கட்டுரைச் சுட்டு

நினைவுகளின் சுவட்டில் – (62)

வெங்கட் சாமிநாதன்உடையாளூரை விட்டு வேலை தேடி வெளியேறி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகியிருக்கும். இரண்டு வருடங்களில் ஏதும் உடையாளூரில் மாற்றங்கள் இல்லை. விடுமுறையில் வந்து மறுபடியும் நிலக்கோட்டை மாமாவை, பாட்டியை எல்லாம் பார்த்ததில் எனக்கு சந்தோஷமாக இருந்தது. என் தம்பி கிருஷ்ணன் நிலக்கோட்டையில் என் இடத்தை எடுத்துக் கொண்டிருந்தான். கற்பரக்ஷையின் வளர்ப்புத்தாயாரைப் பார்த்தது, ஷண்முகத்தை மீண்டும் சந்தித்தது எல்லாம் மனதுக்கு நிறைவாக இருந்தது. இதை எழுதும்போது நினைத்துக்கொள்கிறேன், ஷண்முகத்தை அதற்குப் பிறகு நான் பார்க்க நேரவே இல்லை. இப்;போது (2010 வருடக் கடைசியில்) ஷண்முகம் எங்கே இருக்கிறானோ, என்ன செய்கிறானோ, தெரியவில்லை. இவ்வளவு அன்னியோன்யமாக வும், பல விஷயங்களில், ஒத்த அக்கறையும் பார்வையும் கொண்டவர்களாக் இருந்த ஒரு நண்பனை பார்க்கவோ நட்பைத் தொடரவோ இல்லாது போகும் என்று அன்று  நினைக்கவில்லை. ஆனால் இப்போது அது பற்றி நினைக்கும் போது வருத்தமாகத் தான் இருக்கிறது. 

 நாற்பது வருட சில பழைய நட்புகளைத் திரும்பப் பெற்றிருக்கிறேன். அவ்வப்போது சில பத்து வருட இருபது வருட பழக்கங்கள் திரும்ப இணைந்து திரும்ப மறைந்தும் போயிருக்கின்றன. நட்பு முறிந்தல்ல. காலமும் இடமும் தான் பிரித்திருக்கின்றன. இப்பிரிவுகள் நிகழும்போது நாம் நினைத்துப் பார்க்காமல் நிகழ்ந்து விடுகின்றன. பின்னா இம்மாதிரி நினைவு  களை அசை போடும்போது அப்பிரிவுகள் வேதனையாகத் தான் இருக்கின்றன.

‘’அடிக்கடி வந்துண்டு போயிண்டு இருடா. வந்தா வரதுக்கு முன்னாலே ஒரு கார்டு போட்டு வரேன்னு சொல்லக் கத்துக்கோ. இப்படி திடீர்னு வந்து நிக்கறதை வழக்கமா வச்சுக்காதே.” என்று அம்மா எத்தனை தடவை சொல்லி யிருப்பாளோ தெரியாது. திரும்ப ஹிராகுட்டுக்கு கிளம்பும் போதும் சொன்னாள். “பணம் அனுப்ப மறந்துடாதே. கொஞ்சம் சேத்தும் வச்சுக்கோ” என்று திரும்பத் திரும்ப சொல்ல மறந்துவிடவில்லை. “சரி போறுமே, எத்தனை தடவை சொல்லுவே அதையே” என்று சிரித்துக்கொண்டே சொன்னார் அப்பா.

