- அறிஞர் அ.ந.கந்தசாமி -ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் கவிதைகளுக்குத் தனியிடமுண்டு. சிறுகதை, கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம் , உளவியல், விமர்சனமென இலக்கியத்தின் சகல பிரிவுகளிலும் வெற்றிகரமாகக் கால் பதித்த பெருமையும் இவருக்குண்டு. 'ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றிலே கவிதை மரபில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்த காலப்பகுதி 1940ம் ஆண்டுக் காலப்பகுதியாகும். 1940ம் ஆண்டிலிருந்து ஈழத்தில் முற்றிலும் நவீனத்துவமுடைய கவிதை மரபொன்று தோன்றி வளரத் தொடங்கியது. இக்கவிதை மரபைத் தொடங்கியவர்கள் ஈழத்தின் மணிக்கொடியெனப் பிரகாசித்த மறுமலர்ச்சிக் குழுவினர்களாவர். இந்த மறுமலர்ச்சிக் குழுவிலும் அ.ந.கந்தசாமியவர்கள் , மஹாகவியெனப் புனைபெயர் கொண்ட உருத்திரமூர்த்தி, இ.சரவணமுத்து என்பவர்களே கவிதைத் துறையில் குறிப்பிடத்தக்கவர்களாக இருந்துள்ளனர். இவர்களே ஈழத்தில் நவீனத்துவமுடைய கவிதை மரபையும் தொடக்கி வைத்தவர்கள். இவர்களால் தொடக்கி வைக்கப்பட்ட நல்ல கவிதை என்பதும் பண்டித மரபு வழிபட்ட உருவ அம்சங்களையும் , நிலபிரபுத்துவ சமூகக் கருப்பொருட்களையும் உள்ளடக்கமாகக் கொண்ட செய்யுளிலிருந்து வேறுபட்டு நவீன வாழ்க்கைப் போக்குகளைப் பொருளடக்கமாகக் கொண்டமைவது என்ற வரைவிலக்கணம் உடையதாகவுள்ளது' என்று செல்வி ஜுவானா என்னும் யாழ் பல்கலைக்கழக மாணவியொருத்தியின் ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டிருப்பது அ.ந.க.வை இன்றைய தலைமுறை மறந்துவிடவில்லை என்பதையே காட்டுகிறது

[மறுமலர்ச்சிக் குழுவினரால் வெளியிடப்பட்ட சஞ்சிகையே 'மறுமலர்ச்சி' சஞ்சிகை. இச்சஞ்சிகையில் எழுதிய படைப்பாளிகளையே மறுமலர்ச்சி எழுத்தாளர்களாகக் காணும் போக்கொன்று செங்கை ஆழியானுட்பட இன்று இலக்கிய விமர்சனங்கள், ஆய்வுகள் செய்ய விரும்பும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையினைச் சார்ந்த செல்லத்துரை சுதர்ஸன் போன்றவர்கள் மத்தியில் நிலவுவதாகத் தெரிகிறது. இது ஒரு பிழையான அணுகுமுறை. மறுமலர்ச்சிச் சங்கத்தை உருவாக்கி, அதில் பாடுபட்டவர்களின் படைப்புகள் யாவும் மறுமலர்ச்சிப் படைப்புகளாகத்தான் கருதப்பட வேண்டும். உண்மையில் மறுமலர்ச்சிச் சிறுகதைகள், அல்லது மறுமலர்ச்சிக் கவிதைகள், அல்லது மறுமலர்ச்சிப் படைப்புகள் , மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் என்று குறிப்பிடும்போது அது மறுமலர்ச்சி சஞ்சிகையில் எழுதிய எழுத்தாளர்களை மட்டும் குறிக்கவில்லை.  அது மறுமலர்ச்சி காலகட்டப் படைப்பாளிகளையும் குறிப்பிடுகிறது. அந்த 'மறுமலர்ச்சி' இதழினை வெளியிட்ட மறுமலர்ச்சிச் சங்கத்தினை உருவாக்கியவர்களின் படைப்புகளையும் குறிக்கிறது. இதுவே சரியான நிலைப்பாடாகவிருக்க முடியும் என்பதென் கருத்து. செங்கை ஆழியான, செல்லத்துரை சுதர்ஸன் போன்றோர் இந்த விடயத்தில் கருத்துச் செலுத்த வேண்டுமென்பதென் அவா. சி. மௌனகுரு, மௌ. சித்திரலேகா, எம். ஏ. நுஃமான் ஆகியோரால் இணைந்து எழுதப்பட்ட 'இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம்' என்னும் நூலில் ஈழத்துக் கவிதையுலகின் மறுமலர்ச்சிக் கட்ட காலம் பற்றிக் குறிப்பிடும்போது அ.ந.கந்தசாமி, மகாகவி, நாவற்குழியூர் நடராசன் ஆகியோரை மறுமலர்ச்சிக் காலகட்டத்தின் முக்கியமான கவிஞர்களாகக் குறிப்பிடுகின்றார். அத்துடன் கவீந்த்திரன் என்னும் புனைபெயரிலும் எழுதிய அறிஞர் அ.ந.கநதசாமியை ஈழத்தின் தமிழ்க் கவிதையில் முதலாவதாக இடதுசாரிச் சிந்தனையினை அறிமுகப்படுத்திய படைப்பாளியாகவும் குறிப்பிடுவர்.இவ்விதம் மறுமலர்ச்சிக் காலகட்டம் பற்றியே குறிப்பிடப்படவேண்டுமே தவிர 'மறுமலர்ச்சி' சஞ்சிகையின் படைப்புகளை மட்டும் மையமாக வைத்து மறுமலர்ச்சிக் காலகட்டத்தை எடை போடக்கூடாது. அவ்விதமான போக்கு ஏற்கனவே குறிப்பிட்டதுபோன்று மறுமலர்ச்சிக் காலகட்டம் பற்றிய பிழையான பிம்பத்தினைத் தந்துவிடும் அபாயமுண்டு. - பதிவுகள்]

அ.ந.க. ஒரு செயல் வீரர். ஏனையவர்களைப் போல் வாயளவில் நின்று விட்டவரல்லர். தான் நம்பிய கொள்கைகளுக்காக இறுதிவரை பாடுபட்டவர். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஆரம்பகர்த்தாக்களிலொருவர். மேற்படி சங்கத்தின் கீதமாகவும் இவரது கவிதையே விளங்குகின்றது. அவரது கவிதைகளின் கருப்பொருட்களாகத் தீண்டாமை, தோட்டத்தொழிலாளர் இழிநிலை, சமூக ஏற்றத்தாழ்வுகள், சமுதாயச் சீரமைப்பு, இயற்கை, காதல், தத்துவம், வர்க்க விடுதலை, பிடித்த ஆளுமைகள் போன்றவை விளங்குகின்றன. இவரது கவிதைகள் தமிழமுது, தேன்மொழி, ஈழகேசரி, வசந்தம், வீரகேசரி, பாரதி, தினகரன், ம்ல்லிகை, நோக்கு, இளவேனில், சுதந்திரன், ஸ்ரீலங்கா போன்ற பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளிவந்திருக்கின்றன [அ.ந.க.வின் கவிதைகள் வெளிவந்த பத்திரிகைகள், சஞ்சிகைகள் மற்றும் அவர் பங்கு பற்றிய கவியரங்குகள் பற்றிய விரிவான ஆய்வொன்று மேற்கொள்ளப்படவேண்டியதவசியம்.]. இவரது ஆரம்ப காலத்துக் க்விதைகளிலொன்றான , ஈழகேசரியில் வெளிவந்த, 'சிந்தனையும், மின்னொளியும்' என்ற கவிதை முக்கியமான கவிதைகளிலொன்று. 'அர்த்த இராத்திரியில் கொட்டுமிடித்தாளத்துடனும், மின்னலுடனும் பெய்யும் மழையைப் பற்றிப் பாடப்படும் இக்கவிதையில் , அந்த இயறகை நிகழ்வு கூடக் கவிஞரிடம் சிந்தனையோட்டமொன்றினை ஏற்படுத்தி விடுகின்றது. கணப்பொழுதில் தோன்றி அழியும் மின்னல் கூட ஒரு சேதியைக் கூறிவிடுகிறது. அது என்ன?

'கொட்டுமிடித்தாளம் இசைய நடம் செய்யும்
மட்டற்ற பேரழகு வான்வனிதை போல் மின்னல்
தோன்றி மறைந்ததுவே; சிந்தனையின் தரங்கங்கள்
ஊன்றியெழுந்தன இவ் வொளிமின்னல் செயல் என்னே?
வாழ்வோ கணநேரம்; கணநேரம் தானுமுண்டோ?
சாவும் பிறப்புமக் கணநேரத் தடங்குமன்றோ?
ஐனனப் படுக்கையிலே ஏழைமின்னல் தன்னுடைய
மரணத்தைக் கண்டு துடிதுடித்து மடிகின்ற
சேதி புதினமன்று....' (ஈழகேசரி)

இவ்விதமாகக் கணப்பொழுதில் தோன்றி மறையும் மின்னல் கூறும் சேதிதானென்ன? அதன் சோதிதான் அதன் சேதி. சிறுகணமே வாழ்ந்தாலும் அம்மின்னல் உலகிற்கு ஒளி வழங்குவதன் மூலம் நல்லதொரு சேவையைச் செய்து விட்டுத்தான் ஓடி மறைகிறது. மனித வாழ்வும் இத்தகைய மின்னலைப் போன்றுதான் விளங்க வேண்டும். இதுதான் மண்ணின் மக்களுக்கு கணப்பொழுதில் தோன்றி மறையும் மின்னல் சொல்லும் சேதி. இதுதான் கவிஞரிடத்தில் அவ்வியற்கை நிகழ்வு தூண்டிவிட்ட சிந்தனையின் தரங்கங்கள்.

'....அச் சேதியிலே நான் காணும்
சோதி கொளுத்திச் சோபிதத்தைத் செய்துவிட்டு
ஓடி மறைகிறது; வாழும் சிறு கணத்தில்
தேடி ஒரு சேவை செகத்திற்குச் செய்ததுவே!
சேவையதன் மூச்சு; அச்சேவை யிழந்தவுடன்
ஆவிபிரிந்து அகல்வானில் கலந்ததுவே!
என்னே இம் மின்னல(து) எழிலே வென்றிருந்தேன்.
மண்ணின் மக்களுக்கு மின்னல் ஒரு சேதி சொல்லும்.
வாழும்சிறு கணத்தில் வைய மெலாம் ஒளிதரவே
நாளும் முயற்சி செய்யும் நல்லசெயல் அதுவாகும்.'

