் இவன் இப்படி கூறினான்? தெரியவில்லை. கேட்டிருக்கலாம்.

அதையும் அந்த அவசரத்தில் செய்யவில்லை. கிடைக்கமாட்டாத ஆள் – அட!

அந்த குளத்தை சுற்றி நீல அல்லி படர்ந்து பூத்திருந்தது. குளத்தை மேலும் சுத்தப்படுத்தியிருந்தார்கள். நீர் இன்னும் தெளிவாக இருந்தது. வானம் பிரகாசமான நீலம். ஆனால் கண்ணை குத்தவில்லை. குளிர் சாடையாக இருந்தது. இது, ஆறு மாதங்களின் பின்னரான என் மீள்வருகை. இதுவும் விடுமுறை பயணிகள் அற்ற காலம் தான். இந்த ஆறுமாத காலத்தில், வாழ்வின் தாக்கம் பெரிதாய் தெரிந்தது. சாமான்ய வாழ்வினரை தின்று தீர்க்க வாழ்வு வெறிகொண்டு அலைவதாய் பட்டது. பழமற்ற, பியர்ஸ் மரங்களின் தோப்பு. இலைகளை இழந்து, வரண்டு, பரட்டை தலை கோலமாய் நின்றிருந்தன அவை. இவர் வழமையாக தேனீர் அருந்தும் பெட்டிக்கடையில் கூறினார்கள் - இவர் வந்து இரண்டு மாதங்களுக்கு மேல் என.

வளைவில், பியர்ஸ் பழங்களையும் சோளக்கற்றைகளையும், நெருப்பில் வாட்டி விற்கும் மாதிடம் விசாரித்தேன். “வரல… இப்படியேத்தான் போனும்… ஆனா தூரமே… பாம்பார்புரம்…”

செங்குத்தான அந்த மிக குறுகிய படிகளில், கடையை தாண்டி, மூச்சு வாங்க வாங்க ஏறி, மலையகத்தின் லயங்களை நினைவுபடுத்திய, அந்த சிறிய திண்ணையில் நுழைந்த போது, முற்றத்தில் ஓர் சிறிய பிளாஸ்டிக்; நாற்காலியை போட்டு அமர்ந்திருந்தார், ஓரளவு அடித்த வெயிலில்.

மெலிந்திருந்தார். ஒரு வேட்டியை கட்டியிருந்தார்.

பியர்ஸ் விற்கும் மாது ஏற்கனவே சொல்லியிருந்தாள்: அவருக்கு ஒடம்புக்கு முடியலன்னு.

சென்ற முறையே அவர் நடக்க அவதிப்படுவதை அவதானித்திருந்தேன்.

நடக்கும் போது இருமினார். சளியை துப்பினார். ஏற்றுக்கொண்டிருந்தார் கஸ்டமாக இருக்கிறது என.

“நான் எதிர்பாக்கவே இல்ல நீங்க வருவீங்கன்னு…”

“சக்கர வியாதின்னு சொன்னாங்க… பத்து நாளைக்கு மொத… அப்படியே மரத்துப்போச்சி…”

“அதான் திருப்பூருக்கு… நாளை மறுநாள், மகனோட போகலாம்ன்னு இருக்கேன்…”

“இல்ல அன்னைக்கே வரமாட்டேன்… நாளாகும்… ஒரு மாசம் போல் இருந்து வைத்தியம் பார்த்து… ஏதேதோ எண்ணெய் எல்லாம் போட்டு மசாஜ் பண்ணுவாங்கலாம்…”
“குளத்துக்கு போயி தேடுனீங்களா…”

“ஓ…இரண்டு மாசமா மீன் பிடிக்கிறத விட்டுட்டேன்…கால் முடியல…ஏறி எறங்கனும்ல…” இடது கரத்தால் முழங்காலை தடவினார். வலது கரம் செயலிழந்ததால் மடி மீது மடித்து வைத்திருந்தார். தலையை குனிந்து மெல்ல சிரித்தார்.

“இலங்கை ஞாபகம் எல்லாம் இப்ப வருது…கண்டபடி வருது… ராத்திரி படுக்கையில – அப்பிடி வருது… ஞாபகமெல்லாம்… ஏதோ படம் ஓட்ற மாதிரி…”
“எங்கெங்க இருந்திருக்கேன்… ராகல தெரியும் தானே… அங்கதான் எனக்கு ஆரம்ப படிப்பு… பெறகு எட்டு ஒன்பது முடிச்ச பெறகு அட்டன் வந்துட்டேன்… அக்கா இருந்தாங்க… மால்பரோ எஸ்டேட்… அங்க பகலெல்லாம் பட்டறையில வேல… இரவு நைட் கிளாஸ்… இப்படித்தான் படிச்சேன்… பெறகு ஒரு ஆறு மாசமா சூப்பர்வைசர் வேல பழகுனேன்… ராகலையில… பெறகு சூப்பர்வைசரா இருந்தேன்… அப்பதான் அந்த கண்டாக்க வெட்டுனாங்க… அதுல இருந்து எனக்கு அந்த வேலயே புடிக்கல… சரி போதும்ன்னு தீர்மானிச்சிட்டேன்…”

