29-ம் அத்தியாயம் மர்மக் கடிதம்!

29-ம் அத்தியாயம் மர்மக் கடிதம்!தொடர்நாவல்: மனக்கண் - அ.ந.கந்தசாமி -சுரேசும் தாயும் சொன்ன விவரங்களால் ஸ்ரீதரின் உள்ளம் இப்பொழுது சுசீலாவைச் சுற்றிப் படர்ந்தது. "என்னே அவள் தியாகம், அவள் அன்பு. முறிந்து சரிந்த என் வாழ்க்கைக்கு அன்று அவள் மட்டும் துணிந்து முட்டுக் கொடுக்க முன் வந்திருக்காவிட்டால், நான் இன்று உயிருடன் இருப்பேனா? அப்பா நினைத்தது போல் பத்மாவைப் பலாத்காரமாகத் தூக்கி வந்து எனக்கு மனைவியாக்கியிருந்தால்... சீ அதுவும் ஒரு கல்யாணமா? அதை விட எனக்கு வேறு நரகம் வேண்டியிருந்திருக்குமா?" என்று பல விதமான சிந்தனைகள் சங்கிலித் தொடர் ஒன்றின் பின்னொன்றாக நகர்த்து வந்தன. அன்னையின் பேச்சுகளைக் கேட்ட ஸ்ரீதர் "அம்மா நான் சுசீலாவுக்கு எவ்வளவு அநியாயம் செய்துவிட்டேன். மோசக்காரி - உன்னை நான் வெறுக்கிறேன் என்று அவளைப் பார்த்து நான் எத்தனை தரம் வாய் கூசாது கூறியிருக்கிறேன். பொறுமைக்குப் பூமாதேவியை உதாரணம் சொல்வார்கள். ஆனால் அம்மா சுசீலாவைப் போல் பொறுமைக்காரியை நீ கண்டதுண்டா?" என்றான்.

பாக்கியம், "ஆம், ஸ்ரீதர். சுசீலா சாதாரண பெண்ணல்ல. அன்பின் உருவம். தியாகமே உருவானவள். இந்த ‘அமராவதி’யின் அதிர்ஷ்டத்தினால் இங்கு வந்து சேர்ந்தவள். ஆனாலும் உன்னைப் பொறுத்தவரையில் உனக்குப் பத்மா மீது தானே இன்றும் உண்மை ஆசை? அதனால்தானே இன்னும் சுசீலாவைப் பத்மா என்று அழைக்கிறாய்" என்றாள்.

ஸ்ரீதர் "இல்லை அம்மா, நான் என்ன செய்வேன்? பத்மாவின் மோசடி முன்னரே எனக்குத் தெரிந்திருந்தால் நான் அவளைத் தொடர்ந்து நேசித்திருப்பேனா? இனி மேல் பத்மா என்ற பேச்சையே எடுக்க வேண்டாம். அந்தச் சொல்லே என் காதில் விழ வேண்டாம். நான் அவளை வெறுக்கிறேன். இனி மேல் சுசீலாவே எனக்கு எல்லாம். பேராசிரியர் நோர்த்லி எனக்குக் கண்களைத் தந்ததும் என் ஊனக் கண்களுக்கு முன்னால் சுசீலா வந்தாள். அவளை அந்த உருவில் நேசிக்க முடியாததால் என் கண்களை நான் அன்று குத்திக் கொண்டேன். பார்வையை இழந்த என் மனக்கண்ணில் அவள் பத்மாவானாள். ஆனால், அந்தோ, நான் எத்தகைய மடையன்? என்னை ஆசை காட்டி மோசம் செய்தவளுக்கு என் மனக் கண்ணிலே இடம் கிடைத்ததே. ஆனால் அந்த மனக்கண்ணுக்கு அப்பாலும் ஒரு மூன்றாவது கண் இருப்பது போலல்லவா இப்பொழுது தோன்றுகிறது. அந்தக் கண்ணிலே இன்று சுசீலாவை நான் காண்கிறேன். அங்கு அவள் ஓர் ஒளிப்பிழம்பாகக் காட்சியளிக்கிறாள். சீதை, சாவித்திரி, நளாயினி, கண்ணகி போல அவள் அங்கே நடமாடுகிறாள்..."

பாக்கியம் மகனின் மன மாற்றத்தைக் கண்டு மகிழ்ச்சியடைந்தாளாயினும், சுசீலாவின் மீது அவள் கொண்ட பச்சாத்தாபத்தினால் அவன் உள்ளம் கவலையுற்றுக் கலங்குவதைக் கண்டு மனம் வருந்தினாள். சுரேஷைப் பார்த்து "வா சுரேஷ். இப்பொழுது ஸ்ரீதருக்கு எல்லாம் தெரிந்து விட்டது. நாங்கள் உள்ளே போய்ச் சுசீலாவை அனுப்புவோம். இருவரும் பேசிக் கொள்ளட்டும்." என்று கிளப்பினாள். பாக்கியம் முரளியைத் தூக்கிக் கொண்டு முன்னே நடக்க, சுரேஷ் அவளைப் பின் தொடர்ந்தாள்.

சுசீலா ஸ்ரீதருக்குச் சமீபமாக வந்து உட்கார்ந்தாள். "என்ன என்னை அழைத்தீர்களா?" என்றாள் அவள்.

"ஆம், சுசீலா உன்னை அழைத்தேன். உன்னுடன் பேச வேண்டும்." என்றான் ஸ்ரீதர்.

"என்ன, சுசீலாவா? புதுமையாயிருக்கிறதே. ஏன் என்னை வழக்கம் போல் பத்மா என்றழைக்காமல் சுசீலாவென்றழைக்கிறீர்கள்?" என்றாள் அவள் ஆச்சரியத்துடன்.

"சுசீலா, இனிமேல் நான் உன்னைப் பத்மா என்றழைக்க மாட்டேன். பத்மா என் இதயத்திலிருந்து அஸ்தமித்துவிட்டாள். சுசீலாதான் இனி எனக்கெல்லாம். சுரேசும் அம்மாவும் எல்லா விஷயங்களையும் சொல்லிவிட்டார்கள். சுசீலா நீ அல்ல மோசக்காரி, பத்மா தான் மோசக்காரி. நீ என் அன்பின் தெய்வம். ஆசைக் கொழுந்து, வாழ்க்கையின் விளக்கு"

அதற்கு மேலும் ஸ்ரீதரின் வார்த்தைகளை அவளால் கேட்டுக் கொண்டு நிற்கமுடியவில்லை. உணர்ச்சிப் பெருக்கிலே அவள் மனம் உடைந்தது. விழிகள் ஆனந்தக் கண்ணீர் பெருக்கின. வாழ்க்கையின் பேற்றை அடைந்துவிட்டது போல, பரம ஏழை ஒருவன் பெரும் பொக்கிஷத்தைப் பெற்றுவிட்டது போல இன்பத்தின் உச்சக் கட்டத்தை அடைந்தாள் அவள்.

"சுசீலா..." அவர் அந்த வார்த்தைகளைச் சொல்லும் போது எவ்வளவு இனிமையாயிருக்கிறது. இது போன்ற இன்பம் இவ்வுலகில் வேறு யாருக்குக் கிடைக்கும்" என்று இன்பத் திகைப்பிலே மயங்கி நின்றாள் அவள்.

ஏறக்குறைய இரண்டு நீண்ட வருடங்களாகச் சுசீலா இவ்வுலகில் இறந்து போயிருந்தாள். அப்பெயரே மறக்கப்பட்டுப் போயிருந்தது. உண்மையில் அது தன்னை நிலத்துள் உயிருடன் புதைந்தது போன்ற உணர்ச்சியைச் சுசீலாவுக்கு அளித்து வந்து கொண்டிருந்தது. சகிக்க முடியாத அந்தத் துன்பத்தை அவள் சகித்து வந்தது ஒரே ஒரு காரணத்தை முன்னிட்டுத் தான். ஸ்ரீதர் வாழ்க்கைக்கு இன்பம் அளித்து வந்தால் போதும் என்பதே அது. அதற்காகவே எவராலும் செயற்கரிய அந்தத் தியாகத்தைச் செய்து வந்தாள் அவள். அதனால் ஏற்பட்ட வேதனையைத்தான் பற்களைக் கடித்துக் கொண்டு பொறுத்து வந்தாள். ஆனால் இன்று மறுபடியும் அவளது சொந்தப் பெயர் அவளிடம் மீண்ட போது எல்லையற்ற இன்ப உணர்ச்சி அவளுக்கு ஏற்பட்டது. நிலத்தில் புதையுண்டு கிடந்த அவள் பழையபடி வெளியே வந்து விட்டாள். வந்ததும் நெஞ்சை அகல விரித்து, பிராண வாயுவை முழு மூச்சாக இழுத்து எல்லையற்ற பூரிப்படைந்தாள் அவள்.

சுசீலா ஸ்ரீதரை நோக்கி "இப்பொழுதாவது உங்களுக்கு உண்மை தெரிந்ததே, அது போதும். எங்கே உங்கள் வாழ்க்கை முழுவதுமே இது தெரியாமலே போய்விடுமோ என்று அஞ்சினேன். ஆனால் நான் அதிர்ஷ்டக்காரி. எந்த அனுபவத்துக்காக நான் ஏங்கித் தவங் கிடைந்தேனோ, அதை நான் பெற்றுவிட்டேன். என்னைச் சுசீலா என்று இன்று உங்கள் வாயால் அழைத்தீர்களே, அதை நான் ஒரு போதும் மறக்க மாட்டேன். இந்த அனுபவத்தைப் பெற்ற நான் இப்போதே இறந்துவிட்டாற் கூடப் பரவாயில்லை. என் வாழ்க்கை மலர்ந்து விட்டது." என்றாள்.

ஸ்ரீதர் சுசீலாவைத் தன் கரங்களால் அணைத்துக் கொண்டான். தன் காதலியை அன்று தான் வாழ்க்கையில் முதல் முதலாகச் சந்தித்து அவளது அன்பு மொழியைப் பெற்ற ஒரு காதலன் என்ன நிலையில் இருப்பானோ, அந்த நிலையில் ஸ்ரீதர் இருந்தான் அப்பொழுது. "சுசீலா, நீயே என் உயிர். உன்னை நான் ஒரு போதும் பிரியேன்." என்று ஆயிரம் தடவை கூறிவிட்டான் அவன்.

சுசீலாவைப் பொறுத்தவரையில் ஸ்ரீதரின் அணைப்பையும் ஆலிங்கனங்களையும் அவள் தினசரி அனுபவித்து வந்தாளாயினும், இது வரை பத்மா என்ற எண்ணத்திலும் பாவனையிலுமே அவை அவளுக்குக் கிடைத்தனவே அல்லாமல், சுசீலா என்பதற்காக ஒரு முத்தம் கூட ஸ்ரீதர் அவளுக்கு அளித்ததில்லை. உண்மையில் இன்று தான் சுசீலா முதன் முதலாக ஸ்ரீதரின் அன்புக்கும் அணைப்புக்கும் ஆளானாள். பார்க்கப் போனால் இன்று தான் அவளது முதலாவது காதலனுபவம் என்று கூடச் சொல்லலாம்.

ஸ்ரீதரும், சுசீலாவும் தம்மை மறந்து இவ்வாறு வீற்றிருந்ததைப் பாக்கியம் முரளியுடன் வீட்டு விறாந்தையில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். ஸ்ரீதர் வாழ்க்கையின் பெரிய புதிரொன்று விடுபட்டுச் சுசீலாவும் ஸ்ரீதரும் முன்னிலும் நெருங்கிய அன்பு கொண்டவர்களாகியதைக் கண்டு அவளுக்கு அளவில்லாத மகிழ்ச்சி.

ஸ்ரீதர் "சுசீலா, இன்று உலகிலேயே என்னைப் போல் சந்தோஷமானவன் யாரும் கிடைக்கமட்டார்கள். ஆனால் ஒரே ஒரு வேதனை. எந்தச் சுசீலாவைப் பார்க்க மாட்டேன் என்று என் கண்களை நான் அன்று குத்திக் கொண்டேனோ அந்தச் சுசீலாவை மீண்டும் காணத் துடியாய்த் துடிக்கிறேன் நான். ஆனால் அது முடியக் கூடிய காரியமா, என்ன? எனக்குக் கண் வேண்டும். சுசீலா, கண் வேண்டும். உன்னைக் காணக் கண் வேண்டும்" என்று கதறினான்.

சுசீலா சுரேஷிடம் பேசினாள். "சுரேஷ், ஸ்ரீதருக்கு மீண்டும் கண் பார்வை வேண்டுமாம். அவருக்கு மறுபடியும் கண் பார்வையைத் தருவது சாத்தியமா? சாத்தியமானால் அதற்கு உடனே ஏற்பாடு செய்யுங்கள்" என்றாள்.

சுரேஷ் "அது விஷயமாக நாளை கண் டாக்டர் நெல்சனுடன் கலந்தாலோசிப்போம்" என்றான்.

