- எழுத்தாளர் ரஞ்ஜனி  சுப்ரமணியம் சிறந்த கலை,இலக்கியத்திறனாய்வாளராகவும் அறியப்படுபவர். அவர் எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மற்றும் 'குடிவரவாளன்' நாவல்களைப்பற்றி எழுதிய திறனாய்வுக் கட்டுரை இது. -


ஒரு அகதியின் வாழ்வும் உணர்வுகளும் அவனாக வாழ்ந்தாலன்றி புரிந்து கொள்வது சிரமமானது. கடந்த சில  தசாப்தங்களில் முன்னேற்றமடைந்த மேற்கு நாடுகளில் தஞ்சம் கோரிய  எம்மவர்களின் பயண மற்றும் வாழ்வியல் அவலங்கள், தாயகத்தில் இருக்கும் உறவுகளால் சரியான விதத்தில் மனம் கொள்ளப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கான பதில் இன்றளவும் 'இல்லை'  என்பதாகவே அமையும். இத்தகைய   ஒரு சூழ்நிலையில் தனது புலம்பெயர் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு தரமான  படைப்பாளி  தன்னிலை ஆறுதலை மட்டுமல்ல, தனது அனுபவப் பதிவுகளின் மூலம் அகதி வாழ்வின் கொடூரமான மறுபக்கத்தை வாசகருக்காகவும் வரலாற்றுக்காகவும் விட்டுச் செல்கிறான்.  வ.ந. கிரிதரன் அவர்களின் அமெரிக்கா (முதற்பதிப்பு 1996  இரண்டாம் பதிப்பு 2019), குடிவரவாளன் ( 2015) ஆகிய இரு நாவல்களும் இவ்விடயத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன.

இவ்விரு நாவல்களின் ஆசிரியரான வ.ந.கிரிதரன்  அவர்களது  எழுத்தின் இயல்புகளை, படைப்புகளினூடாக வெளிப்படும் பொதுப்பண்புகளால்   இனங்காண முடியும். தாய் மண்ணின் சாயம் போகாத நினைவுகளுடன் வாழ்பவர் ; வரலாற்றை ஆராய்ந்து அறிபவர் ; கவித்துவமான சிந்தனைகளைஉடைய இயற்கையின் ரசனையாளர்; வாழ்வியலை  தத்துவரீதியாகவும் பிரபஞ்ச சார்புத் தன்மையுடன் அர்த்தப்படுத்துபவர் ;  சஞ்சலமுற்ற நேரங்களில் பாரதியின் கவிதைகளால் புத்துயிர் பெறுபவர் ; தன்னிமிர்வும் பன்முக வியாபகமும் கொண்ட சிந்தனையாளர் ; வித்தியாசமான நடையுடன் கூடிய எழுத்தாளர்.இவரது எழுத்தின் போக்கினை உணர்ந்து நாவலுக்குள் உள்நுளையும் ஒருவரால் அதிக ரசனையும் புரிதலும் கொள்ள முடியும் என்பது உண்மை.

கனடாவிற்கான தன் பயணப் பாதையில் இடைமாறலுக்காக, சட்டபூர்வமாக  அமெரிக்காவின் பொஸ்டன் விமான நிலையத்திற்கு வரும் ஒருவன் சந்தர்ப்ப சூழ்நிலையால்  அகதி அந்தஸ்து கோர வேண்டிய  நிலைக்குத் தள்ளப்படுகிறான். இச்சந்தர்ப்பத்தில், ஜனநாயகத்தின் தொட்டில் என வர்ணிக்கப்படும் உலகின் மாபெரும் வல்லரசொன்றின் கருணையற்ற இருண்ட  பக்கங்களையும் மனோரீதியான சித்திர வதைகளையும் விலாவாரியாக வெளிச்சமிட்டுக் காட்டுவதே  படைப்பாளியின் நோக்கம். அதில் பெருவெற்றியும் பெற்றுள்ளார்.