தன் இடது கையை உயர்த்தி ஒரு விரலை மடித்தவாறு நீட்டி, எதையோ காற்றில் சுட்டிக்காட்டி

“கோர்ட்டுக்கு போற ரோடு இருக்கே… அதுல பெட்டாவுல… மூனு வருஷம் க~pயரா இருந்தேன்… சாப்பாட்டுக் கட… சில நேரம் அப்படியே போயி, ஹைகோர்ட்ல உட்காந்துருவேன்… வழக்கு பார்க்க… எல்லாம் தெரிஞ்சவங்கதான்… டீ குடிக்க வர்றவங்க… அவங்கத்தான் சொன்னாங்க, வந்தா பாக்கலாம்ன்னு…”

“கல்முனையில இருந்திருக்கேன்… கல்முனை அக்கரைபத்து… பாண்டிருப்பு… இதுக்கெல்லாம் நீங்க போயிருக்கீங்களா..”

தலையை குனிய வைத்துக்கொண்டு தனக்குள்ளாகவே கூறிக்கொண்டார்: “ம்… வாழ்க்க எப்படி எப்படி எல்லாம் ஓடி இருக்கப்பா…”

பிறகு யோசனையோடு முறையிட்டார், தலையை குனித்தபடி..

“என்னா அர்த்தம்… எங்க பிறந்தோம்… எங்க வளந்தோம்… ஒரு அம்பது அறுபது வரு~ம்… வாழ்றோம்… உழைக்கிறோம்… பெறகு இல்ல… இதுக்கு பொறக்காமையே இருந்திருக்கலாமே…”

“இந்தியா வந்ததா? அது நான் இஸ்டப்பட்டு வந்தது இல்லையே..எல்லாம் எங்க மாமனார் செய்த வேல… எனக்கு தெரியாமலேயே பாஸ்போர்ட் எல்லாம் எழுதி ஏற்பாடு செஞ்சிருக்காரு… கடைசியிலதான் தெரியும்… யோசிச்சு பார்த்தேன்… அவருக்கு ஒரே மக… எனக்குன்னா நெறைய சகோதரங்கள்… சரி போவோம்ன்னு வந்துட்டேன்…”

“இங்க எவளவோ செய்தேன்….. கொடக்கானல்லேயே, எவ்வளவோ செய்தேன்…. பொண்டட் லேபர்ன்னு இருந்தாங்க… நீங்க கேள்விப்பட்டிறீப்பிங்களோ என்னவோ… பொண்டட் லேபர் (டீழுNனுநுனு டுயுடீழுருசு)… ஒரு நூத்தைம்பது குடும்பம்… எல்லாரும் நம்ப இலங்கையில இருந்து வந்தவங்கத்தான்… ஒங்களுக்கு தெரியுமா… ஸ்ரீதர் டைரக்கடர், கே.ஆர்.விஜயா, இன்னம் வேலப்பனோ யாரோ… இவங்க காட்டுபகுதிகள குத்தகைக்கு எடுத்தாங்க… இந்த குடும்பங்கள அங்க கொண்ணாந்து, பட்ட உரிக்க வச்சுட்டாங்க… சட சவுக்கு… அந்த பட்டைய மூனா வெட்டி பங்கள10ருக்கு அனுப்பனும்… இதான் வேல…”

“அங்கேயே சாப்பாடு… அங்கேயே இருப்பு… முழு குடும்பமும் வேல… நாங்க ஒரு குரூப்பா இருந்து ஃபைட் பண்ணினோம்.”

“ஒரு கலெக்கடர் இருந்தாரு… பஞ்சாபிகாரரு… நல்ல மாதிரி மனுசன்… நெலமய பாத்துட்டு அவரும் சொல்லிட்டாரு… இது பொண்டட் லேபர்தான் - சந்தேகமே இல்லன்னு… அவருக்கு எதிரா டீ.ஜீ.பீ பொலிஸ், அதிகாரிங்க யார் யார் எல்லாமோ செயல்பட்டாங்க…”

“எவ்வளவோ இடைஞ்சல் கொடுத்தாங்க… கிட்டத்தட்ட ஒரு முழு அரசாங்கத்துக்கு எதிரா நாங்க போராட்ன மாதிரித்தான்…”

“ஆனா நாங்க விடல… டில்லி வரைக்கும் போனோம்… கடைசியில தீர்ப்பாயிருச்சி… இவங்க பொண்டட் லேபர்ன்னு”

“எல்லாத்தையும் விடுவிச்சி, ஆளுக்கு ரெண்டு ரெண்டு ஏக்கர் நெலம், வீடு, சிலருக்கு மாடு… அதெல்லாம் ஒரு நல்ல ஃபைட்…”

“வித்தியாசமா…. இலங்கைக்கும் இங்கைக்கும் வித்தியாசமா…? ரொம்ப வித்தியாசம். அங்க இருக்கிறவன் ஒரு நல்ல மனுசன். அது ஏன்னு தெரியல. அது, அவுங்க, ஒரு ஏழைங்க அப்படிங்கிறதாலயா இல்லாட்டி ஒரு உழைக்கும் வர்க்கம் அப்படிங்கிறதாலயா – ஒன்னும் தெரியல… இங்க நாணயமே இல்ல… ஒங்களுக்கு முன்னமே சொல்லியிருக்கேன். இங்க ஒருத்தன மத்தவன் எப்படி ஏமாத்துனுங்கிறது அப்படிங்கிறதுக்கு பேருதான் வாழ்க்க…”

“இது சரியில்லிங்க… வாழ்க்க சரியில்ல… மிச்சம் சரியில்ல… வாழ்க்க இப்படி இருக்கவே இருக்க கூடாது…” – வருத்தத்தோடு மனம் கசக்க மேலும் கூறினார்.