ஸ்ரீதரின் வாழ்க்கையனுபவங்களைக் கண்டு அவனுக்காக இரங்கிய உள்ளங்கள் இவ்வுலகில் பலவாயினும், அவற்றில் ஓர் உள்ளம் உண்மையில் அவனுக்காக மற்றெல்லா இதயங்களிலும் பார்க்க அதிகமாகத் துடித்துக் கதறிக் கொண்டிருந்தது. அது தான் அவனது தந்தை சிவநேசரின் இதயம். ஒரே மகன். அதிலும் சகல சிறப்புப் பண்புகளும் வாய்க்கப் பெற்ற உத்தம புத்திரன், எப்படியெல்லாமோ வாழ்க்கையைச் சுவைத்து ஆடம்பரமாக வாழ வேண்டியவன், நாடெல்லாம் போற்றச் சமுதாயத்தின் நடு நாயகமாய் நிற்க வேண்டியவன், இன்று அந்நிலையை எய்தாதது மட்டுமலல், மனிதனின் பஞ்ச புலன்களில் மிகச் சிறந்ததெனக் கருதப்படும் கண் பார்வையை இழந்து, அதன் பயனாக மூலையில் வைக்கப்பட்ட முத்தாகிவிட்டான். சிலம்புள் இடப்பட்ட இரத்தினக் கல் சப்தத்தின் மூலம் உலகத்தால் அறியப்பட்டாலும் அதன் ஒளியை யாரும் அறிய முடிவதில்லையல்லவா? ஸ்ரீதரின் நிலையும் அப்படியே ஆகிவிட்டது. வையத்துக்கு ஒளி வீசி ‘அமராவதி’க்கு அழியாது சிறப்புத் தர வேண்டிய அந்த வைரமணி துணையின்றி வீதியில் நடக்க முடியாத அந்த வாழ்வுக்கு ஆளாகிவிட்டான். இதை நினைத்தால் எவருக்கும் துயர் ஏற்படுமாயினும், சிவநேசருக்கு ஏற்பட்ட துன்பமோ அத்துடன் அமையவில்லை.

ஸ்ரீதரின் துயரம் கண் பார்வை இழப்பு மட்டுமல்ல - காதலின் தோல்வியுமல்லவா? இன்னும் மீண்ட கண் பார்வையைக் கூட அவன் இரண்டாவது தடவையும் அழித்துக் கொண்டான். இச்சம்பவங்கள் யாவற்றிலும் தன் பங்கு மிகப் பெரியது என்று சிவநேசர் நினைத்ததே அவரது துயருக்கு ஓர் எல்லைக் கோடே இல்லாமல் செய்துவிட்டது. அவர் துயரம் எல்லை தெரியும் குளம் போல அமையவில்லை. கண்ணுக்கு எட்டிய தொலைவுக்கு முடிவற்றுத் தெரியும் அலை கடல் போன்ற பெரும் துன்பம் அவர் உள்ளத்தைக் கெளவியிருந்தது.

"ஸ்ரீதர்! அவன் பத்மாவை மணக்க விரும்பிய அந்த நேரத்தில் நான் அதற்கு எதிர்ப்பேச்சுப் பேசாமல் சம்மதித்திருந்தால் நிச்சயம் ஸ்ரீதர் - பத்மா திருமணம் சிறப்பாக நடந்திருக்குமல்லவா? ‘அமராவதி’யிலும் கொழும்பிலுமாக ஊரே வியக்கும்படி எட்டு நாள் திருமண விழா நடத்தியிருக்கலாம். ஆனால் நான் அதை அப்பொழுது எதிர்த்தேன். இதற்கிடையில் அவனும் கண் பார்வையை இழந்தான். பத்மாவும் அவளைக் கை விட்டாள். இதனால் அந்தப் பெண் மீது எனக்கு ஏற்பட்ட சினம் கொஞ்சமல்ல. ஆனால் யோசித்துப் பார்த்தால் அவள் நினைத்ததும் சரி தானே? குருடனுக்கு மனைவியாக யார்தான் விரும்புவார்கள்? இருந்தாலும் நான் மட்டும் ஸ்ரீதர் - பத்மா திருமணத்திற்கு எனது சம்மதத்தைத் தருவதில் தாமதம் செய்திருக்காவிட்டால், அத்திருமணம் நிறைவேறியே இருக்கும். கல்யாணத்துக்குப் பின் அவன் கண்களை இழந்திருந்தால் அந்தப் பெண் நிச்சயம் அதனைப் பொறுத்து வாழ்ந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

"எனது தாமதம் அந்தோ, ஸ்ரீதர் வாழ்க்கையைச் சீர்குலைத்தது. அதனால்தான் சுசீலாவின் ஆள் மாறாட்ட நாடகத்தை நாம் நடத்த வேண்டி ஏற்பட்டது. பார்க்கப் போனால் ஸ்ரீதர் ஒரு வகையில் அதிர்ஷ்டசாலி என்றே கூற வேண்டும். இல்லாவிட்டால் சுசீலா போன்ற அன்பும் பண்பும் அறிவும் அழகும் கொண்ட ஒரு பெண் குருடனான அவனைத் திருமணம் செய்ய முன் வந்திருப்பாளா? ஆனால் இந்த ஆள் மாறாட்டத்தை நாம் நடத்தியதால் அல்லவா அவன் இரண்டாவது தடவையும் குருடனானான்? தன் கண்ணைத் தானே குத்திக் கொண்டான்? இதற்கெல்லாம் மூலக் காரணம் பத்மாவைத் திருமணம் செய்ய வேண்டுமென்று அவன் கேட்டபோது நான் அதற்கு இசையாததலல்லவா? இல்லாவிட்டால், நோயினால் அவன் முதலில் கண் பார்வையை இழப்பதை யாராலும் தடுத்திருக்க முடியாவிட்டாலும் இரண்டாவது முறை அவன் கண் பார்வையை இழந்திருக்கும் நிலை ஒரு போதும் ஏற்பட்டிருக்காது. ஆகவே, இன்று அவன் கண் பார்வையற்றுக் கபோதியாய் இருப்பதற்கு நானே பொறுப்பாளி, நானே பொறுப்பாளி"

இவ்வாறு சிந்தித்து வாடிய சிவநேசர் எந்நேரமும் ஸ்ரீதரின் நிலையைப் பற்றியே எண்ணி எண்ணிக் கவலைப்பட்டதில் ஒருவித வியப்புமில்லை. ஆனால் சிவநேசர் இவ்வாறு பெருங்கவலைக்காளாகியிருந்தார் என்பதற்காக மற்றவர்களின் துயரை நாம் குறைவாகக் கருதிவிடக் கூடாது. தாய் பாக்கியம், மனைவி சுசீலா, நண்பன் சுரேஷ் ஆகியோரும் கவலைப்படவே செய்தனர். ஆனால் ஸ்ரீதரின் துயருக்கே காரணமானவர் தான் என்பதால் சிவநேசர் அனுபவித்து வந்த துன்பம் சற்று அதிகமாகத் தானிருந்தது.

புத்திர பாசத்தால் ஏற்பட்ட இத்துயரம் சிவநேசரின் போக்கிலேயே பெரிய மாற்றத்தை ஏற்பட்டுவிட்டது. அவரது அகம்பாவமும் மிடுக்கும் அதி மனித மனோபாவமும் இப்பொழுது தம் வலுவை இழந்துவிட்டன. தன் மகன் இராமச்சந்திரன் காடேகுகிறான் என்று கேள்வியுற்ற அயோத்தி மன்னன் தசரதன் போல் தன் சகல சக்திகளையும் முற்றாக இழந்து நின்றார் சிவநேசர். ஒன்றே ஒன்று தான் அவர் மனதில், இன்று தலை தூக்கி நின்றது. ஸ்ரீதர் மீது அவர் கொண்ட அளப்பறும் அன்புதான் அது. அந்த அன்பிலே உதித்து பச்சாத்தாபம் அவர் உள்ளத்தை ஒரு நிலையில் நிற்கவிடாது அலைக்கழித்துக் கொண்டிருந்தது. ஸ்ரீதருக்குத் தான் செய்த கொடுமைகளுக்குப் பிராயசித்தம்முண்டா என்று ஆராய்வதிலே அவர் தமது முழு நேரத்தையும் செலவிடலானார்.

இந்த மனோ நிலையில் அவர் இருக்கும்போதுதான் பத்மா செய்த மோசடியை ஸ்ரீதர் உணர்ந்து கொண்டமையையும் அதனால் சுசீலாவின் மகிமையை அவள் முற்றாக உணர்ந்து அவளை அவள் பெயராலே அழைக்கத் தொடங்கி இருந்தமையையும் பாக்கியம் அன்றிரவு அவருக்கு எடுத்துச் சொன்னாள். அதைக் கேட்ட சிவநேசர் அடைந்த மகிழ்ச்சிக்கு ஓர் அளவே இல்லை. இதற்குக் காரணம் தம் மருமகள் மீது அவர் கொண்டிருந்த பெரு மதிப்பும் அன்புமேயாகும்.

பத்மா போன்ற பெண்களே அதிகமாக வாழும் இவ்வுலகிலே சுசீலா போன்ற பெண் தோன்றியிருப்பது எவ்வளவு அதிசயம் என்று அவர் அடிக்கடி ஆச்சரியப்படுவதுண்டு. நீண்ட காலமாக ஸ்ரீதரைக் காதலித்த பத்மா அவன் குருடாகிவிட்டதை அறிந்ததும் தன் காதலையே மறந்துவிடத் தயாராயிருக்க, இதோ ஒரு பெண் அவன் குருடனாகிவிட்டான் என்பதற்காகவே அவன்மீது அனுதாபம் கொண்டு அவனைக் கல்யாணம் செய்ய முன் வந்திருக்கிறாள் என்றால், அது வியப்புக்கு உரிய விஷயம் தானே? இந்த வியப்பின் காரணமாகத்தான் வாழ வகையற்றுப் போன தன் அன்பு மகனுக்கு வாழ்க்கைத் துணைவியாக்கி ‘அமராவதி’ வளவுக்கு ஒரு வாரிசையும் பெற்றுத் தந்த சுசீலாவை ஒரு தந்தை தன் சொந்த மகளை நேசிப்பது போல நேசித்து வந்தார். ஆனால் இவ்வளவு அரும் பெரும் குணவதியாகிய சுசீலா, ஐயோ இன்னொருத்தியாக நடித்த அநாமதேயமாக வாழும் நிலை ஏற்பட்டதே. அவளால் தன் கணவனின் அன்புக்குப் பாத்திரமாக முடியவில்லையே என்று அவர் அடிக்கடி கவலைப்படுவதுண்டு. அதனால்தான் பாக்கியம் சொல்லிய செய்தி அவருக்குத் தேனாக இனித்தது. "சுசீலா தன் வாழ்வின் வெற்றியை அடைந்து விட்டாள். பழையபடியும் சுசீலாவாகிக் கணவனின் அன்புக்கும் பாத்திரமாகிவிட்டாள். இது எத்தகைய அற்புதமான செய்தி." என்று தனக்குள் தானே களித்தார் அவர்.

பாக்கியம் சிவநேசருடன் தன் பேச்சைத் தொடர்கையில் சுசீலாவைக் காண்பதற்குத் தனக்குக் கண்ணில்லையே என்று கவலைக்காளாகி ஸ்ரீதர் வாட்டமடைந்திருப்பதைப் பற்றியும் கூறினாள். இது சிவநேசருக்கும் பெரும் கவலையையே தந்தது. "பாவம், ஸ்ரீதர் கண் பார்வை பெறுவதற்கு ஏதாவது வழியில்லையா என்று சுரேசுடனும் டாக்டர் நெல்சனுடனும் நாளையே நாம் பேசிப் பார்க்க வேண்டும்" என்று பாக்கியத்திடம் கூறினார் அவர்.

அடுத்த நாள் சுரேஷ் டாக்டர் நெல்சனுடன் ‘அமராவதி’ வளவுக்கு வந்தான். சிவநேசர் அவர்களை வரவேற்றுபசரித்து, "ஸ்ரீதரின் கண் நிலைமை பற்றிப் பேச வேண்டும். ஸ்ரீதரின் கண்களை நன்கு ஆராய்ந்து உங்களாலானதைச் செய்ய வேண்டும். உங்களால் செய்ய முடியாவிட்டால், நாங்கள் எல்லோருமாகப் பேராசிரியர் நோர்த்லியைக் காண இங்கிலாந்துக்குப் போய் வருவோம். ஸ்ரீதர், நான், பாக்கியம், சுசீலா, நீங்கள், சுரேஷ் எல்லோருமே போய் வரலாம்! எதற்கும் ஸ்ரீதரின் கண்களை நன்கு பரிசீலியுங்கள். சென்ற தடவை அவன் கண் பார்வை பெறுவதை நான் அடியோடு விரும்பவில்லை. அதனால் தீமைகள் தான் விளையுமென்று நான் நினைத்தேன். அது அப்படியே ஆயிற்று. ஆனால் இன்றோ நிலைமை மாறிவிட்டது. அவன் கண் பார்வை பெறுவதால் யாருக்கும் தீமையில்லை. மேலும் எனக்குப் பின்னால் இந்த ‘அமராவதி’யின் பொறுப்பை ஏற்கப் போகும் அவன் கண் பார்வையற்ற அரை மனிதனாக இல்லாமல் முழு மனிதனாக விளங்க வேண்டும் என்பதே எனது ஆசையும். அவன் தனது பாட்டன் சேர் நமசிவாயம் போல் பெரும் புகழும் பெற்று இலங்க, கண் பார்வை அவனுக்குப் பெரிதும் உதவும். எங்களால் முடிந்தால் அதனை நாம் அவனுக்கு அளித்தே ஆக வேண்டும்" என்றார்.

டாக்டர் நெல்சன் அதை ஆமோதித்தபடியே ஸ்ரீதரின் கண்களை வெகு கவனமாக நீண்ட நேரம் பரிசோதித்து விட்டுப் பின் வரும் தீர்ப்பைக் கூறினார்.

"ஸ்ரீதரின் இரு கண்களில் ஒரு கண் ஒன்றுக்கும் உதவாது. அதை என்ன செய்தும் பார்வை பெறச் செய்ய முடியாது. ஆனால் மற்றதைச் சுகப்படுத்த முடியும். எனினும் அதற்கு இன்னொருவனின் ‘கோர்னியா’ என்னும் கண்ணின் ஒரு பகுதியை எடுத்து அவன் கண்களில் ஒட்ட வைக்க வேண்டும். ஆனால் இது ஒரு சிக்கலான விஷயம். இதற்கு முதலாவதாக இன்னொருவன் தனது கண்ணின் ‘கோர்னியா’வை ஸ்ரீதருக்குத் தருவதற்கு முன் வர வேண்டும். புதிதாக வழக்கத்துக்கு வந்துள்ள இந்தச் சந்திர சிகிச்சை இலங்கையில் இது வரை வேறெவருக்கும் செய்யபட்டதில்லை. ஆறு மாதங்களின் முன்னர் நான் சென்னை சென்றிருந்த போது இச் சத்திர சிகிச்சை சென்னை மோகன் ராவ் கண்ணாஸ்பத்திரியில் ஒரு நோயாளிக்கு நடை பெற்றது. இச் சிகிச்சை முறை மட்டும் தான் ஸ்ரீதருகுப் பலனளிக்கும். வேறெவ்வகையிலும் அவன் கண்ணைத் தெரிய வைக்க முடியாது." என்றார்.