அக்கரைப் பச்சையாக மாயத் தோற்றம் தரும்  விடயங்கள் நிஜத்தில்  அவ்வாறல்ல என்ற புரிதல் இவ்விரு நாவல்களையும் வாசிக்கும் போது தோன்றியது. இலங்கை போன்ற நாடுகளில் மனித உரிமை மீறல்களும், மூடிமறைப்புகளும், சட்ட மீறல்களும் சகஜமானவை என்பது பொதுவான அபிப்பிராயம். வியப்பேதும் இல்லை.  ஆனால் 'உலகின் பொலிஸ்காரன்' என்ற  நிலையைக் கொண்டிருக்கும் அமெரிக்காவிலும் இவ்வாறான  நிகழ்வுகள் தவறான புரிதல்களினால் இடம்பெறுகின்றன என்பது வியப்புக்குரியது.

 

        -  அமெரிக்கா (இரண்டாவது பதிப்பு, 2019) -

எண்பத்து மூன்று இனக்கலவரத்தின் பின் ஆரம்பமாகும் இவ்விரு நாவல்களும் பிரதான கதாபாத்திரமான இளங்கோ என்ற இளைஞனின் பார்வையில் கூறப்பட்டுள்ளன.  படித்தவர்களும் உயர் பதவியில் இருந்தவர்களும் உயிர்ப்பாதுகாப்பு கருதி புலம் பெயரத் துணியும் ஒரு சூழ்நிலை. பொதுநலவாய நாடுகளில் ஒன்றான இலங்கையில் இருந்து கனடாவிற்குச் செல்வதற்கு விசா எடுக்கத் தேவையில்லை என்ற   அனுகூலத்தைப் பாவித்து, பாரிஸ் நகருக்கும் அங்கிருந்து பொஸ்டன் ஊடாக கனடாவின் மான்ரியாலுக்கும் செல்ல உத்தேசித்திருக்கும் இளங்கோ உட்பட்ட ஐவரை, பொஸ்டனில் இருந்து கனடாவின் மன்றியேல் நகருக்கு ஏற்றிச் செல்ல நிர்வாகச் சிக்கல்கள் காரணமாக டெல்டா விமான நிர்வாகம் மறுத்து விடுகிறது. இதனால் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப் படுவதைத் தடுப்பதற்காக பொஸ்டனில் அகதி அந்தஸ்து கோரும் நிலைக்கு  ஐவரும் தள்ளப்படுகின்றனர். பொஸ்டனில் இருந்து நியூயோர்க்குக்கு கொண்டு செல்லப்பட்டு சிறைக் கூடத்தில் தடுப்புக் கைதிகள் ஆக்கப்படுகின்றனர்.

 இவர்களுக்கு  பொஸ்டன் விமானநிலையத்தில்  ட்ரான்சிட்  விசா வழங்கப்பட்டிருந்த நிலையில், குறிப்பிட்ட சட்டபூர்வ கால எல்லைக்குள் அகதி அந்தஸ்து கோரியிருந்தாலும், தவறுதலாக சட்டவிரோத குடிவரவாளர்களாகக் கணிக்கப்பட்டு சிறை வைக்கப் படுகின்றனர் என்பது துரதிா்ஷ்டவசமானது. யானைக்கும் அடி சறுக்கும். இறுதியில் கிட்டத்தட்ட மூன்று மாத கால தாமதத்தின் பின் அமெரிக்க குடிவரவுத் திணைக்களத்தின் தவறு உணரப்பட்டு  அடுத்தநாள் தடுப்புக்காவலில் இருந்து பிணையில் விடுவிக்கப் படும் நிலையில் உள்ளனர்.
'அமெரிக்கா' நாவல் இப்பகுதியுடன் நிறைவு பெறுகிறது.

