கிளிநொச்சி அம்மாச்சி உணவகம்வடமாகாண பயணத்தை முடித்துக்கொண்டு கிளிநொச்சியிலிருந்து அன்று காலை புறப்பட்டபோது, " உங்களை  அம்மாச்சியிடம்  அழைத்துச்செல்லப்போகின்றேன்" என்றார் நண்பர் கருணாகரன். " எங்கே..? " எனக்கேட்டேன்.  " அம்மாச்சி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா..?" என்றார். அவர் என்னை அண்ணாச்சி என்றுதான் அழைப்பார். அக்காச்சி, அண்ணாச்சி, அம்மாச்சி என்பவை எமது தமிழர் வாழ்வில் பேசுபொருள். அப்படி யாரோ ஒரு அம்மாச்சியின் வீட்டுக்கு அழைத்துச்செல்லப்போகிறார் என்றுதான் முதலில் நினைத்தேன். வடக்கு பணிகள் முடிந்துவிட்டதால், அடுத்து  கிழக்கு மாகாணம் செல்லவேண்டியிருந்தது. அதற்கிடையில் கொழும்பு, கண்டி, மாத்தளை பயணங்களும் இருந்தன. எனது அவசரத்தை அவரிடம் சொன்னேன். நான் புறப்படும்வேளையில் அதிபர் பங்கயற்செல்வன் வந்து, தங்களது தொண்டு நிறுவனத்திற்கும் வந்து செல்லுமாறு கேட்டார். எனது பயணநெருக்கடியை அவரிடம் பக்குவமாகச்சொல்லிவிட்டு, கருணாகரனுடன் புறப்பட்டேன். அவர் அழைத்துச்சென்றது  அம்மாச்சி உணவகம்.  கிளிநொச்சியில் கண்டி வீதியிலிருப்பதனால்,  வெளியூர்களிலிருந்து  யாழ்ப்பாணம் நோக்கி  வருபவர்களையும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியூர்களுக்கு செல்பவர்களையும்  அழைக்கிறாள்.

அந்த உணவகத்தின் பெயரையும் சிங்களத்திற்கு மாற்றுவதற்கு இலங்கை அரசு எத்தனிக்கிறது என்ற குற்றச்சாட்டை வடக்கு  முதல்வர் முன்வைத்திருக்கிறார். வடமாகாண சபையினால் உருவாக்கப்பட்டிருக்கும் அம்மாச்சி உணவகத்தில் அன்று காலைப்பசியை போக்கியபோது புதிய அனுபவமும் கிட்டியது. அவ்வாறு ஒரு உணவகத்திற்கு அதற்கு முன்னர் சென்றிருக்காதமையினால்தான் அந்த புதிய அனுபம் என நினைக்கின்றேன். கொட்டகை ( Cottage)  வடிவில் அம்மாச்சி இயங்குவதனால்  அப்பம், தோசை, புட்டு, இடியப்பம், இட்டலி, வடை முதலான உணவு வகையறாக்கல் பரிமாறப்படும் அழகே அலாதியானது. அனைத்தையும்        ஒரு (கொட்டேஜில் )  கொட்டகையில் பெறமுடியாது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெண்கள் பொறுப்பாக இருந்து உடனுக்குடன் தருகிறார்கள்.    அங்கு   தனியாக காசாளரும் ( Cashier) இல்லை. யாரிடம் எதனைக்கேட்டுப்பெறுகின்றோமோ அவரிடமே அதற்கான பணத்தை தரல்வேண்டும். அதனாலும் இந்த  அம்மாச்சி வித்தியாசமானவள். தென்னிலங்கையிலிருந்து வரும் பெரும்பான்மை இனத்தவர்களையும் அம்மாச்சி பெரிதும் கவர்ந்திருக்கிறாள். அதனால்தான்போலும் இலங்கை அரசு இதற்குள்ளும் அரசியலை திணிக்கப்பார்க்கிறது. அம்மா, அம்மே, அம்மாச்சி எல்லாம் ஒன்றுதான். சில நாட்களுக்கு முன்னர் பிரபல சிங்கள திரைப்பட இயக்குநர் பிரஸன்ன விதானகேயும் இங்கு வந்து சென்றதாக கருணாகரன் சொன்னார். இங்கு ஒரு முக்கியமான விடயத்தையும் அவதானித்தேன். வழக்கமாக உணவுவிடுதிகளில்,  பொலித்தீன் பாவனைக்கு இருக்கும். உணவு பரிமாறும் தட்டத்தில் வெள்ளை நிறத்திலான  மெல்லிய பொலித்தீனை சுற்றி அதில் உணவு தருவார்கள். ஆனால், அம்மாச்சியில் அப்படி இல்லை.  பிரம்பினால் வடிவமைக்கப்பட்ட வட்டில்களில் சிறிய வாழை இலை வைத்து அதில் நாம் விரும்பிக்கேட்கும் உணவைத்தருகிறார்கள்.  இதன்மூலம் எமது பாரம்பரிய உணவு நாகரீகமும் பேணப்படுகிறது.  பொலித்தீனுக்கு அங்கு அனுமதி இல்லை. தேநீர் அல்லது கோப்பி கேட்டால், எமக்கு அவை கிடைக்காது. ஆனால்,  சில விதைகளினால் தயாரிக்கப்பட்ட சாயம்தான் அங்கு தேனீர். பருகிப்பார்த்தேன். சுவையாக இருந்தது.   வெளிநாடுகளில் பாவனைக்கு இருக்கும் Green Tea, Herbal Tea, Lemon Tea  வகையறாக்களைச்சார்ந்த உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த தேநீர் அங்கு தரப்படுகிறது. அம்மாச்சி உணவகத்தில் சுத்தம் பேணப்படுகிறது. அதனால் அங்கு வருபவர்களின் ஆரோக்கியமும் பேணப்படுகிறது.