மேற்படி 'சிந்தனையும் மின்னொளியும்' என்னும் அ.ந.க.வின் ஆரம்பகாலக் கவிதை அ.ந.கவிற்கு மிகவும் பிடித்ததொரு கவிதை. மேற்படி மின்னலைப் போலவே தோன்றி குறுகிய காலமே வாழ்ந்து ஒளி வீசி மறைந்தவர் அ.ந.க. மின்னல் கூறிய பாடத்தினையே பின்பற்றி வாழ்ந்தவர் அவரென்பதை அவரது 'தேசாபிமானி' பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையான 'நான் ஏன் எழுதுகிறேன்? ' என்னும் கட்டுரை புலப்படுத்துகிறது. (வ.ந.கிரிதரனை இதழாசிரியராக கொண்டு வெளிவந்த மொறட்டுவைப் ப்லகலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தினரின் 'நுட்பம்' (1981) வருடாந்தச் சஞ்சிகையிலும் இக்கட்டுரை மீள்பிரசுரம் செய்யப் பட்டிருக்கின்றது.] அக்க்ட்டுரையில் மேற்படி தனது ஆரம்பகாலக் கவிதையினைக் குறிப்பிடும் அ.ந.க. மேலும் தொடர்ந்து கூறுவார்:

'....இம்மின்னல் எனக்குணர்த்தும் செய்தி என்ன? "சில நாட்களே நீ இவ்வுலகில் வாழ்ந்தாலும் மக்களுக்கும், உலகுக்கும் பயனுள்ளவனாக வாழ். இன்று நீ இருக்கிறாய். நாளை இறந்து விடலாம். ஆகவே நன்றே செய்க. அதையும் இன்றே செய்க" இது தான் மின்னல் சொல்லித் தரும் பாடம். இருளை விரட்டி ஒளியைப் பரப்பும் மின்னல் சமுதாயத்தில் சூழ்ந்துள்ள மடமை, வறுமை முதலான இருள்களை நீக்கி, அறிவையும் ஆனந்தத்தையும் பரப்பும்படி எனக்குப் பணித்தது. வாழ்க்கையையே இதற்காக அர்ப்பணிக்கவேண்டும் என்ற ஆசை மேலிட்ட நான் என் எழுத்தையும் அத்துறைக்கே பயன்படுத்த வேண்டும் என்று நினைத்ததில் வியப்பில்லை அல்லவா?...'

இதன் மூலம் அ.ந.கவின் ஆரம்பகாலக் கவிதையான் 'சிந்தனையும், மின்னொளியும்' கவிதை அவரது எதிர்கால இலக்கிய வாழ்வின் அடித்தளமாக, உந்து சக்தியாக விளங்குவதைக் காணமுடிகிறது. அவரது படைப்புகள் எல்லாமே மேற்படி அவரது இலட்சிய வேட்கையைப் புலப்படுத்துவனவாகவேயிருக்கின்றன.

இவரது இன்னுமொரு கவிதையான 'வில்லூன்றி மயானம்' சமுதாயத்தில் நிலவிய சாதிக் கொடுமையினை, அதன் கட்டுப்பாடுகளை வன்மையாகச் சாடுகின்றது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வள்ளிப்பிள்ளை என்பவரின் பிரேதத்தை நகர சபைக்குச் சொந்தமான வில்லூன்றி மயானத்தில் புதைப்பதற்காகத் தலைமை தாங்கிச் சென்ற ஆரியகுளத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பவர் சாதிவெறியர்களால் கொல்லப்பட்ட நிகழ்வைச் சாடும் கவிதையிது. இச்சம்பவம் நிகழ்ந்த காலகட்டத்தில் ஏனைய கவிஞர்களெல்லாரும் அதனை விமர்சிக்கப் பயந்திருந்த நிலையில் , அறிஞர் அ.ந.க அதனை வன்மையாகத் துணிச்சலுடன் கண்டித்தார். தீண்டாமைக்கெதிராக வெடித்திட்ட புரட்சித் தீயாக அதனை இனங்கண்டார்:

'நாட்டினர்நீர் அறிவீர் வில்லூன்றி தன்னில்
நாம் கண்ட ஈமத்தீ வெறுந்தீ அன்று
கேட்டினிலே உளபிணத்தை உண்பதற்குக்
கிளர்ந்தெழுந்த தீயன்று நெடுநா ளெங்கள்
நாட்டினிலே கிளைபரப்பும் சாதி என்னும்
நச்சுமர வீழ்ச்சியினைக் காண்பதற்காய்க்
வாட்டமுற்ற மக்களுளம் கனன்று பொங்கும்
வல்லதொரு புரட்சித்தீ வாழ்க வஃது...'

மனிதர்கள் ஏழை, பணக்காரர் என்று ஏற்றத்தாழ்வுகள் பார்த்தல் தகாது. ஒருவரிற்கொருவர் அன்புடன் வாழ்தல் வேண்டும். அருவருப்பினையொதுக்கிச் சேவை மனப்பான்மையுடன் வாழ வேண்டுமென்பதை இவரது 'துறவியும், குஷ்ட்டரோகியும்' என்னும் கவிதை கூறுகிறது. தானமெடுப்பதற்காகச் செல்லும் துறவியொருவருக்குத் தானமிடுவதற்காகச் செல்வர்கள் பலர் காத்து நிற்கின்றார்கள். அவரோ குஷ்ட்டரோகத்தால் வ்ருந்துமோர் ஏழை தரும் உணவை அன்புடன் வாங்கி உண்ணுகிறார். அவ்விதம் உண்ணுகையில் அப்பாத்திரத்தினுள் நோயினால் அழுகி வீழ்ந்திருந்த அந்த ஏழையினது விரலொன்றினைக் க்ண்டும் அருவருப்படையாது, முகம் சுளிக்காது , அதையொதுக்கி வைத்துவிட்டு உணவையுண்ணுகின்றார். இதனை மேற்படி 'சுதந்திரன்' பத்திரிகையில் வெளிவந்த 'துறவியும், குஷ்ட்டரோகியும்' கவிதை விபரிக்கும்:

'உணவையிடும் போதந்தக் குஷ்ட நோயால்
உக்கி உணர்விழந்திருந்த விரலில் ஒன்று
பிணக்கமுற்று ஓடு தன்னில் வீழ்ந்தந்தப்
பீடைதனைக் கண்டனன் கண்டபோது
கனமுனிவன் சாந்த முகம் மாறாதந்த
கையில் விரலெடுத்ததனை மெல்ல நீக்கி
மனதினிலே ஒரு சிறிது மாசுமின்றி
வாயினிலே மெல்லமெல்ல அள்ளி உண்டான்.

புல்லுணவை நல்லுணவாய் ஏற்றதனை
புத்தமிர்தமாய் மதித்துப் புசித்தான் ஏழை
நல்லவொரு நண்பன் இந்த முனியில் கண்டான்!
நானிலத்தில் விஷமாகும் தனிமை என்னும்
கொல்லுகின்ற வியாதிய·து போயொளியும்
கொண்டனவன் பெரிய இன்பம் குவலயத்தில்
இல்லை இதுபோலில்லை இல்லை என்று
எண்ணி எண்ணி களிக்கடலில் மூழ்கிவிட்டான்.. ' (சுதந்திரன்)

'கவீந்திரன்' என்னும்பெயரிலும் அ.ந.க கவிதைகள் எழுதியுள்ளார். 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' என்னும் தினகரனில் வெளிவந்த தொடர்கட்டுரையில் எழுத்தாளர் அநதனி ஜீவா 'அ.ந.க. ஆரம்பகாலத்தில் கவீந்திரன் என்னும் பெயரில் நிறைய எழுதியிருப்பதாகக் குறிப்பிடுவார். 'தேசபக்தன்' பத்திரிகையில் 'கசையடிக் கவிராயர்' என்னும் பெயரில் அ.ந.க இலக்கிய உலகின் மோசடிகளைச் சாடிக் கவிதைகள் பல எழுதியுள்ளதாகவும் மேற்படி அந்தனி ஜீவாவின் கட்டுரை தெரிவிக்கின்றது. [மேலும் பல புனைபெயர்களில் அ.ந.க எழுதியுள்ளதாக அறிகின்றோம். இது பற்றியும் விரிவான ஆய்வுகள் நடைபெற வேண்டும்.] 'தேயிலைத் தோட்டத்திலே' என்ற இவரது கவிதை 'பாரதி' சஞ்சிகையில் 'கவீந்திரன்' என்னும் புனைபெயரில் வெளிவந்தது. காலையில் விழித்தெழுந்து, குழந்தைக்குப் பாலூட்டி விட்டு, அக்குழந்தை பற்றிய எதிர்காலக் கனவுகளில் மூழ்கி, பழையதை உண்டுவிட்டு, மூங்கிற் கூடையினை முதுகினில் மாட்டிவிட்டு வேலைக்குச் செல்லும் தோட்டத் தொழிலாளப் பெண்ணொருத்தியைப் பற்றிப் பாடும் கவிதையிது.

'பானையிலே தண்ணீரில இட்டிருநத
பழயதனை எடுத்தே உண்டுமிஞ்ச
மானைநிகர் கண்ணாள் தன் மணவாளர்க்கு
மற்றதனை வைத்துவிட்டு விரைந்து சென்று
கானகத்து மூங்கிலிலே வேய்ந்த கூடை
கழுத்தினிலே பின்புறமாய்த் தொங்கவிட்டு
தானெழுந்து விரைவாள் தன் வேலைக்காடு!
தன் கண்ணின் ஓரத்தைத் துடைத்துக்கொள்வாள்! '

இது போல் இன்னுமொரு கவிதையான 'முன்னேற்றச் சேனை' (மேற்படி இரு கவிதைகளும் 'பாரதி' என்னும் சஞ்சிகையில் வெளிவந்தவை ) 'மூடத்தனம் யாவு நிர் மூலமாகி வீழ்ந்திட', 'மங்கி நிற்கும் பாசிசத்தை மண்ணிடத்தே புதைத்திடப்' புறப்பட்ட 'முன்னேற்றச் சேனை' பற்றிப் பாடும்.

அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன்' என்னும் கவிதை அ.ந.க.வின் மிக முக்கியமான கவிதைளிலொன்று. நிகழ்கால மனிதனொருவன் காலத்தைத் தாண்டி எதிர்காலச் சித்தன் வாழும் உலகிற்கு வந்துவிடுகின்றான். நாடு, மதம், மொழி, இனம், ஏழை, பணக்காரன், சாதியென்று பிளவுண்டு, போர்களினால் சூழப்பட்டிருக்கும் நிகழ்கால உலகிற்கு எதிராகப் பிரிவினைகளற்ற, பேதங்களற்ற மனிதர்களென்றவொருரீதியில் அன்புடன் வாழும் சமுதாயமொன்றில் வாழும் எதிர்காலச்சித்தனொருவனின் உலகினைச் சித்திரிக்கும் கவிதையிது. அருமையான கவிதை. எதிர்காலச் சித்தனிற்கும், நிகழ்கால மனிதனுக்குமிடையில் நிகழும் உரையாடலாக அமைந்துள்ள நீண்ட் கவிதை.