நாடு விட்டு நாடு வந்து அனாதரவான சூழ்நிலையில் சிறையில் அடைக்கப்படும்  அவர்களது மன உணர்வுகளும், உறவுகளின் நிலையை எண்ணிய ஆற்றாமையும்,  சந்திக்கும் பல்நாட்டு கைதிகளுடனான அனுபவங்களும், நிராகரிப்புகளும் உதவும் கரங்களும் ஆறுதல் தேறுதல்களும்  பெறுமதி மிக்க வாழ்க்கை அனுபவங்களை இவர்களுக்குத் தருகின்றன. உறவுகள் பிரிக்கப்பட்டு உணர்வுகள் அழிக்கப்பட்ட அகதிகளை, தனிமைப்படுத்தல் என்னும் மன அழுத்தத்திற்குள் தள்ளுவது, அவர்கள் மீளவும் தமது சொந்த நாட்டுக்கு திரும்பும் விருப்பினை தாமாக வெளிப்படுத்துவதற்காகவே என்ற அரசின் தந்திரமான நடவடிக்கை  தெளிவாக  உணர்த்தப் பட்டுள்ளது.

சிறுவயதில் தான் விரும்பும் நாடாக அமெரிக்காவை மிக உயர்ந்த இடத்தில் வைத்திருந்த இளங்கோ, இந்த அனுபவத்தின் பின் ஒருபோதும் அவ்வாறு நினைக்க மாட்டான் என்ற வரிகளின் பின்னிருக்கும் வெறுப்புணர்வு சார்ந்த ஆதங்கம் மனம் கொள்ளப்பட வேண்டியது. அது போலவே எண்பத்து மூன்று இனக்கலவரத்தின் உளவியல் சமூக மாற்றமாக இளைஞர்கள் இயக்கத்தில் சேர்கிறார்கள் என்பதைக் கேள்வியுற்று, கோழைகள் போல உயிர் தப்ப வெளிநாட்டுக்கு  ஓடி வந்த இளங்கோ  போன்றவர்கள் தம்மை  நினைத்து குற்ற உணர்வு கொள்வதும் நுணுக்கமான உணர்வுநிலை. இன்று புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் அன்றைய இளைஞர்கள் பலருக்கும் இது பொதுவான உணர்வாகவே இருக்கும்.

 வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் இலங்கை அரசின் இனத்துவேச நடவடிக்கைகள் பற்றி அங்குள்ள அரசுக்கும் மக்களுக்கும் அறிதலை  ஏற்படுத்த வேண்டும்  என்ற உணர்தல்  கதைமாந்தரூடாக வெளிப்படுத்தப்பட்டு  இருப்பது, இவ்வாறாக புலம்பெயர்ந்த பலரின் உள்ளக் குறுகுறுப்பு மற்றும் குற்ற உணர்வு காரணமாகவே என்ற நியாயமான மனநிலையும் கூறப்பட்டுள்ளது .நாவல் முதலில் எழுதப்பட்ட தொண்ணூறுகளின் காலகட்டத்தில் மட்டுமல்ல இன்றும் இத்தகைய தூண்டல்கள் அவசியமானதாகவே இருக்கின்றன.

