தொடர் நாவல்: கலிங்கு (2009 - 9 & 2009 -10) - தேவகாந்தன் -
அத்தியாயம் 2009 - 9
கொழும்பிலிருந்தும் புதுடெல்லியிலிருந்தும் நியூயோர்க்கிலிருந்தும் திட்டமிடப்பட்ட யுத்தம் வன்னியில் நடந்ததெனில், யுத்த நிலைமைகள் வந்து குவியும் செய்திக் களமாக வவுனியா ஆகியிருந்தது. சர்வதேச மனித உரிமை இயக்கத்தினரும், சர்வதேச உள்ஊர் ஊடகவியலாளரும், தொண்டு நிறுவன அதிகாரிகளும் அங்கே குவிந்துபோயிருந்தனர். பல ஊடகவியலாளர் அரசாங்க தடையை மீறியும் இறுதி யுத்தம் நடந்துகொண்டிருந்த குறுகிய எல்லையின் விளிம்பை அடைந்திருந்தனர்.
பெரும்பாலும் யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டிருந்தது. முடிவும் தெரிந்துவிட்டது. அது பிரகடனப்படுத்தப்படுவதற்கான நேரம்தான் இனி வரவிருந்தது.
ஆனாலும் வேலுப்பிள்ளை பிரபாகரன் எங்கேயென்ற கேள்வி பெரும்பாலானவர் மனங்களில் ஒலித்துக்கொண்டிருந்தது. சிலர்மட்டும் பொட்டம்மானோடு அவர் தொப்பிகல காட்டுக்குள் தப்பிவிட்டாரென நம்பிக்கொண்டிருந்தார்கள்.
ராணுவத்தின் குண்டு வீச்சுக்களையும், சில விடுதலைப் புலிகளின் துப்பாக்கிகளையும் தப்பிய தமிழ் மக்கள் சிலர் வனங்களுக்குள்ளிருந்து வெளியேறி வவுனியாவை வந்தடைந்துகொண்டிருந்தார்கள். அவர்களிடம் தவல்களும் கதைகளும் இருந்தன. அவை அவர்களிடத்தில் மட்டுமே இருக்கப் பணிக்கப்பட்டன.
வனம் தன் மௌனமுடைத்து அழுகையையும், ஓலத்தையும், ஒப்பாரியையும் வெளியிட்டுக்கொண்டிருந்தது. ஒரு காலத்தில் வனத்தின் ரகசியம் அதன் அடர்த்தியாய், பாதைகளற்ற இறுக்கங்களாய், கானாறுகளின் பாய்ச்சல் வேகங்களாய், மிருகங்களின் அபாயங்களாய் இருந்தது. அப்போது மனிதச் சுவடுகள் பதிந்து பதிந்து தடம் விழுந்திருந்ததில் அதன் ரகசியத்தின் கூறுகள் பல அழிந்திருந்தன. ஆனால் அந்தத் தடங்களில் விதைக்கப்பெற்றிருந்த மிதிவெடிகள் இன்னும் மீதமாய் இருந்தன. அவை முளைத்து தளிர்க்காவிட்டாலும், உயிர்கொண்டிருந்தன. பிறர் உயிர் வௌவும் திறன்கொண்டவையாயும் இருந்தன. அது இன்னொரு இரகசியமாய் வனத்துள் இருந்தது. அதிலிருந்து மீண்ட சிலர் கரைசேர்ந்ததும் குலுங்கி அழுதனர். கூடவந்த உறவுகளை அவை காவுகொண்ட கதையைச் சொல்லி கதறிப் புலம்பினர்.