“குழந்தைகள கெடுத்துர்றானுங்க. அது குழந்த பருவத்துல இருந்து வருது… நம்ம அப்பா அம்மா எப்படி நடந்துக்கிறாங்க அப்படிங்கிறத புள்ள பாக்குது… அது பிக் பண்ணிக்குது… புடிச்சிக்கிது… இதுல யார யார கொற சொல்ல…”

“என்ன எத்தனையோ பேரு ஏமாத்தியிருக்காங்க… எத்தனையோ ஆயிரம்… ஆனா அப்ப வேல செஞ்சேன்… சம்பாதிச்சேன்… அதனால பெருசா எதனையும் மனசுல எடுத்துக்கல…”

“உதாரணம் கேக்கறீங்களா… சரி ஒன்ன சொல்றேன்… எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் இருந்தாரு… நல்லா தெரிஞ்சவரு… ஒரு இருபதாயிரம் கொடுத்தேன்… காட்டு பகுதியில நல்ல நெலம், வாங்குங்கனாரு… நல்லா தெரிஞ்சவருத்தானேன்னு கொடுத்தேன்…. எனக்கு அந்த நேரத்;துல கொஞ்சம் ஒடம்புக்கு சரியில்ல… வேறொரு வேலையும் இருந்துச்சி… தெரிஞ்சவரு… நீங்க சொன்னா சரின்னு கொடுத்துட்டேன்…”

“கடைசியில பாத்தா அது ஃபாரஸ்ட் நிலம்”

“காச திருப்பி தர்றேன்னாரு… கொறஞ்சது ஒரு பத்து பதினைஞ்சு தடவ போயிருப்பேன்… அப்ப தர்றேன். இப்ப தர்றேனு சொன்னாரு. தர முடியலனு சொல்லல… சொன்னா போயிருக்க மாட்டேன்.”

“ஒரு நாள் போறேன். அந்த மனுசி சொன்னா. “இனி இந்த வீட்டு வாசப்படி ஏறுனின்னா நா தற்கொல செஞ்சிக்குவேன்னு”

“மனம் அடைச்சிருச்சி. என்னடா, நம்மளால ஒருத்தி சாகப் போறாளானு… அதோட நெனைச்சிட்டேன்… ஓ… இந்த அளவுக்கு யோசிக்கிறீங்களா… சரி… காசுத்தானே… நீங்க வச்சுக்குங்க… இதுக்கு மேல இது எனக்கு தேவையில்ல… நானே சம்பாதிச்சுக்கிருவேன்…” அப்படின்னு நெனச்சுக்கிட்டேன். ஆனால் இதை விட அதிசயப்பட வைக்கும் விடயத்தை அடுத்ததாய் கூறினார் மனுசர்.

“ஆனா அவுங்க நல்ல மனுசங்க… வாழ்க்க இவங்கள இப்பிடி மாத்திரிச்சி… அது அவங்கள சொல்ல வைக்குது… அப்பிடி செய்ய வைக்குது…”

“அதுக்கு பெறகு ஒரு நாள், ஒரு ஃபிரண்ட் அவர பாத்துட்டு போக வந்துருக்காரு”

“அந்த ஃபிரண்ட கூட, ஓர் ஒதவிக்காக, அவருக்கு நான் அறிமுகம் செஞ்சு வச்சது…”

“அவருக்கிட்டேயே இவரு சொல்லியிருக்காரு… நான் வந்துட்டு போனேன்னு இவருக்கிட்ட – அதாவது என்கிட்ட – சொல்லிறாதிங்கன்னு. நான் சிரிச்சிக்கிட்டேன்…”

“இதெல்லாம் எங்க இருந்து வருதுன்னு தெரியல…”

“எந்த ஒரு தூண்டுதலும் இல்லாமல் அவரே கூறிக்கொண்டு போனார்:

“யார யார கொற சொல்றது…”

“அரசியல் வாதிங்க அப்பிடி… ஒவ்வொருத்தனும் கோடி கோடியா சம்பாதிக்கிறானுங்க… சம்பாதி. சரி போதும்ன்னு இரு. முடியல… ஒரு கோடி, இன்னொரு கோடி, அதுக்கு பெறகு இன்னுமொரு கோடி…”