அதைக் கேட்ட சிவநேசர் "இந்தச் சிகிச்சையை ஸ்ரீதருக்குச் செய்ய நாம் யாது செய்ய வேண்டும்." என்றார்.

முதலில் இதற்கு இன்னொருவரின் கண் வேண்டும். அது இருந்தால் சந்திர சிகிச்சையை நானே செய்து முடித்துவிடுவேன். சென்னைச் சிகிச்சையை இத்துறையில் அனுபவம் பெறுவதற்காக உண்மையில் நானே தான் செய்து முடித்தேன். மோகன்ராவும் நானும் ஒன்றாகக் கல்கத்தாவில் வைத்தியம் படித்தவர்கள். இது விஷயத்தில் அவன் எனக்கு மிகவும் ஒத்தாசை புரிந்தான்." என்றார்.

இவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த சுசீலாவுக்குத் திடீரென ஓர் எண்ணம் உதயமாயிற்று. டாக்டர் சுரேஷைச் சைகை செய்து தனியான ஓர் இடத்துக்கு அழைத்துச் சென்றாள். "சுரேஷ்! எனக்கு ஓர் ஆலோசனை தோன்றுகிறது. ஸ்ரீதருக்குக் கண் நான் கொடுக்கிறேன். டாக்டர் நெல்சனிடம் சொல்லி இன்றோ நாளையோ ஆப்பரேஷனைச் செய்து விடுங்கள். இந்த உதவியை நீங்கள் தாமதமின்றிச் செய்ய வேண்டும். ஸ்ரீதர் உடனே கண் பார்வை பெற வேண்டும். என்னைப் பார்க்க அவர் ஆசைப்படுகிறார். சில நாட்களுக்கு முன் எந்த சுசீலாவைப் பார்க்க வெறுத்துத் தன் கண்களைத் தாமே குத்திக் கொண்டாரோ, அதே சுசீலாவை அவர் இன்று அன்போடு பார்ப்பதற்குத் துடிதுடிக்கிறார். இது எனக்குப் பெரிய வெற்றியல்லவா? அதற்குப் பதிலாக என் கண்ணைக் கொடுத்தாலென்ன? உடனே இதற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்யுங்கள்" என்றாள்.

சுரேஷ் தலையை அசைத்தான். "சுசீலா, நீ ஸ்ரீதருக்காக இது வரை செய்த தியாகங்கள் பெரியன. ஆனால் இப்போது நீ கூறும் ஆலோசனை அவற்றுக்குச் சிகரம் வைத்தது போல் இருக்கிறது. என்றாலும் இது நடவாத காரியம். நாட்டின் சட்டங்கள் அவற்றுக்கு இடம் கொடா" என்றாள்.

"ஏன்? நான் வயது வந்தவள். எனக்கு இப்பொழுது வயது இருபத்தைந்து. என் சுய சம்மதத்தோடு நானே இதைச் செய்கிறேன். வேண்டுமனால் என் சம்மதத்தை என் கையாலேயே ஒரு கடிதமாக எழுதிக் கொடுத்து விடுகிறேன்." என்றாள் சுசீலா.

அதற்குச் சுரேஷ் "இது விஷயத்தில் சட்டம் வேறுவிதமாக இருக்கிறது. ஒருவர் கண்ணை இன்னொருவருக்குப் பொருத்துவதற்கு முன் அந்த மனிதர் முதலில் இறந்திருக்க வேண்டும். இறந்து மிக சொற்ப வேளைக்குள் கண்ணை எடுத்துச் சீர் கெடாது பாதுகாத்து மற்றவருக்கு ஒட்ட வைக்க வேண்டும். ஆனால் அதற்குக் கூட இறப்பவர் தாம் இறப்பதற்கு முன்னர் தம் கண்ணை எடுத்து இன்னொருவருக்கு உபயோகிக்கலாம் அல்லது இன்னாருக்கு உபயோகிக்கலாமென்று தம் சம்மதத்தை எழுத்தில் கொடுத்திருக்க வேண்டும்" என்றான்.

"சுரேஷ்! அப்படியானால் நான் அவ்வாறு எழுதி வைத்து விட்டு என்னை நானே கொலை செய்து கொள்ளுகிறேன். ஸ்ரீதருக்குக் கண்ணைக் கொடுங்கள்." என்றாள் சுசீலா.

இதைக் கேட்ட சுரேஷ் திகைத்துவிட்டான். ஒன்றும் பேசாது சுசீலாவை உற்றுப் பார்த்துக் கொண்டு நின்றான் அவன். தன் முன் நிற்பது ஒரு மானிடப் பெண்ணா, தெய்வமா என்று அவனால் முடிவு செய்ய முடியவில்லை. அதைக் கண்ட சுசீலா, "என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்? நான் உண்மையைத் தான் சொல்கிறேன். நீங்கள் விரும்பினாலென்ன? விரும்பாவிட்டாலென்ன? நான் அப்படித்தான் செய்யப் போகிறேன். எப்படியும் என் ஸ்ரீதர் கண் பெற வேண்டும்." என்றான்.

சுரேஷ், "சுசீலா, நீ என்ன பேசுகிறாய். ஸ்ரீதர் இன்று தன் பார்வையைப் பெற விரும்புவது எதற்காக? சுசீலாவைப் பார்ப்பதற்கு. சுசீலாவின் பிணத்தைப் பார்ப்பதற்கல்ல. ஆனால் சுசீலாவுக்குப் பதில் சுசீலாவின் பிணமே அவனுக்குத் தென்பட்டால் மீண்டும் தன் கண்ணைப் பிய்த்தெறிந்து விடுவான் அவன். அதை நீ யோசிக்கவில்லையே" என்றான்.

சுரேஷின் வார்த்தைகள் சுசீலாவை அதிர வைத்தன. "அது உண்மைதான். ஆனால் நாம் இப்போது என்ன செய்வது? எப்படிக் கண்களைப் பெறுவது" என்றாள் கவலையோடு.

சுரேஷ், "எடுத்த எடுப்பில் இக் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியாது" என்று மட்டும் கூறினான்.

டாக்டர் நெல்சன் சிவநேசரிடம் "இன்று கண் தான இயக்கமொன்று உலகத்தில் தோன்றியிருக்கிறது. சிலர் தாம் சாகுமுன்னர் தம் கண்களைப் பிறருக்குப் பார்வையளிக்க உபயோகிக்கும்படி மரண சாசனம் எழுதி வைத்துச் செல்லுகின்றனர். ஆனால் இது வெகு அபூர்வமாகத்தான் நடைபெறுகிறது. அப்படி எவராவது தானம் செய்யும் கண் எங்காவது கிடைத்தால் தான் ஸ்ரீதருக்கு நம்மால் கண் பார்வையை அளிக்க முடியும். ஆனால் அதற்கு நீங்கள் சிறிது பொறுத்திருக்க வேண்டும். வேறு வழியில்லை." என்றார்.

உயிருள்ளவர்களிடமிருந்து கண்ணைத் தானமாகப் பெற முடியாதிருப்பதற்குரிய சட்டங்களைப் பற்றியும் அவர் விளக்கினார். அத்துடன் உயிருள்ளவர்களிடமிருந்து கண்ணை எடுக்கும் போது அவ்விதம் கண் கொடுப்பவர்களின் நரம்புகள் பாதிக்கப்பட்டு, அவர்களுக்கு வேறு பல சிரமங்கள் ஏற்படுதற்கு இடமிருக்கிறதென்றும், அதனால் தான் சட்டம் இவ்வாறு கண்டிப்பாக வகுக்கப்பட்டிருக்கிறதென்றும் குறிப்பிட்டார் அவர்.

முடிவாக, டாக்டர் நெல்சன், "ஸ்ரீதரின் நிலை பற்றி நான் உடனேயே என் சென்னை நண்பர் மோகனராவுக்கும் அறிவிக்கிறேன். எங்காவது கண் கிடைத்தால் உடனே எங்களுக்கு அது பற்றி அறிவிக்கும்படி நான் அவருக்கு எழுதுகிறேன். ஸ்ரீதர் அதிர்ஷ்டசாலியாய் இருந்தால் சீக்கிரமே கண் கிடைத்துவிடும்" என்று கூறி விடை பெற்றுச் சென்றார்.

அன்று பிற்பகல் சுசீலா ஸ்ரீதருடன் தோட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும்போது கண் தானம் சம்பந்தமான சட்டப் பிரச்சினைகளைப் பற்றிப் பிரஸ்தாபித்தாள். முடிவில், "நான் என் கண்களை உங்களுக்கு எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்து விடுகிறேன். அவ்விதம் நான் செய்தால் நீங்கள் கண் பார்வை பெற முடியுமல்லவா?" என்றாள்.

ஸ்ரீதர் கோபமும் கொதிப்பும் அடைந்தான். "என்ன சொன்னாய் சுசீலா? நீ அவ்விதம் செய்தால் நானும் தற்கொலை செய்து கொள்வேன். இன்னும் நான் பார்வையை விரும்புவதே உன்னைப் பார்த்து மகிழ்வதற்குத் தானே? ஆகவே நீ இல்லாமல் எனக்கு வாழ்க்கை எதற்கு? நீ இவ்வாறு பேச என்னைப் பற்றி என்ன நினைத்தாய்?" என்றான்.

சுசீலாவால் அவ்வார்த்தைகளை எதிர்த்து ஒன்றும் பேச முடியவில்லை. ஆகவே இது விஷயத்தில் டாக்டர் நெல்சனின் முயற்சிகளையே நம்பியிருக்க வேண்டும் வேறு வழி இல்லை என்று முடிவு செய்தாள் அவள்.

‘அமராவதி’யில் வாழ்க்கை மீண்டும் தனது மந்த கதியில் நடக்க ஆரம்பித்தது. ஸ்ரீதரின் கண் பார்வை பற்றிய கவலையைத் தவிர வேறு கவலைகள் எதுவும் அங்கு யாருக்கும் இருக்கவில்லை. வாழ்க்கை பொதுவாக இன்பம் நிறைந்ததாகவே இருந்தது. வேறெந்தக் கவலைகள் இருந்தாலும் அன்பு தோய்ந்த வாழ்க்கை மனதுக்குச் சாந்தியையும் இன்பத்தையும் அளிப்பதற்குக் கேட்கவா வேண்டும்?

இந்தக் காலத்தில் அங்கே நடந்த ஒரே ஒரு முக்கிய சம்பவம். ‘மோகனா’வைப் பற்றியது. அது தனது பழைய வழக்கத்தின் படி வீடதிரக் கூவிக் கொண்டே இருந்தது. இது ஸ்ரீதருக்கு இப்பொழுது சினத்தை மூட்ட ஆரம்பித்தது. "பத்மா" என்ற அந்த மூன்று எழுத்துகள் முன் எவ்வளவு இனிமையாக அவன் காதுகளில் ஒளித்தனவோ அவ்வளவுக்குக் கர்ண கடூரமாக ஒலித்தன இப்போது. பத்மா என்ற அப்பெயர் இன்று அவனுக்குத் தாங்கொணாத அருவருப்பையே ஊட்டியது. அதனால் அவன் பாக்கியத்திடம் ஒரு நாள் "அம்மா மோகனாவை வாயை மூடச் சொல்லு. அந்தப் பெயர் என் காதில் விழுவதை என்னால் சகிக்க முடியவில்லை. உடனே அதை எங்காவது அனுப்பி விடு" என்று சப்தமிட்டான். "நீ தானே அதற்கு அந்த வார்த்தையைச் சொல்லிக் கொடுத்தாய்" என்று கூறிய அவள் சீக்கிரமே ‘மோகனா’வைக் குடும்ப நண்பர் ஒருவருக்கு அன்பளிப்பாக அனுப்பி வைத்து விட்டாள்.

இது போக, ‘அமராவதி’யில் காணப்பட்ட ஒரு முக்கிய மாற்றம் சிவநேசரின் போக்காகும். முன்னிருந்த கர்வமான படாடோபப் போக்குகளெல்லாம் பெரிதும் மாறப் பெற்ற அவர் இப்பொழுது ஒரு புது மனிதர் போல் நடந்து வந்தார். ஸ்ரீதர் வாழ்க்கையின் துயரத் திருப்பங்களின் பின்னால் அவர் முன் போல் புத்தகங்களைக் கருத்தூன்றிப் படிப்பதையும் மேலை நாட்டுத் தரிசர்களின் நூல்களை ஆராய்வதையும் முற்றாக நிறுத்திக் கொண்டுவிட்டார். அவர் ‘அமராவதி’ வளவில் அங்குமிங்கும் தனிமையாக நடப்பதும், தோட்டத்திலிருந்த செங்கழு நீர்த் தொட்டியின் விளிம்பில், சிந்தனையில் முழ்கி உட்கார்ந்திருப்பதும் இப்பொழுது வழக்கமாகிவிட்டன. தன்னத்தனியாக, சிறகுகள் என்ற மேலைத் தேயச் சிற்பத்தில் காணப்பட்ட உருவத்திற் போல், அவர் சிந்தனையில் இலயித்திருந்த தோற்றத்தைக் கண்டு பாக்கியமும் சுசீலாவும் புதுமையடைந்தார்கள். எதைப் பற்றி அவர் இவ்வளவு ஆழமாக்ச் சிந்திக்கிறார் என்பது எவராலும் விடுவிக்க முடியாத புதிராயிருந்தது. சின்னைய பாரதியும் நன்னித்தம்பியரும் கூட அவரது போக்கைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள்.