                   - குடிவரவாளன், முதற் பதிப்பு, 2015 -

அமெரிக்கா நாவலின் தொடர்ச்சியாக 'குடிவரவாளன்' அமைந்திருக்கிறது. நாளை விடுதலை எனும் நிம்மதியுடன் எண்பத்து மூன்று இனக்கலவர நாட்களின் கொடிய நிகழ்வுகளை  'சலனப்படமாகக்' காணும் இளங்கோவின் அக்காலகட்டம் பற்றிய  நினைவலைகள்,வாசகரை மீண்டும் அந்த அவலநாட்களுக்குள் இழுத்துச் சென்று பதற  வைக்கின்றன. இனக்கலவரத்தில் நிர்வாணமாக்கப்பட்டு  எரியூட்டப்படும் தமிழர்களும் வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகளும் இளங்கோவின் அனுபவப் பதிவாக மீண்டும் மனதை ரணமாக்குகின்றன.படைப்பாளி கூறியிருப்பது போல இது ஆவணப் பதிவாகவும் அமைகிறது. சிறுபான்மையான தமிழர்களைப் போலவே பெரும்பான்மையினரான சிங்கள மக்களுக்கும், ஒரு சிறுபான்மை உணர்வும் அதன் காரணமான அச்ச உணர்வும் உண்டு என்பதும் இவ்விடத்தில் குறிப்பிடப் படுகிறது. காரணம் எமக்கு அருகிலிருக்கும் தமிழக மக்கள். சிங்கள மக்களின் பாதுகாப்பற்ற உணர்வும் புரிந்து கொள்ளப்பட வேண்டிய நியாயங்களைக் கொண்டுள்ளது.

 அகதிகளுக்கான சட்டபூர்வமான ஆவணங்கள் ஏதுமற்ற நிலையில் 'பிணையில் விடுவிக்கும் பத்திரம்' ஒன்றை மட்டுமே சட்டபூர்வ ஆவணமாகக் கொண்டு சிறையில் இருந்து வெளிவரும் இவர்கள், தொழில் ஒன்றைத் தேடி தம்மை நிலை நிறுத்துவதற்கும், உயிர் வாழ்தலுக்கும் தப்பிப் பிழைத்தலுக்குமான பெரும் போராட்டத்தினை  இந்நாவல் கூறுகின்றது. தமது படிப்புக்கும் தகுதிக்கும் ஏற்ற வேலை ஒன்றைத் தேடுவதற்கு சமூகக் காப்புறுதி இலக்கம் முக்கியமென்பதை உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். நியுயார்க் சட்டத்தரணி அனிஸ்மானின் உதவியினை நாடும் இவர்கள்  அவராலும் ஏமாற்றத்துக்கு உள்ளாகின்றனர். இக்கால கட்டத்தில் தமது கல்வித் தகைமைகளுக்கு சற்றும் பொருத்தமற்ற உடல் உழைப்பைக் கோரும் பல தரப்பட்ட கீழ் மட்ட வேலைகளை குறைந்த சம்பளத்தில் செய்கின்றனர். விடிவு கிடைக்கும் என்ற  மன நம்பிக்கையை உறுதியாய் பற்றி இருக்கின்றனர். ஆனால் ஏமாற்றங்கள் தொடர்கின்றன. தமது மனித உரிமைகள் மீறப்பட்டது நிர்வாகத்தின் தவறென நட்ட ஈடு கோரும்படி கூறிய சட்டத்தரணி, பின்னர் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அழுத்தம் காரணமாக பின்வாங்குகிறார். இதன் பின்புலத்தில் பணம் கைமாறலும் உள்ளதா என இவர்கள் சந்தேகிக்கும் இடம்  பேரதிர்ச்சி அடையச் செய்கிறது. இவர்களின் வழக்கு வெற்றி பெற்றால் அது ஏனைய அகதிகளுக்கும் உதாரணமாகி விடுமோ என்ற  வெளிப்பாடு 'மனித உரிமைகளின் காவலன்' என்ற அமெரிக்க நாட்டின் மீது பெரும் சஞ்சல உணர்வினை ஏற்படுத்துகிறது.

ஒரு வருடகால அலைக்கழிவின் பின் இளங்கோ முன்பு திட்டமிட்டபடி அகதிகள் விடயத்தில் நெகிழ்ச்சியான போக்குடைய கனடா செல்வதற்கு முடிவு செய்கிறான். சட்டவிரோதமாக கனடாவுக்குள் நுழைய முற்படும் அவனது திட்டம் ஆபத்துக்கள் நிறைந்தது எனினும் தன்னம்பிக்கையுடன் தனது பயணத்தை தொடங்குகின்றான். முதல் நாள் இரவு தனது குறிப்பேட்டில் தனது மனதை உறுத்தித் தாக்கிய பல விடயங்களைப் பதிகிறான்.  (பக்கம் 199 தொடக்கம் 202 )  நாவலில் அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய  அதிமுக்கிய பக்கங்களாக இவற்றைக் கொள்ளலாம்.