“தமிழ், கிமிழ்ங்கிறதெல்லாம் இங்க மனுசன ஏமாத்றவேலைங்க… தமிழ்ன்னு சொல்லி சொல்லியே சுருட்டிறானுங்க… சுருட்டிட்டு உள்ளுக்கு இருப்பானுங்க… அது கொஞ்ச காலம்… பெறகு வெளிய வந்து வெக்கங்கெட்டு, சுரண கெட்டு திருப்பியும் சுருட்டுவானுங்க…”

“அரசியல்வாதின்னா என்னங்க… பணத்த வாரி எறைச்சு மூலதனம் போட்றது… பெறகு பத்து மடங்கா இப்படி தேடனும்ன்னு வெறிபிடிச்சி அலையுறது… அந்த வெறியில மக்களையும் ஏதோ ஒரு வகையில வெறி பிடிச்சி ஆட வைக்கிறது…”

“அரசாங்கம் என்ன சொல்லுது…? உன் வாழ்க்க செலவு உயர்ந்திருச்சி… பாப்பியூலே~ன் – ஜனத்தொக – கூடிரிச்சி…”

“எந்த பொப்பியூலேசன பத்தி கதைக்கிறானுக இவனுக… எங்க பொப்புயுலேஷன் பத்தியா, அவுங்க பொப்பியுலே~ன் பத்தியா…? அதாவது ஒழைக்கிறவங்கவுட்டா இல்லாட்டி பணக்காரவுங்கவுட்டா?”

“நாங்க ரெண்டு பேருமே வேற வேற… எங்க ரெண்டு பேருக்குமே ஒட்டாது… பணக்காரன் பணக்காரனோடத்தான் சேருவான்… ஏழ, ஏழையோடத்தான் சேருவான்… அதுல ஒன்னுமே நீங்க செய்ய முடியாது. அவுங்கவுங்க கலாச்சாரமே அப்படித்தான்… அவுங்கவுங்க பழக்க வழக்கமே அப்படித்தான்”
“இப்படி இருக்கையில யாருட்டு ஜனத்தொகைய பத்தி இந்த நாதேறி பேசுறான்…”

“இந்தியாவுல க~;டங்கிறான்… இப்ப பாருங்க… மனு~னா பொறந்தாச்சு… ஒவ்வொருத்தனும் இந்த மண்ணுல பொறக்கையில நல்லா கையோடையும் காலோடையும்தான் பொறக்கிறானுங்க… ஒவ்வொருத்தனும் ஒழைக்கிறான்… அது எப்படிப்பட்ட ஒழைப்புனாலும் சரி… ஒழைக்கிறான். சும்மா இருக்கல. அந்த ஒழைப்புக்கு என்ன நடந்திச்சி?”

“அந்த ஒழைப்பெல்லாம் இந்தியாவ உட்டு வேறெங்கயும் போயிருச்சா?”

“இங்கேயேத்தானே ஏதோ ஒரு உருவத்துல, ஏதோ ஒரு விதமா இந்தியாவுக்குள்ளேயே இருக்கு… அதுக்கெல்லாம் என்ன நடந்திச்சி… அப்ப எங்க ஜனத்தொக உயர்றதுனால ஒனக்கென்ன பிரச்சனை? நீ சாப்ட்றது உயர்ந்திருச்சி… நீ அடிக்கிற சேட்ட உயர்ந்திருச்சி… நீ கட்ற கோவணம் உயர்ந்திருச்சி…”

“அதான் சொல்றேங்க… வாழ்க்க, வாழ்க்க மாதிரியே இல்லிங்க… கெடுத்து குட்டி சுவரா ஆக்கி வச்சிருக்கானுங்க… ஒருத்தன இன்னொருத்தன் எந்தெந்த திருப்பத்துல ஏமாத்தலாம்ன்னு ஒளிஞ்சி ஒக்காந்து இருக்கான்… இந்த அளவுக்கு கெடுத்து வச்சிருக்கான்… இது மட்டுமில்லாம புள்ளைங்களுக்கும் பழக்கி கொடுக்கிறான்…”

“இலங்கையில இந்த அளவுக்கு இல்லைங்க… அதுக்கு காரணம் என்னான்னு எனக்கு தெரியாது…”

“என்ன பொறுத்தவரை சிங்களவுங்க நல்லவுங்க… இந்த அளவுக்கு இல்ல… ஆனா அவுங்களையும் மாத்துனது அரசியல்தாங்க…”

“முந்தி ஜயரட்ணன்னு ஒருத்தன் இருந்தான்… இப்ப செத்து மண்ணுக்குள்ள மண்ணா போயிருப்பான்… அவனெல்லாம் பேசாத பேச்சில்ல… இனத்துவேஷத்த அப்படி கக்குவான்…”

“அதெல்லாம் சேந்து தானே சிறிமா – சாஸ்த்திரி ஒப்பந்தம், பெறகு அது இதுன்னு எல்லாமே வந்திச்சி… அதான் சொல்றேன்… எங்க வாழ்க்கைய யார் கெடுத்தா… இந்த அரசியல் தானே கெடுத்திச்சி”

“முந்தி எனக்கு இளவயசு…” – சற்றே லயித்து போய், முக மாற்றத்தோடு கூறினார் இப்போது.

