இணையத்தில் தமிழ்!

- முனைவர் மு. பழனியப்பன் -

இணையத்தின் இதழ்கள்தமிழ் மொழி காலத்திற்கு ஏற்ற வகையில் தன்னை வளர்த்துக் காண்டே வருகிறது. இன்றைய மிகப் பெரிய தகவல் ஊடகமாக விளங்குவது இணையம் ஆகும். இந்தத் தகவல் சாதனத்திலும் தமிழ் அதிக அளவில் பயன்படுத்தப் பெற்று வருகின்றது. ஏறக்குறைய இணையப் பயன்பாட்டில் தமிழ் மொழி குறித்த தகவல் பரிமாற்றம் உலக அளவில் இரண்டாம் இடத்தில் இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இணையத்தில் தமிழ் பற்றி அறிந்து கொள்ள, தமிழ்ச் செய்திகளை அறிந்து கொள்ள பற்பல வாய்ப்புகள் உள்ளன. தமிழில் உள்ள நூல்களை இணையத்தில் வாசிக்கமுடியும். தமிழ் நூல்களை மின்நூல்களாக மாற்றி இணையத்தில் வழியாக அனைவரும் பயன்கொள்ளும்படிச் செய்யப்பட்டு வருகிறது. இவற்றை மின் நூலகம், இணைய நூலகம் என்று அழைக்கின்றனர். கள்வரால் களவாடப்பட முடியாமல், வெந்தணலில் தமிழ் ஏடுகள் தற்போது இணையத்தில் ஏற்றி அழியா நிலைக்குச் சென்றுவிட்டன.

மதுரைத்திட்டம் என்ற இணைய தளம் ஏறக்குறைய பழந்தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் தன்னுள் மின்பதிப்பாகக் கொண்டுள்ளது. http://www.project madurai.org” இணையதள முகவரிக்குச் சென்றால் இத்தளத்தைப் பார்வையிடலாம். இத்தளத்தின் சிறப்பு என்னவென்றால் பல தமிழ் அன்பர்கள் ஒன்றுகூடி, அவர்கள் அவர்களாகவே சிலச்சில நூல்களை மின்வடிவமாக மாற்றி ஒட்டுமொத்தமாகத் தந்திருப்பதுதான். இது ஒரு கூட்டு முயற்சியாகும்.

தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் இணைய நூலகம் மிகவும் பயன்பாடு மிக்கது. இதனுள் பல நூறு நூல்கள் சேமிக்கப் பெற்றுள்ளன. நூல்களை அடுத்த அடுத்த பக்கங்களுக்குச் சென்று படிப்பது போல இணையப் பக்கங்களைப் புரட்டி நூல்களைப் பார்வையிட முடியும். மேலும் இந்நூலகத்தில் தேடுதல் வசதி உள்ளது. அதாவது தேடுதல் வசதி என்பது சொல் தேடல் என்பதாகும். திருக்குறளில் ஏதாவது ஒரு சொல் எந்தெந்த இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கண்டறியவேண்டுமானால் இத்தளத்திற்குச் சென்று திருக்குறள் பகுதியை அழுத்தி அதன்பின் தேடல் பகுதியில் தேவையான சொல்லை இட்டால் அந்தச் சொல் பயன்படுத்தப் பட்டுள்ள இடங்கள் அனைத்தும் கிடைக்கும். இப்படியே ஒவ்வொரு நூலிலும் தேடல் வசதி தரப் பெற்றுள்ளது. தற்போது தமிழ் இணையப் பல்கலைக் கழகம் என்ற பெயர் உலகத் தமிழ் இணையப் பயிற்சிக் களம் என்பதாக பெயர் மாற்றம் பெற்றுள்ளது. இருப்பினும் http://www.tamilvu.org என்ற முகவரியில் இத்தளம் இயங்கி வருகிறது. இத்தளத்தில் கலைக்களஞ்சியங்களும் உள்ளன. இவற்றைப் பயன்படுத்தி சொல் வளம் பெற இயலும்.

அடுத்து சென்னை லைப்ரரி என்ற தளம் குறிக்கத்தக்கது ஆகும். சிறுகதைகள், நாவல்கள் முதலியனவற்றைப் படிப்பதற்கு இந்தத்தளம் உதவுகின்றது. குறிப்பாக சங்க இலக்கியம், சங்கம் மருவிய இலக்கியங்கள் போன்றனவும் இத்தளத்தில் கிடைக்கின்றன. கம்பராமாயணம் முழுவதும் இதனுள் கிடைக்கின்றது. பெரும்பாலும் இணையத்தில் தற்போது முல நூல்கள் மட்டுமே கிடைக்கின்றன. உரை நூல்கள் கிடைப்பதில்லை. கல்கியின் நாவல்கள், புதுமைப்பித்தன் கதைகள், ஜெயகாந்தன் படைப்புகள் போன்றவற்றை இதனுள் பெற இயலும்.

அடுத்துப் பொள்ளாச்சி நசன் அவர்களின் தமிழம்.நெட் இணைய தளம் பல அறியப்படாத நூல்களைத் தன்னுள் கொண்டுள்ளது. இத்தளத்தில் இன்னும் பல சிறப்புகள் உள்ளன. முன்னூறு தமிழ் அறிஞர்களின் புகைப்படங்கள் கிடைக்கின்றன. மேலும் சிற்றிதழ்களின் கண்காட்சியாக பல சிற்றிதழ்கள் பார்வைக்கு உள்ளன. தமிழில் உள்ள குறிக்கத் தக்க இணையதளங்களுக்கான இணைப்பு தரப்பெற்றுள்ளது. இவ்வகையில் மிக முக்கியமான தளமாக இது விளங்குகின்றது.

இதுபோன்று தமிழ் மரபு அறக்கட்டளைhttp://www.tamilheritage.org) , நூலகம்.காம் போன்ற பல தளங்கள் வாயிலாக தமிழ் நூல்களை இணைய நூல்களாகக் காண முடிகின்றது. தமிழ் மரபு அறக்கட்டளை இணையதளம் ஓலைச்சுவடிகளை மின்வடிவில் தருவதில் பெரு முயற்சி எடுத்து வருவது குறிக்கத்தக்கது.

சமண சமய நூல்களினைப் பார்வையிட ஜெயின்வோர்ல்டு .காம் என்ற இணையதளம் பயன்படுகிறது. தமிழ் விக்கிபீடியா என்ற இணையதளம் தமிழின் கட்டற்ற கலைக் களஞ்சியமாக உள்ளது. தமிழ்மொழியில் உள்ள தகவல்களைப் பெற இத்தளம் மிக முக்கியமானதாகும். மேலும் இதனுள் இடுகை இடுதலை யார் வேண்டுமானாலும் செய்யலாம். யார் வேண்டுமானாலும் திருத்தலாம். அதற்கான வழிமுறைகள் படி நுழைய வேண்டும். இதனை வளப்படுத்தவே தற்போது இளைஞர்களுக்குப் போட்டிகள் வைக்கப் பெற்றுள்ளன.

இணையப் பரப்பில் அடுத்து முக்கியமாகக் கருதத்தக்கது இணைய இதழ்கள் ஆகும். இணையத்தில் மட்டுமே இடம் பெறும் இதழ்களை இணைய இதழ்கள் என்று குறிப்பிடவேண்டும். பிரபல தமிழ நாளிதழ்கள், தமிழ் வார இதழ்கள் அனைத்தும் இணைய முகவரியைப் பெற்றுள்ளன. இருப்பினும் இவற்றை இணைய இதழ்கள் எனக் கருதமுடியாது. இணையத்தில் மட்டுமே செய்திகளைத் தருகின்ற இதழ்களே இணைய இதழ்கள் எனப்படும். அவ்வகையில் குறிக்கத்தக்க தமிழ் இணைய இதழ்களாக கருதத்தக்கனவாக திண்ணை, பதிவுகள், முத்துக்கமலம், வரலாறு.காம், வார்ப்பு, நிலாச்சாரல், தமிழோவியம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். பதிவுகள், நிலாச்சாரல், தமிழோவியம் போன்றன வெளிநாட்டுத் தமிழர்கள் நடத்தும் இணைய இதழ்கள் ஆகும். இவற்றுள் திண்ணை இதழ் மிகச் சிறப்பான இடத்தை வகித்து வருகின்றது. இது வாரம் ஒருமுறை தன் பக்கத்தை மாற்றி அமைக்கிறது. பல இலக்கியச் செய்திகள் இதில் இடம் பெறுகின்றன. வார்ப்பு இதழ் கவிதைகளை மட்டுமே தாங்கி வரும் இதழாகும். இதனுடன் கவிதை நூல்களின் விமர்சனங்கள், மற்றும் நிகழ்வுகளின் அறிவிப்புகள் போன்றனவும் இவ்விதழில் இடம் பெறுகின்றன. இது தவிர இன்னும் பல இணைய இதழ்கள் தமிழ் இணையப் பரப்பில் உள்ளன.

வரலாறு .காம் என்ற இதழ் திருச்சி அறிஞர் கலைக்கோவன் அவர்களின் மேற்பார்வையில் நடத்தப் பெற்றுவருகின்றது. இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையத்தின் பல செய்திகளை, அரிய புகைப்படங்களுடன் தாங்கி வரும் இணைய இதழ் இதுவாகும். பழைய இதழ்களைக் காணும் வசதியும் இதில் உள்ளது. எனவே இது நல்லதொரு ஆவணமாக விளங்குகின்றது. ஏறக்குறைய ஆயிரம் செய்திகளைத் தொட்டுவிடும் தூரத்தில் இது வளர்ந்து வருகிறது. இது ஒரு மாத இதழாகும்.

செய்திகளை மட்டும் வழங்கும் தமிழ் இணைய இதழ்களும் உள்ளன. தட்ஸ் தமிழ்.காம், எம்.எஸ்.என் வெப்தூனியா.காம், யாஹூ தமிழ்.காம் போன்ற தளங்கள் இவ்வகையில் குறிக்கத்தக்கன. இந்நிறுவனங்கள் உலக அளவில் பெருமை பெற்றனவாகும். இவை தமிழிலும் தளங்கள் வைத்திருப்பது தமிழின் இணைய வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுவதாக உள்ளது. இவற்றின் வழி உலகத்தின் உடனடிச் செய்திகளை உடனே தெரிந்து கொள்ளமுடிகின்றது.

தமிழ் இணையப் பரப்பில் தற்போது வலைப்பூக்கள் அதாவது பிளாக்கர் என்ற அமைப்பு மிகச் சிறந்த இடத்தைப் பெற்றுவருகின்றது. கூகிள் என்ற நிறுவனம் பிளாக்கர் என்ற வசதியை வழங்குகின்றது. இந்த வசதி கூகிளின் மின்னஞ்சலான ஜிமெயில் பெற்றிருப்பவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. ஜி மெயில் முகவரியைப் பெற்றுள்ள எவரும் பிளாக்கரைத் தொடங்கலாம். எத்தனை வேண்டுமானாலும் தொடங்கலாம். பிளாக்கரில் புகைப்படங்கள், அசை படங்கள், படக் காட்சிகள் போன்ற எவற்றையும் சேர்க்க முடியும். அவற்றைப் பகிர்ந்துகொள்ள முடியும். பகிர்ந்து கொண்ட செய்திகளுக்கான விமர்சனங்களையும் பார்ப்பவர்கள் வழங்கமுடியும். இந்த வசதி மிகச் சிறப்பானதாகும். வளவுபிளாக்ஸ்பாட்.காம், மானிடள்பிளாக்ஸ்பாட்.காம், இட்லிவடைபிளாக்ஸ்பாட்.காம், மலையருவிபிளாக்ஸ்பாட்.காம், தமிழ்க்கடல்பிளக்ஸ்பாட்.காம் போன்றன இவ்வகையில் குறிக்கத்தக்கன.

இந்த வலைப்பூக்களில் இடம் பெறும் செய்திகளை ஒன்று கூட்டும் அரங்கங்கள் பல உள்ளன. அதாவது ஒருவர் வலைப்பூவில் ஒரு செய்தியைப் பதிவு செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம் அதனை ஒருங்குகூட்டும் ஒரு அமைப்புக்கு அவர் தெரிவித்து விடவேண்டும். அதன்பின் அந்த ஒருங்கு கூட்டும் இணையப்பக்கத்திற்கு வரும் அனைவருக்கும் அந்தச் செய்தி தெரியவரும். இதன் முலம் வலைப்பக்கச் செய்திகள் பரவலாக்க முடிகிறது. இந்த ஒருங்கு கூட்டும் இணையப் பக்கங்களில் திரட்டி.காம், தமிழிஷ் .காம், தமிழ்மணம் .காம், தமிழ் வெளி.காம் போன்றன குறிக்கத்தக்கன. தமிழ் இலக்கியப் பாடல்களைத் தக்க இசையோடு பல இணையதளங்கள் தருகின்றன. இசைத்தமிழை வளர்க்கும் இனிய பணி இதுவாகும். முருகன் குறித்த தமிழ் இலக்கியப் பாடல்களைக் கேட்கவேண்டுமானால் கௌமாரம்.காம் செல்ல வேண்டும். தமிழ் மரபு இசை மாறாமல் திருப்புகழ், திருமுருகாற்றுப்படை போன்றவற்றை இதில் கேட்டு ரசிக்கலாம். பன்னிரு திருமுறைகளையும் மரபு இசையுடன் தேவாரம்.காம் என்பதில் கேட்டு ரசிக்க முடியும். ஓதுவார்.காம் என்பது தமிழக இசைவாணர்களான புகழ்பெற்ற ஓதுவார்களின் இசைவடிவங்களை இணைத்துத் தரும் தளமாகும். இதுபோன்று ஆழ்வார்பாசுரங்கள் http://www.tamilheritage.org) என்ற தளத்தின் வாயிலாகக் கேட்க முடியும்.

இணையத்தமிழ் வானொலி சேவை இன்னும் குறிக்கத்தக்கதாகும். பி.பி.சி தமிழ்ச்சேவை, வேரித்தாஸ்வானொலி, சக்தி பண்பலை போன்றன இவற்றுள் குறிக்கத்தக்கன. இதனுள் மிக முக்கியமான வசதி என்னவென்றால் நாள் தேதி குறிப்பிட்டு வானொலி நிகழ்ச்சிகளைத் திரும்பக் கேட்க இயலும் என்பதுதான். வானொலி நிகழ்ச்சிகளை உரிய நேரத்தில் கேட்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இவற்றில் இல்லை. தேவையான நிகழ்ச்சியை தேவையான போது கேட்டுக் கொள்ளும் வசதி இதனுள் உள்ளது.

இதுதவிர தமிழ்த் திரை இசைப் பாடல்களைக்கேட்க பல தளங்கள் உள்ளன. தேனிசை. காம், ஓசை.காம் போன்றன இவ்வகையில் குறிக்கத்தக்கன. இவ்வாறு இசைத்தமிழ் பல நிலைகளில் முன்னேறி இணையத்துக்குள் ஆட்சி செலுத்தி வருகின்றது.

இதுதவிர குழந்தைகள் கற்பதற்கான தமிழ்ப் பாடத் தளங்கள் பல உள்ளன. குறிப்பாக தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் தளம் இதற்குப் பெரிதும் உதவுகின்றது. மழலைக் கல்வி முதல் இளங்கலைக் கல்வி வரை அனைத்து நாட்டுத் தமிழரும் கற்கும் வண்ணம் ஒலி, ஒளிக் காட்சிகளுடன் பாடங்கள் இதனுள் அமைக்கப் பெற்றுள்ளன. மேலும் இணைய வகுப்பறை சேவையும் இதனுள் தொடங்கப் பட்டுள்ளது. இதன் வழியாக வகுப்பறைத் தோற்றத்தினை வீட்டில் அமர்ந்து பெற இயலும். இணையவழித் தேர்வுகளும் இதன் வழியாக நடத்தப்படுகின்றன.