இலங்கையில் தற்பொழுது எங்கு திரும்பினாலும் உணவகங்களுக்கு மாத்திரம் குறைவில்லை. அத்துடன் McDonalds, KFC, Pizza Hut   பெருமளவில் தோன்றியிருக்கின்றன.  இவற்றினால் எமது ஆரோக்கியத்திற்கு என்ன நடக்கும் என்பது தெரிந்ததுதான். இலங்கையிலும் வெளிநாடுகளைப்போன்று Fast Food நாகரீகம் தோன்றியிருப்பதனால், McDonalds, KFC, Pizza Hut   என்பன முளைத்திருக்கின்றன. இந்தப்பின்னணிகளுடன் கிளிநொச்சி அம்மாச்சியை பரவசத்துடன் ரசித்தேன். வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் எம்மவர்கள்  தங்கள் குலதெய்வங்களான  அம்மாளாச்சிகளை தரிசிக்க செல்வது போன்று  ஒரு முறையாவது கிளிநொச்சி  அம்மாச்சியை தரிசித்து திரும்பலாம்.


கிளிநொச்சி அம்மாச்சி உணவகம்

அங்கு பணியாற்றும் பெண்கள் இன்முகத்துடனும் சுறுசுறுப்புடனும் இயங்குகிறார்கள். அவர்களுக்கும் சீருடை தரப்பட்டிருக்கிறது. தலைமுடி உணவில் உதிர்ந்துவிடாதிருக்க தொப்பியும் அணிந்திருக்கிறார்கள். வட  பிரதேசத்தில், எத்தனையோ  அம்மாளாச்சி கோயில்கள் இருக்கலாம். அங்கு வரம் கிடைக்கும். கிடைக்காமலும் போகலாம். அவரவர் நம்பிக்கையில் தங்கியிருக்கிறது. ஆனால், கிளிநொச்சி அம்மாச்சியிடத்தில் சுவையான,  அதே சமயம் ஆரோக்கியமான உணவு கிடைக்கும். இங்கு பொலித்தீன் பாவனையில் இல்லை என்று உவகையுடன் சொன்னாலும், அதனை இலங்கையில் தடை செய்வதற்கு  அரசு ஆலோசிப்பதனால்   சுமார் மூன்று இலட்சத்து  நாற்பத்தி ஐயாயிரம்  பேர்  தொழில் வாய்ப்பை  இழக்கவிருக்கிறார்கள் என்றசெய்தி வருத்தம் அளிக்கிறது. அவ்வாறே புகையிலைச்செய்கைக்கும்  ஆபத்து வரவிருக்கிறது.