ஏனெனில், சில படைப்புகள்  இறுதியில் சொல்லப்படும்  வசனங்களால் அல்லது கேட்கப்படும் கேள்விகளினால் தமது உச்சக்கட்ட வெளிப்பாட்டினைத் தருகின்றன. அமெரிக்கா, குடிவரவாளன் ஆகிய  இரு படைப்புகளும் இவ்வகையைச் சார்ந்தவை. சர்வதேசத்தின் பொலிஸ்காரனாக மனித உரிமைகளுக்குப் பெயர் போன ஒரு நாட்டின் மீது, பாதிக்கப்பட்ட ஒரு அகதியினால் முன்வைக்கப்படும் கேள்விகள் அதன் நியாயத்தன்மை காரணமாக படைப்புக்கு மிகுந்த பெறுமதியையும் புதிய பரிமாணத்தையும் தருகின்றன. பலரின் கனவுலகமாகத் திகழும் அமெரிக்காவின் இருண்ட பக்கங்களையும், ஆரோக்கியமான பக்கங்களையும் இளங்கோ தன் மன வெளிப்பாடுகளாகப் பதிவு செய்கிறான். அத்துடன் அகதிகளுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக ஏமாற்றும் முகவர்களும், அகதிகளின் விடயத்தில் பராமுகமாக நடக்கும் சில புலம் பெயர் அமைப்புகளும் இளங்கோவின் கணிப்பிலிருந்து  தப்பவில்லை. இளங்கோவினால் முன்வைக்கப்படும் மூன்று கேள்விகள் அதிமுக்கியமானவை.

வாழ்வதற்கு வழிகள் பல கொண்டிருக்கும் ஒரு நாட்டில் சுகித்திருக்கும் மக்கள் ஒருபுறம் ;  உரிமைகள் மறுக்கப்பட்ட மக்கள் கூட்டம் மறுபுறம். தமது நிலை கருதி குறைந்த வேதனத்தில் கடின  உழைப்பைத் தரும் மில்லியன் கணக்கான  சட்டவிரோத குடிகளின் உழைப்பில் வசதி படைத்த மக்கள் சுகித்து வாழும் போக்கு எப்பேர்ப்பட்ட அநீதி?

ஒருகாலத்தில் செல்வம் நாடி இந்த மண்ணுக்கு சட்டவிரோதமாகப் படையெடுத்து, இம்மண்ணின் பூர்வகுடிகளை நிர்மூலமாக்கிய ஐரோப்பியரின் வழித்தோன்றல்களான இன்றைய பெரும்பான்மை நவ அமெரிக்க  மக்கள், இன்று பல்வேறு அரசியல்  பொருளாதார காரணங்களுக்காக இங்கு படையெடுக்கும் மக்களை சட்டவிரோத குடிகளாக்கி சிறுமைப் படுத்துவதற்கு தார்மீக உரிமை இருக்கிறதா? 

தமது தேசிய பாதுகாப்பு நலன்களுக்காக உலகெங்கும் அரசியல்  இராணுவ ரீதிகளில் புகுந்து விளையாடியும் , வலிமை குன்றிய நாடுகள் மீது ஆதிக்க மனப்பான்மை கொண்டு அமெரிக்கா  தொடுக்கும் ஈவிரக்கமற்ற போர்களினாலும்   பாதிக்கப்பட்ட மக்கள் இங்கு அகதிகளாக வந்தால் ஏற்பதில் தயக்கமென்ன?