மழலைகள்.காம் என்ற தளமும் குழந்தைகளுக்கான தகவல்களை வழங்கி வருகிறது. இதுபோன்று பல தளங்கள் தமிழைக் குழந்தைகளிடம் கொண்டு சேர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றன. இதுதவிர தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் தன் பாடநூல்களை இணையத்தில் இட்டுள்ளது. இதன் காரணமாக இந்தப் பாட நூல்களை உலகத்தமிழர் காணும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் குறிப்பிட்ட பாட நூலைத் தன் குழந்தைகளுக்கு வழங்கி அவர்களின் தமிழறிவை வளர்க்க இயலும். இவ்வாறு அடுத்த தலைமுறைக்குத் தமிழ் இணையத்தின் வாயிலாகக் கொண்டு சேர்க்கப்படுகிறது. இதுதவிர நகைச்சுவைப் பக்கங்களும் உள்ளன. அப்புசாமி. காம் என்ற தளம் பிரபல எழுத்தாளர் பாக்கியம் ராமசாமியால் நடத்தப்படுகிறது. இவரின் கைவண்ணத்தில் எழுந்த நகைச் சித்திரங்களை இவற்றில் வாசிக்க முடியும். இதுபோன்று தனிநபர் இணையப் பக்கங்களும் தமிழில் அதிகமாக வாசிக்கப் பெறுகின்றன. எழுத்தாளர்களான ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சாருநிவேதிதா போன்றோர் தனக்கான இணையப் பக்கங்களை உருவாக்கியுள்ளனர். இதனுள் வாசகர்களுடனான உரையாடலையும் அவர்கள் நிகழ்த்துகின்றனர். சமையல் குறிப்புகள், ஜோதிடக் குறிப்புகள் போன்றவற்றைத் தமிழில் தரும் தளங்களும் உள்ளன.

மின்அஞ்சல் குழுமங்கள் என்ற குழு அமைப்பும் இணையத்தமிழுக்குப் பெருமை சேர்த்து வருகின்றது. அதாவது மின் அஞ்சலை ஒரே நேரத்தில் பலருக்கு அனுப்பலாம். இதற்குக் குழு மடல் என்று பெயர். இந்தக் குழு மடல் போலவே ஒரு குழுவை மின்அஞ்சல்காரர்கள் உருவாக்கிக் கொள்வார்கள். இதில் இணைவதற்கு உரிய நடைமுறைகளைச் செய்துவிட்டால் ஒருவர் மின்மடல் குழுமத்தில் உறுப்பினராகிவிடலாம். பின் ஒருவர் இடும் மடல் அனைத்து உறுப்பினருக்கும் கிடைக்கும். ஒரு செய்தியைப் பற்றி அனைவரும் விவாதிக்கலாம். இந்த முறையில் முத்தமிழ்குழுமம், மின்தமிழ் குழுமம் போன்ற மிகச் சிறப்பாக இயங்கி வருகின்றன. இவையும் பல இணையத் தமிழ் விவாதங்களுக்கு களம் அமைத்துத் தருகின்றன.

மொத்தத்தில் உலக அளவில் தமிழின் தரத்தை உயர்த்த இணையத்தமிழ் உதவி வருகின்றது. இதனைச் சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டிய கடமை அனைத்து தமிழ் இணையப் பக்கங்களுக்கும் உண்டு.

மூலம்: http://manidal.blogspot.com/2010/04/blog-post_27.html
நன்றி: பதிவுகள் ஜூலை 2010; இதழ் 127


இணைய எழுத்து

- எஸ். ராமகிருஷ்ணன் -

- மதுரையில் ஆகஸ்ட் 30ல் அன்று நடைபெற்ற உயிரோசை இணையஇதழின் ஒராண்டு விழாவில் பேசுவதற்காக நான் எழுதிய குறிப்புகள் இவை. இதில் ஒரு பகுதியை அந்த விழாவில் உரையாற்றினேன்.  நான் இணைய எழுத்தை தொடர்ந்து வாசித்து வருபவன். தினம் இதற்காக குறைந்தது ஒரு மணி நேரம் செலவிடுகிறேன். வலைப்பக்கங்கள். இணையதளங்கள், இணைய இதழ்கள், என்று தேடித்தேடி வாசிக்கிறேன். புதிதாக யார் எழுதுகிறார்கள், என்ன எழுதுகிறார்கள். அது எப்படி வாசிக்கபடுகிறது என்பதில் என் அக்கறை எப்போதுமே அதிகமானது.

இணையத்தில் இரண்டு வகையான எழுத்துகள் வாசிக்க்கிடக்கிறது. ஒன்று தங்களுக்கு பிடித்த சினிமா, புத்தகம், இசை சார்ந்த ரசனைகள் பாதித்த நிகழ்வுகள், நடப்புகளின் மீதான அவதானிப்பு . ஆன்மீகம். சமையல், வேடிக்கை, கிசுகிசு, அரசியல், ஆவேசம், என்று அவரவர் வலைப்பக்கங்களில் எழுதப்படுபவை. அதில் பெரும்பான்மை வலைப்பக்கங்களின் வழியே முதன்முறையாக எழுத துவங்கியவர்கள்.. மற்ற வகை. எழுத்தாளர்கள் இணையத்தில் எழுதுவது. இணைய தளங்கள் நடத்துவது.

நான் இதில் இரண்டாவது வகையை சேர்ந்தவன்.

நான், சாருநிவேதிதா, ஜெயமோகன், நாகார்ஜ�னன், மனுஷ்யபுத்திரன், உள்ளிட்ட பல எழுத்தாளர்கள் இணையத்தளங்கள் நடத்திவருகிறோம். இன்று தமிழின் முக்கிய படைப்பாளிகள் பலரும் இணையதளங்களில் கட்டுரைகள், பத்திகள் எழுதுகிறார்கள். ஈழத்து இலக்கியம் குறித்து அதிகம் இணையதளங்களின் வழியாக மட்டுமே அறிந்து கொள்ள முடிகிறது.

அச்சு ஊடகங்களில் காணமுடியாத அரசியல் சமூக கலாச்சார பிரச்சனைகள் பற்றிய விவாதங்கள், பத்திகள், நேரடியான கருத்துமோதல்கள், உடனடி எதிர்வினைகள் என்று இணையம் பன்மடங்கு வீரியமாக செயல்படுவதை உணர்ந்தவன் நான்.

அதே நேரம் அசட்டுதனமான கருத்துகளை கொண்டாடுதல், மலிவான சண்டைகள், தன்னை தானே புகழ்ந்து கொள்ளும் மிதமிஞ்சிய சுயபாராட்டுதல்கள். குப்பையாக கொட்டப்படும் அபிப்ராயங்கள், கவிதை என்ற பெயரில் எழுதி தள்ளப்படும் சுயபுலம்பல்கள். தமிழ்சினிமா கிசுகிசுக்களை கவர்ச்சிபடங்களுடன் வெளியிடுவது என்று அதன் இன்னொரு பக்கம் களைப்படையவும் செய்கிறது.

இணைய எழுத்திற்கு என்று இன்னமும் தனி அடையாளம் உருவாகவில்லை. இரண்டாயிரத்திற்கும் மேல் உள்ள தமிழ் வலைப்பக்கங்களில் மிக குறைவான எண்ணிக்கையில் மட்டுமே தரமாகவும், ஆக்கபூர்வமான அக்கறைகளுடனும், விவாதிக்க கூடிய படைப்புகள் காணக்கிடைக்கின்றன. இதே நிலை தான் அச்சு ஊடகங்களிலும் உள்ளது. ஆனால் அச்சு ஊடகங்களில் தேர்வு செய்யபடுதல் என்று முறை இருப்பதால் கொஞ்சமாவது வடிகட்டபடுகிறது. இணையம் அப்படியில்லை.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக சுஜாதா கணிணியை பயன்படுத்தி தமிழில் எழுதுகிறார் என்பது நாளிதழ்களில் செய்தியாக வந்தது. அதற்காகவே அவரை தேடி போய் எப்படி தமிழில் எழுதுகிறார் என்று வியப்புடன் பார்த்து வந்தேன். கணிணியில் தமிழில் உள்ளீடு செய்வதற்கான மென்பொருட்கள் அதிகம் வராத நாட்கள் அவை. அந்த வியப்பு தான் என்னை கணிணி நோக்கி உந்தியது. நானும் கணிணியில் தமிழில் எழுத வேண்டும் என்று முனைப்பு கொண்டேன்.

நண்பர் எழுத்தாளர் இரா. முருகன் முரசு மென்பொருளை ஒரு பிளாப்பியில் தந்து அதை பயன்படுத்தும் முறை பற்றி சொன்னார்; அப்படி தான் கணிணியில் தமிழில் எழுத துவங்கினேன். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக அட்சரம் என்றொரு வலைப்பதிவை தொடங்கி சில ஆண்டுகள் நடத்தினேன். அதன் பிறகு இரண்டு வருசங்களாக எனது பெயரிலே இணையதளம் நடத்திக் கொண்டிருக்கிறேன்.

இணையத்தில் உள்ள இதழ்களில் திண்ணை தான் முன்னோடியான முயற்சி. திண்ணையில் கட்டுரை வந்திருக்கிறது வாசித்தீர்களா என்று கேட்பார்கள். புதிய ஊடக வெளியாக திண்ணை அமைந்திருந்தது. அதன் பிறகு ஆறாம்திணை. அம்பலம், சிபி.காம் துவங்கி இன்று உயிர்மை. காலச்சுவடு, போன்ற அச்சு இதழ்களின் மின்வடிவங்களும், கீற்று, அதிகாலை. தமிழ்மணம், மாற்று என்று இணைய எழுத்துகளை ஒரு சேர வாசிக்கும் கூட்டு தளங்களும் வந்துவிட்டன.

உயிரோசை, சொல்வனம், பதிவுகள் போன்ற இலக்கிய இதழ்களும் வெளியாகின்றன. வார இதழ்கள், நாளிதழ்கள் கூட இணையத்தில் முழுமையாக வாசிக்க கிடைக்கினறன.

உயிரோசை இணைய இதழ் ஒரு ஆண்டு வெளிவந்து அதில் எழுதிய முக்கிய படைப்பாளிகளின் பத்து புத்தகங்கள் ஒரே நேரத்தில் வெளியாவது சந்தோஷம் தருகிறது. இணையத்தில் எழுதப்பட்ட முக்கிய கட்டுரைகள் ஒரு சேர புத்தகமாவது இதுவே முதல்முறை . உயிரோசை இணையத்தில் சிறந்த இலக்கிய இதழாக வளர்ச்சிபெற்று வருகிறது. நான் அதன் தொடர்ந்த வாசகன். அதில் வரும் பத்திகளை தொடர்ந்து வாசிக்கிறேன்.

நான் அறிந்தவரை மற்றமொழிகளில் எழுத்தாளர்கள் தங்களது இணையதளங்களை ஒரு விசிட்டிங் கார்டு போல தான் பயன்படுத்துகிறார்கள். அதில் அவர்களை பற்றிய சுயவிபரங்கள் , அவர்கள் எழுத்தின் சில மாதிரி பக்கங்கள் இடம் பெற்றுள்ளன. நேரடியாக இணையத்திற்கு என்றே எழுதுவதுதில் தமிழ் எழுத்தாளர்களே முன்னோடியாக இருக்கிறார்கள்.

உலகெங்கும் இலக்கிய இதழ்களோ அல்லது பதிப்பகங்களோ தான் எழுத்தாளர்களுக்கான வலைப்பக்கங்கள், இணையதளங்களை நடத்துகின்றன. தங்களது இதழில் எழுத்தாளர் எழுதும் பத்தியை அதில் உள்ளீடு செய்கின்றன. அதிலும் தமிழில் நடந்துள்ள மாற்றம் முக்கியமானது,

எழுத்தாளர்களே தங்களுக்கான இணைய தளத்தினை, வலைப்பக்கத்தை நடத்துகிறார்கள். அல்லது அவர் மீது அக்கறை கொண்ட வாசகர் அவருக்கான இணைய தளத்தை உருவாக்கி தந்து நடத்துகிறார். இந்த முயற்சி வேறு மொழிகளில் அதிகம் இல்லை

பெரும்பான்மையான இணைய இதழ்களின் பொது உள்ளடக்கம் சிற்றிதழ் ஒன்றின் வடிவம் போலவே உள்ளது. கதை கவிதை கட்டுரை ஒரு சினிமா பத்தி, கொஞ்சம் அரசியல் அல்லது விஞ்ஞானம் என்ற மரபான சிறுபத்திரிக்கை வடிவமே இன்றும் இணையத்தில் அதிகம் காணப்படுகிறது. இதை ஒரு குறையாகவே கருதுகிறேன். இணையத்தின் முழுமையான பலத்தை அறிந்துகொள்ளாமலே தான் இவை செயல்படுகின்றன.

வீடியோ, ஆடியோ மற்றும் ஒவியங்கள், கூடுதல் தரவுகளுக்கான இணைப்புகள், நேர்காணல்களின் தரவிறக்க வசதி, நேரடியாக எழுத்தளாருடன் தொடர்பு கொண்டு உரையாடுதல் என்று இணையத்தின் முக்கிய வசதிகள் இன்றும் இலக்கிய முயற்சிகளுக்காக மேற்கொள்ள படவில்லை.

இணையத்தில் எழுதுவதால் நிறைய சம்பாதிக்கிறார்கள் என்ற பொது வதந்தி தமிழகம் எங்கும் காணமுடிகிறது. நான் அறிந்த பல எழுத்தாளர்கள் அதை நேரடியாக என்னிடமே கேட்டிருக்கிறார்கள். உண்மையில் இணையத்தில் எழுதி சம்பாதிக்கின்றவர்கள் என்று எவரையும் இன்று வரை நான் காணவில்லை. மாறாக ஒவ்வொருவரும் தன் கையில் இருந்து ஆண்டிற்கு குறைந்தபட்சம் பதினைந்தாயிரம் செலவிட்டே இணைய தளங்களை நடத்துகிறார்கள்.

கடுமையான எதிர்வினைகள், வசைகளை நேரடியாக மின்னஞ்சல்கள் பின்னூட்டங்கள் வழியாக பெருகிறார்கள் என்பதே உண்மை. உலகெங்கும் உள்ள வாசகர்களுடன் தனது படைப்புகளை பகிர்ந்து கொள்வது என்ற எத்தனிப்பே பல எழுத்தாளர்களையும் இணையதளங்களில் எழுத வைத்துள்ளது.

இணையத்தில் நான் கண்ட முக்கிய அம்சம். இங்கே வாசகர்கள் என்று யாரும் கிடையாது. வாசிப்பவரும் ஒரு எழுத்தாளரே. அவர் என்ன எழுதுகிறார் என்பதில் வேறுபாடு இருக்கலாம். ஆனால் அவர் நிச்சயம் ஒரு வலைப்பக்கம் வைத்திருப்பார். தொடர்ந்து எழுதி வருபவராக இருப்பார். அது தான் இதன் பலம் அதுவே இதன் பலவீனம்.

தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள மேற்கொள்ளபடும் எத்தனங்களையே அதிகம் காணமுடிகிறது. அதற்காக எந்த அளவும் செயல்பட தயங்காத பலர் இணையத்தில் எழுதுகிறார்கள். பல வலைப்பக்கங்கள் அவர்களது டயரிகுறிப்புகள் என்ற அளவில் தான் உள்ளன.

சமீபமாகவே இணைய எழுத்தாளர்கள் தங்களது ரசனையை , எழுத்தாற்றலை மேம்படுத்திக்கொள்ள நேரடியாக சந்தித்து கொள்கிறார்கள். உலக சினிமாவை திரையிடுவது. சிறுகதை பயிலரங்கம் நடத்துவது. குறும்படங்கள் உருவாக்குதல் என்று தங்களின் செயல்தளங்களை விரிவு படுத்தி வருகிறார்கள். இது பாராட்டுக்குரிய முயற்சி.

இணையம் அச்சு ஊடகங்களை தாண்டிய நவீன ஊடக வெளி. அதை எப்படி பயன்படுத்தி கொள்ள போகிறோம் என்பது எழுதுபவரின் கையில் தானிருக்கிறது. பக்க கட்டுபாடு இல்லை என்று பொதுவாக சொல்லிக் கொண்டாலும் இரண்டு பக்கங்களுக்கு மேலாக எழுதப்படும் பதிவுகளை பலரும் படிப்பதில்லை என்பது தான் உண்மை. பின்நவீனத்துவக் கருத்துகள், மொழியாக்கங்கள், தத்துவம் சார்ந்த உரையாடல்கள், விஞ்ஞானம் பற்றிய ஆழ்ந்த கட்டுரைகள் இணையத்தில் வெளியாகின்றன. ஆனால் அவை வாசகர்களை கவனிப்பதேயில்லை.

அது போலவே தொடர்ந்து தமிழ் வலைப்பக்கங்களை வாசித்து வரும்போது பத்துக்கும் குறைவானவர்களே தீவிரமாக தொடர்ந்து பல்வேறு துறை சார்ந்து எழுதி வருவதை காணமுடிகிறது. மற்றவர்கள் மிதமிஞ்சிய வேகத்தில் எழுத துவங்கி சில மாதங்களில் இணையத்தை விட்டே போய்விடுகிறார்கள். அல்லது ஒதுங்கி கொண்டு விடுகிறார்கள். சலிப்படைந்து திட்ட துவங்குகிறார்கள். சிலருக்கு வலைப்பக்கம் என்பது அன்றாட செயல்படாகியிருக்கிறது. எழுத வேண்டும் என்ற கட்டாயத்திற்காக எதையாவது உள்ளிடுகிறார்கள்.