'அரசெல்லாம் ஒழிந்துலகில் ஓரரசே யுண்டாம்
அறங்கூறும் ஒருமதமே உலகெல்லாம் ஆகும்
விரசமொடு விகற்பங்கள் வளர்க்குமொழி எல்லாம்
வீழ்ந்துவிடும் ஒருமொழியே ­அவ்வுலகில் உண்டாம்
சரசமொடு உலகத்து மககளெல்லாம் தம்மைச்
சமானர்கள் மனிதகுலம் என்ற இன மென்பார்
அரசர்கள் ஏழைபணக்காரனென்ற பேதம்
அத்தனையும் ஒழிந்து விடும் எதிர்கால உலகில்'

என்று எதிர்காலச் சித்தன் கூறுவான். அத்துடன் அச்சித்தன் வாழும் புதுயுகத்தில் மானிடர்கள் இனம், மதம், நாடு போன்ற எல்லைகளைக் கடந்து மனிதர்களென்ற ஓரினமாகவும், ஒரே மொழிபேசுபவர்களாகவும் விளங்குவர். அவ்வெதிர்காலச் சித்தன் வாழும் உலகு காலம் தாண்டிச் சென்ற நிகழ்கால மனிதனுக்கு மிகுந்த உவகையினைக் கொடுத்தது. அதன் விளைவாக அவன் எதிர்காலச் சித்தனைப் பார்த்து,

"எதிர்காலச் சித்தா உன் இனியமொழி கேட்டேன்.
எண்ணங்கள் விரிவடையும் என்னுடன் நீவந்து
மதி கெட்டார் வாழ்கின்ற வையகத்தில் புதிய
வாழ்வேற்றிச்செல்வாயோ..' என்றிறைஞ்சி நிற்கிறான்.

அதனைக் கேட்டதும் எதிர்காலச்சித்தனின் இதழ்களிலே குஞ்சிரிப்பொன்று பிறக்கின்றது. அச்சிரிப்பினூடு 'காலத்தின் கடல்தாவி நீ இங்கு வந்த காரணத்தால் ஏதறிவு என்பதை நீ கண்டாய். ஆனால் உன்னுலகில் நிகழ்கால மயக்கத்தில் வாழ்வோர் இந்த ஞானத்தினைக் காண்பாரோ? இல்லை. இத்தகையதொரு நிலையில் காலத்தை நான் தாண்டிக் காசினிக்கு வந்தால் விடத்தைத் தந்து சோக்கிரதரைக் கொண்ட உன் சோதரர்கள் கட்டாயம் என்னை ஏற்றி மிதித்திடுவார்கள்' என்கின்றான். அதனால் 'நிகழ்கால மனிதா! நான் அங்கு வரேன். நீ போவாய்' என்கின்றான். எனவே ஏமாற்றத்துடன் மீண்டும் நிகழ்கால உலகிற்கே நிகழ்கால மானுடன் திரும்புகின்றான். திரும்பியவனை நடைபெறும் மடைமைப் போர்களும், நடம் புரியும் தீதுகளும் திடுக்கிட வைக்கின்றன. 'என்றிவர்கள் உண்மை காண்பாரோ?' என ஏக்கமுற வைக்கின்றன. அதனையே கவிஞர் பின்வருமாறு கூறுவார்:

'புதுயுகத்தின் குரல்போல் எதிர்காலச் சித்தன்
புகன்றமொழி கேட்டபின்னர் யானவனைப் பார்த்து
"எதிர்காலச் சித்தா உன் இனியமொழி கேட்டேன்.
எண்ணங்கள் விரிவடையும் என்னுடன் நீவந்து
மதி கெட்டார் வாழ்கின்ற வையகத்தில் புதிய
வாழ்வேற்றிச்செல்வாயோ என்றிறைஞ்சி நிற்க
மெதுவாகச் செவ்விதழ்கள் திறந்ததையுமங்கே
மென்னிலவுக் குஞ்சிரிப்புப் பிறந்ததையும் கண்டேன்.

காலத்தின் கடல் தாவி நீ­ங்கு வந்த
காரணத்தால் ஏதறிவு என்பதை நீ கண்டாய்
ஞாலத்தில் நிகழ்கால மயக்கத்தி லுள்ளோர்.
ஞானத்தைக் காண்பாரோ? காணார்களப்பா
காலத்தை யான்தாண்டிக் காசினிக்கு வந்தால்
கட்டாயம் ஏனையவர்கள் ஏற்றிமிதித்திடுவார்
ஆலத்தைத் தந்தன்று சோக்கிரதரைக் கொன்ற
அன்பர்களுன் மனிதச் சோதரர்களன்றோ?

ஆதலினால் நிகழ்கால மனிதா அங்கு
யான்வரேன் நீபோவாய் என்றான் ஐயன்
காதலினால் கால்களென்னும் கமலம் தொட்டுக்
கண்ணொற்றி விடைபெற்றேன் திரை நீங்கிற்று.
பாதகர்கள் முழுமடைமைப் போர்கள் சூழும்
பாருக்கு நிகழ்காலம் வந்தேன் எங்கும்
தீதுகளே நடம்புரியும் நிலைமை கண்டு
திடுக்கிட்டேன் என்றிவர்கள் உண்மைகாண்டல்?'

மேற்படி கவிதையினை நவீனத்தமிழ்க் கவிதையுலகில் வெளிவந்த முதலாவது விஞ்ஞானக் கவிதையெனக் குறிப்பிடலாமா? ஆய்வாளர்கள்தான் பதிலிறுக்க வேண்டும். ஆயினும் நான் அவ்விதம்தான் கருதுவேன். மேற்படி 'எதிர்காலச் சித்தன்' கவிதை நிகழ்கால மனிதன் காலம் கடந்து செல்வதை மட்டும் குறிக்கவில்லை. அ.ந.க கண்ட இலட்சிய உலகினையும், கனவினையும் கூடவே வெளிப்படுத்தி நிற்கின்றது. நவீனத்தமிழ்க் கவிதையுலகில் குறிப்பிடத்தக்க முக்கியமான கவிதைகளிலொன்றாக இதனை நான் இனங்காணுகின்றேன். அ.ந.க.வையே மேற்படி கவிதையில் வரும் எதிர்காலச்சித்தனாகவும் நான் உணருகின்றேன். அவரது உள்ளத்தில் கனன்று கொண்டிருந்த இலட்சியக் கனவின் வடிவமாகவே எதிர்காலச் சித்தன் விளங்குகின்றான். அத்துடன் அ.ந.க.வின் சிந்தனைத் தெளிவினையும், கவி புனையும் ஆற்றலையும் கூட மேற்படி கவிதை விளக்கி நிற்கின்றது.

அ.ந.கந்தசாமி அவ்வப்போது கவியரங்கங்களிலும் பங்குபற்றித் தலைமை வகித்துள்ளார்; கவிதைகள் பாடியிருக்கின்றார். அ.ந.க.வின் கவியரங்கப் பங்களிப்பைக் குறிப்பிடும் அந்தனி ஜீவா த்னது 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' கட்டுரையில் '1966ம் ஆண்டு ஸ்ரீலங்கா சாகித்திய மண்டபத்தில் நடத்திய ''பாவோதல்'' நிகழ்ச்சியில் அ.ந.கந்தசாமி பாடிய ''கடவுள் என் சோர நாயகன்'' என்ற கவிதை பாவோதல் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது. அந்தக் கூட்டத்தில் குறிப்புரையாற்றிய தென்புலோலியூர் மு.கணபதிப்பிள்ளை "ஒரு நூற்றாண்டிற்கு ஒரு தடவைதான் இதைப் போன்ற நல்ல கவிதை தோன்றும்" எனப் பாராட்டினார். பல கவிதை அரங்குகளின் தலைமைப் பீடத்தை அலங்கரித்துள்ளார் அ.ந.க' என்று குறிப்பிட்டுள்ளது இங்கு கவனிக்கத் தக்கது.  இவ்விதமாக அவர் பங்குபற்றிய கவிதையரங்கொன்றுதான் வேலணையூர்த் தொல்காவிய மன்றில் நடைபெற்ற தமிழ்மறை விழாக் கவியரங்கு. தமிழ் மறையாம் திருக்குறளினை வழங்கிய 'வள்ளுவர்' பற்றிய நீண்ட கவிதை தமிழ்க் கவிதையுலகில் திருவள்ளுவர் பற்றி வெளிவந்த அற்புதமான கவிதைகளில் நானறிந்த வரையில் முதன்மையானது. மேற்படி கவிதை வள்ளுவரின் சிறப்பினையும், கூடவே அ.ந.க அவர்மேல் வைத்திருந்த அபிமானத்தையும் புலப்படுத்தி நிற்கும். அத்துடன் அழகாகச் சொற்களை அடுக்கிச் சிந்தனையைத் தூண்டும் வகையில், மனதினை ஈர்க்கும் வகையில் கவிபுனையும் அ.ந.க.வின் ஆற்றலுக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகின்றது.

'மதங்களை அடிப்ப்டையாக புலவர்கள் கொள்ளுமொரு காலகட்டத்தில் வள்ளுவரோ மன்னுலக வாழ்வை மட்டுமே அடிப்படையாகக் கொள்கின்றார். மற்றவரோ வீடென்றும், மோட்சமென்றும் புனைய வள்ளுவரோ இல்வாழ்வுக்குரிய அறம், பொருள், இன்பம் பற்றி உரைத்திடுகின்றார்' இவ்விதம் கூறும்
அ.ந.க

'இது நல்ல மாற்றமென இங்கெடுத்துச் சொல்வோம்.
இவர் குறளைக் கையேந்தி இவ்வுலகை வெல்வோம்' என்கின்றார்.

அத்துடன் 'வறுமையினை ஒழித்திடுதல் வேண்டுமெனும் நெஞ்சினை வள்ளுவனார் கொண்டிருந்தார் என்பதை'

'வேந்தரது அரண்சிறப்புச் சொல்லவந்தபோது 1"உறுபசியும் பிணிநோயும் செறுபகையும் சேரா(து) உற்றிடுதல் ஒன்றல்ல நா"டென்று கேட்டார்' என்று குறிப்பிடும் அ.ந.க மேலும் 'பெரும்பசியை முதற்குற்ற மெனஎடுத்துச் சொன்னார் பெரும்புலவர் வள்ளுவனார் ஏழைகளின் தோழன்' என்று விபரிக்கும் அ.ந.க மேலும் தொடர்ந்து வள்ளுவனார் வழிவந்த பாரதியார் 'தனி யொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்றார். ஆனால் வள்ளுவரோ 'தள்ளுவதோ வாழ்க்கையினைப் பிச்சைஎடுத் திங்கே? அவ்விதமேல் சாய்கஅந்த ஆண்டவனும்' என்று பல்லாண்டுகளுக்கு முன்னர் குறிப்பிட்டதைச் சுட்டிக் காட்டுவார்:

'வள்ளுவனார் வழிவந்த பாரதியார் சொன்னார்
2"வையத்தை அழித்திடுவோம் தனிமனிதன் ஒருவன்
உள்ளநிறை வோடுண்ண உணவில்லை என்று
உளம்வருந்து வானாயின்" என்பதவர் பாட்டு.
வள்ளுவர் தாமும்பல் லாண்டுகட்கு முன்னர்
வழுத்தினார் இதன் பொருளை ஆவேசத்தோடு
3"தள்ளுவதோ வாழ்க்கையினைப் பிச்சைஎடுத் திங்கே?
அவ்விதமேல் சாய்கஅந்த ஆண்டவனும்" என்றார்'

இவ்விதமாக வள்ளுவரை மக்கள் கவிஞ்னாக, ஏழைகளின் தோழனாக அவனது குறட்பாக்களினூடு காணும் கவிஞர்