ஆனால் சிவநேசரின் மனம் இப்பொழுது ஒன்றே ஒன்றைப் பற்றித் தான் சிந்தித்தது. ஸ்ரீதரைப் பற்றிய பிரச்சினைதான் அது. சில சமயம் அவர் முரளியைத் தனியே விறாந்தையில் கண்டால் அவன் தலையைத் தடவிக் கன்னத்தைக் கிள்ளி விளையாடுவார். "நீ உன் அப்பாவை விட அதிர்ஷ்டசாலி. ஏனென்றால் அவன் அப்பா போல் உன் அப்பா முரட்டுப் பேர்வழியல்ல. ஸ்ரீதர் அன்பே உருவானவன்" என்று கூறுவார். ஆனால் இவ்வார்த்தைகளைப் பாக்கியத்துக்கோ சுசீலாவுக்கோ கேட்கும்படி அவர் கூற மாட்டார். இந்த வகையில் எதையும் தன்னுள் தானே வைத்துத் தீர்த்துக் கொள்ள வேண்டுமென்ற அவரது பழைய கர்வமென்னவோ இன்னும் அடங்கிவிடவில்லை.

சில சமயம் எவ்வித முன்னறிவிப்புமில்லாமல் திடீரெனத் தமது காரிலேறிக் கிளிநொச்சியிலுள்ள தமது வயலுக்குப் போய்விடும் பழக்கமும் இப்பொழுது அவருக்கு ஏற்பட்டிருந்தது. அங்கே தமது பங்களாவில் கார்ச் சாரதியோடு ஓரிரண்டு நாள் தனியாகத் தங்கியிருந்துவிட்டு மீளுவார். பங்களாவில் நிரந்தரமாக இருக்கும் பணியாட்கள் அப்பொழுது அவருக்கு வேண்டிய உணவு படுக்கை வசதிகளைக் கவனித்துக் கொள்வார்கள்.

இந்தப் புதிய பழக்கங்களைச் சிவநேசர் மேற்கொண்டு ஓரிரண்டு மாதங்களின் பின் அவர் திடீரெனப் பாக்கியத்திடம், "எனது பழைய நண்பர் மாஜி மைசூர் திவான் சேர் சூரியப் பிரசாத் இன்று ஒரு கடிதம் எழுதியிருக்கிறான். தன் மகளுக்கு அடுத்த வாரம் கல்யாணமாம் - கட்டாயம் வர வேண்டுமென்று. நான் தவறாமல் அதற்குப் போக வேண்டும். உண்மையில் சூரியப் பிரசாத் என் கல்யாணத்துக்குக் கூட வந்திருந்தவன். அப்பொழுது அவன் ஒரு வெறும் வக்கீல் மட்டும்தான். உனக்கு அவனை அவ்வளவு ஞாபகமிருக்காது. உண்மையில் இக் கல்யாணத்துக்கு உன்னைக் கூட அழைத்துப் போகலாம். ஆனால் இங்கே பிள்ளைகளுக்கு யார் துணை? ஆகவே நான் மைசூர் போய் விட்டு மூன்று வாரங்களுள் திரும்ப இருக்கிறேன். இன்னொன்று. சூரியப் பிரசாத் இன்னொரு வகையிலும் முக்கியமானவர். நான் சென்ற வருடம் ஆயிரம் பங்குகள் வாங்கிய "சிநேட் இந்தியன் இன்சுரன்ஸ் கம்பெனி"யின் சேர்மனும் அவன் தான்." என்றார்.

இவ்வாறு சொல்லிய அவர் அந்த வாரமே மைசூர் புறப்பட்டுச் சென்றுவிட்டார். வழக்கத்தில் இப்படிப்பட்ட பிரயாணங்களிற் செல்லும்போது சிவநேசர் குறைந்தபட்சம் இரண்டு வேலைக்காரர்களையும் நன்னித்தம்பியையும் தம்முடன் அழைத்துச் செல்லத் தவறுவதில்லை. ஆனால், இம்முறை அவர் தன்னந்தனியாகவே சென்றார். அது பற்றிப் பாக்கியம் அவரிடம் கேட்டபோது "தனியாகப் போவதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் இருக்கிறது. இன்னும் வழியிலே மிக நல்ல ஹோட்டல்களில் தானே தங்கப் போகிறேன்? இன்னும் மைசூர் சேர்ந்ததும் அங்கு சூரியப் பிரசாத் வீட்டில் எனக்கு என்ன குறை இருக்கப் போகிறது?" என்று கூறிவிட்டார்.

சிவநேசர் மைசூர் போய்ச் சேர்ந்தவுடன் ஒரே ஒரு கடிதம் ‘அமராவதி’க்கு அதாவது பாக்கியத்துக்கு எழுதினார். அதில் அவர் தமது சுக சேதியைக் கூறியிருந்ததோடு, தமது நண்பர் சேர் சூரியப் பிரசாதும் தானும் சில காலத்துக்கு இந்தியச் சுற்றுப் பிரயாணம் ஒன்றை மேற்கொள்ளத் தீர்மானித்திருப்பதால் குறிப்பிட்ட ஒரு விலாசத்தில் தானிருக்க மாட்டாரென்று எழுதியிருந்தார். ஏதாவது அவசரமான செய்திகளிருந்தால் சென்னையிலுள்ள இலங்கைக் காரியலயத்துக்குக் கடிதம் எழுதினால், அது தனக்குக் கிடைக்கும் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

‘அமராவதி’ வளவில் அதன் மாமன்னர் போல் விளங்கிய சிவநேசர் இல்லாது போனது அந்த வீட்டின் களையைப் பெரிதும் குறைக்கத்தான் செய்தது. அவர் அவ்வில்லத்தின் பெரிய தோட்டத்தில் மாலை வேளைகளில் தன்னந்தனியாக உலவும் போது அவரது நெடிய கம்பீரமான உருவம் அவருக்கு அந்த இல்லத்தின் காவல் தெய்வம் போன்ற ஒரு தோற்றத்தைக் கொடுத்தது. அவர் தன் பக்கத்தில் இல்லாது பாக்கியம் மிக வாடிப் போனாள் என்றாலும், பேரன் முரளியின் விளையாட்டுகளில் ஈடுபட்டதால் ஓரளவு தாங்கிக் கொள்ள முடிந்தது. உண்மையில் பாக்கியத்தைப் பொறுத்த வரையில் அவளது முப்பது வருட இல்லற வாழ்வில் சிவநேசரை அவள் பிரிந்திருந்தது மிகச் சொற்ப நாட்களேயாகும். அதனால் எப்பொழுதுமே சிவநேசரைப் பிரிந்திருப்பதென்பது அவளால் தாங்க முடியாத ஒன்றுதான். அத்னால் இரவு படுக்கைக்குப் போகு முன் ஒவ்வொரு நாளும் மேல் மாடிச் சுவரில் ஸ்ரீதரால் எழுதி மாட்டப்பட்டிருந்த சிவநேசரின் படத்தைச் சிறிது நேரமாவது சமீபத்தில் சென்று பார்க்கத் தவறுவதில்லை. அப்பொழுது அவரது பாதங்களைத் தன் கையால் தொட்டுத் தன் கண்ணிலே ஒற்றிக் கொள்ளுவாள் அவள்.

சிவநேசரின் பிரிவை அவ் வீட்டில் எல்லோருக்கும் அடிக்கடி நினைவூட்டிக் கொண்டிருந்தவன் புரளிக்கார முரளிதான். அவன் சிவநேசர் வழக்கமாய் உட்கார்ந்து பத்திரிகை வாசிக்கும் நாற்காலிக்கு ஓடிப் போய் அதன் கைப்பிடியைப் பிடித்து நின்று கொண்டு "தாத்தா" "தாத்தா" என்று கூச்சலிடுவான். இன்னும் மேல் மாடிக்குத் தாயோடோ, ஸ்ரீதரோடோ, பாக்கியத்தோடோ, ஆயாவோடோ போய் விட்டால் போதும், அங்குள்ள படத்தைப் பார்த்து "தாத்தா" "தாத்தா" என்று கும்மாளமடிக்கத் தொடங்கிவிடுவான் அவன்.

இவை ‘அமராவதி’யில் நடந்து கொண்டிருக்க, சிவநேசர் வீட்டை விட்டுச் சென்ற மூன்று வாரங்கள் கழித்து டாக்டர் சுரேசுக்கு அவனது கல்வெட்டித்துறை இல்லத்துக்கு ஒரு கடிதம் வந்தது. தபாலுறையின் வெளிப்பக்கத்தில் சென்னை முத்திரையும் சிவநேசர் பெயருமிருக்கவே அவன் அதைப் பரபரப்போடு பிரித்தான். அதில் சிறிய ஒரு காகிதத்தில் சிவநேசரின் கைஎழுத்தில் ஒரு கடிதமும் ரூபா 2000- திற்கு ஒரு ‘செக்’கும் காணப்பட்டன. சுரேஷ் கடிதத்தை மிக ஆவலோடு வாசித்தான். அதை வாசித்த போது அவன் ஏதோ ஒரு மர்மக் கதையில் மத்திய பாத்திரமாகிவிட்டது போல் தோன்றியது சுரேசுக்கு. அவன் உள்ளத்தில் அந்த உணர்ச்சியை ஊட்டிய அக்கடித்ததின் வாசகம் பின் வருமாறு -

"அன்புள்ள சுரேஷ்! இக்கடிதத்தின் செய்தியை வேறு யாருக்கும் சொல்லக் கூடாது. இதை நீ மிகவும் இரகசியமாகப் பெறுவாய் என்ற துணிவிலும் நம்பிக்கையிலும் நான் இதை எழுதுகிறேன். நிச்சயமாக இதிலுள்ள செய்தி, ஸ்ரீதருக்கோ ‘அமராவதி’யிலுள்ள வேறு யாருக்குமோ தெரியக் கூடாது. இக்கடிதத்தை நீ பெற்றுக் கொண்டதும் சென்னை மோகனராவ் கண்ணாஸ்பத்திரிக்கு வந்து டாக்டர் மோகனராவைச் சந்திக்கவும். கைச் செலவுக்கு ரூபா 2000 செக் இத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. உடனே நீ இதனைச் செய்ய வேண்டும். நீ சென்னை வருவதைப் பற்றிக் கூட யாருமே அறியக் கூடது. நீ செய்யும் இவ்வுதவியை நான் என்றும் மறவேன். இது மிகவும் முக்கியமான விஷயம்.

இப்படிக்கு,
சிவநேசர்

சுரேஷ் இக் கடிதத்தைக் கண்டு அடைந்த குழப்பத்தை வார்த்தைகளில் சொல்லி முடியாது. இருந்தாலும் கடிதத்திலுள்ள செய்தியின் போக்கைப் பார்த்தால் அது பற்றிச் சிந்தித்துக் கொண்டிருப்பதற்கு நேரமில்லை. சிந்தனையல்ல செயலே வேண்டியது என்று எண்ணிய அவன் அடுத்த நாட் காலையே சென்னைக்குப் புறப்பட்டுவிட்டான். இவ்வளவு அவசரமாகப் பிரயாணத்தை மேற்கொளவதில் அவனுக்கு அதிக சிரமங்கள் ஏற்படத்தான் செய்தன. ஆனால் உத்தியோக வட்டாரங்களிலும் பெரிய காரியாலயங்களிலும் போதிய செல்வாக்குப் படைத்த அவன் அவற்றை இலகுவில் சமாளித்துக் கொண்டான்.

சுரேஷ் அடுத்த நாள் விமான மூலம் சென்னை சேர்ந்த பொது, அந்த விஷயம் அவன் தாயாருக்குக் கூட தெரியாது. அவர்கள் அவன் கொழும்பு போயிருப்பதாகவே எண்ணினார்கள். இந்த விஷயத்தில் அவன் சிவநேசரின் ஆக்ஞையை வரிக்கு வரி நிறைவேற்றி விட்டான். யாவற்றையும் அவர் கேட்டுக் கொண்டது போல் மூடுமந்திரமாக வைத்திருப்பதற்குச் சகல நடவடிக்கைகளையும் எடுத்துக் கொண்டான் அவன்.


மனக்கண்: 30வது அத்தியாயம்

தேவை: மனக்கண் நாவலின் 30வது அத்தியாயம்! அனுப்பி வையுங்கள்; சன்மானமுண்டு!