“அப்ப எனக்கு அவ்வளவா சிங்களம் தெரியாது… ராகலையில நாங்க இருந்த தோட்டத்துக்கு பக்கத்திலேயே ஒரு சிங்கள கிராமம்… “நாடு”ன்னு சொல்லுவாங்க அங்க… இப்பவும் அப்படியா சொல்றாங்க ‘நாடு’ன்னு…”

“அதுல இருந்து சிங்கள வயசு பொண்ணுங்க வேலைக்கு வரும். நாங்க அண்ணன் தங்கச்சி மாதிரி பழகுவோம்… எனக்கு அவ்வளவா சிங்களம் தெரியாது. ஏதோ எனக்கு தெரிஞ்ச சிங்களத்துல கேட்டேன். ‘தமுசட்ட கியத இன்னேன்னு…” நான் கேட்க நெனைச்சது ஒனக்கு எத்தன சகோதரங்கறதுதான். அதாவது நான் கேட்டுருக்கனும் “தம்சட்ட சகோதரயா கீயதன்னு…”

“நான் கேட்டது… “ஒனக்கு எத்தன இருக்குனு. அதாவது எத்தன வச்சிருக்கனு. புரியுதுங்களா. ஒரே சிரிப்பு. வாய்விட்டு சிரிக்கிறார். பெறகு சொல்லி கொடுத்தாங்க.. அப்பிடி கேக்க கூடாது… அது வேற அர்த்தம்… இப்படித்தான்னு… அந்த பொண்ணு வெக்கப்பட்டிருச்சி… அதான், மொத்தத்துல ஒழைக்கிறவங்க எல்லாம் நல்லவங்க. ஒத்துமையா வாழ கூடியவங்க…”

“மீன் புடிக்கிறதா …” ம்… சற்றே சிந்தனையில் ஆழ்ந்தார். “சொல்ல ஏலாது… ஆனா ஒலகத்த பத்தி – இந்த கேடு கெட்ட ஒலகத்த பத்தி – எந்த ஒரு யோசனையும் இல்லாம அப்படியே கொளத்தோட கொளமாயிறலாம்…”

“என்ன சொல்றீங்க… வேற வேற மீன் வேற வேற தந்திரம் வச்சிருக்கா…? அந்த அறிவு எனக்கில்லையே… இருந்தா அது படிக்க வேண்டிய ஒரு அறிவுதான்…”

“என்ன பொறுத்த வரை, கொக்கியில தீணிய மாட்ற விதம் முக்கியம்… அடுத்தது, போட்டவுடன மொத சின்னதுக வந்த கொரிக்கும்… அவசரப்பட்டு இழுத்துற கூடாது… சின்னதுக கொரிச்சா நல்லது… அப்பத்தான் பெருசு வரும்… என்னடா சின்னதுக எல்லாம் கூடுதே… சாப்பாடு இருக்கான்னு… அது வந்து கொரிக்காது… முழுங்கும்… அப்பவும் வுடனும்… நரம்ப… கொஞ்சம் ஓட…”

சற்று நேரத்தில் எங்களது சம்பா~னை குளத்தை விட்டு நிலத்துக்கு தாவியது. அது பொருத்தும் அவர் ஓர் அபிப்பிராயம் வைத்திருந்தார். “ஒரு காலத்துல எல்லாத்துக்கும் நிலம் இருந்திருக்கும்… பெறகு ஒவ்வொருத்தனா புடிச்சி, புடிச்சி மத்தவனுக்கு நெலத்த இல்லாம ஆக்கியிருப்பானுங்க… உதாரணமா அங்க பாருங்க…” கையை நீட்டி வீட்டிற்கு எதிராக இருந்த குன்றை காட்டி கூறினார்:

“இவ்வளவும் ஒரு குடும்பத்த சேர்ந்தது. அண்ணன் – தம்பி. பிறகு ஒவ்வொருத்தனா விக்க தொடங்குனாங்க… இப்ப ஒரு தம்பி மாத்திரம் இருக்கான்… பக்கத்து துண்ட வாங்குனவன் சொல்றான் – இதையும் அண்ணன் எனக்கு வித்துருக்காருன்னு. அதாவது, தம்பி பங்குல பாதிய புடிச்சி வளைச்சு போட்டுக்கிட்டு, சண்ட போட்டுக்கிட்டு இருக்கிறான்… அவென் மொரடன்… அதாவது யாரு யாருக்கு ஏமாத்துற சக்தி இருக்கோ… அவென் ஜெயிக்கப் போறான்…”

எவ்வளவு நேரம் கதைத்துக்கொண்டிருந்தோம் என்பதே தெரியவில்லை. விடை பெற்ற போது, மறுநாள் நிச்சயம் வரும்படி வேண்டினார்:

“இப்படி மனம் விட்டு, தோன்றதெல்லாம் யாரோட பேச ஏலும்? மனைவியோட ஏலாது… புள்ளைங்களோடயும் ஏலாது… ஒங்க மாதிரி யாரும் கெடைச்சாத்தான்…”