'கலைக்காகக் கலைஎன்று கதறுபவர் உண்டு
கருத்துக்கே முதன்மை தரும் வள்ளுவனார்கண்டு
கலைஇந்தச் சமுதாய வளர்ச்சிக்கே என்று
கருத்துடையார் உணரட்டும் காசினியில் அன்று
விலையில்லாத் திருக்குறளைத் தந்திட்ட மேதை
வியனுலகில் காட்டுகின்றார் பாதையதே பாதை.
கலைஞர்களே எழுந்திடுங்கள் வள்ளுவனார் காட்டும்
கவினுடைய பாதையிலே பேனாவை ஓட்டும்'

என்று மேலும் பாடி , வள்ளுவரை கருத்துக்கு முக்கியம் தரும் கலை படைக்குமொரு சமுதாயச் சிந்தனை மிக்க படைப்பாளியாகச் சித்திரிப்பார். கலை கலைக்காக என்று கருதுபவர்கள் கலை இந்தச் சமுதாய வளர்ச்சிக்கே என்று வள்ளுவரைப் பார்த்து உணரட்டுமென்கின்றார். அவர் காட்டும் பாதையிலே பேனாவை ஓட்டட்டுமென்கின்றார். மக்களுக்காக இலக்கியம் படைப்பதையே தனது இலட்சியமாகக் கொண்டு செயலாற்றிவந்த அ.ந.க. வள்ளுவரையும் அத்தகையதொரு கோணத்திலேயே அவனது குறட்பாக்களினூட் இனம் காண்கின்றார். இச்சமயத்தில் அ.ந.க.வின் இலக்கியம் பற்றிய கருத்துகளை நினைவு கூர்வது பொருத்தமானதே. ஏற்கனவே குறிப்பிட்டுள்ள 'நான் ஏன் எழுதுகிறேன்' என்னும் கட்டுரையில் அவர் பின்வருமாறு கூறுவது கவனிக்கத்தக்கது. அவரது எழுத்தின் நோக்கம் பற்றிய அவரது உள்நோக்கத்தினை எடுத்தியம்பும் வரிகளிவை. அவரைப் பற்றி ஆய்வு செய்ய விரும்பும் ஆய்வாளர்களுக்கு மிகவும் உதவக் கூடிய வரிகளிவை.:

'மனிதன் சமுதாயத்தின் ஒரு அங்கம். அவனுக்கு சமுதாயப் பொறுப்பொன்று உண்டு. வெறுமனே உண்ணுவதும், உறங்குவதும், புலனுகர்ச்சிகளில்> ஈடுபடுவதும் வாழ்க்கையாகாது. அறிவு வளர்ச்சி பெற்ற மனிதன் இவற்றோடு வேறு சில காரியங்களையும் செய்ய விரும்புவான். மற்றவர் முகத்தின் புன்னகை தோட்டத்தில் பூத்துக் குலுங்கும் முல்லைமலர் போல் அவனுக்கு இன்பத்தையூட்டும். "இன்று நாம் வாழும் சமுதாயத்தில் நாம் புன்னகையைக் காணவில்லை. துன்பமும், துயரமும், அழுகையும், ஏக்கமும், கண்ணீரும், கம்பலையுமாக நாம் வாழுமுலகம் இருக்கிறது. ஏழ்மைக்கும், செல்வத்துக்கும் நடக்கும் போரும், அடிமைக்கும், ஆண்டானுக்கும் நடக்கும் போரும், உயர்சாதியானுக்கும் தாழ்ந்த சாதியானுக்கும் நடக்கும் போரும், அசுரசக்திகளுக்கும், மனித சக்திகளுக்கும் நடக்கும் போரும் இன்று உலகையே கலங்க வைத்துக் கொண்டிருக்கின்றன. இப்போர்களினால் வாழ்வே ஒரு சோககீதமாகிவிட்டது. இப்போர்களை எவ்வளவு விரைவில் ஒழிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் ஒழித்துவிட வேண்டும். அதன்ப பின்தான் போரொழிந்த சமத்துவ சமுதாயம் பூக்கும். அதைப் பூக்க வைக்கும் பணியில் எழுத்தாளன் முன்னோடியாகத் திகழ வேண்டும் என்ற கருத்தை உலகின் புகழ்பெற்ற பேனா மன்னர்கள் என் மனதில் தோற்றுவித்தனர்.

பிரெஞ்சுப் புரட்சி கண்ட ரூசோ, வால்டயர் தொடக்கம் மார்சிம் கோர்க்கி, எஹ்ரென்பேர்க் வரைக்கும் எல்லா நல்ல எழுத்தாளர்களும் இந்தச் செய்தியையே எனக்குக் கூறினர். பேர்னாட் ஷாவின் எழுத்துகளும் இன்றைய பேட்ரண்ட் ரசல் எழுத்துகளும் கூட சமுதாய முன்னேற்றத்துக்குரிய பிரச்சினைகளுக்குத் தீர்ப்பு காணும் பணியை அலட்சியம் செய்துவிடவில்லை. வங்கக் கவிஞர் தாகூரும், தமிழ்க் கவிஞன் பாரதியும் தாம் வாழ்ந்த சமுதாயத்தின் உடனடிப் பிரச்சினைகளைத் தீர்க்கும் பணிக்குத் தமது பேனாக்களை அர்ப்பணம் செய்ய மறக்கவில்லை.... உலகப் பண்பாட்டுப் பாடிய பாரதிதாசனும் சமுதாய ஊழல்களைச் சுட்டெரிக்கும் பணிக்குத் தன்னாளான சேவையைச் செய்திருக்கின்றான்.

"மக்கள் இலக்கியம்" என்ற கருத்தும் "சோஷலிஸ்ட் யதார்த்தம்" என்பனவுமே என் மனதைக் கவர்ந்த இலக்கிய சித்தாந்தங்களாக விளங்குகின்றன. எழுத்தாளன் வாழ்க்கையை விமர்சிப்பதுடன் நின்று விடக்கூடாது. அந்த விமர்சனத்தின் அடிப்படையில் வாசகர்களுக்கு எதிர்காலத்தில் நம்பிக்கை ஊட்டவேண்டும். அவ்வித நம்பிக்கையில்லாவிட்டால் முன்னேற்றமில்லை. வாழ்வே இல்லை. இவ்வித பிரக்ஞையில் பிறக்காமல் வெறுமனே யதார்த்தத்தை ஒரு சுத்த இலட்சியமாகக் கொண்டு எழுதும்போது நம்பிக்கைக்குப் பதில் அவநம்பிக்கையின் தொனிகளே கேட்க ஆரம்பிக்கலாம். நைந்த உள்ளத்தின் சோகக்குரலாகக் கேட்கும் எழுத்தால் பயனில்லை. நொந்த உள்ளத்தின் செயல் துணிவுகொண்ட வேகக் குரலாக அது ஒலிக்க வேண்டும். வாழ்வதற்கு நேரடியாகவோ, குறிப்பாகவோ, மெளனமாகவோ வழிகாட்டும் எழுத்தே எழுத்து. இந்தக் கருத்துகள் என்னை உந்துகின்றன. அவற்றுக்காகவே நான் எழுதுகின்றேன்.

எழுத்தில் பலவகை உண்டு. நேரடிப் பிரச்சார எழுத்து ஒருவகை. கதை, கவிதை, நாடகம் என்ற உருவங்களில் வாழ்க்கையின் படமாகவும் வழிகாட்டியாகவும் எழுதப்படுபவை வேறொருவகை. இந்த இரண்டாவது வகை எழுத்தே இலக்கியம். அதுவே நிலைத்து நிற்கும் தன்மை வாய்ந்தது. ஆகவே அதைப்பற்றியே நான் இங்கு அதிகமாகக் கூறியிருக்கிறேன்.'

இவ்விதமாக எழுத்து பற்றிய கருத்துள்ள அ.ந.க வள்ளுவரையும் அவ்விதமான, மக்களுக்காக இலக்கியம் படைத்த் படைப்பாளியாகவே இனங்காண்கின்றார். அதனால்தான்

'நெசவுசெயும் தொழிலாளி நேர்மையுள நெஞ்சன்
செய்திட்ட நிறைநூ லில் பெய்திட்ட எண்ணம்
இசைவுடனே காலத்தை வென்றிங்கு வாழும்!
எல்லைகளைக் கடந்திங்கு உலகெல்லாம் சூழும்'
என்கின்றார்.

அ.ந.க. வை வள்ளுவரைப் போல் மகாதமா காந்தியின் துணைவியார் அன்னை கஸ்தூரிபாயும் மிகவும் கவர்ந்தவர். அவரது மறைவையொட்டி அவர் எழுதிய 'அன்னையார் பிரிவு' என்னும் ஈழகேசரியில் வெளியான நினைவுக் கவிதையொன்றே அதற்குச் சான்று. அதிலவர் அன்னை பற்றி

'ஒப்பரிய காந்தியரி னொப்பில்லாத
ஓர்மனைவி செம்மையறங் காத்த சீர்மைச்
செப்பரிய பெரும்புகழாள் தேய மெல்லாம்
தாயெனவே செப்பிடுமோர் இல்லின் தெய்வம்'
எனவும்

'சீதையும் சாவித்திரியாம் தேவி மற்றும்
சிறப்புள்ள நளாயினி என்போரெல்லாம்
காதையிலே உலாவுகின்ற கன்னியர்கள்
கடுகேனும் உண்மையங்கு இல்லை யென்று
ஓதியவர் தலைநாணச் செய்து பெண்மைப்
பெருங்குலத்தின் உயர்வுதனை நாட்டினாய்'
எனவும் குறிப்பிடும் அ.ந.க, அன்னையார் இறந்த செய்தியினை 'மாரியினிலே பெருமழைதான் கொட்டுகின்ற காரிரவில் பல்லிடிகள் பின்னே வந்த பேரிடி'யாய் உணருகின்றார்.

இவ்விதமாகக் கவீந்திரனின் கவிதைகள் ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகில் முக்கியமான படைப்புகளாக விளங்கி நிற்கின்றன. அ.ந.க. வின் கவிதைகள் எல்லாமே போர்ச்சுவாலைகளாகத்தான் இருந்தன என்பதற்கில்லை, அவ்வப்போது காதல் போன்ற மென்மையான உள்ளத்துணர்வுகள் பற்றியும் பாடியுள்ளார். முற்போக்குக் கவிஞரொருவர் இவ்விதமாகவெல்லாம் பாடலாமா என்ற்ம் சிலர் கேட்பர். அதற்கு அ.ந.க. முன்பு குறிப்பிட்டுள்ள 'நான் ஏன் எழுதுகிறேன்?' என்னும் கட்டுரையினை மீண்டும் ஒருமுறை அசைபோடுதல் தகுமே. அதிலவர் கீழுள்ளவாறு குறிப்பிட்டிருப்பார்:

'எழுத்தில் பலவகை உண்டு. நேரடிப் பிரச்சார எழுத்து ஒருவகை. கதை, கவிதை, நாடகம் என்ற உருவங்களில் வாழ்க்கையின் படமாகவும் வழிகாட்டியாகவும் எழுதப்படுபவை வேறொருவகை. இந்த இரண்டாவது வகை எழுத்தே இலக்கியம். அதுவே நிலைத்து நிற்கும் தன்மை வாய்ந்தது. ஆகவே அதைப்பற்றியே நான் இங்கு அதிகமாகக் கூறியிருக்கிறேன். ஆனால் சோஷலிஸ யதார்த்தப் பாதையில் இலக்கியப் பணிபுரிவோர் வெறும் அழகையே நோக்காகக்கொண்ட கருத்துகள் இயற்கையாக மனதில் தோன்றும்பொழுது அவற்றை எழுதாது விட்டுவிட வேண்டுமா? நல்ல கருத்துகளைக் கருக்கிச் சாகவிட்டு விடவேண்டுமா என்று கேட்கப்படுகிறது.