சமீபமாக இணையத்தில் எழுத துவங்கிய சிலர் இதிலிருந்து அச்சு ஊடகங்களுக்கு தாவியிருக்கிறார்கள். பத்தி எழுதுகிறார்கள். அது போலவே பல ஆண்டுகளாக எழுதாமல் ஒதுங்கிய இருந்த இலக்கியவாதிகள் இணையத்தின் வருகையால் அச்சு ஊடகங்களை விலக்கி நேரடியாக இணையத்தில் எழுத வந்திருக்கிறார்கள். வார மாத இதழ்கள் இணைய எழுத்தாளர்களின் படைப்புகளை வாசித்து அடையாளம் காட்டுகின்றன. பெண்கள் வேறு எந்த ஊடகங்களையும் விட இணையத்தின் வழியே தங்களை வெளிப்படுத்திக் கொள்வதில் அதிக ஈடுபாடு காட்டுகிறார்கள். அது மிக முக்கியமான வரவு. இது போலவே ஒய்வு பெற்றவர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலருக்கும் வலைப்பக்கம் தங்களுக்கான தொடர்பு வெளியாக மாறியிருக்கிறது.

வலைப்பக்கங்கள் பொதுவாக மேடைப்பேச்சை போன்ற உடனடி கைதட்டல்களுக்கானவையாக கருதப்படுகின்றன. அப்படி இருக்க வேண்டியது அவசியமில்லை. அதனால் தான் பின்னூட்டம் இடுவதை இவ்வளவு பரபரப்பாகவும் நான் தான் முதலில் என்று கொண்டாட்டத்துடனும் செயல்படுகிறார்கள். பின்னூட்டம் ஒரு எதிர்வினை மட்டுமே. அதை விரும்புவதும் விலக்குவதும் படைப்பாளியின் சுதந்திரம்.

பிரிண்ட் அவுட் செய்து கையில் வைத்து மறுபடி படிக்க செய்யும் படியாக பல கட்டுரைகள் இணையத்தில் வெளிவந்துள்ளன. அவை இணையத்திலும் அதிகம் கண்டுகொள்ளப்படாமலே தானிருக்கின்றன.

சுற்றுசூழல், சமகால அரசியல், விஞ்ஞானம், தொழில்நுட்பம், தமிழ் மரபு சார்ந்த சிலரது வலைப்பதிவுகள் காத்திரமானவை. ஆனால் அதனை வாசிக்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை பார்த்தால் மிக குறைவு. இணைய எழுத்திலும் சினிமாவே பிரதானமாக உள்ளது. அதிலும் கிசுகிசு, அதிரடி விமர்சனம், கவர்ச்சிபடங்களுக்கு அதிகமான வருகை காணமுடிகிறது.

அச்சு இதழ்களில் இல்லாத ஒரே வித்தியாசம் தமிழ்சினிமாவை தாண்டி பலரும் வெவ்வேறு மொழி படங்களை பற்றி எழுதுகிறார்கள் என்பதே. ஆனால் அவை அந்த படங்களை பற்றிய தங்களது ரசனையை மட்டுமே வெளிப்படுத்துகின்றன. ஆய்வு மிக குறைவே.

லத்தீன் அமெரிக்க எழுத்தாளரான போர்ஹேயின் வாழ்க்கை வரலாற்றை பற்றி ஏதாவது ஆவணப்படம் இருக்கிறதா என்று தேடினால் மறுநிமிசம் அவரது நேர்காணல், ஆவணப்படம். கவிதை பற்றிய அவரது சொற்பொழிவுகள் என்று நாலைந்து மணி நேரம் காணும் அளவிற்கு இணையத்தில் கிடைக்கின்றன. ஆனால் தமிழ் எழுத்தளார்களை பற்றிய ஆவணப்படங்கள், அவர்களது நேர்காணல்களின் வீடியோ பதிவுகள், மற்றும் அவர்களது சொற்பொழிவுகளின் ஆடியோ என எதையும் காண முடிவதில்லை. அரிதாக ஒன்றிரண்டு பதிவுகள் காணப்படுகின்றன. ஆனால் அவை தரவிறக்கம் செய்ய இயலாது. அத்துடன் அவை நேரலையாக காணவும் போராட வேண்டியிருக்கிறது.

வெவ்வேறு இலக்கிய கூட்டங்கள், கருத்தரங்கங்கள் என்று எழுத்தாளர்கள், விமர்சகர்கள் ஆய்வாளர்கள் தொடர்ந்து உரையாற்றி வருகிறார்கள். ஆனால் அவை அந்த நிகழ்வோடு காற்றில் கரைந்து போய்விடுகின்றன. அதை முறையாக பதிவு செய்து இணையத்தில் தர முன்வந்தால் தமிழின் மாற்று சிந்தனை வெளி அதிகம் பேரை சென்று அடையும்.

கல்வி புலங்கள் தங்களது செயல்பாடுகளை இணையத்தில் தொடர்ந்து தரவேற்றம்செய்வதன் வழியே பொது வாசகர்கள் அதை அறிந்து கொள்ள செய்யய இயலும். அது போலவே சாகித்ய அகாதமி தமிழ் வளர்ச்சி துறை, கலை பண்பாட்டு துறை உள்ளிட்ட முக்கிய அரசு அமைப்புகள் தங்களது கருத்தரங்கங்கள், நிகழ்ச்சிகள், படைப்பாளிகளை பற்றிய ஆவணப்படங்கள் இணையத்தில் எளிதாக பார்வையிட வசதி செய்து தருவதன் வழியே அவை இன்னும் அதிகம் பார்வையாளர்களை சென்றடைய கூடும்

ஈழத்து படைப்பிலக்கியங்களை உலகின் எந்த மூலையில் இருந்தாலும் எளிதாக வாசிக்க கிடைக்கும் விதத்தில் ஈழம்.நெட் என்ற இணையம் உருவாக்கபட்டிருக்கிறது. இதில் முக்கிய படைப்பாளிகளின் நூல்கள் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள வசதி உள்ளது. இது ஒரு முன்னோடியான முயற்சியாகும். தமிழில் இது போன்ற கூட்டு முயற்சி அவசியம் தேவையானதாக உள்ளது.

தமிழ் இணையத்தில் உள்ளீடு செய்யப்பட்ட பல முக்கிய தகவல்கள், கட்டுரைகள், விவாதங்கள், இன்று வரை ஒருமித்து சேகரமாக்கபட்டு ஆவணப்படுத்தபடுதல் வேண்டும். தமிழ் எழுத்தாளர்கள் பற்றி சுயவிபரங்கள், புகைப்படங்கள், முக்கிய புத்தகங்கள், அதன் பதிப்பகங்கள், விமர்சனங்கள் என்று அடங்கிய விரிவான தகவல் சேமிப்பு தளங்கள் உருவாக்கபடவேண்டும். இதற்கான ஒன்றிரண்டு முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தமிழ் விக்கிபீடியா போன்றவற்றில் உள்ள தகவல்பிழைகள் முறையாக சரி செய்யப்படல் வேண்டும்.

இணையத்தில் புதிதாக எழுத வருகின்ற பலரும் எதை படிப்பது. என்ன சினிமாவை பார்ப்பது.எந்த இணைய தளங்களை வாசிப்பது என்று வழிகாட்டுதலை விரும்புகிறார்கள். அது அச்சு இதழில் காணமுடியாத வசதி. அதை எளிதாக பலரும் செயல்படுத்த முடியும். நான் தொடர்ந்து நான் வாசிக்கும் இணையதளங்கள், புத்தகங்கள், திரைப்படங்களை சிபாரிசு செய்கிறேன். இதற்காகவே எவராவது முன்வந்து ஒரு இணைய தளம் தொடங்கப்பட்டால் அது அதிகம் உதவிகரமாக இருக்க கூடும்.

தமிழ் வலைப்பக்கங்களுக்கான இன்டெக்ஸ் ஒன்று உருவாக்கபடுதல் வேண்டும். அதன்வழியே எவரும் எந்த இணையதளத்தையும் உடனடியாக பார்வையிட முடியும். அது போலவே வாசிக்க கிடைக்காத பல முக்கிய புத்தகங்கள் ஆங்கிலத்தில் ஆன்லைனில் வாசிக்க கிடைக்கின்றன. தமிழில் அது இன்றும் சாத்தியமாகவில்லை.

நுண்கலை, பண்பாடு சார்ந்து ஒவ்வொரு ஊரிலும் உள்ள முக்கிய இடங்கள், நிகழ்வுகள் குறித்த பதிவுகள் எண்ணிக்கையற்று ஆங்கிலத்தில் உள்ளன. தமிழகத்தின் பண்பாட்டு புள்ளிகள் இணையத்தில் இன்னமும் ஒருங்கிணைக்கபடவில்லை.

இணைய எழுத்து நாளை இன்னமும் அதிகமான முக்கியத்துவம் கொண்டிருக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. புதிதாக எழுத வருகின்றவர்கள் இணையத்தின் வழியே அறிமுகமான போதும் தனித்த படைப்பாளியாக உருவாக அதிக சாத்தியங்கள் உள்ளன. அது போலவே மாற்று சிந்தனைகளுக்கு இணையம் இன்னமும் கூடுதலான முக்கிய ஊடகமாக அமையும்.

ஆவணபடுத்துதல், அறிமுகம் செய்வது. பல்துறைகளை ஒன்றிணைத்தல், புதிய வாசக தளங்களை உருவாக்குதல், அடிப்படை மாற்றங்கள் குறித்த விவாதங்களை உருவாக்குதல், குறும்படங்கள், ஆவணப்படங்களை எடுப்பவர்கள் இணையத்தின் வழியே அதை வெளியிடுவது என்று இணையம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன. அதன் ஒருபகுதியாகவே இணையத்தில் எழுதுவதும் இருக்கிறது.

கசடுகளை நீக்கி தேவையானதை அறிந்து கொள்வது வாசகனின் கையிலே உள்ளது. இணையம் புதிய வாசகபரப்பை, எழுத்தை உருவாக்கும் தடையற்ற சாத்தியங்களை தருகிறது. அதன் வளர்ச்சியும் செயல்பாடும் கூட்டுமுயற்சிகளால் மட்டுமே மாறுதல் அடையும் என்று தோன்றுகிறது.

மூலம்: http://www.sramakrishnan.com/
நன்றி: பதிவுகள் செப்டம்பர் 2009; இதழ் 117


தமிழில் இணையத்தள வளர்ச்சி பற்றியதொரு கருத்தரங்கு!

- முனைவர் மு. இளங்கோவன் -

22.08.2008 மாலை சிங்கம்புணரியில் நீண்ட நேரம் நின்றும் பேருந்து இல்லை.மழை பெய்தபடி இருந்தது.மதுரை செல்லும் பேருந்து வரவில்லையாதலால் கொட்டாம்பட்டி சென்றால் விரைவுப் பேருந்துகள் கிடைக்கும் என்றனர்.கொட்டாம்பட்டிக்கு அங்கிருந்து நகர் வண்டியில் சென்றேன்.அங்கிருந்தும் பேருந்துகள் வாய்ப்பாக இல்லை.கூட்டம் மிகுதியாக இருந்தது.அவ்வழியில் மகிழ்வுந்து ஒன்று வந்தது.அதில் ஏறிக்கொண்டேன்.

கையில் கைப்பையும்,மடிக்கணினிப் பையும் தோள்பட்டைகளைப் பதம் பார்த்தன.இப்பொழுது செலவு இனித்தது.போக்கில் இருக்கும் பொழுது அறிஞர் தமிழண்ணல் அவர்கள் செல்பேசியில் அழைத்தார்கள்.பிறகு பேசுவதாக ஐயாவிடம் தெரிவித்துவிட்டு, வரலாற்றுச் சிறப்பு மிக்க தமிழ் இணையக் கருத்தரங்கை ஏற்பாடு செய்த நண்பர் முத்துராமன் அவர்களுக்குப் பேசினேன்.

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு எதிரில் உள்ள உணவகத்திற்கு முன்பாகக் காத்துள்ளதைத் தெரிவிக்க மகிழ்ந்தேன்.கால் மணி நேரத்ததில் அன்பர் முத்துராமன் இருந்த இடம் சென்று சேர்ந்தேன்.இரு மாணவர்களும் காத்திருந்தனர்.

அங்குள்ள உணவகத்தில் உணவை முடித்தோம்.காலையில் சிற்றுண்டி உண்டதும்,தொடர்ந்து செலவுக் களைப்பு,பேச்சு,பரபரப்பு என மிகவும் சோர்வாக இருந்தேன்.உணவை முடித்துக் கொண்டு காமராசர் பல்கலைக்கழகம் அருகில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியை இரவு பத்து மணியளவில் அடைந்தேன்.

அறிஞர் தமிழண்ணல் ஐயாவிற்குச் செல்பேசியில் பேசி, நாளைய நிகழ்ச்சி பற்றி சொன்னேன். அண்ணல் அவர்களிடம் பல்லாண்டுகளாக ஒரு விருப்பத்தை முன்வைத்து அடிக்கடி நினைவூட்டி,எழுதியும்,பேசியும் வைத்திருந்த ஒரு விருப்பம் நிறைவேற உள்ளதை அண்ணல் அவர்கள் சொன்னதும் அளவிலா மகிழ்ச்சியடைந்தேன்.நான் கேட்டிருந்த ஒரு பொருளை நாளை வந்தால் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்தார்கள்.நிகழ்ச்சி முடிந்ததும் நாளை வந்து பெற்றுக்கொள்வதாக உறுதிகூறி,இரவு 11.30 மணியளவில் ஓய்வெடுத்துக் கொண்டேன்.

காலை 7.30 மணிக்கு அன்பர் முத்துராமன் அவர்கள் அறைக்கு வந்துசேர்ந்தார். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக கல்லூரியை
ஒருமுறை சுற்றிப்பார்க்க நினைத்து என் ஒளிப்படக் கருவியுடன் சென்று பல படங்களை எடுத்துக்கொண்டு அறைக்கு வந்து காலைக் கடமைகள் முடித்து நிகழ்ச்சிக்கு ஆயத்தமானேன்.

நாடார் இன மக்களால் அவர்களின் பொருள் உதவியால் இயங்கக்கூடிய அரசு உதவிபெறும் தன்னாட்சிக்கல்லூரி வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி ஆகும்.இக்கல்லூரி ஏறத்தாழ நாற்பது (1965) ஆண்டுகளுக்கு முன்னர்த் தொடங்கப் பட்டுள்ளது.பல்வேறு உயர் படிப்புகளை வழங்கும் நல்ல நிறுவனம்.நல்ல கட்டட வசதிகள்.ஆடுகளங்கள் உள்ளன.போக்குவரவு வசதிஉடையது. நல்ல இயற்கைச் சூழல்.கல்லூரி வனப்பை எண்ணும்பொழுது மகிழ்வு தருகிறது.

காலை 9 மணி அளவில் தனசேகரபாண்டியன் அரங்கில்(விழா நடைபெறும் இடம்) உள்ள இணைய வசதிகள்,கணிப்பொறி வசதிகள்,இருக்கை அமைவுகள் யாவற்றையும் ஒரு முறை சரிபார்த்துக்கொண்டேன்.ஏற்பாடுகள் அனைத்தும் மிகச்சிறப்பாக இருந்தது.கல்லூரி நூலகத் துறையில் நடைபெறும் முதல் கருத்தரங்கம் என்பதால் விடுமுறை நாள் எனினும் மாணவர் கள் ஈடுபாட்டுடன் கலந்துகொண்டனர்.

பின்னர்க் கல்லூரி முதல்வர் அறைக்கு என்னை அழைத்துச்சென்று அறிமுகம் செய்தனர். கல்லூரியின் நிர்வாகத்தைச் சிறப்பாகச் செய்துவரும் பொறுப்பாளர்களைக் கண்டு மகிழ்ந்தேன். கல்லூரியின் சிறப்பை உரையாடித் தெரிந்துகொண்டேன்.என் தமிழ் இணைய ஈடுபாட்டைக் கண்டு அனைவரும் பாராட்டினர்.அனைவரும் விழா அரங்கை அடைந்த பொழுது மாணவத் திரள் மிகுதியாக இருந்தது. 500 மேற்பட்ட மாணவர்கள் இருந்தனர்.

காலை சரியாக 10.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது.

கல்லூரிப்பொருளாளர் திரு மணிமாறன் அவர்கள் தலைமை தாங்கினார்,திரு குணசேகரன் அவர்கள் வரவேற்புரை.கல்லூரி முதல்வர் மகாத்மன்ராவ் அவர்கள் மிகச் சிறப்பாக என்னை அறிமுகம் செய்துவைத்து உரையாற்றினார்.