மறுநாள், நாங்கள் வித்தியாசமான விடயங்களை பற்றி பேசினோம். சோ~ல் வெர்க்கர் என ஏன் அறியப்படுகின்றார் என்பதை அவரே விளக்கினார். “ சிவா… பெறகு லூர்த்துசாமி இன்னம் ஒன்றிரண்டு பேர்… இவுங்களோட சேந்து, ஒரு பன்னெண்டு யூனியன் அமைச்சோம், கொடைக்கானல்ல… ரைடர் யூனியன், லோடர் யூனியன், கைடு யூனியன், இப்படி…”

“ரைடர்னா ஹோஸ் ரைடர்ஸ்… இவனுங்க குதிரையில டூரிஸ்ட் எல்லாரையும் ஏத்திக்கிட்டு போவானுங்க… அவென் எங்கயோ பர்ஸ்ஸ தொலைச்சிருப்பான்… இவென்தான் எடுத்தான்னு சொல்லி வந்து நிப்பானுக… பொலிஸ்ஸ கூட்டிக்கிட்டு வருவானுங்க… இவனுங்கள்ள ஒரு அஞ்சு பேத்த உள்ள புடிச்சி தள்ளி, அடிச்சி துன்புறுத்தி… பெறகுதான் இந்த ரைடர்ஸ் யூனியன் வந்திச்சி… நாங்க சொன்னோம். ஏந்த பிரச்சினையினாலும், நீங்க நேரா எங்ககிட்ட வந்துரனும்… நீங்களா போகப்படாதுன்னு…”

“லோடர் யூனியன் – லாரியில சுமை தூக்கறாங்களே – அவுங்களுக்கு. அவுங்களுக்கு அடி பட்டுரும்… ஒரு நூறு ரூபாவை கொடுத்து வச்சுக்கம்பாங்க… இன்சூரன்ஸ் இல்ல ஒரு மண்ணும் இல்ல… இத பாருங்க… மனுசன் தனி ஆளா ஃபைட் பண்ணவே முடியாது… அவன பாருங்க… அவென் தனி ஆளாவா ஃபைட் பன்றான்? போலிஸ் இருக்கு. பணம் இருக்கு. செல்வாக்கு இருக்கு. அரசியல் இருக்கு. இன்னும் எவ்வளவோ… அதனால இவனும் ஒன்னு சேரனும்…”

“ஆனா இதயும் ஒங்களுக்கு சொல்லியாகனும்… இப்படியே போனீங்கனா ரெண்டு கிராமம் வரும்… ஒன்னு எடிசன் கிராமம்…”

“எடிசன் கிராமத்துல, அவுங்கள ஒன்னா சேக்கப் பாத்தேன். அப்படி ஒன்னாகுன்னா ரொம்ப நல்லது. ஏன்ன இந்தியாவுல யாரு முதுகெலும்புன்னு தெரியுமா… ஹாஸ் ரைடர் இல்ல… லோடரும் இல்ல… டாக்ஸி ட்ரைவரும் இல்ல… விவசாயி. இந்த விவசாயித்தான் இங்க முதுகெலும்பு. அவன ஒன்னா சேத்தா போதும்… ஏன்னா லோடர் எங்கருந்து வர்றான். இந்த விவசாயி குடும்பத்துல இருந்துத்தான். இந்த ரைடர் எங்கருந்து வர்றான்… அங்க இருந்துத்தான்…”

“இதெல்லாம் சரி. இதெல்லாம் நம்ம நெனைப்பு. ஆனா அந்த விவசாயி மண்ட இருக்கே – மண்ட – அது அப்பிடியே காலம் காலமா களிம்பு புடிச்சி, கப்பி போய் கெடக்கு… உள்ள இருக்கிறதெல்லாம் வயலுட்டு வண்டல் மண்ணுத்தான் – சாதி, அது இதுன்னு… அவென் ஒவ்வொருத்தனும் நெனைச்சுக்றான், அவென் ஒரு முதலாளின்னு… முதலாளின்னு சொன்னா ஒங்களுக்கு புரியிதில்ல… எனக்கு வெளங்குது… என்னா நம்ம மலையகத்துல அப்படி இல்ல… இவன் சின்ன ஒரு விவசாயி… குடும்பமே சின்ன ஒரு துண்டு நெலத்துல ஒழைச்சி சாப்பிடுது… ஆனா அவென் நெனைச்சிக்கிறான் அவென் ஒரு முதலாளின்னு – சிரிப்பா இல்ல – காரணம், இலங்கையில – அதாவது நம்ம தேயிலை தோட்டங்கள்ள தொழிலாளி முதலாளி நேர் நேரா யதார்த்தமா இருக்கிறானுங்க… இங்க, இவனுக்கு முதலாளிய நேரா காணோம்… இன்னம் பல பல வழியிலத்தான் இங்க முதலாளி அப்படிங்குற சாமான் உருவாகி இருக்கு… அதனால இவென், நெலத்துல ஒழைச்சி சாப்ட்ற ஏழையா இருந்தாலும் கூட தன்ன ஒரு முதலாளின்னு நெனைக்கிற கூத்து இருக்குது பாத்தீங்களா, அதுதான் கூத்துலேயே பெருங்கூத்து. ஒரு நாளும் இவென் தன்ன ஒரு உழைக்கிற கூலி ஆளா, தொழிலாளி கூட்டத்தோட காட்டிக்க பிரியப்படவே மாட்டான்… அதனாலத்தான் ஒன்னா சேர மாட்டேங்கிறான்… இதுல சாதி, அது இதுன்னு வேற… சாதி, இவென் யோசனையில செய்யுற கொடும இருக்கே, அத நீங்க தனியா படிக்கனும்… அப்பப்பா… இவென ஒன்னா சேக்கனும்னா புத்தி சொல்லி சேக்க ஏலாது – ஒரு சம்பவம் நடக்கனும் – பெரிய சம்பவம் – அப்படின்னா ஒன்னா சேக்க வாய்ப்பு இருக்கு…”