இவ்வாறாக தன் மன ஆதங்கங்களை இளங்கோவினூடாக வெளிப்படுத்தும் படைப்பாளி, அமெரிக்காவின் ஆற்றலும் நம்பிக்கையும் மிகுந்த ஆரோக்கியமான பக்கங்களையும் சுட்டிக் காட்டத் தவறவில்லை. அவை பலராலும் வெளிப்படுத்தப்பட்டு உள்ளன.துரதிா்ஷ்ட வசமாக அகதிகளில் இந்நிலை கண்டவர்கள் ஒரு பகுதி எனில் அமெரிக்கா பலரின் கனவு தேசமென்பதும் சென்றடைந்த அகதிகளில் பலர் இன்று மேனிலையில் இருக்கிறார்கள் என்பதும் உண்மை.

நாவலில் மனதில் நிலைக்கும் மனித நேயம் கொண்ட பாத்திரப் படைப்புகளாக  இடர் மிகுந்த நாட்களில் வேலை வாய்பினைத் தந்த ஹரிபாபு, வாடகை வீட்டு உரிமையாளர்கள் அஜித் பத்மா தம்பதி, தடுப்புக் காவலில் இருந்து இவர்கள் விடுதலை பெற முயற்சிகளை மேற்கொள்ளும் கிறிஸ்தவ பாதிரியார் ஏபிரகாம் , வேடிக்கையாகப் பேசினாலும் 'அமெரிக்கா உங்களை நிச்சயம் வாழவைக்கும்' என நம்பிக்கை அளித்து ஆலோசனைகள் கூறும் குடிவரவுத் திணைக்கள அதிகாரி டிம் லாங்கின்,உருக்கமான ஒருதலைக் காதலுடன் ஏங்கும் கோஷ், 'பாப் பாடகி சிந்தி லோப்பரின்' உருவச்சாயல் கொண்ட ரயில் சிநேகிதி ஆகியோரைக் குறிப்பிடலாம். அதே சமயம் அகதிகளுக்கு உதவுபவர்கள் போல பொய்முகம் காட்டி ஏமாற்றும் ஸ்பானிஸ்காரன் பப்லோ, சட்டத்தரணி அனிஸ்மான் போன்றவர்களும் வெறுப்புடன் நினைவு கூரப்பட வேண்டியவர்களே.

     -  அமெரிக்கா (முதற் பதிப்பு, 1996) -

உலகெங்கும் போர்களும் அவை சார்ந்த பிரச்சனைகளும், ஆதிக்க நாடுகளினால் தமது நலன் கருதி உருவாக்கப் படுகின்றன என்பதும் அகதிகள் தாமாக உருவாவதில்லை, ஆதிக்க சக்திகளினால் உருவாக்கப் படுகிறார்கள் என்பதும், தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியே  என்பதும் வாசிப்பின் அனுபவமாகப் பெறப்படுகிறது.

 கனடாவிற்கான பயணத்தை ஆரம்பித்திருக்கும் இளங்கோவிற்கு அவன் மனம் விரும்பும் பாரதி பாடலொன்றின் சில வரிகளால் வாழ்த்துவதே சிறப்பானதாக இருக்கும்.

'இன்று புதிதாய் பிறந்தோமென்று நீவிா்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்
தீமையெலாம் அழிந்துபோம் திரும்பி வாரா`

உசாத்துணைப் பட்டியல்

1. அமெரிக்கா (நாவல்) - வ.ந.கிரிதரன் , மகுடம் பதிப்பகம், மட்டக்களப்பு, இலங்கை (2019)
2. குடிவரவாளன் (நாவல்) - வ.ந.கிரிதரன், ஓவியா பதிப்பகம், வத்தலகுண்டு, தமிழ்நாடு (2015)
3. அமெரிக்கா (தொகுப்பு)  - வ.ந.கிரிதரன் , சிநேகா பதிப்பகம் (தமிழ்நாடு) & மங்கை பதிப்பகம் (கனடா) (!996)

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்