முற்பகல் 11 மணிக்குத் தமிழில் இணையத்தள வளர்ச்சி என்னும் என் உரை தொடங்கியது. பகல் ஒரு மணிவரை நீண்ட காட்சி விளக்க உரை மாணவர்களுக்குச் சலிப்பின்றி இருந்ததை உணர்ந்தேன்.என் பேச்சின் விவரம் வருமாறு:

(நேற்றே திருச்சியில்,மேலைச்சிவபுரியில் உரையாற்றிய செய்திகள் சில இடம்பெற்றாலும் அடிப்படைச் செய்திகள் ஒன்று என்பதால் மீண்டும் சிலவற்றை நினைவுகூர்தல் தேவையாகிறது.)

உலகில் கணிப்பொறி தோன்றிய விதம்,தமிழ் எழுத்துகள் உள்ளிடப்பெற்று அச்சான கணிப்பொறிவழி உருவான முதல் நூல் பற்றிய செய்தி, தமிழ் எழுத்துகள் தொடக்கத்தில் ஏற்படுத்திய சிக்கல்,தரப்படுத்தப்பட்ட எழுத்துகள்,பல்வேறு தமிழ் மென்பொருள்கள்,தமிழ் மென்பொருள் உருவாக்கத்திற்கு உழைத்தவர்கள்,சீனர்களின் மொழிப்பற்று,தரப்படுத்தப்பட்ட விசைப்பலகை,தமிழ் இணைய மாநாடுகள்,இதற்காக உழைத்த அறிஞர் சிங்கப்பூர் கோவிந்த சாமி அவர்களின் பங்களிப்பு,முரசு முத்தெழிலன், வா.செ.குழந்தைசாமி,முனைவர் ஆனந்த கிருட்டிணன்,முனைவர் பொன்னவைக்கோ அவர்களின் ஈடுபாடு,பணிகள் பற்றிப் பலபட எடுத்துரைத்தேன்.

தமிழக அரசு கலைஞர் கருணாநிதி அவர்களின் ஆட்சிக்காலத்தில் மிகபெரிய தமிழ் இணைய மாநாடு நடத்தியதையும்,தமிழ் இணையப்பல்கலைக்கழகம் உருவான விதத்தையும் எடுத்துரைத்தேன்.சேந்தமங்கலம் முகுந்தராசுவின் எ.கலப்பை,காசியின் தமிழ்மணம் பற்றி காட்சி விளக்கத்துடன் என் பேச்சு தொடர்ந்தது.

தமிழில் வெளிவரும் மின்னிதழ்களை அறிமுகம் செய்தேன். நாளிதழ், வார இதழ், மாத இதழ் எனப் பல பிரிவுகளாகப் பிரித்துகொண்டு விளக்கினேன். தினமலர் நாளிதழ் உலக அளவில் தமிழர்களால் படிக்கப்படும் இதழாகவும்,பல்வேறு வசதிகளை இவ்விதழ் தருவதையும் விரிவாக எடுத்துரைத்தேன்.(இதனைத் தினமலர் மதுரைப் பதிப்பில் மகிழ்ச்சியுடன் வெளியிட்டது.24.08.08).

அதுபோல் தினகரன், மாலைமலர், தமிழ்முரசு, தினமணி, திண்ணை, தமிழ்க்காவல், தெளிதமிழ், தமிழம். நெட், தட்சுதமிழ், வணக்கம் மலேசியா, லங்காசிறீ, புதினம், பதிவுகள்,  தினக்குரல், கீற்று உள்ளிட்ட பல இதழ்களைப் பற்றி விளக்கிப் பேசினேன்.காட்சி வழியாகவும் விளக்கினேன். அவையினர் இவ்வளவு இதழ்களையும் கண்டு வியப்பும் மலைப்பும் அடைந்தனர்.

பிறகு தமிழ்மரபு அறக்கட்டளையின் தளத்திற்கு அழைத்துச் சென்று அங்குள்ள மரபுச் செல்வங்களை விளக்கினேன்.மேலும் தமிழ் இணையப்பல்கலைக்கழக நூலகம்,படிப்புகள், ஓலைச்சுவடிகள், பண்பாட்டுக்கலைகள்,திருக்கோயில் படங்கள் உள்ள அதன் சிறப்புகளை எடுத்துரைத்தேன்.

அதுபோல் மதுரைத்திட்டம்,சென்னை நூலகம், காந்தளகம் விருபா, விக்கிபீடியா பற்றியெல்லாம் காட்சி வழியாகவும் உரை வழியாகவும் பல தகவல்களை அவைக்கு வழங்கினேன்.ஒரு மணிக்கு உணவு இடைவேளைக்காக அனைவரும் பிரிந்தோம்.இதற்குள் இச்செய்தி ஊடகங்கள் வழியாக மதுரை மக்களுக்கும் உலகிற்கும் தெரியவந்தது.தட்சுதமிழ் இணைய இதழ் இச்செய்தியை உடன் வெளியிட்டு உலகிற்கு முதலில் தந்தது.

பிற்பகல் உணவுக்குப்பிறகு 2,30 மணிக்கு மீண்டும் பேசத் தொடங்கினேன்.தமிழ் விசைப் பலகை 99 பற்றியும் அதில் உள்ள சிறப்புகள்,அமைப்புகள் பற்றியும் காட்சி விளக்கத்துடன் செய்து காட்டியபொழுது அனைவரும் மகிழ்ந்தனர்.

அதன் பிறகு வலைப்பூக்கள் உருவாக்கும் முறை பற்றி விளக்கிக் காட்டப்பட்டது.தமிழில் மின்னஞ்சல் செய்வது, உரையாடுவது, குழுவாக இயங்குவது பற்றியெல்லாம் விரிவாகப் பேசினேன்.மாலை 4.30 மணிக்கு என் காட்சி விளக்க உரை நிறைவுக்கு வந்தது.அனைவரும் உள்ளம் நிறைந்த அன்போடு விடைதந்தனர்.

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நூலகத் துறையினர்க்கு அளவுகடந்த மகிழ்ச்சி.கருத்தரங்கம் வெற்றியுடன் நடந்ததால் கல்லூரி முதல்வர் நூலகர் அவர்களையும் ஒருங்கிணைப்பாளர்கள் முத்துராமன்,கவிதா தேவி ஆகியோரையும் என் கண்முன் பாராட்டினார்.  அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு அறிஞர் தமிழண்ணல் இல்லத்திற்கு வந்து உரையாடி னேன்.அவர் தமிழுக்குப் பாதுகாத்து வைத்திருந்த மிகப்பெரிய செல்வத் தொகுதியை என் பல ஆண்டுகால விருப்பத்தை நிறைவேற்றும் படியாக வழங்கினார்.அண்ணல் அவர்களைச் சில படங்கள் எடுத்துக்கொண்டேன்.

28.08.2008 இல் வெளியிட உள்ள பத்து நூல்களை எனக்கு அன்பளிப்பாக வழங்கினார். அவற்றைப் பெற்றுக்கொண்ட மகிழ்விலும் அண்ணலைக் கண்ட மகிழ்விலும் மூடுந்தில் ஏறிச் சிறிது தூரம் வந்த பிறகு உடன் அண்ணல் செல்பேசியில் அழைத்தார்.முதன்மையான அந்தத் தமிழ்ச் செல்வத்தைப் பேச்சுவாக்கில் அங்கே மிசைமேல் வைத்து வந்தது அப்பொழுதுதான் அண்ணல் அழைப்பிற்குப் பிறகு நினைவுக்கு வந்தது.மீண்டும் அண்ணல் இல்லமான ஏரகத்திற்குத் திரும்பினேன்...

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
நன்றி: பதிவுகள் செப்டெம்பர் 2008; இதழ் 105


தமிழில் இணைய இதழ்கள்!

- முனைவர் க.துரையரசன், தமிழ் இணைப்பேராசிரியர் -

முன்னுரை: செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படங்கள் முதலானவற்றைத் தகவல் தொடர்பு ஊடகங்கள் என்று கூறுவர். அவ்வரிசையில் இணையத்தையும் இணைத்துக் கொள்ள வேண்டும். பிற தகவல் தொடர்பு ஊடகங்களைக் காட்டிலும் முழு வீச்சில் இணையம் வளர்ச்சியுற்று வருகிறது என்றே கூற வேண்டும். எதிர்காலத்தில் பிற ஊடகங்களைப் புறந்தள்ளிவிட்டு இது முன்னணி இடத்தைப் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.

இத்துணை சிறப்பு வாய்ந்த இணையத்தின் வழி இதழ்கள் வெளி வருகின்றன. இதனை இணைய இதழ்கள் அல்லது மின்னிதழ்கள் (e- journals /e-zines) என்று குறிப்பிடுவர். அச்சு வடிவில் வெளி வருகின்ற இதழ்களைப் போலவே காலம் (நாளிதழ், வார இதழ்) மற்றும் பொருண்மை அடிப்படையில் (அரசியல் இதழ், பக்தி இதழ்) மின்னிதழ்களையும் வகைப்படுத்தலாம். அனைத்து வகை மின்னிதழ்களைப் பற்றியும் இங்குக் குறிப்பிடின் இக்கட்டுரை மிக நீளும் என்பதால் தமிழ் இலக்கியம் சார்ந்த படைப்புகளைத் தாங்கி, அச்சில் வெளிவராமல் இணையத்தில் மட்டுமே வெளிவருகின்ற குறிப்பிடத்தக்க மின்னிதழ்கள் பற்றி மட்டும் இக்கட்டுரை விளக்க முற்படுகிறது.

திண்ணை: வீட்டில் திண்ணை வைத்துக் கட்டுவது தமிழர் மரபு. நாகரிக உலகில் இம்மரபு மெல்ல அற்றுப் போய்விட்டது என்றே கூற வேண்டும். இன்றைய காலக்கட்டத்தில் கிராமத்தில் கட்டப்படுகின்ற வீடுகளில்கூட திண்ணைகளைக் காணோம்.

இத்திண்ணைகளில் அமர்ந்து உள்ளூர் செய்தி முதல் உலகச் செய்தி வரை பேசப்படும். இது வெறும் திண்ணைப் பேச்சாக (வெட்டிப் பேச்சு) இல்லாமல் அறிவார்ந்த செய்திகளை ஆராய்கின்ற பேச்சாக இருக்கும். திண்ணையில் அமர்ந்து பலரும் பல விதமான செய்திகளைப் பேசுவதைப் போல திண்ணை மின்னிதழிலும் யார் வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். இதன்பொருட்டுத்தான் இவ்விதழுக்குப் இப்பெயர் ஏற்பட்டதாக அறியமுடிகிறது.

இம் மின்னிதழில் கலை, அரசியல், அறிவியல், சமூகம், கதை, கட்டுரை, கவிதை, இலக்கியம் சார்ந்த செய்திகள் எனப் பல்வகைச் செய்திகள் இடம் பெறுகின்றன.

இவ்விதழ் இலாப நோக்கமின்றி செய்திகளைக் கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் மட்டுமே செயற்படுகிறது. இதனைப் பார்வையிடுவதற்கோ, படைப்புகளை வெளியிடுவதற்கோ கட்டணம் கிடையாது. அதுபோல படைப்பாளிகளுக்கும் இவ்விதழ் எவ்விதமான
கட்டணங்களும் வழங்குவதில்லை. அதாவது வாங்குவதும் இல்லை; கொடுப்பதும் இல்லை.

இம்மின்னிதழ் ஒருங்குறியீட்டு (Unicode) முறையில் இயங்குதல், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று புதுப்பிக்கப்படுதல், தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக வெளிவருதல், பழைய இதழ்களைப் பார்வையிடும் வசதி வழங்கல், பிற இணைய தளங்கள் மற்றும் மின்னிதழ்களுக்குச் செல்ல இணைப்பு வழங்கல் உள்ளிட்டவை இதன் சிறப்புகளாக அமைந்துள்ளன. இதன் இணைய முகவரி;
www.thinnai.com

தட்ஸ் தமிழ்: திண்ணையைப் போல முழுக்க முழுக்க இலக்கிய இதழாக இல்லாமல் நாளிதழைப் போல இம்மின்னிதழ் வெளி வருகிறது. இதில் பல்துறைச் சார்ந்த விரிவான செய்திகள் வெளிவந்தாலும்கூட இலக்கியச் செய்திகளுக்கு முக்கியத்துவம் அளித்து வெளியிடுவது
குறிப்பிடத்தக்கது.

இது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளில் வெளிவருகிறது என்பதும், இதில் செய்திகள் உடனுக்குடன் வெளியிடப்படுகின்றன (Update) என்பதும் வியத்தகு செய்தியாகும். இதில் தமிழகச் செய்திகள் மட்டுமின்றி இந்தியா,
இலங்கை உள்ளிட்ட உலகச் செய்திகளும் கவிதை, கட்டுரை, சிறுகதை முதலான இலக்கியச் செய்திகளும் இடம் பெற்றுள்ளன. மேலும், திரைத்துறை உள்ளிட்ட ஒளிக்காட்சிகளையும் இதில் காணலாம். இதன் இணைய முகவரி; www.thatstamil.oneindia.in

வார்ப்பு: இது, கவிதைக்கென்று வெளிவருகின்ற இணைய இதழ்; வாரம் தோறும் வெளிவருகின்றது. இது 1998 ஆம் ஆண்டு ‘நிக்குமோ நிக்காதோ’ என்ற பெயரில் இணைய இதழாக வெளிவந்தது. கவிஞர் இசாக் அவர்களின் ஆலோசன்ப்படி கவிஞர் மாலியன் அவர்களால் வார்ப்பு என்ற பெயர் மாற்றம் பெற்றது. இவ்விதழின் பதிப்பாசிரியர் பா.மகாதேவன். இதுநாள் (21-03-2008) வரை இதன்கண் 285 கவிஞர்களின் 1195 கவிதைகள் இடம் பெற்றுள்ளன. கவிஞர்கள், கவிதைகள், விமர்சனங்கள், நேர்காணல்கள், கட்டுரைகள் என்னும் தலைப்புகளில் செய்திகளைப் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் அறிவுமதி, கனிமொழி போன்ற புகழ் பெற்ற கவிஞர்களின் கவிதைகள் வெளிவந்துள்ளமை கொண்டு இதன் சிறப்பை வெளிப்படுத்தும்.

இதன்கண் அமைந்துள்ள நூலகம் என்ற இணைப்பின் வழி சென்று புதிதாக வெளிவந்துள்ள தமிழ் நூல்களைப் பற்றிய விமர்சனத்துடன் கூடிய தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம் என்பது மிகச் சிறப்பான ஒன்றாகக் கருதலாம். இவ்விதழ் ஒருங்குறியீட்டு முறையில்
வெளிவருவதால் எழுத்துரு (Fonts) சிக்கல் ஏதுமில்லை.

நாட்டுப்புறப் பாடல்களை நாட்டின் சொத்து என்று கருதுகின்ற இவ்விதழின் பதிப்பாசிரியர் பா.மகாதேவன் அதனைப் பாதுகாத்து வைக்க வேண்டிய கட்டாயமும் அவருக்கு இருப்பதாகக் குறிப்பிடுகிறார். எனவே எதிர்காலத்தில் நாட்டுப்புறப் பாடல்களையும், மொழிபெயர்ப்புக் கவிதைகளையும் வகை தொகைப்படுத்தி எளிதில் பெறுகின்ற வகையில் வெளியிடுகின்ற திட்டமும் இவருக்கு இருப்பதை அறிய முடிகிறது. இதன் இணைய முகவரி; www.vaarappu.com

பதிவுகள்: 2000 ஆம் ஆண்டிலிருந்து கனடாவிலிருந்து வெளிவருகின்ற இந்த இதழின் ஆசிரியர் வ.ந.கிரிதரன். இது ஒருங்குறியீட்டு முறையில் மாதந்தோறும் வெளிவருகின்ற மின்னிதழ் ஆகும். அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம் என்ற முழக்கத்துடன் வெளிவருகின்ற இதன்கண் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, நூல் விமர்சனம், அறிவியல், நூல் அங்காடி ஆகிய இலக்கியம் சார்ந்த செய்திகளைக் காண இயலும். தமிழ்க் கலைக்களஞ்சியம் போன்று இணையத்தில் தகவல் களஞ்சியமாக திகழ்கின்ற விக்கிபீடியா, மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க தமிழ் இணைய தளம் மற்றும் இணைய இதழ்களுக்கான இணைப்புகளும் இதன்கண் வழங்கப்பட்டுள்ளன.