“ இந்த ஊர்ல என்னென்னமோ நடக்கும்… ஒரு கத சொல்றேன்… ஒரு தடவ புதுக்கோட்ட ராஜாவுட்டு மச்சானோ யாரோ, இங்க ஒரு டூர் வந்துருக்காங்க… புதுக்கோட்டங்கிறது முந்தி ஒரு சமாஜமா இருந்திருக்கு… இப்ப இது ஒரு பத்து இருபது வரு~த்துக்கு முந்தி நடந்ததுன்னு வச்சிக்கிங்களே…”

“இன்னொரு கூட்டம் ஒரு எழவு வீட்டுக்கு போயிட்டு வந்திருக்காங்க… தெரியாதா, எழவு வீட்டுக்கு போயிட்டு வர்றப்ப, அப்படியே கொஞ்சம் தண்ணியையும் ஏத்திக்கிட்டு கூட்டமா வந்து, இந்தா, இந்த டால்ஃபின் நோஸ் வர்ற ரோட்டு இருக்குதே… மெயின்… ஆமா, அதுல ஒக்காந்து என்னமோ கதைச்சிட்டு ஜாலியா இருந்திருக்கானுங்க…”

“இந்த ராஜா – அதான் ராஜாவுட்டு மச்சான் - ஒரு நாலைஞ்சு கார்ல வந்தவுங்க – நிறுத்தி, ராஜா வந்துட்டாரு, எழும்புங்கடான்னு அதட்டி இருக்கானுங்க…”

“இவனுங்களுக்கு கோவம் வந்திருச்சி போல… எந்த ராஜா, இதென்னடா கூத்து… ராஜாவாமே… எறங்க சொல்லு பாப்போம் ராஜாவ… அப்படின்னு ஒருத்தன் சொல்ல அவனுங்க எறங்கி இவனுகள அடிக்க வர, இவனுங்க தண்ணியில ஆய் ஊய்ன்னு கத்தி அடிச்சி, அந்த ராஜாவுட்டு, மச்சானுக்கும், இங்கன இப்படியே மண்டையும் ஒடைஞ்சிருச்சி…”

“இவனுங்கெல்லாம் போயிட்டானுங்க… கொஞ்ச நேரத்துல, நாலைஞ்சு போலிஸ் ஜீப்பு – அது இதுன்னு… ராஜா குடும்பம் இல்லையா… வந்து என்ன கூப்பிடுறானுங்க…”
“அடிச்சிட்டீங்களாமே…”

“நான் சொன்னேன்… எதுக்கு நான் அடிக்கனும்… நான் ஏன் இதுக்கு போறேன் அப்படிங்கறேன்…”

“இல்ல நீங்க வாங்க… அப்படின்னு போலீஸ{க்கு கூட்டிட்டு போறாங்க…”

“அங்க போனா, ராஜா மண்டையில கட்டு போட்டுக்கிட்டு கோபமா ஒக்காந்திருக்காரு… ரத்தம் வடிஞ்சிருக்கு…”

“நல்ல வேளையா, எனக்கு நல்லா தெரிஞ்ச சியோன் (ணுழைn) காலேஜ் ஓனர் - அவரும் அங்க இருக்காரு… அவரு வேற விஷயமா அங்க வந்தவரு… பெறகு தெரிஞ்சது, என்ன கண்டதும் சொல்லிட்டாரு: இந்த மாதிரி வி~யத்துல இவரு தல போடவே மாட்டாரு… வாங்க வாங்க நான் கூட்டிக்கிட்டு போறேன்னு, கதைச்சி, என்ன அவர் கார்லேயே ஏத்தி வந்து வீட்டுக்கிட்டயே எறக்கிவிட்டு போனாரு… அவரு கொடைக்கானல்லேயே ரொம்ப ரொம்ப செல்வாக்கான ஒரு மனுஷன்…”

“என்னா நடந்துருக்குன்னா, நான்தானே தொழிலாளி – விவசாயி எல்லாத்தையும் ஆர்கனைஸ் பன்ற ஆள்… அப்ப என் வீட்டு பக்கமா வேற நடந்திருக்கு… அப்ப இவர்தான் தூண்டிவிட்ருப்பாருன்னு இந்த போலீஸ் பசங்க யோசிச்சிருப்பானுங்க… மத்தது ராசாவுக்கும் காட்டனுமா இல்லையா – இப்படி ஆர்கனைஸ் பண்ணுனவன கொன்னாந்துட்டோம்ன்னு…”

சிரித்தார். பின்னர் திண்ணையில் அலைந்து திரிந்த கோழிகளை காட்டி கூறினார்.