பாரதி முற்போக்குக் கவிஞன். ஆனால் மக்கள் பிரச்சினைகளைப் பாடிய அதே வாயால் 'கண்ணன் என் காதலனை'யும் பாடினான். ஆம், தோட்டக்காரன் கத்தரிக்காயையும், கீரையையும், தக்காளியையும் பயிரிடுகிறான். ஆனால் வீட்டு வாசலிலே மல்லிகைக் கொடியைப் படர விடுவதில்லையா? கத்தரித் தோட்டத்து வேலையின் களைப்புப் போக, மல்லிகைப் பந்தலின் நறுமணத்தை மகிழ்ச்சியோடு உறிஞ்சி மகிழ அதன் கீழ்ச் சென்று உட்காருவதில்லையா? எமக்கு நெல்லும் வேண்டும். கோதுமையும் வேண்டும். காய்கறிகளும் கிழங்குகளும் வேண்டும். ஆனால் ரோசா மலர்களும் வேண்டும். ரோசாமலர்களை மனநிறைவுக்காக நடும் தோட்டக்காரன் ரோசா மலர் நடுபவன் என்று சொல்லப்படமாட்டான். தோட்டக்காரன் என்றுதான் அழைக்கப்படுவான். பிள்ளையைத் தூங்க வைக்கத் தாலாட்டுப் பாடுவோம். ஏற்றமிறைக்கையில் ஏற்றப்பாட்டுப் பாடுவோம். அணிவகுப்பில் புரட்சிக் கீதம் பாடுவோம். ஆனால் குளிக்கும் அறையில் வெறும் ஸ்வரங்களை நாம் வாய்விட்டு இசைப்பதில்லையா?

சோஷலிச யதார்த்தப் பாதையில் முற்போக்கு இலக்கியம் சமைப்பவனைக் கடும் விலங்குகளால் கட்டிவிடக்கூடாது. பொதுவாக ஒரு எழுத்தாளன் எத்துறைக்குத் தன்னை அர்ப்பணிக்கிறான் என்பதைப் பார்க்க வேண்டும். அதில் அவன் சரியாக இருந்தால், மற்ற விஷயங்கள் சம்பந்தமாக நுணுக்கமாகச் சட்டதிட்டங்களை உண்டாக்குதல் அவன் கலைச் சுதந்திரத்தில் தலையிடுவதாகும். 'சிந்தனையும் மின்னொளியும்' தொடக்கம் 'எதிர்காலச் சித்தன் பாட்டு ' வரை என் கருத்தோட்டம் ஒன்றாகவே இருந்திருக்கிறது. ஆனால் இடையிடையே ரோசாக்களையும் நான் நட்டதுண்டு. 'புரட்சிக் கீதம்' பாடாத வேளையில் 'காதல் கீதம்' பாடியதுமுண்டு. வெறும் சுவரங்களை இசைத்ததுமுண்டு. என்றாலும் என் பொதுவான இலட்சியம் ஒன்று. என் எழுத்துக்கள் மக்களை உயர்த்த வேண்டும். அவர்களின் போராட்டங்களில் எந்த அம்சத்தோடாவது அவை சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். இந்த இலட்சியத்துக்காகவே நான் எழுத ஆசைப் படுகிறேன். ஆனால் போர்க்களத்தில்கூட பூக்கள் பூப்பதுண்டு. இதை நாம் மறக்கக்கூடாது. வாளேந்திப் போர்க்களம் புகும் வீரன் கூட தும்பை மாலையை கழுத்திலணிந்து செல்வது பண்டைத் தமிழ் நாட்டு வழக்கமாகும். இந்த விவகாரம் இக்கட்டுரைக்குப் புறப்பிரச்சினையானாலும் முற்போக்கு இலக்கியத்தோடு சம்பந்தப்பட்ட பிரச்சினையென்பதால் சில வார்த்தைகள் கூறும்படி நேரிட்டது. முடிவாக "எதற்காக எழுதுகிறேன்?" என்பதற்கு நான் இரத்தினச்சுருக்கமாகச் சில காரணங்களைக் கூறி இக்கட்டுரையை முடிக்க விரும்புகிறேன். முதலாவதாக என் வாழ்வு சமுதாயத்துக்குப் பயனுள்ளதாக வேண்டும் என்ற காரணம். சுரண்டலும் அநீதியும் நிறைந்த சமுதாயத்தை ஒழிக்கவும் புதிய ஒளிமிக்க சமுதாயத்தை தோற்றுவிக்கவும் என்னாலான பணியை எழுத்து மூலம் செய்ய வேண்டுமென்ற காரணம். இதனை நான் முன்னரே விரித்துக் கூறிவிட்டேன்.'

ஈழத்து மரபுக் கவிஞர்களில் குறிப்பிடத்தக்க கவிஞர்களிலொருவர் வித்துவான் க.வேந்தனார். இவரது கவிதைகளின் சிறப்பம்சங்களிலொன்று அவரது கவிதைகளில் காணப்படுகின்ற முற்போக்குக் கருத்துகள். ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகில் இவரது 'காலைத் தூக்கிக் கண்ணில் வைத்து கட்டிக் கொள்ளும் அம்மா' என்னும் குழந்தைப் பாட்டு மிகவும் புகழ் பெற்றது. க.வேந்தனாரின் இன்னுமொரு கவிதை 'கவிஞன்' அதிலவர் பின்வருமாறு
கூறுவார்:

'வாடுகின்ற மக்களினம் மாட்சி கொள்ள
மறுமலர்ச்சிப் பெருவாழ்வை வழங்கு மாற்றல்
கூடுகின்ற கொள்கையினால் எழுச்சி கொண்டு
குமுறுகின்ற கோளரியே கவிஞ னாவான்!'

இவ்விதமாகக் வாடுகின்ற மக்களினம் மாட்சி கொள்ள கோளரியாக வாழ்ந்த கவிஞன்தான் அ.ந.கந்தசாமி. ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகின் முக்கியமான கவிஞரான அ.ந.கவின் தமிழ்க் கவிதைக்கான பங்களிப்பை மறைத்துவிட முனைவோர் முழுப் பூசணிக்காயைச் சோற்றினுள் மறைக்க முயலும் அறிவிலிகளே! ஆய்வாளர்களல்லர்.


சிந்தனையும் மின்னொளியும்!

  -அ.ந.கந்தசாமி - 

- அறிஞர் அ.ந.கந்தசாமி -

சாளரத்தின் ஊடாகப் பார்த்திருந்தேன் சகமெல்லாம்
ஆழ உறங்கியது அர்த்த ராத்திரி வேளையிலே,
வானம் நடுக்கமுற, வையமெல்லாம் கிடுகிடுக்க,
மோனத்தை வெட்டி யிடியொன்று மோதியதே!
'சட்' டென்று வானம் பொத்ததுபோல் பெருமாரி
கொட்டத்தொடங்கியது. 'ஹேர்' ரென்ற இரைச்சலுடன்
ஊளையிடு நரியைப் போல் பெருங்காற்றும் உதறியது.
ஆளை விழுத்திவிடும் அத்தகைய பேய்க்காற்று
சூறா வளியிதுவா உலகினையே மாய்க்க வந்த
ஆறாத பெருஊழிக் காலத்தின் காற்றிதுவா?
சாளரத்துக் கதவிரண்டும் துடிதுடித்து மோதியது.
ஆழிப்பெரும் புயல்போல் அல்லோலம் அவ்வேளை
உலகம் சீரழிவிற்ற(து); அப்போ வானத்தில்
மாயும் உலகினுக்கு ஒளிவிளக்கந் தாங்கிவந்த
காயும் மின்னலொன்று கணநேரம் தோற்றியதே.
கொட்டுமிடித்தாளம் இசைய நடம் செய்யும்
மட்டற்ற பேரழகு வான்வனிதை போல் மின்னல்
தோன்றி மறைந்ததுவே; சிந்தனையின் தரங்கங்கள்
ஊன்றியெழுந்தன இவ் வொளிமின்னல் செயல் என்னே?
வாழ்வோ கணநேரம்; கணநேரம் தானுமுண்டோ?
சாவும் பிறப்புமக் கணநேரத் தடங்குமன்றோ?
ஐனனப் படுக்கையிலே ஏழைமின்னல் தன்னுடைய
மரணத்தைக் கண்டு துடிதுடித்து மடிகின்ற
சேதி புதினமன்று; அச் சேதியிலே நான் காணும்
சோதி கொளுத்திச் சோபிதத்தைத் செய்துவிட்டு
ஓடி மறைகிறது; வாழும் சிறு கணத்தில்
தேடி ஒரு சேவை செகத்திற்குச் செய்ததுவே!
சேவையதன் மூச்சு; அச்சேவை யிழந்தவுடன்
ஆவிபிரிந்து அகல்வானில் கலந்ததுவே!
என்னே இம் மின்னல(து) எழிலே வென்றிருந்தேன்.
மண்ணின் மக்களுக்கு மின்னல் ஒரு சேதி சொல்லும்.
வாழும்சிறு கணத்தில் வைய மெலாம் ஒளிதரவே
நாளும் முயற்சி செய்யும் நல்லசெயல் அதுவாகும்.
இந்த வாறாகச் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டேன்.
புந்தி நடுங்கப் புரண்டதோர் பேரிடி; நான்
இந்த உலகினிற்கு வந்தடைந்தேன்; என்னுடைய
சிந்தனையால் இச்சகம்தான் சிறிதுபயன் கண்டிடுமோ?

-அறிஞர் அ.ந.கந்தசாமியின் ஆரம்பகாலக் கவிதையிது. ஈழகேசரியில் வெளிவந்தது.-  

பதிவுகள் பெப்ருவரி 2009 இதழ் 110 


எதிர்காலச் சித்தன் பாடல்!

எதிர்காலத் திரைநீக்கி அதற்கப் பால்யான் 
ஏகிட்டேன் ஏகிட்ட போதில் என்முன் 
கதிர்போலும் ஒளிமுகத்தான் கருனையூறும் 
கமலம்போற் கண்ணினையான் ஒருவன் வந்தான் 
"எதிர்கால உலகமிஃது மனிதா நீயிங் 
கேன்வந்தாய் இவண்காணும் பலவுமுன்னை 
அதிர்வெடி போல் அலைக்கழிக்கும் ஆதலாலே 
அப்பனே நிகழ்காலம் செல்க" என்றான். 

அறிவினிலே அடங்காத தாகம் கொண்டேன் 
அவ்வுரையால் அடங்கவில்லை அவனை நோக்கிச் 
'செறிவுற்ற பேரறிவின் சேர்க்கை வேண்டும் 
செந்தமிழன் யானொருவன் ஆதலாலே 
மறுவற்ற பேராண்மைக்கோட்டை என்னை 
மலைவுறுத்தா தெதிர்காலம்" என்று கூறிக் 
குறுகுறுத்த விழியுடையான் குழுத வியான் 
குணமென்ன பெயரென்ன என்று கேட்டேன். 