தொடர்நாவல்: மனக்கண் - அ.ந.கந்தசாமி -இந்நாவல் ஈழத்திலிருந்து வெளிவரும் தினகரன் பத்திரிகையில் அக்டோபர் 21, 1966 தொடக்கம் ஜூன் 29, 1967 வரையில் தொடராக வெளிவந்த நவீனம். இந்நாவலின் பிரதியினைப் பெறுவதற்காக நாம் பெற்ற சிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இதன் பிரதியினை வைத்திருந்த திருமதி கமலினி செல்வராஜனுடன் தொடர்பு கொண்டபொழுது அவர் அப்பொழுது கேட்ட பணத்தொகையினை எம்மால் கொடுக்க முடியாது போனதால் அம்முயற்சி தடைபட்டுப் போனது. மீண்டும் தொடர்பு கொண்டபோது அவர் அதனைக் கிழக்கிலங்கையின் பல்கலைக்கழகத்துக்குக் கொடுத்து விட்டதாக அறியத்தந்தார். பின்னர் இலங்கைச் சுவடிகள் திணைக்களத்துடன் இணையத்தின் வாயிலாகத் தொடர்பு கொண்டு மனக்கண் நாவலின் பிரதியினைப் பெற்றுக் கொண்டோம். அதனைத் தேடுவதற்கும், அத்தியாயங்களைப் பிரதியெடுப்பதற்கும் மட்டுமே மிகவும் நியாயமான கட்டணம் அறவிட்டார்கள். ஆனால் அவர்கள் அனுப்பிய நாவற் பிரதி சாதாரண A1 பக்க அளவிலமைந்தருந்ததனால் வாசிக்க முடியாத அளவுக்குச் சிறியதாகவிருந்தது. இதனால் அப்பிரதியினை ததமிழகத்திலுள்ள சிநேகா பதிப்பக பாலாஜி அவர்களுக்கு அனுப்பி, அவர் மூலம் அங்குள்ள ஒருவர் மூலம் மீண்டும் கட்டண அடிப்படையில் தட்டச்சு செய்து வரவழைத்தோம். அதே சமயம் இலங்கைச் சுவடிகள் திணைக்களத்திடமிருந்து எமக்குக் கிடைத்த பிரதியில் அத்தியாயம் 30 விடுபட்டுப் போயிருந்தது. இதற்காக மீண்டும் பலமுறை இலங்கைச் சுவடிகள் திணைக்களத்துடன் இணையம் வாயிலாக எடுத்த முயற்சிகள் பலனற்றுப் போகவே கொழும்பிலுள்ள சில பதிப்பகங்களுடன் தொடர்பு கொண்டோம். அவர்களும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. பின்னர் 'பதிவுகள்' இணைய இதழில் இதுபற்றி அறிவித்தல் கொடுத்து அ.ந.க.வின் ப்டைப்புகளையும் மேற்படி அத்தியாயத்தையும் எமக்குப் பெற்றுத்தர உதவுவோருக்கு செலவிடும் மணித்தியால அடிப்படையில் வேதனம் தருவோமென்று அறிவித்தோம். அதனடிப்படையில் கொழும்பிலிருந்து பேரின்பநாயகம் மயூரன் என்னும் தமிழ் இலக்கிய ஆர்வலர் தொடர்பு கொண்டு அ.ந.கவின் ஆங்கிலக் கட்டுரைகள் சில, அ.ந.க.மொழிபெயர்த்த நாவலான எமிலி சோலாவின் 'நானா' , மேலும் சில கவிதைகளையும் எமக்குப் பெற்றுத் தந்தார். நண்பர் பலதடவைகள் இலங்கைச் சுவடிகள் திணைக்களத்தில் மனக்கண் நாவலின் முப்பதாவது அத்தியாயத்தைத் தேடிப்பார்த்தும் அதற்கான தடயமெதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் பதிவுகளில் அ.ந.க.வின் மனக்கண் நாவலை அந்த அத்தியாயம் இல்லாமலே வெளியிட முடிவு செய்தோம். யாராவது அ.ந.க.வின் மனக்கண் நாவலின் அத்தியாயம் 30இனை வைத்திருந்தால் எம்முடன் தொடர்பு கொள்ளவும். எம்முடன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


31-ம் அத்தியாயம்: சுரேஷின் சங்கட நிலை!

31-ம் அத்தியாயம்: சுரேஷின் சங்கட நிலைதொடர்நாவல்: மனக்கண் - அ.ந.கந்தசாமி -யாழ்ப்பாணம் சேர்ந்ததும் சுரேஷ் டாக்டர் நெல்சனைச் சந்தித்து, சிவநேசரின் கண்ணை அங்கு தகுந்த பாதுகாப்போடு வைக்க ஏற்பாடு செய்துவிட்டு, ‘அமராவதி’க்கு ஸ்ரீதரைச் சந்திக்கச் சென்றான். கண் எவ்வாறு கிடைத்தது என்ற டாக்டர் நெல்சனின் கேள்விக்கு பம்பாயில் புதிதாக ஒரு கண் வங்கி ஆரம்பித்திருப்பதாகவும் அங்குள்ள தனது நண்பன் ஒருவனின் உதவியால் ஸ்ரீதருக்குத் தன்னால் அக் கண்களைப் பெற முடிந்ததென்றும் கூறினான் அவன். அடுத்து இரண்டு மாதங்களுக்கும் இந்தப் பொய்யையே எல்லோருக்கும் திரும்பத் திரும்பச் சொல்லுவதென்று முடிவு கட்டி விட்டான் அவன். ‘அமராவதி’ வளவில் ஸ்ரீதர் குரல் கண்டதும் சுரேஷ், “ஸ்ரீதர் நீ அதிர்ஷ்டசாலி. பம்பாயிலுள்ள ஒரு கண் வங்கியிலிருந்து உனக்கு ஒரு கண் கிடைத்திருக்கிறது. சீக்கிரமே உனக்கு சந்திர சிகிச்சை நடைபெறும். டாக்டர் நெல்சன் எல்லாவற்றையும் கவனித்து கொள்வார். உன் சுசீலாவை, நீ இப்பொழுது உன் கண்களால் பார்க்கலாம்” என்றான்.

இச் செய்தியைக் கேட்ட ஸ்ரீதரும் சுசீலாவும் அடைந்த இன்பத்துக்கு அளவேயில்லை. பாக்கியமும் மெருமகிழ்வெய்தினாள். ஆனால் சந்திர சிகிச்சையின் போது தந்தை சிவநேசர் பக்கத்தில் இல்லையே என்ற கவலை ஸ்ரீதரைப் பிடுங்கித் தின்னவே செய்தது.

இது நடந்த மூன்று தினங்களில் டாக்டர் நெல்சன் சந்திர சிகிச்சையை நடத்திவிட்டார். சுசீலா இரவும் பகலும் ஸ்ரீதருக்குப் பக்கத்தில் உட்கார்ந்து பணிவிடைகள் செய்து வந்தாள்.

“இந்த முறை கட்டவிழ்த்ததும் என்னைக் காண்பீர்கள். ஆனால், என்னைக் கண்டதும் சென்ற முறை செய்தது போல் பழையபடி கண்ணைப் பிய்த்துக் கொள்ள மாட்டீர்களல்லவா” என்று சந்திரசிகிச்சை முடிந்ததும் சுசீலா ஸ்ரீதரிடம் கேட்டான்.

“சீ, சீ நீ என்ன பேசுகிறாய்? எனக்கேன் இக் கண்? உன்னைப் பார்ப்பதற்காகத் தானே சந்திர சிகிச்சை என்றும் இச்சித்திரவதையை நான் மேற் கொண்டிருக்கிறேன்.” என்றான் ஸ்ரீதர்.

ஸ்ரீதர் சுரேஷிடம் பேசும் போது “சுரேஷ், என் கண்ணின் கட்டவிழ்த்ததும் நான் சுசீலாவைப் பார்ப்பேன். முரளியைப் பார்ப்பேன், உன்னையும் பார்ப்பேன். ஆனால் அப்பாவைப் பார்க்க முடியாதே. அப்பாவும் பக்கத்திலிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும். அவர் இந்த நேரம் பார்த்து இந்தியச் சுற்றுப் பிரயணத்துக்குப் போயிருக்கிறாரே. என்னுடைய துரதிர்ஷ்டந்தான் அது. அப்பா எப்போது வருவார்?” என்று
கேட்டான்.

இக் கேள்விக்கு என்ன பதிலளிப்பதென்று சுரேசுக்குத் தெரியவில்லை. “அப்பா வந்து விட்டார். இதோ உன் கண்களில் வீற்றிருக்கிறார். சீக்கிரமே அவர் உன் பார்வையாக கலந்து விடுவார்” என்று சொல்ல வேண்டும் போயிருந்தது அவனுக்கு. ஆனால் அந்த ஆசையை அடக்கிக் கொண்டு முகத்தை மறுபுறம் திருப்பிக் கொண்டான் அவன். “அப்பா கல்வெட்டித் துறையில் என் வீட்டில் இருக்கிறார். தன் புதிய மைந்தன் வீட்டில் இருக்கிறார். வெள்ளி கலசத்துள் அஸ்தியாக வீற்றிருக்கிறார். இன்னும் ஸ்ரீதர், அவர் இப்போது அப்பா மட்டுமல்ல, சிறு வயதிலேயே தந்தையை இழந்த எனக்கும் அப்பாவாகிவிட்டார் அவர். என் முதல் தந்தையை அவரது சாவின் மூலம் நானிழந்தேன். ஆனால் எனது இரண்டாவது தந்தையை அவர் செத்த பிறகு நான் பெற்றேன். ஆம் சிவநேசருக்குக் கொள்ளி போட்ட மகன் நான்” என்றும் சொல்ல விரும்பினான் அவன். ஆனால் சொல்வதற்குரிய காலம் இன்னும் வரவில்லை என்பதை நினைத்ததும் அவ்வாறு சொல்லாமல் தன் நாவை அடக்கிக் கொண்டான் அவன்.

ஸ்ரீதரின் கேள்விக்குத் தாய் பாக்கியம் பதிலளித்தாள். “அப்பா கடைசியாக எழுதிய கடிதத்தில் தான் இன்னும் இரண்டு மூன்று மாதங்கள் இந்தியாவில் சுற்றுப் பிரயாணம் செய்யப் போவதாக எழுதியிருந்தார். அடிக்கடி கடிதங்களை எதிர்பார்க்க வேண்டாமென்றும் எழுதியிருக்கிறார்.” என்றாள்.

டாக்டர் நெல்சனின் சந்திரசிகிச்சை நல்ல பலனையளித்தது. சீக்கிரமே பார்வையை பெற்று உலகைப் பரவசத்தோடு நோக்கினான் ஸ்ரீதர். அவனது காதற் கண்ணுக்கு இப்பொழுது சுசீலா அப்சரஸ் போல தோன்றினாள். முரளியோ, அவன் மனதை முற்றாகக் கவர்ந்துவிட்டான். முழு உலகமும் அழகின் கோவிலாக, வண்ணக் காவியமாகக் காட்சியளித்தது அவனுக்கு. கண் பார்வை தெரியத் தொடங்கிய அடுத்த நாளே அவன் ஓவியன் தீட்டும் தன் பொழுது போக்கை மீண்டும் ஆரம்பித்துவிட்டான். அவன் தீட்ட ஆரம்பித்த முதலாவது படம் சுசீலாவும் முரளியுமாகும். ஆனால் முரளியை ஓவியம் தீட்டுவதற்கும் போதும் போதுமென்றாகிவிட்டது. அவன் ஓரிடத்தில் அமைதியாக இருந்து ஓவியனுடன் ஒத்துழைத்தால் தானே.

கண் தெரிய ஆரம்பித்த ஸ்ரீதருக்கு இப்பொழுது ‘அமராவதி’யில் ஒதுங்கிக் கிடக்க முடியவில்லை. முதலில் ‘அமராவதி’ முழுவதையும் பல தடவை சுற்றிப் பார்த்தான். மானையும் மயிலையும் காடுகளையும், தோட்டத்துப் பூக்களையும் தடாகத்தில் பூத்த தாமரைகளையும் நீலோற்பலத்தையும் கண்டு களித்தான். குளத்தில் மீன்கள் துள்ளி விளையாடுவதையும் ஆமைகள் தண்ணீருள் மெல்ல ஊர்வதையும் கண்டு குதூகலித்தான். தாயையும் மனைவியையும் முரளியையும் காரில் கூட்டிக் கொண்டு கோவில்களுக்குச் சென்றான். அடிக்கடி கீரிமலைக்குப் போய் நீராடினான். அங்கே கதிரின் மறைவையும் மதியின் குளிர்ச்சியையும் பார்த்து மகிழ்வதற்காக இருட்டும் நேரம் எல்லோருமாக மேல் மாடியில் வீற்றிருப்பார்கள். ஓரிரவு மழை கொட்டுவதையும், மின்னல் வெட்டுவதையும் பார்த்தபோது அவன் அந்தப் புதுமையைச் சொல்லி முடியாது. “சுசீலா, மழையைப் பார், மழையைப் பார்” என்று குழந்தை போல் கூச்சலிட்டான். அதைக் கண்ட பாக்கியம் சிரித்துக் கொண்டு “இந்த வீட்டின் குழந்தை முரளியல்ல, ஸ்ரீதர் தான்.” என்று கூறினாள். அதற்கு “போ அம்மா,” என்று கோவித்துக் கொண்டான் ஸ்ரீதர். ஸ்ரீதரை வியப்பிலாழ்த்திய இன்னொரு பொருள் நிலைக் கண்ணாடி. ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாகப் பார்க்காத தன் முகத்தை நிலைக் கண்ணாடியில் அவன் பார்த்த போது அவனடைந்த அதிசயத்தைச் சொல்ல முடியாது. “நான் அப்பா போலல்லவா இருக்கிறேன்” என்று கூறினான் அவன். இன்னும் அடிக்கடி குடும்பத்துடன் சினிமா, நாடகம், நாட்டியம் முதலியவற்றைப் பார்க்கப் போவதும் அவனது வழக்கமாயிற்று. பழையபடி அழகழகான உடைகளைத் தெரிந்தெடுத்து உடுத்திக் கொள்ளும் பழக்கத்தையும் அவள் மீண்டும் மேற்கொண்டான். தனக்கும், சுசீலாவுக்கும், முரளிக்கும் துணி வாங்க அடிக்கடி துணிக் கடைகளுக்கும் போக ஆரம்பித்தாள்.

ஆனால் இந்த இன்ப அனுபவங்களிடையேயும் தன் நண்பன் சுரேசும் அவள் ஒரு நிமிஷமும் பிறக்கவில்லை. அடிக்கடி சுசீலாவிடமும் தாயாரிடமும் “அம்மா சுரேஷின் ஊக்கத்தாலல்லவா நான் மீண்டும் கண் பார்வையைப் பெற்றேன். அவன் செய்த நன்றிக்குப் பதிலாக நான் ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிறதே.” என்று கவலையோடு கூறுவான். அவன் பேச்சை அவர்கள் எல்லோரும் ஆமோதிப்பார்கள். உண்மையில் சுரேஷ் ‘அமராவதி’ வளவிலுள்ள எல்லோராலும் ஒரு தெய்வம் போலவே கொண்டாடப்படலானான். சுசீலா அவனை இப்பொழுது சுரேஷ் அண்ணா என்று அழைக்க ஆரம்பித்திருந்தாள். பாக்கியம் அவனைத் தனது மற்றொரு மகனாகக் கருதத் தொடங்கிவிட்டாள்.