இலவசமாக கிடைக்கின்ற இவ்விதழில் ஆக்கங்களை வெளியிடவும், பார்வையிடவும் கட்டணம் ஏதுமில்லை. ஆயினும் இதன் வளர்ச்சிக்காக ஆண்டுக் கட்டணமாக 24 டாலர்களை விருப்பமுடையவர்கள் வழங்குமாறு கோருகின்றனர். இதன் இணைய முகவரி; www.pathivukal.com

மரத்தடி: மரத்தடியில் உட்கார்ந்து இளைப்பாறலாம். வெட்டிக் கதை பேசலாம். உருப்படியான கதைகளைப் பேசி அறிவைப் பெருக்கலாம். மரத்தடி என்ற இம்மின்னிதழ் இளைப்பாறவும், உருப்படியான தகவல்களைப் பரிமாறிக்கொள்ளவும் வகை செய்கிறது. மரத்தடிக் குழுமத்தில்
உறுப்பினராக உள்ளவர் மட்டுமே இதில் தங்கள் படைப்புகளை இட முடியும். ஆயினும் வரும்பும் எவரும் இதில் உறுப்பினராகலாம். கட்டணம் எதுவும் கிடையாது. கதை, கவிதை, கட்டுரை முதலியவற்றை இவ்விதழ் வெளியிடுகிறது. படைப்புகளை ஒருங்குறியீட்டு முறையில் வெளியிடுவது இதன் சிறப்பாகும். ஆயினும் இது குறித்த காலத்தில் வெளிவருவதில்லை. இதன் இணைய முகவரி; www.maraththadi.com

தமிழம் நெட்: மாதந்தோறும் வெளிவரும் இம்மின்னிதழைப் பொள்ளாச்சி நசன் நடத்தி வருகிறார். இவ்விதழ் பல அரிய செய்திகளைத் தாங்கி வெளிவருகிறது. தமிழறிஞர்களின் வாழ்க்கைக் குறிப்புகள். தமிழறிஞர்களின் படங்கள் (இதுவரை 276 படங்கள்), அரிய புகைப்படங்கள், நூல் மதிப்புரை, இலக்கிய நிகழ்வுகள் உள்ளிட்ட செய்திகள் இதன்கண் இடம் பெற்றுள்ளன. ஆங்கிலம் வழியாக தமிழ் கற்பிக்கின்ற அரும்பணியையும் இவ்விதழ் செய்து வருகிறது. கட்டணம் ஏதுமின்றி நடைபெற்றுவரும் இப்பணி அனைவராலும் பாரட்டப்படுகின்ற பயனுள்ள பணியாக அமைந்துள்ளது. இதன் இணைய முகவரி; www.tamizham.net

தமிழ்க்கூடல்: இம்மின்னிதழ் தமிழ் ஆராய்ச்சியாளர்களுக்குப் பயன்படும் வகையில் அமைந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் இவ்விதழில் இடம் பெற்றுள்ளன. கட்டுரைகளை இலக்கியம், சமூகம், அரசியல், பொருளாதாரம் என்றும் கவிதைகளை மரபுக் கவிதை,
புதுக் கவிதை, ஹைக்கூ கவிதை என்றும் வகைப்படுத்தி வெளியிடுவதன் மூலம் இது பிற இதழ்களினின்றும் வேறுபட்டு விளங்குகிறது.

ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ்ச் சான்றோர்கள் பற்றிய சுருக்கமான தகவல்களைக் கொண்ட பட்டியல் ஒன்றையும் இது வெளியிட்டுள்ளது. இதன் இணைய முகவரி; www.koodal.com

நிலாச்சாரல்;
இம்மின்னிதழ் ஒவ்வொரு திங்கட்கிழமையன்றும் வெளிவருகிறது. இது ஒருங்குறியீட்டு எழுத்துரு முறையைப் பயன்படுத்துகிறது. தொடர்கள், கதைகள், கவிதைகள், சுவடுகள், பூஞ்சிட்டு முதலிய வகையில் இலக்கியச் செய்திகளை இவ்விதழ் வழங்குகிறது. பூஞ்சிட்டு என்ற பகுதியில் சிறுவர்களுக்கான கதைகள் வெளிவருகின்றன. பல்சுவை என்ற பகுதியில் கைமணம், கைமருந்து, சுவடுகள் ஆகிய தலைப்புகளில் செய்திகள் வெளிவருகின்றன. இதன் இணைய முகவரி; www.nilacharal.com

தமிழோவியம்;
இம்மின்னிதழின் ஆசிரியர் மீனாக்ஷி. ஒருங்குறியீட்டு எழுத்துருவைப் பயன்படுத்தி வாரந்தோறும் இவ்விதழ் வெளிவருகிறது. கவிதை, கட்டுரை. சிறுகதை, திரை விமர்சனம், நூல் விமர்சனம் உள்ளிட்ட செய்திகளைத் தாங்கி இவ்விதழ் வெளிவருகிறது. தமிழ் ஈபுக் (Tamil e -books) என்ற இணைப்பும் இதன்கண் உள்ளது. இதன் மூலம் தமிழில் வெளிவருகின்ற மின் நூல்களையும் காண முடிகிறது. இதன் இணைய முகவரி; www.tamiloviam.com

முடிவுரை;
இலக்கியச் செய்திகளை வெளியிடுகின்ற இணைய இதழ்களில் மேற்காட்டியவை குறிப்பிடத் தக்கவையாகும். இவை போன்ற இன்னும் பல நூற்றுக்கணக்கான இதழ்கள் இணையத்தில் காணக்கிடைக்கின்றன. இவ்விதழ்களை எல்லாம் ஆய்வாளர்களும், ஆர்வலர்களும், ஆசிரியர்களும் கண்டு பயனுற வேண்டும். ‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்’ என்பது பாரதியின் அமுத வரிகள். ஆனால் இன்று எட்டுத் திக்கும் செல்ல வேண்டியதில்லை; இணையத்திற்குச் சென்றாலே எல்லாத் திக்குகளும் நம்மை நோக்கி இணையக் கரம் நீட்டும்.

http://duraiarasan.blogspot.com/2008/04/blog-post.html


கணித்தமிழ்: தமிழ் இணைய இதழ்கள்: ஓர் அறிமுகம்!

- பத்ரி சேஷாத்ரி -

இணையம் நன்கு வளர்ச்சி அடைந்த நிலையில் இன்று பல நாளேடுகள், வார, மாதத் தமிழ் இதழ்கள் இணையத்தில் வருகின்றன. தமிழகத்தில் அச்சில் வரும் செய்தித்தாள்களும் பெரும் வணிக இதழ்களும் சிறிது சிறிதாக 1990களிலிருந்தே இணையத்தில் வர ஆரம்பித்தன. இன்று தினத்தந்தி (www.daily thanthi.com), தினகரன் (www. dinakaran.com), தினமலர் (www.dinamalar.com), தினமணி (www. dinamani.com), தமிழ்முரசு (www.tamilmurasu.in), மாலைமலர் (www.maalaimalar.com) போன்ற அனைத்தும் இணையத்தில் கிடைக்கின்றன.

இவற்றுள் தினமலர் (http://epaper.dinamalar. com), தினகரன் (www.dinakaran.com/epaper/default.asp), தமிழ் முரசு ஆகியவை மின்-தாள் வடிவில் வருகின்றன. அதாவது அச்சில் எப்படி இருக்குமோ அதைப் போலவே அந்தந்தப் பக்கங்களில் லே-அவுட் மாறாமல், விளம்பரங்கள் மாறாமல் வெளியாகின்றன.

விகடன் (www.vikatan.com), குமுதம் (www. kumudam.com), கல்கி (www.kalkionline.com) ஆகியவை தமது குழும இதழ்கள் அனைத்திற்கும் வலையங்களை வைத்துள்ளன. விகடன், கல்கி இரண்டுமே காசு கொடுத்துப் படிக்கும் இதழ்கள். குமுதம் இப்போதைக்கு இலவசம்.

இவை அனைத்திலுமே ஒரு பெரும் பிரச்சினை உள்ளது. இந்தத் தளங்களின் பக்கங்கள் ஒன்று மின்-தாள்களாக, அதாவது முழுவதுமே படங்களாக உள்ளன அல்லது ஒவ்வொன்றுமே தமக்கு உரித்தான எழுத்துரு (font) ஒன்றைப் பயன்படுத்துகின்றன. இந்த எழுத்துருக்கள் எவையும் யூனிகோடு கிடையாது. இதனால் இலவசமான தளங்கள்கூடத் தேடு பொறிகளான கூகிள், யாஹூ!, எம்எஸ்என் ஆகியவற்றில் அகப்படா. வலையகங்களின் அடிப்படையே யாராவது எதையாவது தேடும்போது 'டக்'கென்று கிடைப்பதுதான்.

மின்-தாள்களாக வெளியாகும் செய்தித் தாள்களைத் தவிர்த்துப் பிற அனைத்திலுமே வடிவமைப்பு மோசமாகத்தான் உள்ளது. தமது அச்சு இதழ்களில் கவனம் செலுத்தும் அனைத்து நிறுவனங்களும் மின்னிதழ்களுக்கு அதே அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதன் காரணம், இதுநாள்வரையில் இந்த மின்னிதழ்கள் மூலம் வருமானம் பெறச் சரியான, நிலையான வழிகள் இல்லாமையே.

இதே நேரத்தில் சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் தமிழ் முரசு (தமிழக இதழுக்கும் சிங்கை இதழுக்கும் சம்பந்தம் ஏதும் இல்லை போல) முழுவதும் யூனிகோடில் வெளிவருகிறது (http://tamil murasu.asia1.com.sg). அதேபோலவே இலங்கையிலிருந்து வெளியாகும் தினக்குரல் (www.thinakural.com), வீரகேசரி (www.vira kesari.lk) முதலியன முழுவதும் யூனிகோட் எழுத்துருவிலேயே வருகின்றன.

இணையம் வளர்ச்சி அடைந்த காலத்தில் உருவான வலைவாசல்கள் (போர்ட்டல்கள்) பலவும் தமிழில் தினசரிச் செய்திகள், சிறப்புச் செய்திகள், இலக்கிய, பல்சுவை இதழ்கள் என்று ஆரம்பித்தன. இணையக் குமிழ் வெடித்தபோது இவ்வாறு உருவான பல
வலையகங்களும் தமது சேவையைக் குறைத்துக்கொள்ள நேரிட்டது. சில காணாமல் போயின. சில இன்றும் இருந்துவருகின்றன. இவை அனைத்துமே இணையத்தில் மட்டுமே உள்ளன என்பது முக்கியம். அவற்றில் வணிக நோக்கில் நடந்துவரும் இதழ்கள் கீழ்க்கண்டவை:

சிஃபி (sify.com) நிறுவனத்தின் தமிழ் வலையகம்: http://tamil.sify.com. அதே நிறுவனம் நடத்தும், தினசரிகளிலிருந்து செய்திகளைச் சேகரித்து ஒரே பக்கத்தில் வழங்கும் சேவை: www.samachar.com/tamil/index.php.

Thats Tamil: http://thatstamil.oneindia.in, ஆறாம் திணை: www.aaraamthinai.com, வெப் உலகம்: www.webulagam.com.

இவை தினசரிகள். என்றாலும் தினசரி அச்சு இதழ்களுடன் போட்டிபோட முடியாமல் மிகக் குறைந்த நிருபர்களையும் வசதிகளையும்கொண்டு, முடிந்தவரை அலுவலகத்தின் நான்கு சுவர்களுக்குள் அமர்ந்துகொண்டே தமது இணைய இதழ்களைக் கொண்டுவருகின்றன. இந்த நிறுவனங்கள்கூட யூனிகோடில் தமது இதழ்களைத் தருவதில்லை.

வணிக நோக்கில்லாத சில இணைய இதழ்களும் உருவாகியுள்ளன. திண்ணை (www.thinnai.com), தமிழோவியம் (www. tamiloviam.com) வாராவாரமும், திசைகள் (www.thisaigal.com) மாதம் ஒரு முறையும், பதிவுகள் (www. pathivukal.com), நிலாச்சாரல் (www.nilacharal.com) ஆகியவை எப்பொழுதெல்லாம் வர முடியுமோ அப்பொழுதும் வெளிவருகின்றன. இவை அரசியல், சமூகம், இலக்கியம், சினிமா எனப் பல விஷயங்களை விவாதிக்கின்றன. இந்த இதழ்களின் சிறப்பம்சம் இவற்றில் எழுதுபவர்கள் பலரும் இணையத்தில் மட்டுமே எழுதுபவர்கள்.

திண்ணை, பதிவுகள், நிலாச்சாரல் ஆகியவை யூனிகோட் எழுத்துருவைப் பயன்படுத்துவதில்லை; திசைகளும் தமிழோவியமும் பயன்படுத்துகின்றன.

சிஃபி தமிழ்ப் பகுதியில் கடந்த இரண்டு வருடங்களாகப் பல சிற்றிதழ்கள், நடுத்தர இதழ்களை முழுவதுமாக ஆவணப்படுத்திவருகிறது.

அவை :
காலச்சுவடு: http://tamil.sify.com/kalachuvadu/index.php, உயிர்மை: http://tamil.sify.com/uyirmmai/index.php, அமுதசுரபி:
http://tamil.sify.com/amudhasurabi/index.php, கலைமகள்: http://tamil.sify.com/kalaimagal/index.php, மஞ்சரி:
http://tamil.sify.com/kalaimagal/index.php, தலித்: http://tamil.sify.com/dalit/index.php, பெண்ணே நீ: http://tamil.sify.com/pennaenee/index.php

இவை எதுவும் யூனிகோடில் இல்லை.

ஆனால் கீற்று என்னும் வலையகம் (www.keetru. com) பல்வேறு சிற்றிதழ்களை அழகாக யூனிகோடில் வெளியிடுகிறது. இங்குக் கிடைக்கும் இணைய இதழ்கள்:

தலித் முரசு: www.dalithmurasu.com, புதிய காற்று: www.puthiyakaatru.keetru.com, புது விசை: www.puthuvisai.com, கூட்டாஞ்சோறு:
www.koottanchoru.com, அநிச்ச: www.anicha.keetru.com, புரட்சி பெரியார் முழக்கம்: www.puratchiperiyarmuzhakkam.com, விழிப்புணர்வு:
www.vizhippunarvu.keetru.com, தாகம்: http://keetru.com/thaagam/index.html, தமிழ்ச் சான்றோர் பேரவை செய்தி மடல்:
http://www.keetru.com/anaruna/index.html.

இவை அனைத்திலும் உள்ள விஷயங்கள் கூகிள் தேடலின்போது கிடைக்கும்.

குறிப்பிட்ட ஒரு வகுப்பினரை மட்டும் குறிவைக்கும் niche magazines தமிழில், அச்சில், நிறைய வருகின்றன. பெண்களுக்காக மட்டும், குழந்தைகளுக்காக, பங்குச் சந்தை/தொழில் தொடர்பானவை, மோட்டார் வாகனங்களுக்காக என்று. தோழி (www.thozhi.com) என்ற தளம்
பெண்களுக்காக என்று பிரத்யேகமாகத் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தளம் நல்ல வடிவமைப்புடன் உள்ளது. நின்னை (www.ninnay.com) என்றொரு தளம், கவிதைகள், மாற்று சினிமா ஆகியவற்றுக்காக உருவாகியுள்ளது. ஆனால் முழுக்க முழுக்க எழுத்துகளால் அல்லாமல் பட வடிவில் (png கோப்புகளாக) அமைத்திருக்கிறார்கள்.

நான் இதுவரை குறிப்பிட்டவற்றைத் தவிர இன்னமும் பல சிறு மின்னிதழ்கள் இருக்கலாம்.

தொழில்நுட்ப வகையில் பார்க்கும்போது வெகு சிலவற்றைத் தவிரப் பிற அனைத்துமே யூனிகோடை ஏற்காமல் இருப்பதால் அவற்றின் பயன் குறைவே. இதைத் தவிர, RSS feed, வாசகர்களிடமிருந்து கருத்துகளைக் கேட்பது, tagging போன்ற பலவற்றைப் பற்றி அறியாமலே இருக்கிறார்கள். பல சிற்றிதழ்களுக்கும் அச்சு இதழ்களை நடத்துவதே போராட்டமாக இருக்கும் போது இணைய இதழ்களில் அதிகக் கவனம் செலுத்துவார்கள் என்று சொல்ல முடியாது. பெரிய வணிக இதழ்களுக்கோ, இப்பொழுது வலையகங்களை அவர்கள் உருவாக்கும் பாணியை மாற்றுவது என்பது மிக அதிகமான அளவு வேலையை இழுத்தடிக்கும்.