திரும்பும் போது சென்னையில் இரண்டு நாள் அத்திம்பேர் இருந்த இடத்தில் தங்கினேன். மாம்பலத்தில் ஒரு வீடு எடுத்திருந்தார். எதிர்த்தாற்போல் ஒரு தியேட்டர். மதுபாலா நடித்த ஒரு படம் ஓடிக்கொண்டிருந்தது. மதுபாலா அப்போது டாப் ஸ்டார். என்ன படம் என்று நினைவில் இல்லை. அத்திம்பேர் ப்ராட்வேயில் ஏதோ ஒரு கம்பெனியில் வேலை தேடிக்கொண்டுவிட்டார். சிறு வயதிலேயே அவரும் வேலை தேடி லாகூரே போனவராயிற்றே. லாகூரிலிருந்தும் முஸ்லீம்கள் கலவரம் தொடங்குவற்கு முன்னரே பாதுகாப்பாக குடும்பத்தோடு ஊருக்கு வந்தவராயிற்றே.
முதல் தடவையாக மாம்பலம், தி. நகர், ப்ராட்வே என்று அந்த இரண்டு நாட்களில்தான் சென்னையைச் சுற்ற ஆரம்பித்திருந் தேன். ப்ராட்வேயில் அவர் வேலை பார்த்துக்கொண்டிருந்த இடத்துக்குப் போனேன். “எப்படிடா வந்தே?” என்று கேட்டார். மாம்பலத்திலிருந்து மின்சார ரயில் ஏறி ஃபோர்ட்டில் இறங்கி நடந்து வந்தேன். என்றேன். “ஏண்டா மாம்பலத்தில் பஸ் ஒடறதைப் பாத்திருக்கே இல்லியா. இங்கேயும் ஹை கோர்ட் வாசல்லேயும் பஸ் ஓடறதே. இந்த பஸ்ஸெல்லாம் எதுக்கு ஒடறதுன்னு யோசிக்க மாட்டியா?” என்று கேட்டார். இரண்டு பக்கங்களிலும் நடையைக் குறைத்திருக்கலாமே என்ற எண்ணம் அவருக்கு.. எனக்கு சென்னையில் அது தான் இரண்டாவது நாள். இப்படியெல்லாம் சோதனை முயற்சிகளில் இறங்கத்தோன்ற வில்லை எனக்கு. சென்னையின்  பிரும்மாண்டத்தை மலைத்து கண்விரிக்காமல் பழகிக்கொள்வதற்கு இன்னம் காலம் தேவை ப்பட்டது.

அப்போதெல்லாம் தான் ரிஸர்வேஷன் என்கிற சமாசாரமே கிடையாதே. ரயில் கிளம்புவதற்கு சற்று முன் டிக்கட் வாங்கிக் கொள்ளலாம். கிடைத்த இடத்தில் உட்கார்ந்து கொள்ளலாம். அது ஒரு மாதிரி சௌகரியம். கல்கத்தா மெயிலில் தான் திரும்ப ஹிராகுட் போக டிக்கட் எடுத்தேன். சாமல்கோட் என்ற ஸ்டேஷனுக்கு மதியம் சாப்பாடு நேரத்துக்குப் போகும் இந்த மெயில். சாமல் கோட் வந்ததும் எல்லோரும் இறங்கி ஸ்டேஷனிலேயே இருந்த ஒரு சாப்பாட்டு ஹோட்டலுக்கு விரைவார்கள். பெரிய கூடம். ஐம்பது அறுபது பேர் கீழே இலைபோட்டு சாப்பாடு போடுவார்கள். நாலைந்து வரிசைகள் இருக்கும். அங்கு போய்ச் சேரும் சமயம் முதலில் வந்தவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தால். காத்திருக்கவேண்டும். அடுத்த பந்திக்கு. விஷயம் என்னவென்றால் அடுத்த பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டு திரும்ப ரயிலில் அவரவர் இடத்துக்கு வரும் வரை ரயில் காத்திருக்கும். அவசர அவசரமாகத்தான் எல்லாம் நடக்கும். இருப்பினும் காத்திருந்து சாப்பிட்டு வர நேரம் இருக்கும். இப்போது நினைக்கும்போது இதெல்லாம் எனக்கு வேடிக்கையாகத் தான் இருக்கிறது. எவ்வளவு தூரப் பிரயாணமானாலும் சாவகாச யுகம் தான் அது.

இப்போது தான் ஞாபகம் வருகிறது. கல்கத்தா மெயிலில் வந்ததால் கரக்பூர் இறங்கி, பம்பாய் மெயில் பிடித்து ஜார்ஸகுடா- சம்பல்பூர் மார்க்கமாகத்தான் ஹிராகுட் போனேன். வந்த ஒரு சில நாட்களில் திருமலை அய்யங்கார் புதிய சீஃப் எஞ்சினீயராக பதவி ஏற்றிருந்தார். ஒன்றும் வேலை நடக்கவில்லை என்று முதலில் ஆர்.பி. வசிஷ்ட்டை அகற்றியிருந்தார்கள், திருமலை அய்யங்கார் துங்கபத்ரா அணைக்கட்டு வேலை முடிந்ததும் அவரை இங்கு மாற்றியிருந்தார்கள். அவர் வந்து சேர்ந்ததும் அணைக்கட்டு வேலைகள் துரிதமாக நடக்கத் தொடங்கின. ஆரம்பித்த முதல் வேலை என்னவென்று எனக்கு நினைவில் இல்லை. ஆனால் நாங்கள் அனைவரும் இரவும் பகலுமாக குளிப்பதற்குத் தவிர வேறு எதற்கும் வீட்டுக்குப் போகாமல் அலுவலகத்திலேயே வேலையில் மும்முரமாக இருந்தோம். அது ஒரு புதிய அனுபவம். சுவாரஸ்யமாகவும் விளையாட்டாகவும் இருந்தது. அந்த வேலைப் பளுவை பளூவாகவோ, கஷ்டமாகவோ யாரும் உணரவில்லை.