ஒரு நாள் சுரேஷ் ‘அமராவதி’க்கு வந்திருந்த பொழுது ஸ்ரீதர் அவனது கல்யாணத்தைப் பற்றி விசாரித்தான். அதற்கு அவன் “அதுதான் உனக்குத் தெரியுமே. என் மாமன் மகளை நான் கட்டவிருக்கிறேன். இன்னும் இரண்டு மாதங்களின் பின்னால் கல்யாணம் நடைபெறவிருக்கிறது. நீயும் சுசீலாவும் தவறாது வர வேண்டும்.” என்றான்.

“வருவதா? நானும் சுசீலாவும் அம்மாவும் தான் உனது கல்யாணத்தை முன்னின்று நடத்துவோம்.” என்று கூறினான்.

அதன் பின் நண்பர்கள் இருவரும் கிஷ்கிந்தா நினைவுகள் பற்றிப் பேசினார்கள். “நீ கிஷ்கிந்தாவில் இருக்கும் போது சமுதாய விஷயங்கள் பற்றி அடிக்கடி பேசுவாயல்லவா? ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசத்தால் உலகில் எத்தனையோ இன்னல்கள் விளைகின்றனவென்று சொல்வாயே. அதன் உண்மை எனக்குப் போகப் போகத்தான் தெரிந்தது. என் வாழ்க்கையையே எடுத்துப் பார். சிறு
வயதில் என்னால் எல்லாருடனும் கலந்து சாதாரணமான பிள்ளையாக வளர முடியவில்லை. பல்கலைக்கழகத்தில் கூட நான் பணக்காரனென்பதனால் மாணவர்கள் என்னுடன் நெருங்கிப் பழகக் கூசினார்கள். இதனால் ஏற்பட்ட தனிமை தான் எடுத்த எடுப்பிலேயே பத்மா மீது எனக்கு மோகம் ஏற்படும்படி செய்திருக்க வேண்டும். இன்றைக்கு யோசித்துப் பார்த்தால், பத்மா என்னை நிராகரிப்பாள் என்பதற்கான பண்புகள் அப்பொழுதே அவளிடம் இருந்தன என்பது எனக்குத் தெரியவே செய்கிறது. இருந்தும் நான் அவள் காதலைப் பெரிதாக மதித்தேன். இதற்கெல்லாம் காரணம், பணக்காரனென்பதால் பலருடனும் பழகி மனித இயல்புகளை அளவிட நான் அறிந்திராததல்லவா? அப்பா என்னை அந்தஸ்து என்றும் கூட்டுள் அடைந்து வைத்து விட்டார்.”

சுரேஷ் புன்னகையுடன், “என்ன என்ன, நீ கண்களை மூடிக் கொண்டிருந்த காலத்தில் சும்மா இருக்கவில்லை போல்தெரிகிறதே, அந்தக் காலம் முழுவதும் நீ ஆழ்ந்த சிந்தனையில் அல்லவா ஈடுபட்டிருக்கிறாய் போலிருக்கிறது. இது விஷயங்களில் இப்பொழுது நீ எனக்கே பாடம் படிப்பிப்பாய் போலிருக்கிறதே” என்றான்.

ஸ்ரீதர் சுரேஷிடம், “ஏன் நானும் உன் போல ஒரு பெரியவன் மாதிரிப் பேசுவது உனக்குப் பிடிக்கவில்லையா? இன்னும் நான் பணக்காரனாதலால், எனக்கு ஒரு நல்ல நண்பன் கிடைப்பதற்கு வழியில்லாமல் எவ்வாறு திண்டாடினேன்? நீ இன்று எனக்கு உயிருக்குயிரான நண்பன். உன்னைக் கூட அப்பா தினசரி பத்திரிகைகளில் விளம்பரம் செய்தல்லவா பிடித்துக் கொடுத்தார். என்னைப் பொறுத்தவரையில் அப்பா என் மீது அளவற்ற அன்பு கொண்டவர் என்பது உண்மைதான் என்றாலும் நிச்சயம் கொள்கை அளவில் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. பணத்தின் சக்தி மீது, பரம்பரை அந்தஸ்து நாமே ஆளப் பிறந்தோம் போன்ற கொள்கைகள் மீதும் அவருக்கு நம்பிக்கை. அதன் பயனாகப் பெரும் திறமையும் அறிவும் படைத்த அவர் சமுதாயத்துக்கு உதவாதவராகிவிட்டார். அவரைக் கண்ட எல்லோரும் அவரைக் கும்பிடுகிறார். ஆனால் எவரும் அவரிடம் மனம் விட்டு பேசுவதை நான் இதுவரை கண்டதில்லை. இதனால் சமுதாயத் தொடர்பினால் ஏற்படும் மனித உறவுகளின் இனிமை அவருக்குக் கிடைக்கவில்லை. இன்னும் பணம் என்ன அவ்வளவு சிறந்ததா? நான் பணக்காரனாயிருந்தும் காதலிழப்பாலும் கண்ணிழப்பாலும் பட்ட இன்னல் எவ்வளவு? பணத்தை விட மனித உறவுதான் பெரிது. என் கண்கள் மீளக் கிடைப்பதற்குப் பணம் ஓரளவு உதவியிருந்தாலும் உன் நட்புத்தானே பெரிதும் உதவியது? நான் பணக்காரனாயிருந்ததோடு பணக்கார மிடுக்குக் காட்டியிருந்தால் நிச்சயம் நீ என் நண்பனாகி இவ்வளவு உதவி செய்திருக்க மாட்டாய். உன்மையில் சிறு விஷயங்களில் நான் சற்றுப் மிடுக்காக நடந்து கொண்டிருந்தாலும் கூட “ஆ, பணக்காரனல்லவா? அது தான் இப்படி என்னைத் துச்சமாக நடத்துகிறான்” என்று கூட நீ எண்ணியிருப்பாய். ஆம், சுரேஷ். பணக்காரனை மற்றவர்கள் எப்பொழுதும் அப்படித்தான் பார்ப்பார்கள். பணம் மனிதர்களின் உறவைக் கெடுக்கிறது. ஏழை, பணக்காரன் என்ற வேற்றுமை இல்லாவிட்டால், இவ்விதப் பிரச்சினைகளுக்கே இவ்வுலகில் இடமில்லையல்லவா? அப்பொழுது மனிதனும் மனிதனும் நம் உண்மை இயல்புகளோடு பழகி வாழ்க்கையின் மென்மையான இனிமைகளைச் சுவைக்க முடியும்” என்றான்.

ஸ்ரீதரின் பிரசங்கத்தை வியப்போடு கேட்ட சுரேஷ் - அவன் எவ்வளவு தூரம் வளர்ந்து விட்டான் என்று ஆச்சரியப்பட்டான்.

ஸ்ரீதர் மேலும் தொடர்ந்தான்: “நிச்சயம் இந்த வேலியடைத்த வாழ்க்கையை நான் விரும்பவில்லை. அப்பா என்னை வளர்த்தது போல் என் முரளியை நான் வளர்க்கப் போவதில்லை. ‘அமராவதி’யைக் கண்டு மக்கள் அஞ்சக் கூடாது. அன்பு செலுத்த வேண்டும். முரளியை மூலையில் நின்று விளையாடு என்று நான் வற்புறுத்த மாட்டேன். முற்றத்தில் விளையாட இடமளிக்கப் போகிறேன். இன்னும்
இப்பொழுது என் கண்கள் சுகமாகிவிட்டதால் என் பட்டப்படிப்பை விரைவில் முடித்துக் கொண்டு சமுதாய பணிகளில் ஈடுபடப் போகிறேன். அதற்கு முதற் படியாக என்ன செய்ய எண்ணியிருக்கிறேன் தெரியுமா?” என்றான்.

அதற்குப் பதிலாக சுரேஷ் ஒரு கேள்வியைத் தனது முகத்தில் படர விட்டான்.

ஸ்ரீதர் “முதலில் இந்த ‘அமராவதி’யைச் சுற்றியிருக்கும் கண்ணாடித் துண்டுகள் குத்திய பெரிய மதிலை இடித்துவிட்டுச் சிறு கைப்பிடிச் சுவராக அதை அமைக்கப் போகிறேன்.” என்றான்.

அதைக் கேட்ட சுரேஷ் சிரித்தான். “பெரிய மதிலை சிறிய சுவராக்கிவிட்டால் போதுமா? நிலையல்லவா மாற வேண்டும்.” என்றான்.

“அதுதான் மாறி விட்டதே. இது அக்கால நிலையின் வெளியுருவம்” என்றான் ஸ்ரீதர்.

சுரேஷ், “ஆனால் இது பற்றி உன் அப்பா என்ன நினைப்பார் என்று நீ யோசிக்கவில்லையே” என்றான்.

அதற்கு ஸ்ரீதர் “அப்பா இப்பொழுது பெரிதும் மாறிவிட்ட மனிதர். இல்லாவிட்டால் பத்மாவை எனக்குக் கட்டி வைப்பதற்கு இவ்வளவு முயன்றிருப்பாரா என்ன? இன்னும் நான் கண்ணிழந்த பிறகு அவருக்கு என் மீதுள்ள அன்பு மிக மிக அதிகரித்து விட்டது. இப்போது நான் செய்வது எதையுமே அவர் ஆட்சேபிக்க மாட்டார். இன்னும் நான் என்ன கெடுதியா செய்ய எண்ணுகிறேன்” என்றான்
ஸ்ரீதர்.

அதன் பின் ஸ்ரீதர் சிவநேசர் இந்தியாவிலிருந்து வந்ததும் நான் கண் பெற்று விளங்குவதைக் கண்டு எவ்வளவு மகிழ்ச்சியடைவார் என்பது பற்றி விவரித்தான்.

“எல்லாம் நீ செய்த செயல் என்று தெரிந்ததும் அவர் ஆனந்தப் பரவசமடைவார். தன் சொத்து முழுவதையும் உனக்குத் தந்தாலும் தந்து விடுவார்” என்றான்.

“சிவநேசர் தன் சொத்தை எனக்களிப்பார். கண்களையோ அவர் உனக்களித்துவிட்டாரே” என்று இரகசியம் பேசியது சுரேஷின் உள்ளம். ஆனால் அதை வெளியே சொல்ல இது தருணமல்ல. அவர் இறந்த திகதியிலிருந்து இரண்டு மாதம் கழிய வேண்டும். ஆனால் இரண்டு மாதம் கழிய, அவன் சொல்லவிருந்த விஷயம். அதைச் சொல்வது மட்டுமல்ல அந்தச் சிவநேசரைச் சிமிழில் அடைந்த பிடி
சாம்பலாக ஸ்ரீதர் கையில் நான் ஒப்படைக்க வேண்டியிருந்ததை நினைத்தும், சுரேஷின் உள்ளம் நடுங்கியது. ‘அமராவதி’ இச் செய்தியை எப்படி ஏற்கப் போகிறது என்றெண்ணியதும் எத்தனை பெரிய பொறுப்பைச் செத்துப் போன சிவநேசர் தன் தோளிலே வைத்துவிட்டுச் சென்று விட்டார் என்பது அவனுக்கு விளங்கியது.

“அன்போடு எதிர்பார்க்கப்படும் அப்பாவுக்குப் பதில் இதோ அவரது எலும்புத் துண்டுகள்.” என்று ஸ்ரீதரிடம் சிவநேசரின் அஸ்திக் கலசத்தை ஒப்படைக்க வேண்டும். அது இலேசான காரியமல்ல.” என்று எண்ணிய சுரேஷ் மேலும் அங்கே நிற்காது விடை பெற்றுக் கொண்டு வல்வெட்டித் துறையிலிருந்த தன்னில்லத்தை நோக்கி காரை ஓட்டினான்.

 


 

கடைசி அத்தியாயம்! 32-ம் அத்தியாயம்: புயலுக்குப் பின் அமைதி!

32-ம் அத்தியாயம்: புயலுக்குப் பின் அமைதி!தொடர்நாவல்: மனக்கண் - அ.ந.கந்தசாமி -சிவநேசரிடமிருந்து கடிதம் எதுவும் வராதது பற்றி ‘அமராவதி’யில் அடிக்கடி பேச்சடிப்பட்டுக் கொண்டேயிருந்தது. ஒரு நாள் தாய் பாக்கியத்துடன் செங்கழுநீர்த் தொட்டியின் கரையிலே உட்கார்ந்து சிவநேசரின் புள்ளி மானுக்கு உண்பதற்குப் புல் கொடுத்துக் கொண்டிருந்த ஸ்ரீதர், “அம்மா, எனக்குக் கண் கிடைத்து எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிட்ட போதிலும் மனதிலே பெரிய குறை ஒன்றிருக்கவே செய்கிறது. எனது கண்ணின் சந்திர சிகிச்சைக்கு அப்பா பக்கத்திலே இல்லாததொன்று. என் கண்களால் அப்பா இப்பொழுது எப்படி இருக்கிறார் என்று இது வரை பார்க்க முடியவில்லையே என்பது மற்றொன்று” என்றான். பாக்கியம் அவன் வார்த்தைகளை ஆமோதித்தபடியே “எனக்கும் பெரும் கவலையாய்த் தானிருக்கிறது. உனக்குச் சந்திர சிகிச்சை செய்து இப்பொழுது என் பார்வை திரும்பிவிட்டது என்று நான் சென்ற வாரம் சென்னைக்கு விமானக் கடிதமொன்று அனுப்பினேன். நன்னித்தம்பியும் அது பற்றி ஒரு விவரமான கடிதம் எழுதினார். ஆனால் எதற்குமே அவர் பதிலெழுதவில்லை. இது எனக்குப் பயத்தை உண்டாக்குகிறது. ஏனென்றால் அவரால் எப்பொழுதுமே என்னையும் உன்னையும் பிரிந்திருக்க முடியாது. அவர் கடிதம் எழுதாதற்கு என்ன காரணமோ தெரியவில்லை” என்று பெருமூச்சுவிட்டாள்.

