நனவிடை தோய்தல் (7) - நினைத்தாலே இனிக்கும் நினைவுகள்: -நீராவியடி வாசிகசாலை - இந்து லிங்கேஸ் -
நீராவியடி என்றால் நினைவுக்கு வந்து காட்சி தந்து நினைவுகளை மீட்டெடுத்து கதைசொல்ல வைக்குமிடங்களாய்; நீராவியடி பிள்ளையார் கோயில்.' செங்கை ஆழியான்' வீடு.சந்திக்கடை(ஐயாத்துரை கடை)தாழ்வாரத்தை உயர்த்தி இரண்டு பக்கமும் முட்டு வைத்து நடத்திய வடிவான சின்னக்கடை.பக்கத்தில சினிமா போஸ்ரர் ஒட்டிய பிரகாஸ்லோன்றி.கே.ஆர்.மில்(ஆலை) பிள்ளையார் கோயில் பின்வீதி.அந்த வெளி.அந்தக்குளம். குளத்தைச்சுற்றிப்பாதுகாப்பாக 4 பக்கமுமாய் அணைக்கட்டுகள்.அருகே வாசிகசாலை.
அந்த அரசமரம்.அதற்குள் அமர்ந்த அழகான அந்த சின்ன வைரவர்.அந்த வைரவரை வைத்துப்பராமரித்த நரைத்த நீண்ட தாடி கொண்ட முத்தையா.முத்தையா என இருவர் அயலில் வாழ்ந்தார்கள். இரண்டாம் பேர்வழியான கோவணத்துடன் குளத்துக்குள் இறங்கி குளிக்கும் இவர் கொட்டாக்கு முத்தையா என பேசப்பட்டார். அரசமரத்திற்குப்பின்னால் ஒடுக்கமான ஒரு கால்வாய்.அதற்குள் மழைக்காலத்தைத்தவிர நீர் வழிந்து ஒடுவதென்பது அரிது.அநேகமாக,அதற்குள் நாம் இருபக்கக்கட்டுகளிலும் எதிரும் புதிருமாக இருந்துகொண்டு கால்களை அதற்குள் நீட்டியபடி கதைத்துச்சுகம் காண்பது வழக்கம்.மார்கழியில் மழைநீர் வசந்தா ரெக்ஸ்டைல்ஸ் முன்றலில் தேங்கி நிற்காது இறங்கி கடைச்சுவாமி கோயில் ஒழுங்கைக்குள்தான் கூடுதலாக வழிந்து ஓடிக்கொண்டேயிருக்கும்.அதுகூட ஓர் அழகுதான்.
காற்று வீசும்.வீசும் காற்றும் சும்மா வராது.இலங்கை வானொலியிலிருந்து சுகமான இதமான பாட்டொன்றைத்தந்து மனசை இலேசாய் உரசிவிட்டுப்போகும். அரசமர இலைகள் சரசரக்கும். மார்கழியில் குளம் நிரம்பி வழியும்.சிலர் அதில் நின்றபடி சருவச்சட்டியால் அள்ளி உடம்பில் ஊத்திக் குளிப்பார்கள்.ஒருத்தர் மட்டும் பயமில்லாமல் நீந்துவார்.அவர்தான்'ராதா'.