"எனக்குமுன்னே சித்தர்பலர் ­ருந்தா ரப்பா 
எதிர்காலச் சித்தன்யான் நிகழ்காலத்தர் 
உனக்குமுன்னர் வாழ்ந்திட்ட சித்த ரல்லால் 
உன்காலச் சித்தரையும் ஏற்கா ரப்பா 
மனக்குறைவால் கூறவில்லை மகிதலத்தில் 
மடமையொரு மயக்கத்தின் ஆட்சி என்றும் 
கனத்துளதிங் கென்பதையே கருதிச் சொன்னேன் 
காசினியின் பண்பிதனைக் காணப்பா நீ. 

வருங்காலச் சித்தனுரை செய்த வார்த்தை 
வையகத்தார் அறிதற்காய் இங்கு சொல்வேன் 
"பெரும்போர்கள் விளைகின்ற நிகழ்காலத்தில் 
பிளவுறுத்தும் பலவகையாம் பேதமுண்டு 
ஒருமைபெறும் மனிதர்களை ஒன்றா வண்ணம் 
ஊடமைத்த சுவரனைய பேதம் யாவும் 
நோக்கிடுவாய் தூரஎதிர் கால மீதே" 

அண்டுபவர் அண்டாது செய்வதேது 
அநியாய பேதங்கள் பெயரைச் சொல்வேன் 
துண்டுபட்டுத் தேசங்கள் என்றிருத்தல் 
தூய்மையாம் இனம்மொழிகள் மதங்க ளென்று 
அன்றுதொட்டிங் கின்றுவரை இருக்குமந்த 
அர்த்தமிலாப் பிரிவினைகள் எல்லாம் சாகும். 
ஒன்றுபட்டிவ் வுலகெல்லாம் ஒற்றையாகும் 
ஒருமொழியில் ஓரரசு பிறக்குமப்பா. 

அரசெல்லாம் ஒழிந்துலகில் ஓரரசே யுண்டாம் 
அறங்கூறும் ஒருமதமே உலகெல்லாம் ஆகும் 
விரசமொடு விகற்பங்கள் வளர்க்குமொழி எல்லாம் 
வீழ்ந்துவிடும் ஒருமொழியே இவ்வுலகில் உண்டாம் 
சரசமொடு உலகத்து மககளெல்லாம் தம்மைச் 
சமானர்கள் மனித்குலம் என்ற இன மென்பார் 
அரசர்கள் ஏழைபணக்காரனென்ற பேதம் 
அத்தனையும் ஒழிந்து  விடும் எதிர்கால உலகில். 

செந்தமிழும் சாமீழச் சிங்களமும் சாகும் 
செகமெல்லாம் ஒருமொழியே தலை  தூக்கி நிற்கும். 
நந்தமிழர் இனஞ்சாகும் பிற இனமும் சாகும் 
நாடெல்லாம் மனித இனம் ஒன்றுதலை தூக்கும். 
எந்தமொழி இவ்வுலகில் நிலவுமெனக் கேட்பில் 
எண்ணிக்கை கொண்டமொழி எம்மொழியோ இங்கு 
அந்த மொழி தானப்பா அரசாளும் உண்மை 
அதுநன்று தானப்பா பிரிவினைகள் ஒழிதல். 

நிகழ்காலச் செந்தமிழர் இது கேட்டுச்  சீறி 
நீசனுரை நிகழ்த்தாதே செந்தமிழே உலகின் 
புகழ்மொழியாய் உலகத்தின் பொது மொழியும் ஆகும் 
புதுமைதனை காண்பீர்கள் என்றுபுகன் றிடுவார். 
இகழ்ந்திடுவார் எதிர்காலச் சித்தனுரை தன்னை 
இம்மியள வேணும்  மானமில்லா மூர்க்கன் 
நிகழ்காலத் திருந்திருந்தால் செய்வதறிந்திடுவோம். 
நெஞ்சுபிளந் தெறிந்திருப்போம் என்றிகழ்த்திடுவார். 

பிறப்பாலே யானுயர்வு தாழ்வுரைக்க மாட்டேன் 
பிறப்பாலே என்மொழியே சிறந்ததெனச் சொல்லேன். 
பிறப்பென்றன் வசமாமோ? பிரமத்தின் வசமாம். 
பீருவில் பிறந்திருந்தால் பீருமொழி பீடே 
வெறிமிகுந்த நிகழ்காலத்   தீதுணரமாட்டார் 
விழழுக்கே பெருங்கலகம் விளக்கின்றார் அன்னார் 
அறிவற்றே துன்பங்கள் அனவர்க்கும்  விளைப்பவர் 
ஐய்யய்யோ இவர்மடமை என்னென்று சொல்வேன். 

புதுயுகத்தின் குரல்போல் எதிர்காலச் சித்தன் 
புகன்றமொழி கேட்டபின்னர் யானவனைப் பார்த்து 
"எதிர்காலச் சித்தா உன் இனியமொழி கேட்டேன். 
எண்ணங்கள் விரிவடையும் என்னுடன் நீவந்து 
மதி கெட்டார் வாழ்கின்ற வையகத்தில் புதிய 
வாழ்வேற்றிச்செல்வாயோ என்றிறைஞ்சி நிற்க 
மெதுவாகச் செவ்விதழ்கள் திறந்ததையுமங்கே 
மென்னிலவுக் குஞ்சிரிப்புப் பிறந்ததையும் கண்டேன். 

காலத்தின் கடல் தாவி நீ­ங்கு வந்த 
காரணத்தால் ஏதறிவு என்பதை நீ கண்டாய் 
ஞாலத்தில் நிகழ்கால மயக்கத்தி லுள்ளோர். 
ஞானத்தைக் காண்பாரோ? காணார்களப்பா 
காலத்தை யான்தாண்டிக் காசினிக்கு வந்தால் 
கட்டாயம் எனையவர்கள் ஏற்றிமிதித்திடுவார் 
ஆலத்தைத் தந்தன்று சோக்கிரதரைக்  கொன்ற 
அன்பர்களுன் மனிதச் சோதரர்களன்றோ?

ஆதலினால் நிகழ்கால மனிதா அங்கு 
யான்வரேன் நீபோவாய் என்றான் ஐயன் 
காதலினால் கால்களென்னும் கமலம் தொட்டுக் 
கண்ணொற்றி விடைபெற்றேன் திரை நீங்கிற்று. 
பாதகர்கள் முழுமடைமைப் போர்கள் சூழும் 
பாருக்கு நிகழ்காலம் வந்தேன் எங்கும் 
தீதுகளே நடம்புரியும் நிலைமை கண்டு 
திடுக்கிட்டேன் என்றிவர்கள் உண்மைகாண்டல்?


அ.ந.கந்தசாமியின் நெடுங்கவிதை: கைதி!

1.
சட்ட மென்னும் கருங்கல்லால்
சமைத்த சிறைவீ டிதுவாகும்
சட்டம் சரியோ பிழையோ நான்
சாற்றவறியேன் அறிவதெலாம்
கஷ்ட்டமிந்தச் சிறை வாழ்வு
கருங்கற் சுவரும் பலமாகும்
மற்றதெல்லாம் எற்றுக்கு
மனதே வீணில் அலைவதுமேன்?

2.
சிறைவீ டென்று கூறிவிட்டால்
சிறியோர் தாமோ அங்கிருப்போர்?
நிறைந்த அறிவின் அலைவீசும்
நீலக் கடலே அனையாரும்
திறந்தே இருளைப் பிளந்தொளியை
திக்கிற் சிதற் விட்டோரும்
மறைந்தே உறைந்த ஆலயமாம்
வணங்கற்குரிய கோவிலிதாம்!

3.
கிரேக்க ஞானி சோக்ரரும்
கீழைத்தேச மகாத்மாவும்
உரைக்க வொண்ணா நற் பெருமை
உத்தமரின்னும் பல நூறாய்த்
தரைக்கே உண்மை வழிகாட்ட
தாரணி தோன்றிய நன் மலர்கள்
சிறைக்கே சுகந்தம் வீசி நின்ற
சிறுமை உலகம் இதுவன்றோ?

4.
பெரியோர் வாழ்ந்த இச்சிறையில்
பேதை நானும் இடம் பெற்றேன்!
அரிதே இந்த அதிர்ஷ்டத்தை
அறிந்த நண்பர் யாவர்க்கும்
விரிவாய் உரைத்து மகிழ்தற்கு
விலங்காய் அமைந்த கொடுஞ் சிறையே!
சரிந்தே உந்தன் சுவரெல்லாம்
சாய்ந்தே ஒழிந்து போகாவோ?

5.
வானின் சிறிய மலர்கள் போல்
வாவும் வண்ணப் பறவைகளை
கான வேடன் கைப்பற்றி
கட்டிக் கூட்டில் இட்டதுபோல்
மானிடப் புள்ளின் சிறகதனை
மழுங்க வெட்டிச் சிறைவைக்கும்
நானிலப் புல்லர் கூட்டம்போல்
நாசகாரர் இங்குண்டோ?

6.
பறவை நல்லூன் உணவாகும்
பயனைக் கருதி அடைக்கின்றார்!
கறவைப் பசுவைப் பாலுக்காய்க்
கட்டிவைத்துக் கறக்கின்றார்!
வறிதே மனிதர் கூட்டத்தைச்
சிறையில் வைத்து வளர்க்கின்றார்!
சிறையில் வாழ்ந்தேன் ஆயினுமிச்
சிறுமை சிரிப்பைத் தந்திடுமே!

7.
களவு செய்தால் சிறையென்று
கனன்றே என்னை இங்கிட்டார்!
களவு களவு என்ப தெல்லாம்
கருத்தைச் செலுத்திப் பார்க்கையிலே
முழுதும் பெரிய விளையாட்டே
மூடத்தனத்தின் முடிபேயாம்!
களவு களவு என்ற பதக்
கருத்தை நானும் கழறுவனே!

8.
உள்ளவனிடத்தில் இல்லாதான்
உணவின் உடையின் தேவைக்காய்
மெல்லச் சிறிதே எடுத்திட்டால்
மேதினி அதனைக் களவென்னும்!
உள்ளவனிடத்தில் அல்லாமல்
உடைமை யற்றவன் கையிருந்து
இல்லா மனிதன் எடுப்பதற்கு
எங்ஙன் முடியும் இயல்பு வீரே!

9.
இன்னும் கூறுவன் கேளுமினோ!
இல்லாமனிதன் உள்ளவனைப்
பன்னிப் பன்னிக் கேட்டாலும்
பயக்கும் பயனோ மிகச் சொற்பம்!
சென்னியில் அடித்துப் பறித்தாலோ
சிவந்த ரத்தம் வீணாகும்!
அண்ணல் காந்தி சொல்லிவைத்த
அகிம்சை வழியே களவாகும்!

10.
கள்வர் கள்வர் எனக்கூறி
கருணையற்றோர் ஏழைகளை
மெள்ள இங்கே தள்ளுகிறார்
மேலாம் செல்வர் பகலினிலே
கொள்ளை அடிப்போர் உலகெங்கும்
குவையாய்ப் பணத்தில் புரள்கின்றார்!
கள்வர் தமக்கே சிறையென்றால்
அவர்க்கே முதலிடம் தருவீரே!