சிவநேசர் கடிதம் எழுதாது ஸ்ரீதருக்கும் பாக்கியத்துக்கும் மட்டுமல்ல சுசீலா, நன்னித்தம்பியர், சுசீலாவின் தாய் செல்லம்மா எல்லோருக்குமே கவலையாகத்தானிருந்தது. சின்னைய பாரதி கூடப் பாக்கியத்தைக் காணும் போதெல்லாம், “ஐயா எப்பொழுது வருகிறார்?” என்று கேட்கத் தவறுவதில்லை. ஆனால் இந்தக் கவலையுள்ளும் ஒரு பெரிய இன்பமும் ‘அமராவதி’யில் நிலவியது. அது ஸ்ரீதர் கண் பார்வை பெற்றதாகும். நேற்று வரை கல்லுப் பிள்ளையார் போல அங்குமிங்கும் ஆசனங்களில் வீற்றிருப்பதும், தட்டுத் தடுமாறி நடப்பதுமாகப் பரிதாபக் கோலத்தில் காட்சியளித்த ஸ்ரீதர் இன்று முரளியோடு தோட்டத்தில் விளையாடுவதும் அவன் ஓட அவனைத் துரத்திப் பிடிப்பதும் அவனோடு பந்தாடுவதுமாகப் பலவித புதுக் கோலங்களில் காணப்பட்டான். இவ்வித விளையாட்டு நேரங்களில் முரளி தனது முரளி தனது கீச்சுக் குரலில் சப்தம் செய்து மழலைச் சிரிப்பொலி உதிர்ப்பது அந்த மளிகைக்கே ஒரு பொலிவைக் கொடுத்தது.

ஸ்ரீதர் இப்பொழுது தன் எதிர்காலத்தைப் பற்றி மனக் கோட்டைகள் கட்ட ஆரம்பித்திருந்தான். தன் மேற்படிப்பை விரைவில் முடித்துக் கொண்டு சித்திரம், சிற்பம், நாடகம் என்று தனது பொழுதுபோக்குக் கலைகளில் மும்முரமாக ஈடுபட வேண்டுமென்பதும், அத்துறைகளில் பெரிய வெற்றிகளை நிலை நாட்ட வேண்டுமென்பதும் அவனது பேராசையாக விளங்கின. ஆனால் அவற்றிற்கு அவன் முதலில் கொழும்பு செல்ல வேண்டும். ஆனால் அதற்கு முன்னர் தந்தை சிவநேசரை ‘அமராவதி’யில் சந்தித்துச் சில நாட்களேனும் அவரோடு காலம் கழித்து பின்னர் தான் வீட்டை விட்டுப் புறப்பட வேண்டுமென்பது அவனது திட்டம். ஆனால் அவர் தான் இப்படி எங்கோ போய் ஒளிந்து கொண்டு வர மாட்டேன் என்கிறாரே என்று எரிச்சலுற்றான் அவன். பொதுவாக ஒரு காலமுமே வீட்டையும் குடும்பத்தையும் வீட்டு நீண்ட பயணம் போக விரும்பாத அவர் இந்த நேரத்தில் இப்படிப் போயிருக்கலாமா?” என்று அவன் குறைப்பட்டான்.

சில சமயங்களில் ஸ்ரீதர், பாக்கியம், சுசீலா எல்லோருமே சுரேஷிடம் சிவநேசரைப் பற்றிப் பேசுவார்கள். அந்த நேரங்களில் அவன் நிலைமை மிக எக்கச்சக்கமாயிருக்கும். அவர்களது வார்த்தைகளுக்குச் சரியான பதில் கூற முடியாது திண்டாடுவான். இவ்விஷயத்தில் மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாத நிலையில் அவன் இருந்தான். இதன் காரணமாகத் தனக்கும் கையிலே அதிக வேலைகள் இருப்பதாகக் கூறி ‘அமராவதி’க்கு வருவதையே அவன் குறைத்துக் கொண்டான். அவன் இவ்வாறு நடந்து கொண்டதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. சிவநேசரைப் பற்றி அவர்கள் பேசும் போது அவரது மரணமும் அவருக்குத் தான் கொள்ளியிட்ட சம்பவமும் அவனுக்கு ஞாபகம் வரும். அந்த ஞாபகம் அவனது நெஞ்சையும் கண்ணையும் ஒரே சமயத்தில் கலங்க வைக்கும். நெஞ்சின் கலக்கத்தை மறைக்கலாம். கண்ணின் கலக்கத்தை எப்படி மறைப்பது? இதற்காக அவன் பல தடவைகளில் பெரும்பாடுபட வேண்டியதாகிவிட்டது. இவற்றின் காரணமாக, ஸ்ரீதரின் கடிதத்துக்கும், அஸ்திகளை ‘அமராவதி’க்குக் கொடுப்பதற்கும் சிவநேசர் விதித்திருந்த இரண்டு மாத கெடு அணுகும் வரை ஸ்ரீதரையும் பாக்கியத்தையும் அடிக்கடி பார்க்காமலிருப்பதே நன்று என்று முடிவு செய்தான்
அவன்.

ஓரோர் நேரத்தில் வல்வெட்டித்துறையில் வீட்டு விறாந்தையில் தனியே இருக்கும் போது சிவநேசரின் நினைவு அவனுக்கு வரும். சிவநேசர் உயிரோடிருக்கும் போது அவருக்கு முன் அவன் நேரிலே நின்று பேசியது வெகு சில தருணங்களில் மட்டும்தான், அவையும் பேராசிரியர் நோர்த்லி ஸ்ரீதருக்கு வைத்தியம் செய்ய ‘அமராவதி’க்கு வந்திருந்த போதாகும். ஆனால் அப்போது கூட அவர் முகத்தை நன்கு அவதானித்துப் பார்த்து, அவன் பேசியது மிக மிகக் குறைவேயாகும். உண்மையில், சிவநேசருடைய முகத்தின் முழு விலாசத்தையும் அவன் அவதானித்தது ஸ்ரீதரால் வரையப்பட்ட அவரது சித்திரத்திலும் ‘அமராவதி’ மாளிகையில் அங்குமிங்கும் காணப்பட்ட சில புகைப்படங்களிலும் தான். இவை தவிர அவன் சிவநேசர் முகத்தை நன்கு அவதானித்தது சென்னையில் அவர் மருந்தூட்டிப் பிணமாக வைக்கப்பட்டிருந்தபோது தான், பீர்மேடு குமரப்பா நர்சிங் ஹோமில் அவர் அவரது அந்தஸ்துக்கேற்ற விலை உயர்ந்த சவப் பெட்டியில் வெண்பட்டுத் துணியின் மத்தியில் நிம்மதியாகப் பள்ளிக் கொண்டிருந்த காட்சி அவன் மனதில் இடையிடையே தோன்றிய போது அவர் முகமும் அவனோடு சேர்ந்து அவன் மனதில் தோன்றியது. பிணம் பழுதாகி விடாமல் மருந்தூட்டியவர்கள் அவர் முகத்தை மிகவும் சீரான முறையில் தயார் செய்திருந்ததோடு அவரது தலைமயிரையும் மாப்பிள்ளை போல் ஒழுங்காகச் சீவி விட்டிருந்தார்கள். இவற்றின் காரணமாகச் சிவநேசரின் முகத்தில் பிரேதக் களையே காணப்படவில்லை. எவ்விதக் கவலையுமற்ற ஒருவர் தூங்குவது போன்ற் ஒரு பாவனை மட்டுமே அவர் முகத்தில் விளையாடிக் கொண்டிருந்தது. சிவநேசர் அத்தோற்றத்திலேயே அவன்
முன்னே வந்து கொண்டிருந்தார்.

சில சமயங்களில் சென்னை மயானக் காட்சியும் அவன் நினைவுத் திரையில் வந்தது. ஆஜானுபாகுவான அவர் நீண்டு நிமிர்ந்து சிதையில் படுத்திருந்த தோற்றத்தையும் அவனால் மறக்க முடியவில்லை. மரணத்தில் கூட என்ன கம்பீரம் என்று பாராட்டும்படி அல்லவா அவர் அன்று விளங்கினார்?

இப்படிச் சிவநேசரின் நினைவு வரும்போதெல்லாம் சுரேஷ அவர் தனக்குக் கடித மூலம் பணிந்த கடமைகள் யாவற்றையும் தான் திறமையாக நிறைவேற்ற வேண்டுமே என்ற கவலையால் பீடிக்கப்பட்டான். அத்துடன் அவர் குறித்த இரண்டு மாதத் தவணை முடித்து ‘அமராவதி’யின் தலைவரது மரணத்தைத் தான் பிரகடனம் செய்வதைக் கேட்டு, பாக்கியமும் ஸ்ரீதரும் அதிர்ந்து விடக் கூடாதே என்றும் கலங்கலானான் அவன்.

“இந்தப் பயங்கரமான செய்தியைக் கேட்டு அவர்கள் இடிந்து விடாதிருப்பதற்கு அவர்கள் மனதை முன் கூட்டியே ஓரளவு தயார் செய்ய முடியாதா?” என்றெண்ணிய அவனுக்கு அதற்குரிய சந்தர்ப்பம் எதுவுமே கிடைக்கவில்லை. இருந்தபோதிலும் கெடுவுக்கு முதல் நாள் அவன் ‘அமராவதி’க்குச் சென்ற போது இதைப் பற்றிக் குறிப்பாக உணர்த்துவதற்கு ஒரு சிறிய சந்தர்ப்பம் அவனுக்குக் கிடைக்கவே செய்தது.

அன்று அவன் ‘அமராவதி’க்குப் போயிருந்தபோது ஸ்ரீதரும் பாக்கியமும் அவனோடு சிவநேசரைப் பற்றிப் பேசினார்கள்.

“சுரேஷ், சென்னை விலாசத்துக்கு எத்தனையோ கடிதம் எழுதியும் பதில் கிடைக்காததால் சென்ற வாரம் ஸ்ரீதரைக் கொண்டு நான் மைசூர் மாஜி திவான் சூரியப் பிரசாத்துக்கு அவர் சுகமாயிருக்கிறாரா என்று விசாரித்துக் கடிதம் எழுதும்படி சொன்னேன். ஸ்ரீதரும் அவ்வாறே எழுதினான். ஆனால் அதற்கு அவர் எழுதிய பதிலோ ஆச்சரியமாயிருக்கிறது. அவர் பெங்களுருக்கே வர வில்லை என்று சூரியப் பிரசாத் எழுதியிருக்கிறார். இன்னும் அவர் மகள் கல்யாணத்தைப் பற்றி நாங்கள் எழுதியதற்கும் அவர் தமது மகளின் கல்யாணம் அடுத்த வருஷம்தான் நடக்கும் என்று எழுதியிருக்கிறார். எல்லாம் விசித்திரமாயல்லவா இருக்கிறது? நான் குழம்பிப் போயிருக்கிறேன்.” என்றாள் பாக்கியம்.

ஸ்ரீதரும் “அப்பா கொழும்புக்குப் போனால் கூட நாளொன்றுக்கு இரண்டு தடவை ட்ரங்கோல் போட்டுப் பேசுவார். அப்படிப்பட்டவர் இந்தியாவுக்குப் போய் இப்படி மெளனமாயிருப்பது எனக்கும் ஒரே குழப்பமாகத்தான் இருக்கிறது” என்றான்.

சுரேஷ் சந்தர்ப்பத்தை உபயோகித்து “ஸ்ரீதர், நான் ஒன்றை உனக்குச் சொல்ல மறந்துவிட்டேன். உன் அப்பா உன்னிடம் கொடுக்கும்படி எனக்கொரு கடிதம் அனுப்பியிருக்கிறார். அக் கடிதத்தை நாளை இங்கு வரும்போது நான் உன்னிடம் கொண்டு வந்து தருகிறேன்.” என்றான்.

“என்ன, எனக்கெழுதிய கடிதத்தை உனக்கனுப்பியிருக்கிறாரா? இன்னும் அக் கடிதத்தைப் பார்க்க நாம் ஏன் நாளை வரை பொறுக்க வேண்டும்? இப்பொழுதே நாங்களிருவரும் வல்வெட்டித்துறைக்குப் போய் வருவோமே?” என்றான் ஸ்ரீதர்.

“போய் வரலாம். ஆனால் கடிதத்தை நாளைக்குத்தான் உன்னிடம் கொடுக்க வேண்டுமென்று எனக்கு ஆணையிட்டிருக்கிறார் அவர். ஆகவே அதை வாசிக்க நாளை வரை பொறுக்கத்தான் வேண்டும்.” என்றான் சுரேஷ்.

சுரேஷின் இம்மொழிகளைக் கேட்டு, ஸ்ரீதரும் பாக்கியமும் கலவரமடைந்தார்கள். “இதென்ன விநோதமான நிபந்தனைகள். இந்நிபந்தனைகளைப் பார்த்தால் இதில் ஏதோ மர்மம் இருப்பது போல்
தோன்றுகிறது. சுரேஷ், ஸ்ரீதருக்கு எழுதிய கடிதத்துடன் அவர் உனக்கும் ஏதாவது எழுதியிருப்பாரல்லவா? அதில் அவர் என்ன சொல்லியிருக்கிறார்? அவர் உடற் சுகம் எப்படி? அவர் எப்பொழுது இலங்கை வருகிறார்?” என்று கேட்டாள் பாக்கியம்.