இன்னுமொரு மிகவும்  சந்தோஷமாக அனுபவித்த விஷயம் அடிக்கடி சம்பல்பூருக்கு சினிமா பார்க்கப் போய்வருவது ஒரு வழக்கமாகி வந்தது. ஒரு வங்காளி படம் மிக நன்றாக நினைவில் இருக்கிறது. யாத்ரிக் (யாத்ரீகன்) என்றோ அல்லது மஹா  பரஸ்தானேர் பாதே (ஒரு தீர்த்த யாத்திரையின் வழியில்) என்றொ அந்தப் படத்துக்குப் பெயர். அப்போதும் சரி, இப்போது அதை நினைத்துப் பார்க்கும் போதும் மனம் சலனம் அடையத்தான் செய்கிறது. பெண்கள் கூட்டம் ஒன்று காசிக்குத் தான் என்று நினைக்கிறேன் யாத்திரை போகிறார்கள். ஒரே கிராமத்தவர். பெரும்பாலோர் விதவைகள் அல்லது வயதானவர்கள். அதில் ஒரிரு இளம் வயதுப் பெண்களும் இருக்கிறார்கள். வயதானவர்களாகவும் விதவைகளாகவும் இருந்த காரணத்தால் யாத்திரை சிரமம் தருவதாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் புண்ய யாத்திரை.சிரமப் பட்டாலும் அதை அதிகம் பாராட்டுவதில்லை. அவ்வப்போது வழியில் சாப்பிட வழி கேட்க, ஏதும் தகவல் விசாரிக்க என்று சிரமங்களை அவர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள். வழியில் அவர்களுக்கு விவேகானந்தர் போன்று காவி வர்ண தலைப்பாகையும் நீண்ட அங்கியும் அணிந்த ஒரு இளம் துறவியுடன் பழக்கம் ஏற்படுகிறது. அந்த இளம் துறவி இவர்களுக்கு அவ்வப்போது தன்னாலான உதவிகள் செய்கிறார். பெண்களுக்கு ஏதோ பேச்சுத் துணையாயிற்று. கூட்டத்தில் இருக்கும் இளம் பெண்களில் ஒருத்திக்கு அந்த இளம் துறவியிடம் ஒட்டுதலும் பாசமும் ஏற்படுகிறது. ஏதோ காரணம் வைத்துக்கொண்டு அவள் துறவியிடம் நெருங்கிப் பழக வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்கிறாள். யாருக்கும்  சந்தேகம் ஏற்படாத வகையில் அதுஅந்தக் கூட்டத்திற்கு ஏதும் உதவி தேவையென அந்தத் துறவியிடம் போய்ச் சொல்லும் முகாந்திரம் அவளுக்குக் கிடைக்கிறது. துறவிக்கும் அவர்கள் அவ்வப்போது தங்கள் உணவைப் பகிர்ந்து கொள்ளும் முகமாகவும் புண்ய யாத்திரையாயிற்றே துறவி தரும் உபதேசங்களை, புண்ய கதைகளைக் கேட்பதாகவும் அவர்கள் நெருக்கம் யாத்திரையில் தொடர்கிறது. அந்தத் துறவி எப்போதும் போல எந்த பாதிப்பும் இல்லாது, இவர்கள் நெருக்கத்தால், இளம் பெண் தன்னிடம் ஏக்கம் கொண்டிருப்பதையும் அறியாதவராகவே இருக்கிறார்.