வலைப்பதிவுகள் (blogs) எனப்படும் தனியார் இணையக் குறிப்பேடுகள் இன்று மிகவும் பிரபலமாக உள்ளன. இவற்றை இணைய இதழ்களோடு நேரடியாக ஒப்பிட முடியாவிட்டாலும் வரும் வருடங்களில் இவை இணைய இதழ்களைவிட அதிகமாக மிளிர வாய்ப்புகள் நிறைய உள்ளன. ஒவ்வொரு துறையிலும் உள்ள நிபுணர்கள் பலரும் தமக்கெனத் தமிழில் வலைப்பதிவுகளை உருவாக்கும்போது அவற்றில் காணக்கிடைக்கும் செய்திகளும் செய்தி அலசல்களும் இணைய இதழ்களில் காணக் கிடைப்பதைவிட வலுவாக இருக்கும். இந்நிலை ஏற்கெனவே உலகளாவிய ஆங்கில வலைப் பதிவுகளில் எட்டப்பட்டுவிட்டது. ஒரு நல்ல விஷயம் - தமிழ் வலைப்பதிவுகள் ஆரம்பிக்கும் போதே உயர் தொழில்நுட்பங்களான யூனிகோட், RSS feeds, tagging போன்ற பலவற்றையும் பாவித்தே உருவாக்கப்படுகின்றன.

இணைய இதழ்கள் வருவதால்தான் இன்று நம்மால் பல்வேறு இதழ்களையும் படிக்க முடிகிறது. காசு கொடுத்து 30-40 இதழ்களை நாம் வாங்கிப் படிக்கப் போவதில்லை. இதனால் மாற்றுக் கருத்துகள் நம்மை வந்தடைகின்றன. இன்று வாசகர்கள் சில ஆயிரங்களே இருந்தாலும், இணையம் வளர வளர, நாளை இந்த வாசகர் வட்டம் பத்து மடங்கு அதிகரிக்கும் என்பதை மனத்தில் வைத்து இது வரையில் இணையத்தைத் தொடாத இதழ்களும் இணையத்தைத் தொட வேண்டிய தேவையை உணர வேண்டும்.

அதைப் போலவே சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தைச் சிற்றிதழ்கள் வெளியிடுவதில் செலவழித்துவிடும் பலரும்கூட இணையத்தில் மட்டுமே இருக்கக் கூடிய இதழ்களை உருவாக்குவதன் மூலம் காசை மிச்சப்படுத்தலாம். நிறையச் செலவுசெய்து 300-1000 வாசகர்களை அச்சு மூலம் அடைவதைவிடச் சில ஆயிரம் வாசகர்களைச் செலவே இல்லாமல் அடைந்துவிட முடியும்!

[கட்டுரையாளர் கிழக்குப் பதிப்பகத்தின் பதிப்பாளர். இவரது வலைப்பதிவு: http://thoughtsintamil.blogspot.com ]


தமிழ் இணைய இதழ்கள் - ஒரு முன்னோட்டம்!

- சு. துரைக்குமரன் பி.லிட்., எம்.ஏ., -

உலகம் தன் பரப்பில் இருந்துச் சுருங்கி இன்று ஒரு கிராமமாக மாறிவிட்டது, இதற்குக் காரணம் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி. இத்துறையின் பெரும்பகுதி வளர்ச்சிக்குக் காரணம் கணினித்துறை. அறிவியல் துறையின் முன்னேற்றத்திற்கும், புரட்சிகரமான செயல்பாட்டிற்கும் காரணமாக விளங்கி வருவது கணினித்துறை என்பது கண்கூடான உண்மை. அறிவியல், தொழில்நுட்பத்தின் வழியில் கணினித்துறையும், தகவல் தொழில் நுட்பத்துறையும் இணைந்து மனித சமுதாயத்திற்குத் தந்துள்ள புதிய வழிமுறைதான் இணையம். அதன் விரிவும், அது ஏற்படுத்தியுள்ள வாய்ப்புகளும் எண்ணிலடங்காதவை. மனித அறிவுத்திறனின் எல்லையே அதன் எல்லை; மனித படைப்புத்திறனின் வரம்பே அதன் வரம்பு.

உலகு முழுவதும் ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட இணையத்தின் செயல்பாடு அண்மையில்தான் பல்வேறு வழிகளில் பெரும்¢ மாற்றத்தையும் வளர்ச்சியையும் கண்¢டுள்ளது. தொடக்க காலத்தில் அஞ்சல் செய்திகளை அனுப்ப மட்டுமே
பயன்பட்டுவந்த இணையம் தற்போது மின்வணிகம், மின் அரசான்மை, மின் பொழுதுபோக்கு, மின்நூலகம், மின்னிசை எனப் பல வகைகளில் தன் பயன்பாட்டுத்தளத்தை விரிவாக்கிக் கொண்டே செல்கிறது.

அண்மைக்காலம் வரையில் இணையத்தின் செயல்பாடு, பயன்பாடு ஆகியவற்றில் பெரும்பாலும் ஆங்கில மொழியே பயன்படுத்தப்பட்டு வந்தது. பல்வேறு நாடுகள் இணையத்தைப் பலவழிகளில் பயன்படுத்தத் தொடங்கியபின் அந்தந்த நாட்டு மொழிகள் இணையத்தில் இடம் பெறும் தேவை ஏற்பட்டது. எந்தத் துறையின் அறிவும் மக்கள் பேசும் மொழியில் இருந்தால் அது மக்களை எளித்¤¢ல் சென்றடையும்; மக்களால் பெரிதும் பயன் படுத்த முடியும் என்ற அடிப்படையி¢ல் தமிழ் மொழி இயைத்தில் இடம் பெற வேண்டி தேவையைக் காலம் ஏற்படுத்தித் தந்தது.

தமிழும் கணினிப் பயன்பாடும்

தமிழ் மொழியைப் பொறுத்த மட்டில் ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு முன்பே அது இயைத்தில் இடம் பெறத் தொடங்கிவிட்டது. இதன் வழியாக உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழர்களும் இணையத்தை, கணினியை அதிகமாகப் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது. மின் அஞ்சலில் தமிழ் முதலில்¢ இடம் பெற்றது. மெல்ல மற்ற துறைகளிலும்¢ கால்பதி¢த்தது.

தமிழ் இணையம் 99 மாநாட்டிற்கு முன்வரை உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் பல குழுவினராக இருந்து அவரவருக்கான தனித்தனியான தமிழ் எழுத்துருக்களை உருவாக்கிக் கொண்டு அவ்வற்றை மின்னஞ்சலிலும் இணைய தளங்களிலும் பயன்படுத்தி வந்தனர். இதனால் ஒரு குழுவினர்¢ அனுப்பிய மின்னஞ்சலையோ, இணையதளத் தகவலையோ ஏனையோர் படித்து அறிய இயலாத நிலை நிலவியது. தமிழ்மொழி ஒன்றுதான் என்றபோதிலும் அது இணையத்தில் பல வடிவங்களில் வலம் வந்து கொண்டிருந்தது.

மேற்கண்ட சிக்கலில் இருந்து மீள தமிழக அரசு நடத்திய தமிழ் இணையம் 99 மாநாட்டில் தமிழ் எழுத்துருக்கள் தரப்படுத்தப்பட்டு டாம் (TAM), டாப் (TAM) என்ற எழுத்துருக்கள் பயன்படுத்தப்பட அறிவிக்கப்பட்டன. இதனால் அச்சிக்கல் ஓரளவிற்கு அந்நேரத்தில் தீர்க்கப்பட்டது. இருப்பி¢னும் இந்த எழுத்துருக்களை ஒரு கணினியில் உள்ளீடு செய்தபின்னேதான் பயன்படுத்தமுடியும் என்ற சிக்கல் நீடித்தது.

தமிழில் யுனிகோடு முறைமை

தற்போது உலகமொழிகள் எல்லாவற்றிற்கும் ஓர் ஒருங்கிணைந்த குறியீட்டு முறைதான் இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்குடன் அமைக்கப்பட்ட தகுதரமான யுனிகோடு (UNICODE) என்ற எழுத்துருவால் உலக மற்றும் இந்திய மொழிகளின் இடையில் தமிழுக்கு என்று தனியிடம் கிடைத்துள்ளது. இம்மாற்றம் குறிப்பிடத்தக்கது. இதிலும் சில கயைப்பட வேண்டிய குறைபாடுகள் உள்ளன என்ற கருத்தும் இங்கு சுட்டத்தக்கது.

இந்த யுனிகோடு முறை மூலம் பதிக்கப்பட்ட தகவல்களைத் தமிழிலேயே தேடவும், பெறவும், மின்னஞ்சல்களை அனுப்பவும் எளிதாக முடியும். மேலும் இத்தகுதரம் உலகில் உள்ள பெரிய தொழில் நுட்ப நிறுவனங்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டமையால் தமிழ் மொழிக்கு இணையத்தில் எதிர்காலத்தில் மிகச் சிறப்பான ஏற்றம் உண்டு என்பதில் ஐயமில்லை.

யுனிகோட் முறை தமிழ் இணையப் பயன்பாட்டில் ஒரு மைல்கல். இவ்வளர்ச்சியால் தமிழ் மொழியிலேயே கணினி பயன்பாடு அமைவது மிகச் சிறந்த மாற்றத்தைத் தற்போது ஏற்படுத்தியுள்ளது.

இணையத்தில் தமிழின் இடம்
இன்று இணையத்தில் உலகின் பல மொழிகள் இடம் பெற்றுவருகின்றன. ஆயினும் ஆங்கில மொழியை அடுத்து மிகுதியாகப் பயன்படுத்தப்படும் மொழி தமிழ் என்பது பெருமைக்குரிய செய்தி. மேலும் இதனால் வளர்ந்துவரும் கணினித்துறை நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பரவ எளிதான வழி பிறந்¢துள்ளது.

தமிழ் இணைய இதழியல்

இன்று கல்வி, வணிகம், வங்கி, வேளாண்மை, பொறியியல், மருத்துவம், அறிவியல் போன்ற பல்வேறு துறைகள் கணினி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி முன்னேறி வருகின்றன. இவ்வரிசையில் இதழியல் துறையும் முன்னேறி வருகிறது. அச்சு இதழியல் தொழில் நுட்பத்தில் மிகப் பெரிய மாற்றத்தை கணினி விளைவித்துள்ளது. இது தவிர இணையத்தில் இதழியல் என்ற புதிய பிரிவும் தற்போது தொடங்கியுள்ளது. தமிழ் மொழியிலும் பல இணைய இதழ்கள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இது ஒரு புதிய முயற்சியாகும்.

தமிழ் இணைய இதழ்கள் உலக அளவில் உள்ள தமிழ் வாசகர்களை உடன் எட்டுகின்றன ; உலக அளவில் வாசகர்களைப் பெறுகின்றன. உடனடியாக மின்னஞ்சல் மூலமாக வாசகர் கருத்துப் பரிமாற்றமும் நடைபெற்று விடுகிறது. இதன்மூலம் தமிழ் மொழியின் கலை, பண்பாட்டுப் பகிர்வுகள், தேடல்கள், பார்வைகள் பன்முக நோக்கில் பரவிவருகின்றன.

உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் இடத்தால் வேறுபட்டு, பண்பாட்டு நாகரிக மாற்றங்களுக்கு உட்பட்டிருந்தாலும் தமிழால் தமிழ் இணையத்தால் இன்று ஒன்றுபட முடிகிறது. இதற்குப் பெரும் பங்காற்றி வருவன தமிழ் இணைய இதழ்கள்.

தமிழ் இணைய இதழ்கள் சிலவும் அவற்றின் வகைப்பாடும்

தமிழில் பல இணைய இதழ்கள் தற்போது எழுந்து வளர்ந்து வருகின்றன. அவற்றுள் பின்வருவன குறிக்கத்தக்கன. அம்பலம், திண்ணை, தமிழோவியம், வார்ப்பு, திசைகள், ஊடறு, நிலாச்சாரல், ஆறாந்திணை, மரத்தடி, பதிவுகள், வெப் உலகம், தமிழ்சிபி தோழி.காம் போன்ற இதழ்கள் வாசகர்களைப் பெருமளவில் பெற்றவை.

இவ்விதழ்களில் சில மாத இதழ்கள், சில வார இதழ்கள். இவை பெரும்பாலும் இலக்கியம் சார்ந்த இதழ்கள் என்பது இவற்றின் பொதுப்பண்பாக உள்ளது. இந்த இதழ்களில் பெண்களுக்கானவை, கவிதைக்கானவை, செய்திகளுக்கானவை என்ற பிரிவுகளும் உண்டு. கட்டணம் கட்டி படிக்கவேண்டியவை, கட்டணம் தேவைப்படாதவை என்ற பிரிவுகளும் உண்டு. இவை தவிர தமிழ் நாட்டில் வெளியாகும் அச்சு இதழ்களி¢ல் பேர்போன இதழ்களும் தங்கள் இதழ்ப்பகுதிகளை இணையவழியாகத் தந்து வருகின்றன. அவற்றை மீள்பிரசுரம் என்பதாகக் கருத இயலுமே தவிர இணைய இதழ்களாகக் கருதத் தகாது. மேலும் இணைய இதழ்களைச்¢ சிற்றிதழ்கள் போன்றவை/ தரத்தவை என்று கருதினாலும் தவறாகாது. இதனடிப்படையில் தமிழ் இணைய இதழ்களின் தரத்தையும் அவற்றின் பங்களிப்பையும்
ஆராய ஏற்ற காலம் இதுவேயாகும்.

தமிழ் இணைய இதழ்களின் உள்ளடக்கம்

மேற்சுட்டிய இணைய இதழ்களின் உள்ளடக்கத்தை அறிந்து கொள்வது அவற்றின் தரத்தை உணர்ந்து கொள்வதற்கு ஈடானது. அவவ்கையில் சில இதழ்களின் உள்ளடக்கம் இங்கு தரப்படுகின்றன.

திண்ணை
இந்த இதழ் அரசியலும் சமூகமும், கதைகள், கவிதைகள், அறிவியலும் தொழில் நுட்பமும், கலைகள், சமையல், இலக்கியக்¢ கட்டுரைகள், நகைச்சுவையும் வித்தியாசமானவையும், கடிதங்கள் அறிவிப்புகள் போன்ற பல பகுதிகளை உள்ளடக்கி அமைகிறது. இது
ஒரு வார இதழாகும்.

பதிவுகள்
இந்த இதழில் அரசியல், கவிதை, சிறுகதை, கட்டுரை, நூல்விமர்சனம், நிகழ்வுகள், அறிவியல் , திரைப்படம், வாசகர் எதிரொலி, நாவல், உங்கள் நலம், விவாதம், தமிழ் வர்த்தக் கையேடு, இலவச வரிவிளம்பரம், நூல் அங்காடி போன்ற பகுதிகள் இடம் பெறுகின்றன.

தோழி. காம்
இந்த இதழ் பெண்களுக்கான இதழ் ஆகும். இதனுள் விவாதம், அழகு, தாய்மை, பயணம், திரை, உங்கள் நாட்குறிப்பு முதலிய இடம்பெற்று வருகின்றன.

அம்பலம்
இந்த இதழில் செய்திகள், வார இதழ், கவிதைகள், சிறப்பிதழ்கள், மகளிர்பக்கம், வாழ்த்துகள், மின்னஞ்சல், இளையர், திரை முதலிய பகுதிகள் உள்ளன.

வார்ப்பு
இது கவிதைகளுக்கான இதழாக வெளிவருகிறது. இதில் கவிதைகள், கவிதைத்தொகுதி அறிமுகம், கவிதை விமர்சனங்கள், கவிஞர்களின் பட்டியல் முதலியன இடம் பெற்றுள்ளன.

இவ்வாறு வகைக்கு ஒன்று இங்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவைதவிர மற்றவையும் கணக்கில் கொள்ளப்பட வேண்டியவையே. இடங்கருதி இவை மட்டும் எடுத்துக் கொள்ளப்பட்டன.

தமிழ் இணையஇதழ்கள் ஆய்வின் தேவை

தமிழ் இணைய இதழ்கள் என்பவை தமிழ் இதழியல் வரலாற்றில் புதுமையானவை. அவற்றிற்கு என்று சில வரையறைகள் தற்போது உள்ளன ; பொதுப்பண்புகள் உள்ளன. அவை இணைய இதழ்களுக்கு மட்டுமே உரித்தானவை. இவை ஆராயப்படவேண்டும்.

தமிழ் இணைய இதழ்களில் உள்ள குறை நிறைகள் ஆராயப்பட வேண்டும். இதன்மூலம் இணையஇதழ்கள் சரியான பாதையை நோக்கிப் பயணிக்க முடியும்.