இக் கேள்விகளுக்குச் சுரேஷால் என்ன பதில் சொல்ல முடியும்? முதலில் இக் கேள்விகளுக்கு எவ்வித விடையுமளிக்காமலே தட்டிக் கழிக்கப் பார்த்தான். ஆனால், பாக்கியமும் ஸ்ரீதரும் அதற்கு இடம் அளிப்பவர்களாயில்லை. ஆகவே அவன் வேறு வழியின்றி “இந்தக் கேள்விகள் எதற்குமே என்னால் பதிலளிக்க முடியாது. ஸ்ரீதரின் அப்பா இவ்விஷயங்கள் எல்லாவற்றிலும் எனக்கு வாய்ப் பூட்டுப் போட்டிருக்கிறார். நாளைக்கு ஸ்ரீதரின் கடிதத்தைத் தரும் போது தான் இவ்விஷயங்களில் என் வாய்ப் பூட்டு அவிழும். அப்பொழுது தான் பல விஷயங்களை உங்களுக்குச் சொல்லுவேன். இன்னும் கடிதத்தை மட்டுமல்ல, கடிதத்தை விட முக்கியமான பொருளொன்றையும் என்னிடம் அவர் ஒப்படைத்துள்ளார். அதையும் நாளைக்கு நான் எடுத்து வருவேன். தயவு செய்து அதுவரை நீங்கள் இவ்விஷயமாகப் பொறுத்திருக்கவே வேண்டும்,” என்றான்.

அடுத்த நாட் காலை பத்து மணிக்கு ‘அமராவதி’ மாளிகையில் இடி இடித்தது; மின்னல் மின்னியது; புயல் வீசியது. சுரேஷ் ஸ்ரீதர் கையில் சிவநேசரின் கடிதத்தை, ஒப்படைத்தான். ஒப்படைக்கு முன் பாக்கியம், ஸ்ரீதர் சுசீலா ஆகியவர்களை நோக்கி “கடந்த இரண்டு மாதங்களாக என் மனதுள் வைத்துக் காத்த துக்ககரமான இரகசியங்களை இன்று நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.” என்று கூறித் தனக்குச் சென்னையிலிருந்து சிவநேசர் எழுதிய கடிதத்திலிருந்து தான் தனது வீட்டிலுள் உள்ளவர்களுக்குக் கூடத் தெரியாது இந்தியாவுக்குப் போனதையும் அங்கு நடந்த சம்பவங்களையும் ஒன்றொன்றாய் எடுத்து விவரித்தான். தனக்கு சிவநேசர் எழுதிய கடிதத்தையும் அவன் அவர்களிடம் காட்டினான். பின்னர் சென்னை மயானமொன்றில் தான் அவருக்குக் கொள்ளி வைத்த வரலாற்றையும் கண்ணீர் வரக் கூறினான் அவன்.

சிவநேசரின் தற்கொலையைப் பற்றிக் கேள்வியுற்றதும் ஸ்ரீதர் ‘ஓ’வென்று அலறிவிட்டான். பாக்கியம் தாலி களைந்து “ஐயோ” என்று எழுப்பிய கூக்குரல் அந்த ‘அமராவதி’ மாளிகையின் அஸ்திவாரத்தையே ஒரு குலுக்குக் குலுக்கிவிட்டது. சுசீலாவோ தன்னிலை இழந்து தவித்து ஸ்ரீதரின் தோள்களைத் தன் கைகளால் கட்டிக் கொண்டு “ஐயோ நாம் என்ன செய்வோம்” எனக் கதறினாள்.

அவர்களின் பரிதாப நிலையைக் கண்ட சுரேஷ் தன்னாலியன்ற வரை ஆறுதல் மொழிகள் கூறினான். “அழுது கூக்குரலிடுவதால் என்ன பயனுமில்லை. கடிதத்தை வாசி” என்று அவன் ஸ்ரீதரை வற்புறுத்தினான்.

இறந்து போன சிவநேசர் கடிதத்தின் மூலம் தன் மகனோடும், மனைவியோடும் ஆசை மருமகளோடும் பேசினார்.

'என் அன்புள்ள மகன் ஸ்ரீதருக்கும், பிரிய மனைவி பாக்கியத்துக்கும் ஆசை மருமகள் சுசீலாவுக்கும் சிவநேசர் எழுதும் கடிதம். இக் கடிதம் உங்களுக்குக் கிடைக்கும் போது நான் இறந்து இரண்டு மாதம் பூர்த்தியாயிருக்கும். சுசீலாவைப் பார்க்கத் தனக்குக் கண்ணில்லையே என்று ஸ்ரீதர் கவலைப்பட்டான். அக் கவலையைப் போக்க அவனுக்குக் கண்ணளிக்க நான் சாகிறேன். நான் வயதானவன். இன்றில்லாவிட்டால், என்றோ நான் சாகத் தானே வேண்டும்? இன்று இவ்வாறு இறப்பதில் எனக்கென்னவோ திருப்தி. ஆகவே ஸ்ரீதர், பாக்கியம், சுசீலா - நீங்கள் யாருமே என் மரணத்தைப் பற்றிக் கவலைப்படக் கூடாது. உங்கள் அலுவல்களை ஒழுங்காகப் பார்த்துக் கொண்டு மகிழ்ச்சியோடிருக்க வேண்டும்.

ஸ்ரீதர், நீ இக் கடிதத்தை உன் கண்ணாலே தானே வாசிக்கிறாய்? அது எனக்கு மிகவும் இன்பளிக்கும் செய்தி. ஆனால் உண்மையில் அக்கண் என்னுடையது - இது எனக்கு அதிக பெருமையளிக்கும் விஷயமாகும். இன்னொன்று, தற்கொலை செய்து கொண்ட பின்னும் கூட நான் முற்றிலும் செத்துவிடவில்லை. என் கண் இன்னும் வாழ்கிறது. அது இன்னும் நீண்ட காலம் வாழ வேண்டும் என்பதே என் ஆசை. தற்கொலை செய்வது பெரிய துன்பமாயிருந்திருக்கும் என்று நீங்கள் எண்ணக் கூடும். அது தான் இல்லை, தற்கொலைக்கும் எத்தனையோ மார்க்கங்களுண்டு. அதில் மிகவும் சுலபமான ஒன்றைத்தான் நான் தெரிவு செய்திருக்கிறேன். உரோமர் இம்முறையை அனுஷ்டித்ததாக நான் சில நூல்களில் படித்திருக்கிறேன். இரத்த நாளமொன்றைத் தெரிந்தெடுத்து ஒரு கூரிய சவரக் கத்தியால் வெட்டி விடுவதே அது. இதனால் உண்டாகும் நோவு மிகவும் குறைவாம். எதுவும் இன்னும் சில நேரத்தில் எனக்குத் தெரிந்துவிடும்.

ஸ்ரீதர், உன் நண்பன் சுரேஷைத் தான் எனக்குக் கொள்ளி வைக்க நான் தெரிந்தெடுத்திருக்கிறேன். அதன் மூலம் அவன் எனது மகனாகிவிட்டான். அவனை இனிமேல் உன் அண்ணனாக நீ நடத்த வேண்டும். எனது சொத்துகள் பற்றி நீ எவ்வித கவலையும் பட வேண்டாம். நியாயதுரந்தார் குமாரகுரியரும் ஹரிசன் கம்பெனியாரும் அவற்றை கவனித்து கொள்வார்கள். ஒழுங்கான மரண சாதனம் முடித்திருக்கிறேன். பாக்கியம், சுசீலா, ஸ்ரீதர், உங்களையும் சின்ன முரளியையும் விட்டுப்பிரிவது எனக்கு மிகவும் கஷ்டமாகத்தானிருக்கிறது. ஆனால் என்ன செய்வது? இதை விட நல்ல வழி
வேறில்லை. உங்கள் எல்லோருக்கும் என் அன்பு.

‘அமராவதி’ வாழ்க!
சிவநேசர்
டாக்டர் குமரப்பா நர்சிங்
ஹோம், சென்னை.'

சிவநேசரின் அஸ்திக் கலசமும் அன்று பிற்பகல் சுரேஷால் ஸ்ரீதரிடம் ஒப்படைக்கப்பட்டது. மூன்று மாதங்களின் முன்னர் ‘அமராவதி’ வளவிலிருந்து தனது இந்திய நண்பர் சூரியப்பிரசாதின் மகளின் திருமணத்துக்குச் செல்வதாகப் பொய் கூறிப் புறப்பட்ட சிவநேசர் இந்தியாவில் தாம் வாங்கிய பரிசுப் பொருள்களுடன் தம் மாளிகைக்கு வந்திறங்குவதற்குப் பதிலாகப் பிடி சாம்பலாக வெள்ளிக் கலசமொன்றில் வந்திறங்கியதைக் கண்ட பாக்கியம் தன்னை மீறிக் கதற, ஸ்ரீதர் கலசத்தைத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டு, அதனைத் தன் கண்ணீரால் கழுவினான்.

“அப்பா, நீ உன் கம்பீர உருவத்தில் மீளவும் வருவாய், நீ இப்போ எப்படி இருக்கிறாய் என்பதை என் புதிய கண்ணால் பார்க்க வேண்டுமென்று ஆசையோடு எதிர்பார்த்திருந்த என் முன் நீ இந்த உருவிலா வரவேண்டும்? இலங்கையை விட்டுப் புறப்பட்டு மூன்று மாதங்களின் பின் பிடி சாம்பலாக உன் மாளிகைக்கு வரும் நீ இரண்டு மாதங்களின் முன் என் கண்ணின் ஒளியாக இங்கு வந்தாயே - இது போன்ற ஓர் அற்புதமான தியாகக் கதையை நான் கண்டதுமில்லை, கேட்டதுமில்லையே. அப்பா, நீ இல்லாமல் நாங்கள் என்ன செய்வோம்? முரளி “தாத்தா எங்கே?” என்று என்னைக் கேட்டால் நான் என்ன பதில் சொல்வேன்?” என்றழுதான் அவன்.

பாக்கியம் அன்றே வெள்ளை உடுத்து விதவைக் கோலம் பூண்டுவிட்டாள். தகவல் தெரிந்ததும் நன்னித்தம்பியர், அவர் மனைவி செல்லம்மா, சின்னைய பாரதி ஆகிய யாவருமே கவலையால் பீடிக்கப்பட்டார்கள். இரக்கமே உருவான சுசீலா, எவர் என்ன சொல்லியும் இரண்டு நாட்கள் அன்னாகாரம் அருந்த மறுத்துவிட்டாள். பெரியவரின் ஈமக் கடன்கள் கீரிமலையில் அன்றிலிருந்து மூன்றாம் நாள் செய்யப்பட்டன. அவர் மரணச் செய்தி பத்திரிகைகளிலும் சுருக்கமாக வெளியிடப்பட்டது. ஆனால் எந்தக் கவலையும் இவ்வுலகில் ஒரு சில நாட்களுக்குத்தானே? அதன் பின் சீக்கிரமே சிவநேசரின் பிரிவால் ஏற்பட்ட வேதனை மனதை விட்டகல வாழ்க்கை பழைமை போல் ஓட ஆரம்பித்தது. ‘அமராவதி’யில் மீண்டும் பழைய அமைதி குடி கொண்டது.

இருந்தாலும் பழைய ‘அமராவதி’யில் இப்பொழுது பல புதுமைகள், சிவநேசரின் மரண சாதனத்தில் கூறப்பட்ட பிரகாரம் சுரேஷ் ஸ்ரீதருடன் சம பங்காளியாகிவிட்டான். அத்துடன், சிவநேசர் அவனிடம் கேட்டுக் கொண்ட பிரகாரம் ஸ்ரீதருக்குத் துணையாக அவன் ‘அமராவதி’யில் வந்து குடியேறினான். பாக்கியம் ஸ்ரீதர், சுசீலா எல்லாருக்குமே இது மிகவும் திருப்தியைத் தந்தது. சிவநேசர் வீட்டில் இல்லாத குறையை அது ஓரளவு ஈடு செய்தது.

இவை நடந்து சில மாதங்களின் பின்னர், சுரேஷின் திருமணமும் நடை பெற்றது. அவன் கிஷ்கிந்தாவில் ஒரு நாள் கூறியபடி, பல ஆயிரம் வருடங்களின் முன் தமிழ்ச் சமுதாயம் செய்த முடிவின்படி தன் மாமன் மகள் செல்வமலரை அவன் திருமணம் செய்து, அதன் மூலம் மேற்படிப்புக்காகத் தன் மாமனாரிடம் அவன் பட்ட பணக் கடனையும் தீர்த்துக் கொண்டான் அவன். செல்வமலரும் சுசீலாவும் சீக்கிரமே உயிருக்குயிரான தோழிகளாகி விட்டார்கள்.

‘அமராவதி’யில் ஏற்பட்ட இன்னொரு மாற்றம் அதன் பெரிய மதில்கள் சிறிய கைப்பிடிச் சுவர்களாகிவிட்டதாகும். வீதியில், செல்லும் பாதசாரிகளுக்குக் கூட ‘அமராவதி’யின் அகன்ற விறாந்தைகள் இப்பொழுது நன்கு தெரிந்தன. வாசலின் பெரிய இரும்பு ‘கேட்டு’களுகுப் பதிலாக சிறிய மர ‘கேட்டு’கள் போடப்பட்டன. மாறி வரும் சமுதாயத்தின் புதிய எண்ணங்களின் சின்னமாக அவை காட்சியளித்தன. இன்னும் வாசலிலே காக்கி உடையோடு காணப்பட்ட அந்த வாசல் காவலாளியையும் இப்பொழுது அங்கே காணோம்.

ஸ்ரீதர் தன் படிப்பை முடிக்க, சுசீலாவோடும், முரளியோடும் சீக்கிரமே கொழும்பு போனான். சுரேஷோ பாக்கியத்துக்குத் துணையாக ‘அமராவதி’யில் தங்கி வைத்தியத்தோடு சமுதாய சேவையையும் மேற்கொண்டான். ஸ்ரீதரும் தன் படிப்பை முடித்துக் கொண்டதும் சமுதாய அரசியல் சேவைகளில் ஈடுபடப் போவதாகப் பயமுறுத்திக் கொண்டிருக்கிறான். இதை எல்லோரும் வரவேற்றார்களென்றாலும் சுரேஷே மிக அதிகமாக வரவேற்றான் என்பதைக் கூறவேண்டியதில்லையவா?

முற்றும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here