யாத்திரை முடிந்து திரும்புகிறார்கள். ரயில் பிரயாணத்திலும் அவர்கள் ஒன்றாகவே பயணம் செய்கிறார்கள். பாசம் வசப்பட்ட அந்த இளம் பெண் தன் விருப்பத்தைத் தெரிவிக்கவும் முடியாது கூட்டத்தில் இருக்கும் மற்றவர்கள் தன்னைச் சந்தேகிக்கவும் இடம் தவறாது தன்னுள்ளேயே புழுங்கித் தவிக்கிறாள். மேலும் அவர் துறவி. எல்லாம் தன் காதலுக்கு எதிராக இருந்த போதிலும் அதை அவளால் மறக்கவும் முடியவில்லை. அதை நினைத்து உருகுவதிலும் ஒரு சந்தோஷம் இருக்கிறது தெரிகிறது. 

கடைசிக் காட்சியில் ரயில் வண்டியில் இரவுப் பிரயாணம். எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்க அவளால் தூங்க இயலவில்லை. தூங்கிக் கொண்டிருக்கும் துறவியைப் பார்த்துக் கொண்டே இரவு கழிந்து கொண்டிருக்கிறது. அவள் அறியாது கண்ணயர்கிறாள் உட்கார்ந்தவாறே. அவர்கள் எல்லாம் இறங்கும் ஸ்டேஷன் வந்துவிட்டது. இன்னும் பொழுது புலரவில்லை. எல்லோரும் இறங்குகிறார்கள். இறங்கும் போது இவளையும் எழுப்பிவிடுகிறார்கள். விழித்துக்கொண்ட அவள் துறவியைப் பிரியும் நேரம் வந்துவிட்டது தெரிகிறது. துறவி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார். இவளுக்கு அவரிடம் ஒரு வார்த்தை சொல்லிக்கொண்டாவது போகவேண்டும் என்று ஒரு துடிப்பு. அவரைத் தொட்டு எழுப்பவும் முடியவில்லை. மகராஜ் என்றோ ஸ்வாமிஜி என்றோ மெல்ல சன்னமாக கூப்பிட்டு எழுப்பப் பார்க்கிறாள். அவர் எழுகிறவராக இல்லை. கீழேயிருந்து, வாயேம்மா, அங்கே என்ன பண்றே, வண்டி கிளம்பிடும்” என்று திருபத் திரும்ப சத்தமாகக் கூப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். துறவி எழுந்திருக்க வில்லை. வண்டி கிளம்பிவிடும். எவ்வளவு நேரம் தான் காத்திருக்கமுடியும். ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் அவர் முகத்தை, ஏக்கத்தோடு பார்த்த வாறே அவள் இறங்குகிறாள். வண்டியும் கிளம்புகிறது. உள்ளிருந்து குமுறிக் குமுறி வரும் துக்கத்தை அவள் முகம் வெளிக்காட்டாதிருக்க தலையைக் குனிந்து கொண்டே அவர்களைத் தொடர்ந்து செல்கிறாள்.

இது 1951-ல் சம்பல்பூரில் பார்த்த வங்காள் மொழிப் படம். இளம் பெண்ணின் சொல்லவும் முடியாத, அடக்கவும் முடியாது உள்ளுக்குள்ளேயே புழுங்கும் காதல உணர்வுகளை ஒரு தலையாகவே எழுந்து மடிவதை இதை விட குரல் எழுப்பாது ஒரு கவிதை போலச் சொல்லும் ஒரு படத்தை எப்படி மறக்க முடியும்?.

பாட்டு இல்லை. டான்ஸ் இல்லை. காதல்மொழி பேசும் வசனங்கள் இல்லை. அழுகை இல்லை. கதறல் இல்லை. சாதாரண அன்றாட பேச்சைத் தவிர அதை மீறிய காட்சியோ பரிமாறலோ எதுவும் இல்லை. கண்கள் தான் அந்த இளம் பெண்ணின் உள்ளே நடக்கும் நாடகத்தைச் சொல்லும். இந்த மாதிரியான ஒரு படம் தமிழ் சினிமாவின் சரித்திரத்திலேயே இது வரை சாத்தியமாகவும் இல்லை. சாத்தியமாகும் என்ற நம்பிக்கையும் இல்லை.

1951-ல் ஒரு மஹா ப்ரஸ்தானேர் பாதேயைத் தந்த வங்க சினிமாவால், அது அமைத்துக் கொடுத்திருந்த பாதையில் தான் பின்னர் இரண்டு மூன்று வருடங்களில் ஒரு சத்யஜித் ரே அதன் பின்னர் ஒரு ம்ருணால் சென் தோன்ற முடிந்திருக்கிறது.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்