11.
களவு பிடிக்கும் சட்டமெல்லாம்
காசினி வதியும் செல்வர்களே
அழகாய்த் தம்பொருள் காப்பதற்கு
ஆக்கி வைத்த தந்திரமாம்!
வளமார் கிளிகள், பறவையினம்
வனத்தில் வதியும் விலங்குகளில்
களவுச் சட்டம் ஒன்றுண்டோ?
கழறும் கவிதை ரசிகர்களே!

12.
சிறையில் உடலைப் பிணித்தாலும்
சிந்தனை சிறகு தீயவில்லை!
முறையாய் நினைவு முழுவதுமே
முழங்கித் தீர்க்கத் தருணமிலை!
சிறைவாய்க் கதவை நோக்குகிறேன்,
இரும்புக் கம்பிகள் எண்ணுகிறேன்
சிறையே! என்னுளம் கவிதையினால்
சிலிர்க்க வைத்தாய் நீ வாழ்க!

13.
இரும்புக் கம்பிகள் பின்னால் நான்
இருந்து குமையும் வேளைகளில்
இரும்புக் கம்பிகள் எத்தனை யென்
றெண்ணி எண்ணி அலுத்துவிட்டேன்!
திரும்பத் திரும்ப எண்ணிடிலும்
திடமாம் கம்பிகள் பதினெட்டே!
திரும்பத திரும்ப எண்ணுவதேன்
திடுமெனக் கூடிக் குறையுமென்றா?

14.
கருங்கற் சுவரைப் பார்க்கின்றேன்
கருமைந் நிழல் படர்ந்துள்ள
நெருங்கும் சந்துகள், மூலைகளில்
நெஞ்சம் செலுத்தி நோக்குகின்றேன்!
கருங்கற் சுவரின் இடையினிலே
காணும் சிறையே! இவ்வுலகின்
கருங்கல் லிதயத் துறைகின்ற
காரிருள் சின்னம் நீயேதான்!

நன்றி: சுதந்திரன் ஆகஸ்ட் 5, 1951.


தேயிலைத் தோட்டத்திலே!

- அ.ந.கந்தசாமி கவீந்திரன் என்னும் புனை பெயரில் எழுதிய கவிதை. 'பாரதி' இதழில் வெளிவந்தது. -

1.
காலையிலே சங்கெழுந்து பம்மும்! "நேரம்
கணக்காச்சு! எழுந்துவா! தூக்கம்போ தும்.
வேலைசெய வேண்டு"மெனச் சொல்லு மஃது!
வேல்விழியாள் உடன்வித்தாள்! துடித்தெழுந்தாள்!
பாலையுண வேண்டுமெனப் பாலகன் தான்
பதறுமன்றோ?என நினைத்தாள் பாய்மேற்பாலன்
காலைமெல வருடினாள் கமலப் பூபோல்
கண்விரித்துக் காலையுதைத் தெழுந்தான் பாலன்!

2.
முகத்தைமெல முத்தமிட்டாள்! ராசா வென்றாள்!
முத்தம்பின் முத்தமிட்டு முறுவலித்தாள்!
அகத்தினிலே அணைகடந்த அன்பின் வெள்ளம்
அமுதமாய் மார்பிடையே சுரக்கவஃதை
அகம் குளிரப் பசிதீர உடல்வளர
அருந்தட்டும் குழந்தையென அணைத்துக் கொள்வாள்!
முகம்மலர வாய்குவித்துச் சிரத்தையோடு
முழித்தவண்ணம் பாலகந்தான் பருகுகின்றான்!

3.
அன்னையுளம் அழகிய பூங்கனவுபல
அரும்பிவரும்! சின்னவந்தப் பாலகன்தான்
மன்னவன்போல் மல்லார்ந்த புயத்தனாகி
மணஞ்செய்து மக்கள்பல பெற்று வேண்டும்
பொன்னோடும் பூணோடும் சிறக்க வாழ்வான்!
பொறாமைப்பேய் உறவினரை விழுங்கும் உண்மை!
என்னென்ன நினைவெல்லாம் என்மனத்தே!
எனநினைந்து தன்னுள்தான் வெட்கிக்கொள்வாள்!

4.
பால்குடித்துமுடிய அந்தக் குழந்தை இன்பப்
பசுமுகத்தில் பால்வடியக் கலகலென்று
மால்தீர உளத்துன்ப மாசு ஓட
மனங்குளிரச் சிரித்துத்தன் கையை ஆட்டி
காலையுதைத் திருள் தீரும் காட்சி நல்கும்!
காரிகை மனத்தின்பம் சீறிப் பொங்கும்!
நாலைந்து முத்தமந்த வெறியிற் கொட்டி,
நங்கைதன் வேலைக்குக் கிளம்புகின்றாள்!

5.
பானையிலே தண்ணீரில இட்டிருநத
பழயதனை எடுத்தே உண்டுமிஞ்ச
மானைநிகர் கண்ணாள் தன் மணவாளர்க்கு
மற்றதனை வைத்துவிட்டு விரைந்து சென்று
கானகத்து மூங்கிலிலே வேய்ந்த கூடை
கழுத்தினிலே பின்புறமாய்த் தொங்கவிட்டு
தானெழுந்து விரைவாள் தன் வேலைக்காடு!
தன் கண்ணின் ஓரத்தைத் துடைத்துக்கொள்வாள்!


முன்னேற்றச் சேனை!

- அறிஞர் அ.ந.கந்தசாமி 'கவீந்திரன்' என்னும் புனைபெயரிலெழுதி 'பாரதி' இதழில் வெளிவந்த இன்னுமொரு கவிதையிது. -

1.
முன்னேற்றச் சேனை ஒன்று மூவுலகும் வாழ்ந்திட
மூடத்தனம் யாவு நிர் மூலமாகி வீழ்ந்திட
முன்னேறிச் செல்லுகின்ற முகூர்த்தம் இஃது தோழர்காள்
முடியரசும் முதலரசும் முடிந்து பொடியாகுது!
பின்னேற்ற பேரெல்லாம் விழி பிதுங்குகின்றனர்
பீடைகட்கு முடிவு வந்ததே யென்று கவல்குனர்!
இன்னாளை போலொருநாள் இன்று வரையில்லையே
இத்தருணம் எழுந்திடுக, எங்கள் சேனை சேர்ந்திட!

2.
எங்கள் சேனை அச்சமென்பதென்றுமறியாதது.
எட்டுத் திக்கும் அதன் ஒலியே முட்டி முழங்குகின்றது!
மங்கி நிற்கும் பாசிசத்தை மண்ணிடத்தே புதைத்துப் பின்
மரண கீதம் பாடும் வரை ஓய்வதற்கு இல்லையே!
எங்கும் அடிமை சுரண்டல் என்னும் பிசாசுதீய்ந்து மாய்ந்து
இவ்வுலக மக்களெல்லாம் ஒரு சமானமாகினால்
துங்கமான எம்படையின் வெற்றி அதுவாகுமே!
துகளிலாத புது உலகம் தோன்றல் வேண்டும் என்பமே!

3.
ஒளி மிகுந்த அப்புதிய லோகத் தன்மை கேட்பீரே!
ஒரு வறுமை ஓலமில்லை ஒரு கவளம் உணவிற்காய்
விழுவதில்லை அங்கு மாதர் விபசாரக் குழியுளே!
விளையு நாட்டுத் திறமை ஒன்றும் வீணாய்ப் போவதில்லையே!
அழகு கலை என்பதெல்லாம் ஒரு கூட்டம் செல்வரின்
ஆடம்பர அலங்காரம் அல்ல அங்கு சோம்பலின்
விளைவதன்று மக்களது உயர்ந்த செல்வம் கலை என
விளங்கு மக்கள் வாழுகின்ற புதியலோகம் வாழ்கவே!

4.
அடிமையது அழுகையோடு ஆண்டையது அதட்டலும்
அங்கெழுந்துமறைந்ததுவே! வியர்வைவெள்ளம் பாய்ச்சித்தன்
உடலதனை எருவதாக்கி விளைவுசெய்து பின்னரும்
உணவிலாது மடிந்தொழியும் ஊமை மகன் இல்லையே!
படியில் நாடு தம்மிடையே பதுங்கிச் சுரண்டல் என்பது
பழங் கதையாய் இருக்கும் அந்தப் புனிதலோகம் தோற்றிடும்
கடமை தாங்கி எழுந்து செல்லும் சேனைதன்னை வாழ்த்துவோம்!
காளையீர்! நீரும் அந்தச் சேனையோடு சேருவீர்!

நன்றி: 'பாரதி' சஞ்சிகை.


துறவியும் குஷ்டரோகியும்!

- அ.ந.கந்தசாமி -

காலையிருள் வெளிறிவந்து புலர்ந்த போது
கடல்வரைப்பில் கதிரவனின் ஜோதி தோன்றிச்
சோலையிருள் கடிந்தெங்கும் விளங்கும் போது
சொர்ணவொளிக் கிரணம்திசை பாய்ந்த போது
சாலைவழிச் சன்மார்க்கச் சன்னி யாசி
சகப்பெரியான் புத்தனுரை பேணி வாழும்
மேலனாம் காசியபன் ஓடொன் றேந்தி
மெல்லவடி வைத்துநன்று சென்ற போது

வழியங்கும் விழிநோக்கி இருந்த செல்வர்
வட்டிலிலே உணவுகொண்டு காத்திருந்தார்!
விழிதம்மைப் பக்கலிலே செலுத்தா தன்னோன்
விரைவாகச் சிம்மம்போல் நடந்து சென்றான்!
வழியினிலே ஒர்ஏழை நைந்த ரோகி
வடிவுடலம் குஷ்ட்டத்தால் அழுகித் தொங்கும்
அழிவுடலை தின்னுமந்த ரோகி கண்டு
அன்புமழை பொழிந் திடுதற் கங்குசென்றான்.

ஏழையவன் என்புடலில் உடனே யேதோ
ஓர்முறுக்கு ஏறிவிடக் கண்க ளென்னும்
பாழினிலே ஒளி பாய்ந்து பதுமமாகப்
பதைபதைத்துப் பார்த்தனன் பார்த்த போது
காளையருள் கண்ணொழுகக் கையிலோடு
காட்டி ஊன விரந்ததனைக் கண்டான்! கையில்
பேழையிலே கையை விட்டான் அங்கு சேர்ந்த
போசனத்தைப் பெருக அள்ளி ஓட்டிலிட்டான்!

உணைவையிடும் போதங்கு குஷ்ட நோயால்
உக்கி உணர்விழந்திருந்த விரலில் ஒன்று
பிணக்கமுற்று ஓடு தன்னில் வீழந்தந்தப்
பீடைதனைக் கண்டனன், கண்டபோது
கனமுனிவன் சாந்த முகம் மாறாதந்த
கையில் விரலெடுத்ததனை மெல்ல நீக்கி
மனதினிலே ஒரு சிறிது மாசுமின்றி
வாயினிலே மெல்லமெல்ல அள்ளி உண்டான்.