தமிழ் இணைய இதழ்களின் தரம், வாசகர் கருத்து ஆகியவையும் ஆராயப் படவேண்டிய களங்கள். இதன்மூலம் இணையஇதழ்களின் தரம் மேம்பாடு அடையும்.

தமிழ் இணைய இதழ்கள் ஒரு குறிப்பிட்ட வட்ட மக்களை மட்டுமே சென்றடைகின்றன. அவை அனைத்து வட்ட மக்களையும் சென்றடைவதற்கான வழிமுறைகள் ஆராயப்பட வேண்டும்.

தமிழ் இணைய இதழ்களுக்கும் மற்ற துறை இதழ்களுக்குமான ஒற்றுமை வேற்றுமை அளந்தறியப்பட வேண்டும். இதன்மூலம் இணைய இதழ் வளர தனித்த வழி உருவாகும்.

சு. துரைக்குமரன் பி.லிட்., எம்.ஏ., ஆசிரியப் பயிற்றுநர், வட்டார வளமையம், புதுக்கோட்டை

குறிப்பு
பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ள இந்தக் களத்தை எடுத்துக்கொண்டுள்ளேன். இதற்கு ஆய்வு நெறியாளராக முனைவர் மு. பழனியப்பன் எம்.ஏ., எம். பில்., பிஎச்.டி., பிஜிடிசிஏ., முதுநிலை தமிழ் விரிவுரையாளர், மா. மன்னர் கல்லூரி, (த), புதுக்கோட்டை, 622 001 அமைகிறார். இது குறித்தத் தகவல்கள் ஏதேனும் இருப்பினும் கீழ்க்காணும் மின்னஞ்சலில் தெரிவிக்க வேண்டுகிறேன்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


தமிழில் இணைய இதழ்கள்!

- முனைவர். மு. இளங்கோவன் -

[புதுச்சேரி வலைப்பதிவு பயிலரங்கில் (09.12.2007) வெளியிடப்பெற்ற மலரில் இடம்பெற்றுள்ள இக்கட்டுரை இங்கு ஒரு பதிவுக்காக மீள்பிரசுரம் செய்யப்படுகிறது. இணைய இதழ்கள் பற்றி அவ்வப்போது வெளிவரும் அல்லது ஆய்வரங்குகளில் வாசிக்கப்படும் கட்டுரைகளை அல்லது புதிய ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பி வையுங்கள். பதிவுகளில் பிரசுரிக்கிறோம்.- பதிவுகள்]

இருபதாம் நூற்றாண்டு வழங்கிய தகவல்தொடர்புக்கருவிகளுள் இணையம் குறிப்பிடத் தகுந்த,தவிர்க்க முடியாத ஒன்றாக இன்று விளங்குகிறது.செய்திகளை உடனுக்குடன் பரிமாறிக்கொள்ள உதவும் இதன் சிறப்புகள் பலவாக உள்ளன. அச்சுவடிவிலும், ஒலி, ஒளி வடிவிலும் தகவல்களைப் பெறக்கூடிய, வழங்கக் கூடிய இருவழிக் கருவியாக இது விளங்குகிறது.இணையம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு தகவல்களைப் பல முனைகளில் இருந்து பல வடிவங்களில் பெற்றுக்கொள்ள,அனுப்ப முடிகிறது. எனவே அச்சுவடிவில் ஒரு குறிப்பிட்ட நில எல்லைக்குள் கிணற்றுத் தவளையாக இருந்த ஊடகங்களும், ஒலி,ஒளி வடிவில் இருந்த ஊடகங்களும் இணையத்தின் வழியாக இன்று உலகம் முழுவதற்கும் பயன்படத்தக்க படைப்புகளை,தகவல்களை உலகச்சொத்தாக்க முனைந்துள்ளன.

உலகப்போட்டிக்கு ஈடு கொடுத்து ஒவ்வொருவரும் தங்கள் நலனுக்காக இணையத்தை ஒவ்வொரு வகையில் சார்ந்து நிற்கின்றனர்.அவ்வகையில் அச்சில் வந்த,வரும் இதழ்கள் பலவும் தங்கள் இதழ்களை மின்னிதழ்களாகவும்(e-zines) வெளியிடுகின்றன.அவ்வகையில் உலக மொழிகள் பலவற்றுள்ளும் மின்னிதழ்கள் வெளிவருகின்றன.இக்கட்டுரை தமிழில் வெளிவரும் இணைய இதழ்கள் சிலவற்றை அறிமுகம் செய்கின்றது.

தரவுதளம் (Database site) இணையதளம்,இணைய இதழ், வலைப்பூ வரையறை
தமிழில் வெளிவரும் இணைய இதழ்களைப்பற்றி அறிவதற்கு முன்பாக தரவுதளம் (Database site), இணையதளம்,இணைய இதழ்,வலைப்பூ என்னும் சொற்களைப்பற்றிய வரையறையைச் செய்துகொள்வது நன்று. ஏனெனில் இவை யாவும் தொடர்புடையனவாக இருப்பதால் ஒன்றுபோல் தோன்றும்.

தரவுதளம் என்பது பல்வேறு தகவல்களைச் சேகரித்து நிரல்படுத்திக் கட்டமைக்கப்பட்ட தொகுப்பு இணையதளம்.ஆங்கிலத்தில் பல தரவுதளங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக உலகளாவிய திரைப்படங்கள் தொடர்பில் அனைத்துத் தகவல்களும் www.imdb.com தளத்திலும், மட்டைப்பந்து விளையாட்டினைப் பற்றிய தகவல்களுக்காக www.cricinfo.com தளமும் உள்ளன.

தமிழில் முதலாவது தரவு தளமாக www.viruba.com உள்ளது. இத்தளத்தில் தமிழில் வெளியாகும் நூல்களைப் பற்றியும், அவற்றைப் பதிப்பித்த பதிப்பகங்கள் பற்றியும், நூல்களை எழுதியுள்ள எழுத்தாளர்களைப் பற்றிய தகவல்களுடன் தமிழ் ஊடகங்கள் பற்றிய வெளியீட்டுத் தகவல்கள், புத்தகங்களுக்கான மதிப்புரைகள் ஆகியவற்றுடன் தமிழில் வெளியாகும் பல சிற்றிதழ்கள் பற்றிய வெளியீட்டுத் தகவல்களும் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக இத்தளம் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது. தமிழ் ஆர்வலர்கள்,தமிழ் ஆய்வுமாணவர்கள் மற்றும் வாசகர்களின் பேராதரவைப் பெற்ற தளமாக இது விளங்குகிறது.

இணையதளம் என்பது ஒரு நிறுவனம் அல்லது அமைப்பு, அல்லது தனிநபர் தமது விவரங்கள், தகவல்கள்,செய்திகள்,சேவைகள் முதலானவற்றை,எழுத்தாகவோ, படமாகவோ ஒலி, ஒளி வடிவிலோ தருவது இணையதளமாகக் கருதலாம்.எ.கா. அப்பல்லோ மருத்துவமனையின் தளம் (www.apollohospitals.com) அதன் சேவை,மருத்துவர்கள் பற்றிய விவரம், வசதிகள் இவற்றைத் தாங்கியுள்ளமையை நினைவிற்கொள்க.

இணைய இதழ்கள் என்பவை அச்சுவடிவ இதழ்களைப் போலவே பல்வேறு செய்திகள், படைப்புகள்,படங்கள் இவற்றைக்கொண்டு வெளிவருவனவாகஉள்ளன.எ.கா.கீற்று, திண்ணை. பதிவுகள்,நிலாச்சாரல், எழில்நிலா, அந்திமழை முதலியன.

வலைப்பூ என்பது தம் விருப்பத்தை எழுத்தாகவோ,படமாகவோ,ஒலி,ஒளி வடிவாகவோ வழங்குவது. கட்டணம் கட்டியும்,இலவசமாகவும் வலைப்பூக்களை உருவாக்கமுடியும்.பல நிறுவனங்கள் இலவசமாக இச்சேவையை வழங்குகின்றன. Google நிறுவனத்தின் www.blogger.com என்னும் வலைப்பூ சிறந்த நூல்கள், சிறந்த தளங்கள், இலக்கிய நிகழ்ச்சிகள், பதிப்பு, நூல் தொர்பான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செய்திகளை வெளியிட்டு வருவதை அத்தளத்திற்குச் சென்று பார்வையிடலாம்.

இணைய இதழ்கள்

தமிழ்மொழியில் பல்வேறு இணைய இதழ்கள் வெளிவருகின்றன. இவ்விதழ்கள் இலவசமாகவும், கட்டணம் கட்டியும் படிக்கும் படியாக உள்ளன.அதுபோல் அனைவரும் எளிதில் படிக்கும்படியாக ஒருங்குகுறி(unicode) எழுத்திலும், எழுத்துகளைப் பதிவிறக்கம் செய்துபடிக்கும் படி தனிவகை(டாம்,டேப்) எழுத்திலும் வெளிவருகின்றன. ஒருங்குகுறியில் வெளிவரும் இதழ்களையே அனைவரும் விரும்பிப் படிக்கின்றனர்.

தொடக்கத்தில் டாம்,டேப் எழுத்துகளைப் பயன்படுத்திய இதழ்கள்கூட உலக ஓட்டத்திற்கு ஈடுகொடுத்து ஒருங்கு குறிக்கு மாறிவிட்டன.தனிவகை எழுத்தில் தொடக்கத்தில் வெளிவந்த தினபூமி,தினமணி இதழ்கள் இன்று ஒருங்கு குறியில் வருகின்றமையைக் கவனத்தில் கொள்ளவேண்டும். எழுத்துருக்களைப் பதிவிறக்கம் செய்து படிக்கவேண்டிய தளத்திற்கோ, இதழிற்கோ படிப்பாளிகள் செல்லத் தயங்குகின்றனர்.தினத்தந்தி இதழ் ஒருங்குகுறியில் இல்லாமையால் படிக்கும் சிக்கல் உள்ளது.

இணைய இதழ்களின் வகைப்பாடு

இணைய இதழ்களை அதன் வெளியீட்டு முறைகளுக்கு ஏற்ப நாளிதழ்,வார இதழ்,மாத இதழ் என்றெல்லாம் வகைப்படுத்த முடியும். நாளிதழையும் காலை இதழ்,மாலை இதழ் என வகைப்படுத்தலாம்

நாளிதழ்

பெரும்பாலான அச்சு இதழ்கள் இன்று மின்னதழ்களை வெளியிடுகின்றன. தினமலர், தினமணி, தினபூமி, விடுதலை, தினத்தந்தி, தினகரன், மாலைமலர் முதலியன இணைய இதழ்களாக வெளிவருவதில் குறிப்பிடத்தக்கன.இவற்றுள் தினமலர் நாளிதழ் மின்னிதழாக வெளிவருவதுடன் குறிப்பிட்ட மணி நேரத்தில் செய்திகளைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கின்றது.மேலும் அயல்நாட்டுத் தமிழர்களைக் கவரும் பல்வேறு உத்திகளையும் பின்பற்றி அயலகத் தமிழர்களைத் தன் இதழைப் படிக்கும்படி செய்கின்றது. உலகத்தமிழர் செய்திகள், பிற மாநிலச் செய்திகள், மாவட்டங்கள் என்றெல்லாம் பல்வேறு வகையில் வாசகர்களைக் கவர்ந்திழுக்கின்றது. இவ்வகையில் சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆத்திரேலியா, சீனா,சப்பான் முதலான நாடுகளில் நடைபெறும் செய்திகளை அந்த அந்த நாட்டிலிருக்கும் செய்தியாளர்கள் திரட்டி அனுப்புகின்றனர்.

இது தவிர புதினம்.காம்,சங்கதி,பதிவு,லங்காசிறீ,தினக்குரல்,உதயன், தாட்சுதமிழ்,வெப் உலகம், சிபி.காம், பி,பி.சி.தமிழ்,வணக்கம் மலேசியா முதலான தளங்கள் பல்வேறு வகையில் அன்றாடச் செய்திகளைத் தருகின்றன.

வார இதழ்கள்

தமிழகத்தில் அச்சில் வெளிவரும் வார இதழ்கள் பலவும் மின்னிதழாகவும் வெளிவருகின்றன. மின்னிதழின் தரம் படிப்பாளிகளை மனத்தில்கொண்டு சிறப்புப் பகுதிகளைத் தேர்ந்தெடுத்தும் சில இதழ்கள் வழங்குகின்றன. ஆனந்தவிகடன், குமுதம், மங்கையர்மலர், கல்கி,நக்கீரன்(வாரம் இருமுறை) முதலிய இதழ்கள் இணைய இதழ்களாகவும் கிடைக்கின்றன.இவற்றுள் சிலவற்றை இலவசமாகவும்,சிலவற்றைக் கட்டணம் கட்டியும் படிக்கவேண்டியுள்ளது.

திண்ணை வாரந்தோறும் புதுப்பிக்கப்படுகின்றது.இதன் வடிவமைப்பும்,வகைப்பாடும் கண்ணைக்கவரும் வண்ணம் உள்ளது. முகப்பு,அரசியலும் சமூகமும்,கதைகள், கவிதைகள், அறிவியலும் தொழில்நுட்பமும்,கலைகள்-சமையல் என்னும் வகைப்பாட்டில் படைப்புகள் இடம் பெற்றுள்ளன. எட்டாண்டுகளாகத் தொடர்ந்து வாரந்தோறும் இவ்விதழ் புதுப்பிக்கப்பட்டுத் தரமான படைப்புகளைத் தாங்கி வெளிவருகின்றமை பாராட்டிற்கு உரியது. உலகம் முழுவதும் இவ்விதழுக்கு வாசகர்கள் உள்ளனர்.அதுபோல் படைப்பாளிகளும் உள்ளனர்.உலகம் முழுவதும் நடைபெறும் தமிழ் சார்ந்த இலக்கிய நிகழ்வுகளைத் திண்ணை வழங்குவதில் ஓர் உலகப்பார்வை உள்ளமை
புலனாகும். அனைத்துத்தர மக்ககளும் அமர்ந்துபேசும் இடமாகத் திண்ணை இருப்பதுபோல் திண்ணை இணையதளமும் அனைத்துக் கொள்கைகளையும், கருத்துகளையும் கொண்டவர்களைத் தம் எண்ணங்களை வெளிப்படுத்த வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளமை திண்ணையின் தனிச்சிறப்பாகும்.

திண்ணையில் பல வகையான படைப்பாளிகளும் தங்கள் படைப்புகளை வந்து வழங்குகின்றனர். கதை, கட்டுரை,கடிதம், ஆய்வுகள், நாட்டு நடப்புகள், இலக்கியச் சந்திப்புகள், விவாதங்கள்,உலக அரசியல் முதலியன பற்றிய பல தரமான படைப்புகள் திண்ணையில் வெளியிடப்பட்டுள்ளமையை அதன் முந்தைய ஆவணப்பகுதிக்குச் சென்று பார்வையிடும்படி பழைய இதழ்கள் தொகுத்தும் திண்ணையில் வைக்கப்பட்டுள்ளன.

திண்ணையில் கி.இராசநாராயணன், அம்பை, கோபால்இராசாராம், அ.மார்க்சு, விக்கிரமாதித்தியன், காஞ்சனாதாமோதரன், வாசந்தி, பாவண்ணன்,வ.ந.கிரிதரன், பழ.நெடுமாறன், இன்குலாப், சா.கந்தசாமி, இந்திராபார்த்தசாரதி, தேவமைந்தன், செயபாரதன், பிச்சினிக்காடு இளங்கோ முதலானவர்கள் பலவகையில் தங்கள் படைப்புகளை வழங்கியுள்ளனர்.

மாத இதழ்கள்

தமிழ் இணைய இதழ்கள் மாதஇதழாகவும் சில வெளிவருகின்றன. அவற்றுள் கனடாவிலிருந்து வெளிவரும் பதிவுகள் இதழ் குறிப்பிடத்தக்க ஒன்றாகும் (www.pathivugal.com). பதிவுகள் இலவசமாக வெளிவரக்கூடிய இதழாக இருப்பினும் ஆண்டுக்கு 24 டாலர் கட்டணம் கட்டும்படி வேண்டுகிறது. ['பதிவுகள் இலவசமாக வெளிவரக்கூடிய இதழாக இருப்பினும் ஆண்டுக்கு 24 டாலர் கட்டணம் கட்டும்படி வேண்டுகிறது' என்பது பிழையான அர்த்தத்தைத் தந்துவிடுகிறது. 'இலவசமாக வெளிவரக் கூடிய இதழாக இருப்பினும்' என்னும் சொற்தொடர் தற்பொழுது பதிவுகள் அவ்வாறில்லையென்னுமொரு அர்த்தத்தைத் தந்துவிடுகிறது. உண்மையில் தற்பொழுதும் பதிவுகள் இலவசமாகவே வெளிவருகிறது. பதிவுகளைச் சந்தா செலுத்திப் படிக்க வேண்டியதில்லை. ஆயினும் சந்தா செலுத்த விரும்பினால் செலுத்தலாமென்றுதான் கூறியிருக்கிறோம். 'பதிவுகள் இலவசமாக வெளிவரும் இதழாக இருப்பினும்' என்றிருந்திருக்க வேண்டும். - பதிவுகள்] ஆசிரியர் வ.ந.கிரிதரன். 2000 ஆம் ஆண்டில் கனடாவிலிருந்து தொடங்கப்பட்டது.தொடக்கத்தில் முரசுஅஞ்சல் (இணைமதி) எழுத்துரு பயன்படுத்தப்பட்டது. இப்பொழுது ஒருங்குகுறி எழுத்து பயன்படுத்தப்படுகிறது.

