என் ஊடக சகோதரர்கள் வேலை இழப்பு, பணி விடுமுறை, சம்பளக் குறைப்பு என்ற இடர்களை எதிர்கொண்டு வருகிறார்கள் என்ற செய்திகளைக் கேட்க எனக்கு வருத்தமே மேலிடுகிறது.அவர்களில் பலர் கடுமையான உழைப்பாளிகள். அவர்களின் பெயரோ முகமோ கூடப் பலருக்குத் தெரியாது (என்னுடைய நூல் ஒன்றை அது போன்ற பத்திரிகையாளர்களுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறேன்) அவர்களுக்கு இது போல் இடர் நேரிட்டிருக்கக் கூடாது. கொரானா உலகையே வாட்டிக் கொண்டிருக்கிறது கொரானா இப்படி ஒரு தாக்கம் ஏற்படுத்தும் என நான் நினைத்ததில்லை. ஆனால் இது போன்ற நிலை என்றேனும் நேர்ந்துவிடுமோ என்ற அச்சம் எனக்குக் கொரானாவிற்கு முன்னரே அவ்வப்போது ஏற்பட்டதுண்டு.

நான் பத்திரிகை உலகில் நுழைந்த போது வார இதழ் அலுவலகங்களில் ஆசிரியர் துறையில் அதிகம் பேர் இருக்கமாட்டார்கள். பெரும்பாலும் பத்திரிகையின் உரிமையாளாரே ஆசிரியராக இருப்பார். வெறுமனே பெயருக்கு மட்டுமல்ல. எழுத்தாளராகவும், பத்திரிகையில் வெளியிடப்படுவதைப் பற்றி முடிவெடுப்பவராக இருப்பார். ஆசிரியர் துறையில் மூன்று அதிகம் போனால் நான்கு பேர் இருப்பார்கள். குமுதம் தமிழ் வார இதழ்களில் விற்பனையில் முதலிடத்தில் இருந்த போது ரா.கி. ரங்கராஜன், ஜ.ரா. சுந்தரேசன், சண்முகசுந்தரம் (புனிதன்) ஆகிய மூவர்தான் ஆசிரியர் பிரிவில் முழு நேர ஊழியர்கள். பால்யூ அரசுப்பணியில் இருந்ததால் ரீட்டைனர் ஆக இருந்தார். ஆனால் அவரும் முழு நேரப் பணியாளர் போலத்தான் பங்களித்து வந்தார். ரஜத், பாமா கோபாலன் போன்றோர் வெளியிலிருந்து பங்களித்தார்கள். பின்னால் பிரபஞ்சன் முழு நேரப் பத்திரிகையாளராக இணைந்து கொண்டார்.எஸ்.ஏ.பி. யோடு சேர்ந்து இவர்கள் எல்லோரும்தான் தமிழில் அதிகம் விற்பனையாகும் இதழின் உள்ளடக்கத்தைத் தீர்மானித்து வந்தார்கள் ராகி, ஜராசு, புனிதன், இந்த மூவரும் சிறுகதை, துணுக்கு, தொடர்கதை முதல் வாசகர் கடிதத்தைத் தேர்வு செய்வது வரை பத்திரிகை தொடர்பான அத்தனை வேலையையும் செய்வார்கள். எழுதுவதோடு எடிட் செய்வது, லே அவுட்டைத் தீர்மானிப்பது, புகைப்படங்கள், ஓவியங்களைத் தேர்வு செய்வது என்று அஷ்டாவதானம் செய்து கொண்டிருந்தார்கள். இறுதி முடிவை எடிட்டர் (எஸ்.ஏ.பி) எடுப்பார். அச்சுக்குப் போகிற இறுதி நிலையில் கூட இது வேண்டாமே என்று அவர் சொல்லிவிட்டால் அந்தக் கடைசி நிமிடத்தில் அதற்கு மாற்றைத் தேடியாக வேண்டும். அப்போது ஆஃப்செட்டில் அச்சாகி வந்தது.பிளேட் என்பதுதான் இறுதி நிலை. பிளேட்டை மிஷினில் மாட்டி ஓட்டினால் அதிலிருப்பது அச்சாகிவிடும். பிளேட் போட்டபின் அம்மோனியா பிரிண்ட் என்று கட்டிட வரைபடங்களுக்கு நீல வண்ணத்தில் பிரிண்ட் எடுப்பது போல முழுப்பத்திரிகையும் அம்மோனியா பிரிண்டாக வரும் போது அதில் கூட எடிட்டர் திருத்தி நான் பார்த்திருக்கிறேன்.

ரங்கராஜன், குமுதத்தோடு மாலைமதிக்கும் அவ்வப்போது நாவலும் எழுதுவார். ஒருமுறை அந்த வாரத்திற்குத் தேர்வு செய்யப்பட்டிருந்த நாவல் கடைசி நிமிடத்தில் நிராகரிக்கப்பட்டதால் ‘எடிட்டர் கூப்பிட்டால் மட்டும் சொல்லி அனுப்புங்கள்’ என்று சொல்லிவிட்டு கட்டுக் காகிதங்களை எடுத்துக் கொண்டு அலுவலக மாடிக்குப் போனவர் அன்று மாலை ஒரு முழுநாவலோடு திரும்பி வந்தார்