புல்லுணவை நல்லுணவாய் ஏற்றதனை
புத்தமிர்தமாய் மதித்துப் புசித்தான் ஏழை
நல்லவிரு நண்பன் இந்தமுனியிற் கண்டான்!
நானிலத்தில் விஷமாகும் தனிமை என்னும்
கொல்லுகின்ற வியாதியஃது போயொழியும்
கொண்டனவன் பெரிய இன்பம் குவலயத்தில்
இல்லை இதுபோலில்லை இல்லை என்று
எண்ணி எண்ணி களிக்கடலில் மூழ்கிவிட்டான்.

[ சுதந்திரன் ஜனவரி 14, 1951.


வள்ளூவர் நினைவு!

- அ.ந.கந்தசாமி -

வள்ளுவனார் செய்திட்ட நிறைநூலைப் போற்றி
வாழ்த்தெடுக்க வந்திட்டேன் வன்கவிஞர் மன்றில்
தெள்ளுதமிழ்த் தீங்கவிதைத் தேனமுதம் நல்கும்
தெவிட்டாத நடராசர் கவியரங்கின் தலைவர்
விள்ளுகவி கேட்டோம்; பிறர்கவியும் கேட்டோம்
வேலணையூர் வீசுபுகழ் தொல்காவியல் மன்றில்
வள்ளுவனார் புகழ்பாட வாய்த்ததொரு வாய்ப்பு
வாய்ப்பளித்த பண்டிதர்க்கு என்னுளத்தின் வாழ்த்து.

பாட்டாலே உலகத்தைக் கவர்ந்திட்ட பேரில்
பைந்தமிழர் தம்மிடையே வள்ளுவர்போல் யாரே?
பாட்டாளிக் கவிஎனவே அன்னவனைப் போற்றி
பரவிடுவேன் அதற்கும்பல் ஆதாரம் சொல்வேன்
நாட்டினிலே மிகச்சிறந்த நெசவென்னும் கலையை
நற்றொழிலாய்க் கொண்டிட்ட கவியரசர் கோமான்
பாட்டாக வடிவெடுத்தான் அநுபவத்தின் கோர்வை
பாரெல்லாம் போற்றுததைத் தமிழ்வேதம் என்றே.

மதங்களினை அடிப்படையாய்ப் பிறபுலவர் கொள்ள
மன்னுலக வாழ்வைமட்டும் வள்ளுவனார் கொண்டார்
விதவிதமாய் வீடென்றார் மோட்சமென்றார் மற்றோர்
வீரமிகும் வள்ளுவனார் அறம்பொருளோ டின்பம்
­தமாக ­ல்வாழ்வில் காணுமிவை மூன்றும்
­னிமையுள முப்பால்நூல் எற்றியுரைத்திட்டார்
­துநல்ல மாற்றமென ­ங்கெடுத்துச் சொல்வோம்
­வர்குறளைக் கைஏந்தி ­வ்வுலகை வெல்வோம்.

வறுமையினை ஒழித்திடுதல் வேண்டுமெனும் நெஞ்சம்
வள்ளுவனார் கொண்டிருந்தார் என்பதையார் ­ங்கே
வெறுமொழிஎன் றியம்பிடுதல் கூடுமிதோ பாரீர்
வேந்தரது அரண்சிறப்புச் சொல்லவந்தபோது
1"உறுபசியும் பிணிநோயும் செறுபகையும் சேரா(து)
உற்றிடுதல் ஒன்றல்ல நா"டென்று கேட்டார்
பெரும்பசியை முதற்குற்ற மெனஎடுத்துச் சொன்னார்
பெரும்புலவர் வள்ளுவனார் ஏழைகளின் தோழன்.

வள்ளுவனார் வழிவந்த பாரதியார் சொன்னார்
2"வையத்தை அழித்திடுவோம் தனிமனிதன் ஒருவன்
உள்ளநிறை வோடுண்ண உணவில்லை என்று
உளம்வருந்து வானாயின்" என்பதவர் பாட்டு.
வள்ளுவர் தாமும்பல் லாண்டுகட்கு முன்னர்
வழுத்தினார் ­தன் பொருளை ஆவேசத்தோடு
3"தள்ளுவதோ வாழ்க்கையினைப் பிச்சைஎடுத் திங்கே?
அவிவிதமேல் சாய்காந்த ஆண்டவனும்" என்றார்.

நெசவுசெயும் தொழிலாளி நேர்மையுள நெஞ்சன்
செய்திட்ட நிறைநூ லில் பெய்திட்ட எண்ணம்
­சைவுடனே காலத்தை வென்றிங்கு வாழும்!
எல்லைகளைக் கடந்திங்கு உலகெல்லாம் சூழும்!
திசையெல்லாம் கேட்கட்டும் திருக்குறளின் கோஷம்!
தீரட்டும் ஓயட்டும் தீயர்வெளி வேஷம்!
­சைநூலை நாமிழந்தோம் நாடகமும் ­ழந்தோம்
ஏதிழந்தா லுமிந்தக் குறளொன்று போதும்.

கடலெழுந்து விம்மியது காவிரியின் நீரில்
கடல்வெள்ளம் கலக்கின்ற புகாரென்னுமூரில்
கடலுண்ட தய்யாநம் கற்கண்டுத் தமிழை
கணக்கில்லா நூல்கலெள்ளாம் கடலோடு போச்சு!
கடலுக்குத் தமிழினிமை தெரிந்ததனால் வந்த
காரியமோ யாமறியோம்! செந்தமிழர் நாட்டுக்
கடலன்றோ கவியமுதின் சுவைதெரிந்த தென்று
கவிராயர் சொலக்கூடும்! சத்தியமும் அதுவோ?

நீருண்ட ­வைபோக ­ருப்பதெல்லாம் எச்சம்
நெருப்போடு கறையான்கள் உண்டவற்றின் சொச்சம்
பாரிடத்தே பைந்தமிழின் நூலெல்லாம் சேர்த்துப்
பஷ்மீகர மானாலும் குறளென்னும் சொத்து
ஊரிடத்தே எஞ்சிநின்றால் அஃதொன்று போதும்
உற்றகுறை எங்களுக்கு ­ல்லை ­வன் யாதும்
நேரில்லா வள்ளுவனார் குறள்வாழ்க வாழ்க
நிறைநூ லின் கருத்திந்த உலகெல்லாம் சூழ்க.

கலைக்காகக் கலைஎன்று கதறுபவர் உண்டு
கருத்துக்கே முதன்மை தரும் வள்ளுவனார்கண்டு
கலை­ந்தச் சமுதாய வளர்ச்சிக்கே என்று
கருத்துடையார் உணரட்டும் காசினியில் அன்று
விலையில்லாத் திருக்குறளைத் தந்திட்ட மேதை
வியனுலகில் காட்டுகின்றார் பாதையதே பாதை.
கலைஞர்களே எழுந்திடுங்கள் வள்ளுவனார் காட்டும்
கவினுடைய பாதையிலே பேனாவை ஓட்டும்.

செந்தமிழர் நாட்டுக்குப் புகழ்தருமோர் நூலின்
சிறப்புசில எடுத்துரைத்தேன் என் அறிவில் பட்ட
பைந்தமிழ்நற் கருத்துக்களைப் பகர்ந்துள்ளேன் ­ங்கு
பகர்ந்தவற்றில் கொள்வதனைக் கொள்வீர்கள் மற்ற
நொய்ந்திட்ட கருத்துக்களை நோயென்று தள்ளீீர்
நுவலரிய புகழ்பெற்றாள் தமிழன்னை பெற்ற
மைந்தர்களே மாநிலத்தில் குறள்புகழைப் பாடி
மகிழ்ந்திடிவீர் நீவிரிங்கு நீடூழி வாழி.

-வேலணையூர்த் தொல்காவிய மன்றில் நடைபெற்ற தமிழ்மறை விழாக் கவியரங்கில் அ.ந.கந்தசாமி பாடியவை.-


நகரம்!

- அ.ந.கந்தசாமி -

நகரத்துக் கூச்சலெல்லாம் நடுத் தெருவினிலே மோதிப்
பகர்தற்கு பிரியதான குழப்பத்தை உண்டுபண்ணும்
சகலர்க்கும் ஏதோ இந்த 'சட்டுப்புட்' அவசரந்தான்
அகலக் கால் வைத்து அங்கு மாந்தர்கள் பாய்கின்றாரே!

அப்பப்பா! மனிதர் தம்மில் ஆயிரம் வகைகள் உண்டோ!
தொப்பிக்குள் புகுந்திருப்போர் தொந்திகள் பருத்தோர்மற்றும்
சப்பாத்துக் காலர் நல்ல சால்வைகள் தரித்தோர் என்று
எப்படி எல்லாம் எங்கள் இனத்தினில் மாறுபாடு?

பெண்களைப் பற்றி எம்மால் பேசிடப்போமோ? சில்லோர்
கண்களை மறைக்கும் நீலக் கண்ணாடி தரித்தோர் கையில்
வண்ண நற் குடையர் சேலை வனப்புற அணிந்தோர் தங்கள்
பொன் மேனியால் குமரர் புத்தியும் இழந்து போனார்.

ட்ராமோடும் பஸ் ஓடும் காரோடும் சைக்கிள் ஓடும்
ட்ராமோடத் தாமோடி ஏறுவர் சில்லோர் நல்ல
தாமரை முகமொன்றந்த ட்\ராமிலே தளிர்க்க அ·தை
காமனின் அம்பு தாக்கக் களிப்பொடு பார்ப்பார் சில்லோர்

ரிக்ஷாக்கள் என்னுமந்த மனிதரைப் பூட்டி ஓட்டும்
ஜட்காக்கள் தாமும் ஓடும் சந்திகள் தம்மில் கார்கள்
உட்கார்ந்து விடும்கொடிய ட்ரபிக்ஜாம்கள் என்று சொல்வார்.
கட்பார்வைக்கு எங்கும் கும்பல் குழப்பமே! கூச்சல்தானே!

நகரத்தில் கனத்தொகைக்கு நலிவில்லை இருந்த போதும்
அகத்தினைத் திறந்து பேச ஆட்கள் இல்லைப் பார்த்தால்
வகை வகை மரம் வளர்ந்து மண்டிய காடும் போல்தான்
நகரத்தின் பண்பு இங்கே மனிதப் பண்பில்லை யம்மா!

காற்றிலே தூசு சேரும் கட்டுடல் வெயர்வை சேரும்
நூற்றிலே ஒருவரில்லை அடுத்தவர் நினைவு கொள்ளல்
நாற்றம் சாக்கடையைச் சேர நற்கொசுக் கூட்டம் மண்டி
தூற்றலைப் போல் சுருதி ஒன்றினை எழுப்பும் காணீர்!

சிற்றிடை மாதரர்கள் சிகை அலங்கார மென்னே!
கற்றை போல் பாம்பைப்போல் கரியதோர் மதியைப் போல்
புற்றைப் போல் புதரைப் போல் புதுப்புது மோஸ்தரெல்லாம்
கற்ற காரிகையர் செய்கை கணக்குக்கும் அடங்குமோதான்!

செல்வத்தின் செழிப்பு ஓர்பால் தீயதாம் வறுமை என்னும்
கொல்புலி வாயிற்பட்ட கும்பலோ மறு பக்கத்தில்
பல்விதப் பண்பும் சேர்ந்து கணமேனும் அமைதிப் பண்பு
நல் விதம் தோன்றா இந்த நகரம் கொல் நர கமாமே!

சுதந்திரன் மார்ச் 18, 1951


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
 வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here