அரசியல்,கவிதை,சிறுகதை,கட்டுரை,நூல்விமர்சனம்,நிகழ்வுகள்,அறிவியல்,திரைப்படம்,வாசகர் எதிரொலி, நாவல்,உங்கள் நலம், விவாதம், தமிழ் வர்த்தக கையேடு, இலவச விளம்பரம்,நூல் அங்காடி, சமூகம் என்னும் தலைப்புகளில் செய்திகள் வெளியாகின்றன.

இலக்கிய இதழ்கள்

இலக்கியம், இலக்கணம், படைப்புகள் சார்ந்த செய்திகளைக்கொண்டும் இதழ்கள் வெளிவருகின்றன. திண்ணை என்னும் இணைய இதழ் பல்வேறு படைப்பாளிகள், எழுத்தாளர்கள்,ஆய்வாளர்களின் படைப்புகளைத் தாங்கித் தொடர்ந்து வெள்ளிக்கிழமை தோறும் வெளிவருகின்றது.புதுச்சேரியிலிருந்து வெளிவரும் தெளிதமிழ் என்னும் மாத இதழ் இலக்கியம், இலக்கணம் தமிழ்வளர்ச்சி சார்ந்த செய்திகளைத் தாங்கி வெளிவருகின்றது.

பதிவுகள் என்னும் இதழ் கனடாவிலிருந்து வ.ந.கிரிதரன் அவர்களால் சிறப்பாக இலக்கியம் சிறுகதை,கவிதை,கட்டுரை முதலான பலதரப்பட்ட செய்திகளுடன் வெளிவருகின்றமை குறிக்கத்தக்க ஒன்றாகும். இந்த இதழில் திண்ணை, தமிழ்மணம், விக்கிபீடியா, வார்ப்பு, நூலகம்,கீற்று,மதுரைத்திட்டம், சென்னை நூலகம் முதலான இதழ்,தளங்களுக்கான இணைப்புகளைக் கொண்டிருப்பது தனிச்சிறப்பு.

படைப்பாளிகளுடன், இலக்கிய ஆர்வலர்களுடன் தம் சிந்தனையைப் பகிர்ந்து கொள்ளவும், எல்லைகளைக் கடந்து அனைவருடனும் தொடர்புகொள்ளவும் பதிவுகள் தோற்றுவிக்கப்பட்டது என்ற் இதன் நோக்கம் பதிவாகியுள்ளது. குழுமனப்பான்மையின்றி, அனைவரும் கலந்து பங்காற்றும் இதழாகவும், உலகில் நடைபெறும் இலக்கிய நிகழ்ச்சிகளை இலவசமாக வெளியிடும் இதழாகவும் இது உள்ளது. இவ்விதழில் இந்திரன், செயபாரதன், கா.சிவத்தம்பி, செயமோகன், சுப்பிரபாரதிமணியன், அ.முத்துலிங்கம், பிச்சினிக்காடு இளங்கோ, நளாயினி, சோலைக்கிளி கிரிதரன் முதலானவர்கள் பல்வேறு பங்களிப்புகளை வழங்கியுள்ளனர்.

வடஅமெரிக்கா,ஆத்திரேலியா,ஐரோப்பா,சிங்கப்பூர்,சப்பான்,மலேசியா,இலங்கை,இந்தியா உட்பட பலநாடுகளின் வாசகர்கள் இந்த இதழுக்கு உண்டு.பதிவுகள் தமிழில் வெளிவந்தாலும் ஆங்கிலப் படைப்புகளும் இதில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.மாத இதழாகப் பதிப்பிக்கப்பட்டு அனைவராலும் விரும்பிப்படிக்கப்படுகின்றது.

பொள்ளாச்சியிலிருந்து பொள்ளாச்சிநசன் அவர்களால் வெளியிடப்படும் தமிழம்.நெட் (www.thamizham.net) என்னும் இதழ் தமிழில் வெளிவரும் இதழ்களுள் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்(இதனைத் தளமாகவும் கொள்ளலாம்).தமிழறிஞர்களின் படங்கள்,அறிஞர்களின்
வாழ்க்கைக்குறிப்பு,பொள்ளாச்சி நசன் அவர்களுக்கு வரும் இதழ்கள் மடல்கள் பற்றிய விவரம்,நூல் மதிப்புரை,தமிழ்ப்பாடம்,திருக்குறள்,இலக்கிய நிகழ்வுகள்,அரிய புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.இதில் இடம்பெற்றுள்ள பாடங்கள் உலக அளவில் மதிக்கப்படுகின்றன. மாதந்தோறும் புதுப்பிக்கப்படுகின்றது.

புதுச்சேரியிலிருந்து வெளிவரும் தெளிதமிழ் தலைசிறந்த தமிழறிஞர்களின் பாடல்கள், இலக்கண,இலக்கியம் சார்ந்த கட்டுரைகள்,நூல்மதிப்புரை,தமிழ்சார்ந்த நிகழ்வுகள்,பாடல் எழுதும் பயிற்சி முதலியவற்றைக்கொண்டு மூன்று இதழாக இணைய இதழாக
வெளிவருகிறது.

இணைய இதழ்களின் பயன்

இணைய இதழ்களைப் படிப்பவர்கள் உலக அளவில் உள்ளதால் படைப்பாளியின் படைப்பு உலக அளவில் செல்கிறது.உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் முயற்சியை இணைய இதழ்கள் செய்கின்றன.ஒரு படைப்பாளியின் படைப்புகளை எளிதில் திரட்டமுடிகிறது.
பின்னூட்டங்களின் வழி நம் படைப்புகளின் தன்மையை உணரமுடியும்.அச்சு வடிவ இதழ்களைப் படித்த பிறகு சேமிக்க வீட்டில் இடம் தேவை.அச்சுவடிவ இதழ்கள் நம்மை அடைய கால தாமதம் ஏற்படலாம்.இதழ்களை வாங்க தொகை தேவை.ஒரு இதழை ஒரு இடத்திலிருந்து ஒருவர்தான் படிக்கலாம்.ஆனால் இணைய இதழை உலகின் பல பகுதிகளிலிருந்து பலர் படிக்கலாம்.பி.பி.சி. போன்ற தளங்களில் செய்திகைளைப் படிப்பதுடன் செய்திகளை ஒலிவடிவில் கேட்கவும் முடிகிறது.

இணைய இதழ்களைப் பலர் தொடங்கி நடத்தினாலும் சில இதழ்கள்தான் தொய்வின்றி வருகின்றன.தரமாக இதழ்கள் வெளிவந்தாலும் போதிய ஆதரவு இன்மையாலும்,பொருள் நெருக்கடியாலும்,குழு மனப்பான்மையாலும் பல இதழ்கள் வெளிவராமலும்
பராமரிக்கமுடியாமலும் போய்விட்டன.

வெளிவந்த,வெளிவரும் சில இதழ்களைத் திரட்டித்தர இக்கட்டுரை முனைகிறது (இப் பட்டியல் முழுமையானதல்ல.விடுபட்ட இதழ்களைத் தெரிவிக்கப் பட்டியலை முழுமைப்படுத்தலாம்).

தமிழில் சில இணைய தளங்களும், இதழ்களும்

1. தினமலர் www.dinamalar.com
2. தினகரன் www.dinakaran.com
3. தினதந்தி www.dailythanthi.com
4. குமுதம் www.kumudam.com
5. தட்சு தமிழ் http://thatstamil.oneindia.in/
6. மாலைமலர் www.maalaimalar.com
7. தினமணி www.dinamani.com
8. பதிவு.காம் www.pathivu.com
9. தமிழ் சினிமா.காம் www.tamilcinema.com
10. தமிழ் ஈ
11. ஆனந்தவிகடன் www.vikatan.com
12. நிதர்சனம் www.nitharsanam.com
13. வீரகேசரி ஆன்லைன் www.virakesari.lk
14. யாழ்இணையம் www.yarl.com
15. அறுசுவை www.arusuvai.com
16. வெப்உலகம் www.webulagam.com
17. பி.பி.சி தமிழ் www.bbc.co.uk/tamil
18. சிபிதமிழ் www.tamil.sify.com
19. மாலைச்சுடர் www.maalaisudar.com
20. உதயன் தமிழ்நாளிதழ் www.uthayan.com
21. தமிழன் எக்சுபிரசு www.tamilanexpress.com
22. தமிழ்.நெட் www.tamil.net
23. தமிழ்க்கூடல் www.koodal.com
24. தமிழ்பிலிம் மியூசிக் www.tfmpage.com
25. சினிமா எக்ச்பிரசு(ஒருங்குகுறி) www.cinemaexpress.com
26. தேனி.இலங்கை www.thenee.com
27. தினபூமி www.thinaboomi.com
28. தமிழ்மணம் www.thamizmanam.com
29. தமிழ் பிலிம் கிளப் www.thamilfilmclub.com
30. விக்கிபீடியா (மேலே உள்ளவை அலெக்சா பட்டியல்) www.wikipedia.org
31. புதினம் www.puthinam.com
32. பதிவுகள் www.pathivukal.com
33. சங்கதி www.sankathi.com
34. அதிர்வு www.athirvu.com
35. சுடரொளி www.sudaroli.com
36. யாழ் இணையம் www.yarl.com
37. தமிழ்ஆர் www.tamilr.com
38. சுவிசு முரசம் www.swissmurasam.com
39. மட்டுஈழநாதம் www.battieezanatham.com
40. ஈழநாதம் www.eelanatham.com
41. தினக்குரல் www.thinakural.com
42. ஒரு பேப்பர் www.orupaper.com
43. பரபரப்பு www.paraparapu.com
44. முழக்கம் www.muzhakkam.com
45. கனடாமுரசு www.canadamurasu.com
46. சுதந்திரன் www.suthanthiran.com
47. ஈழமுரசு www.eelamurasu.com
48. தமிழ்முரசு
49. விடுதலை www.viduthalai.com
50. தமிழ்நாதம்
51. லங்காசிறீ www.lankasri.com
52. தமிழர்தகவல் மையம் www.maalaisudar.com
53. சுரதா www.suratha.com
54. தமிழ்நியூசு டி.கே www.tamilnews.dk
55. சற்றுமுன் www.sarumun.com
56. கல்கி www.kalkiweekly.com
57. வணக்கம் மலேசியா www.vanakkammalaysia.com
58. அலைகள் www.alaikal.com
59. தென்செய்தி www.thenseide.com
60. நோர்வே தமிழ் www.norwaytamil.com
61. ஈழதமிழ் www.eelatamil.com
62. நெருடல் www.nerudal.com
63. தமிழ்விண் www.tamilwin.net
64. விருபா www.viruba.com
65. அறுசுவை www.arusuvai.com
66. சோதிடபூமி www.jothidaboomi.com
67. மதுரைத்திட்டம் www.projectmadurai.com
68. குவியம் www.kuviyam.com
69. நாதம் www.natham.com
70. தமிழோவியம் www.tamiloviam.com
71. காலச்சுவடு www.kalachuvadu.com
72. உயிர்மை
73. அப்பால் தமிழ் www.appal-tamil.com
74. வார்ப்பு(கவிதை இதழ்) www.vaarppu.com
75. நெய்தல் www.neithal.com
76. கவிமலர் www.kavimalar.com
77. இளமை
78. தமிழமுதம்
79. நிலாச்சாரல் www.nilacharal.com
80. தமிழம் www.thamizham.net
81. எழில் நிலா www.ezhilnila.com
82. வானவில் www.vaanavil.com
83. தமிழ்த்திணை(ஆய்வுஇதழ்) www.tamilthinai.com
84. தோழி.காம்
85. திசைகள்
86. அம்பலம் www.ambalam.com
87. ஆறாம்திணை www.araamthinai.com
88. மரத்தடி www.maraththadi.com
89. தமிழ் எழுதி www.http://tamileditor.org
90. தமிழ்முரசு(சிங்கப்பூர்-ஒருங்குகுறி) www.tamilmurasu.asia1..com.sg
91. அமுதசுரபி
92. கலைமகள்
93. முரசொலி www.murasoli.in
94. கீற்று www.keetru.com
95. தமிழகம்.காம் www.thamizhagam.com
96. மஞ்சரி
97. ஈழவிசன்
98. தமிழ் ஆசுதிரேலியா www.tamilaustralian.com
99. எரிமலை www.erimalai.com
100. இன்தாம் intamm
101. வரலாறு www.varalaaru.com
102. மொழி www.mozhi.net
103. செம்பருத்தி www.semparuthi.org
104. தமிழமுதம் www.tamilamutham.com
105. தாயகப்பறவைகள் www.thayakaparavaikal.com
106. தமிழ் இணையப்பல்கலைக்கழகம் www.tamilvu.org
107. சூரியன் www.sooriyan.com
108. திண்ணை www.thinnai.com
109. புதுச்சேரி.காம் www.pudhucherry.com
110. நக்கீரன் www.nakkheeran.com
111. தி.க.பெரியார் www.periyar.com
112. தமிழ் அரங்கம் www.tamilcircle.com
113. தமிழ்வாணன் www.tamilvanan.com
114. திராவிடர் www.dravidar.org
115. உண்மை www.unmaionline.com
116. புதுவிசை www.puthuvisai.com
117. முத்தமிழ்மன்றம் www.muthamilmantram.com
118. தமிழகம்.நெட் www.thamizhagam.net
119.மங்கையர்மலர் www.mangayarmalarmonthly.com
120. கல்கி www.kakionline.com
121. கீற்று வழங்கும் இணைப்புகள்(www.keetru.com)
கவிதாசரன்
கருஞ்சட்டைத் தமிழர்
புதிய காற்று
அணி
அணங்கு
குதிரைவீரன்பயணம்
விழிப்புணர்வு
தீம்தரிகிட
கதைசொல்லி
புதுவிசை
கூட்டாஞ்சோறு
அநிச்ச
புதுஎழுத்து
உங்கள் நூலகம்
புதியதென்றல்
வடக்குவாசல்
புன்னகை
உன்னதம்
புரட்சி பெரியார்முழக்கம்
தலித்முரசு
122. கணித்தமிழ் www.kanithamizh.com
123. முத்தமிழ்ச்சங்கம் www.muthamilsangam.co.nz
124. கருத்து www.karuthu.com
125. சித்தர்கோட்டை www.chittarkottai.com
126. பொய்கை www.poikai.com
127. கௌமாரம் www.kaumaram.com
128. தமிழோவியம் www.tamiloviam.com
129. தமிழ்வலை www.http://kanaga-sritharan.tripot.com.com
130. மலேசியநண்பன்
131. கணையாழி
132. கணியத்தமிழ் www.kaniyatamil.com
133. தமிழ்முதுசொம் www.tamilheritage.org
134. தென்றல் www.tamilonline.com/thendral
135. பதியம் www.pathiyam.com
136. தமிழ்வெப்துணிமா www.tamil.webdunia.com
137. ஊடறு www.oodaru.com
138. முத்துக்கமலம் http://www.muthukamalam.com
139. வரலாறு www.varalaru.com
140. தென்னிந்திய ச.வ.ஆ.நிறுவனம் www.sishri.org

புதுச்சேரி வலைப்பதிவு பயிலரங்கில்(09.12.2007) வெளியிடப்பெற்ற மலரில் இடம்பெற்றுள்ள
இக்கட்டுரையை வலைத்தள நண்பர்களுக்கு வழங்கியுள்ளேன்.கட்டுரைச் செய்திகளைப் பயன்படுத்துவோர் இணைப்பு வழங்கவும்.

முனைவர் மு.இளங்கோவன் அவர்களால் 2007ஆம் ஆண்டு இயற்றபப்பட்டது

http://www.geotamil.com/pathivukal/dr_mu_elangovan_on_internet_magazines.htm
http://tooriga.wordpress.com/2008/06/01


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R