“இந்த கோழிகள பாருங்க… எத்தனையோ தடவ பாத்திருக்கேன்… ஒன்னு, குஞ்சோட இருக்கு. மத்ததுக எல்லாம் இதன கண்டோடன, பாஞ்சு கொத்துது… பறவைங்களுக்கிடையேயும், மனுசக மாதிரி பொறாம இருக்குமா – இதபத்தி ஒங்களுக்கு ஏதாவது தெரியுமா” என்று என்னிடம் வினவினார்.

நான் டால்ஸ்டாயும், கார்க்கியும் அளாவிக்கொள்ளும் போது, குறித்த சில பறவைகளின் பொறாமை தொடர்பில் போகிற போக்கில் தொட்டு காட்டி உள்ளதை சுட்டிக்காட்டினேன். “அப்படியா, அப்படின்னா இத ஆழமா நாங்க பாக்கனும், படிக்கனும்” என்றார் அவர்.

நாங்கள் விடைபெற்றுக் கொண்டோம்… அதற்கு மறுநாள் அவர் திருப்பூர் செல்கின்றார். சிகிச்சைக்காக. ஆனால், அதன் பிறகு அவரை நான் கண்டேனில்லை. அவர் மறைந்த செய்தியை கொடைக்கானலில் அவரை அறிந்திருந்த பலரும் சொல்லவே செய்தார்கள்.

அவர் கூறிய பலவற்றின் விடயங்களை ஆணித்தரமாகவும் சில வேளைகளில் பூடகமாகவும் என் பிற்பட்ட கொடைக்கானல் பயணங்களில் தரிசிக்க நேர்ந்தது. அழுத்தமான மனிதர் அவர். அதிகம் பேசாத ஓர் ஆள்.

இவர் கூறியவற்றில் அதிகம் என்னில் தாக்கத்தை ஏற்படுத்தியது, விவசாயி தன் எதிரியை – அதாவது தன் வாழ்வுக்கு எதிராக செயற்படு;ம் சக்திகளை சரியான முறையில் கண்டுணர முடியாத நிலையில் உள்ளான் என்பதே. அவரது வார்த்தைகளில் கூறுவதானால், “அவன் தன்ன ஒரு முதலாளியா நெனைக்கிற கூத்து இருக்கு பாருங்க…” இருக்கலாம். எதிரியை கண்டுணர முனைந்தால் அவனிடம் சென்று முட்டலாம். ஆனால் இவன் தன் எதிரியையே காணாத – காணமுடியாத – மனிதன். சமூகமும் தன் எதிரியை கண்டுக்கொள்ளுமளவுக்கு பிரிந்ததாயில்லை. அப்படி என்றால் அவன் போக்கிடம்தான் என்ன?

தொழிலும் இல்லை, மழையும் இல்லை, நிலமும் இல்லை என்றால் – இவைத்தான் - தன் விரோதிகள் என்றால், அவன் யாரிடம் செல்வது, யாரிடம் முட்டுவது – கடவுளை தவிர?

அந்த மதமும் மௌனமாய் புன்னகைத்தவாறே, கிடைக்கும் இடைவெளியில், சர சரவென ஊர்ந்து இறங்கி பின் சப்தமில்லாமல் சுருண்டு படுத்துக் கொண்டு, எப்படி எப்படி தனக்கு பின்னால், கடமை உணர்ச்சியுடன் தன் சாதீய கட்டுமாணங்களை ஏந்தி பிடிக்கின்றது, என்பதெல்லாம், பின்னர் பல்வேறுபட்ட மனிதர்களை, பல்வேறு சந்தர்ப்பங்களில், கொடைக்கானலில் நான் சந்தித்த போது, அவை என்னுள் எழுப்பிய கேள்விகளாயின.

ஆனால் இவற்றை சென்று கேட்க, என்னை நான் தெளிவுப்படுத்திக் கொள்ள, அதாவது தொட்டுணர, குறித்த ஒரு வாழ்வனுபவம் எனக்கு கிட்டியதாக இல்லை. இவரும் இல்லை.

ஒருமுறை தன் மரத்துபோன வலது கையை சுட்டிக்காட்டி கூறி இருந்தார்: இத பாருங்க… இது யூஸ்லஸ் – பயனற்றதாகிவிட்டது. என்று… பின்னர் ஒரு முறை கூறியிருந்தார்: மனுச வாழ்வு…அது, ஒரு அம்பது அறுபது வரு~ம்… அதோட முடிஞ்சிருது… இல்ல… இதுல என்ன நாம செஞ்சோம்… இதுக்கு பொறக்காமலேயே இருந்திருக்கலாமே… யூஸ்லஸ்”.

[ தொடரும் ]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here