அநேகமாக அன்று இருந்த எல்லாப் வாரப்பத்திரிகைகளிலும் இதுதான் நிலை. கல்கியில், கி.ராஜேந்திரன், மணி, சீதா ரவி. பின்னர் இளங்கோவன் பா.ராகவன். சந்திரமெளலி வெளியிலிருந்து பங்களித்து வந்தார் (இன்றும் கூட கல்கியில் அதிகம் பேர் இல்லை) இதயம் பேசுகிறதுவில் தாமரை மணாளன், லட்சுமி சுப்ரமணியன் (அவர் கூட முழு நேரப் பணியாளர் இல்லை) சாவியில் பாரி வள்ளல் மட்டுமே முழுநேரப் பத்திரிகையாளர். ராணி மைந்தன், நான், பாலகுமாரன் போன்றவர்கள் வெளியிலிருந்து பங்களித்து வந்தோம். திசைகளில் சுதாங்கன் மட்டுமே முழுநேரப் பத்திரிகையாளன். அரஸ், கங்கன், லே அவுட்களை கவனித்து வந்தார்கள். சீனியர்கள் பணி ஓய்வு பெற்றபின் குமுதத்தில் பிரியா கல்யாணராமன், மணிகண்டன், ரஞ்சன் ஆகியோர் முழு நேரமாகப் பணியாற்றினார்கள்

இவற்றில் விகடன் மட்டும் விலக்கு. அன்றே, கல்கி காலத்திலிருந்தே அங்கு அதிகம் பணி புரிந்து கொண்டிருந்தார்கள்.(ஒவ்வொருவரும் ஜாம்பவான்கள்) இவர்கள் பெயர்கள் கூட பத்திரிகையின் இம்ப்ப்ரிண்ட்டில் வராது
அன்று பத்திரிகைகளின் உள்ளடக்கத்தில் பெரும்பாலும் கதைகள். இரண்டு அல்லது மூன்று தொடர்கள், சிறுகதைகள் கணிசமான இடத்தை எடுத்துக் கொண்டன. 96 பக்கங்கள்தான். ஆனால் இன்றுள்ள தொழில்நுட்ப வசதி கிடையாது. கையால் எழுதி,கையால் அச்சுக் கோர்த்து, பலமுறை மெய்ப்புப் பார்த்து, கையால் எடிட் செய்து, கையால் லே அவுட் செய்து, பதினாறு பதினாறு பக்கங்களாக அச்சிட்டு... எல்லாம் பல மணி நேரம் பிடிக்கும் வேலை.

செய்தி இதழ்கள் வந்த பின் வாரப் பத்திரிகை அலுவலகங்கள் நாளிதழ் அலுவலகங்களைப் போலாகிவிட்டன. வாரப்பத்திரிகைகளைப் போல நாளிதழ்களின் content வெளியாட்களிடமிருந்து வராது என்பதாலும் அதே எடிட் செய்வது, லே அவுட் பணிகளை ஒரு நாளின் சில மணி நேரத்தில் செய்தாக வேண்டும் என்பதால் அங்கு பலரின் உழைப்புத் தேவைப்பட்டது.
கதை வாசிப்பு, பத்திரிகை வாசிப்பு என்பவை நடுத்தர வர்கக் கலாசாரத்தின் ஓர் அம்சமாக இருந்ததுதான் 90களின் இறுதிவரை வாரப்பத்திரிகைகளின் வேர். சினிமா கூட அந்த வேரை அதிகம் பாதித்ததில்லை. நடுத்தர வர்க்கம் முதலில் தொலைக்காட்சித் தொடர்கள், பின் செய்திச் சானல்கள், அதன் பின் இணையம் என ஈர்க்கப்பட்ட போது அதன் வேர் பலவீனமடையத் தொடங்கியது. ஆனால் பேஸ்மெண்ட் பலவீனமாக இருக்கிறது என்பதை உணராமல் மாடி கட்டிக் கொண்டிருந்தன பத்திரிகைகள்.


அச்சுப் பத்திரிகை என்பது அதிக வருவாய் (Revenue) தரும் தொழில்ல. விற்பனை மூலம் வரும் வருவாய் செலவுகளுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். லாபம் என்பதெல்லாம் விளம்பர ஆதரவைப் பொறுத்தது. (இப்போது அச்சிடும் விளம்பரங்கள் தவிர விருது நிகழ்ச்சிகள் (events) மூலம் வருவாயை அதிகரிக்க முயற்சிக்கிறார்கள்)
அதனால் முதலாளிகள் input cost களை குறைப்பதில் கவனமாக இருப்பார்கள். அதில் முதலில் பணியாளர்களின் ஊதியம், எழுதுபவர்களுக்கான சன்மானம் என்பதில்தான் அவர்கள் கவனம் திரும்பும்.ஏனெனில் காகிதத்தின் விலை, மையின் விலை, விநியோகச் செலவு இவற்றில் கை வைக்க முடியாது என்றாலும் பணி நீக்கம் என்ற முடிவு ஏற்கத் தக்கதல்ல. ஏதோ ஒரு வேலை என்று பத்திரிகைத் துறைக்கு வருகிறவர்கள் குறைவு. அதன் மீதான தாகத்தில் வருகிறவர்கள்தான் அதிகம் இன்றும்.
ஆனால் பத்திரிகைத்துறை தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய தருணம் இது என்று எனக்குத் தோன்றுகிறது கொரானா நம்மைப் பல விஷயங்களில் பழைய காலத்திற்குத் திருப்பிக் கொண்டிருக்கிறது. பத்திரிகையும் பழைய காலத்திற்குப் போய்விடுமோ?


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R