ஒன்றை இழந்து மற்றும் ஒன்றை பெறவேண்டியது காலத்தின் நிர்ப்பந்தம். 1990 களில் வெள்ளீய அச்சுக்கோப்பாளர்களின் வாழ்வுக்கு கணினி உலைவைத்தது. வீரகேசரி உட்பட பல பத்திரிகைகள் வெள்ளீய அச்சுக்களினால்தான் அச்சிடப்பட்டன. அச்சகங்களும் அதன் பயன்பாட்டில்தான் இயங்கி, திருமண அழைப்பிதழ் தொடக்கம் பிரசுரங்கள், நூல்கள், இதழ்களை வெளியிட்டன.  கணினியின் வருகையினால் பல அச்சுக்கோப்பாளர்கள் தமது வேலையை இழந்தனர். வேறு வேலைகளைத்தேட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளானார்கள். இன்று அதுபற்றி பேசுவார் எவரும் இல்லை. அதுபோன்று பொலித்தீன் பாவனைக்கு தடைவந்தால் வேலையிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.  பல வெளிநாடுகளில் அஸ்பஸ்டஸ் உற்பத்தி தடைசெய்யப்பட்டது.  அதனாலும் மக்கள் வேலை இழந்தனர். பொலித்தீன் கழிவுப்பொருளாக மாறினால் அது மண்ணில் உக்கிப்போவதற்கு இரண்டு நூற்றாண்டுகள் செல்லும் என்கிறார்கள்.  பாண், அரிசி,  பால்மா,  உட்பட ஏராளமான பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் அனைத்தும் பொலித்தீனில்தான் கிடைக்கின்றன. நான் வாழும் அவுஸ்திரேலியாவில், Coles, WoolWorth முதலான சுப்பர் மார்க்கட்டுகளில் பொருட்களை பொலித்தீன் பைகளில்தான் தருகிறார்கள். சிறிதுகாலத்திற்கு முன்னர் மக்களிடமிருந்து அதனை அந்நியப்படுத்துவதற்கு துணியிலான பைகளை அறிமுகப்படுத்தினார்கள். எனினும் அந்த நோக்கம் வெற்றியளிக்கவில்லை. Aldi என்ற சுப்பர் மார்க்கட்டில் பொலித்தீன் பைகளில் பொருட்கள் தரப்படுவதில்லை. வாடிக்கையாளர்களே தம்முடன் பைகளை எடுத்துச்சென்று பொருட்களை கொள்வனவு செய்யவேண்டும். இங்கு குறிப்பிடப்படும் சுப்பர் மார்க்கட்டுகளில் ஒரு டொலருக்கு இந்த துணியிலான பைகளும் விற்பனைக்கு கிடைக்கின்றன. அதுபோன்று இலங்கையிலும் துணியில்  பைகள்  தயாரிக்கும் தொழிற்சாலைகளை இலங்கை அரசு அறிமுகப்படுத்தி அதற்கு ஊக்கமளிக்கவேண்டும்.

" பழையன கழிதலும் புதியன புகுதலும்" என்று எமது முன்னோர்கள் சொல்லியிருப்பதை பின்பற்றுவோம்.



கிளிநொச்சியிலிருந்து வவுனியா வந்து எங்கள் ஊரைக்கடந்து செல்லும் கொழும்பு பஸ்ஸில் ஏறினேன். நண்பர் தம்பிஐயா தேவதாஸ்   தொலைபேசியில் அழைத்தார்.  கொழும்பில் அவரை சந்தித்தவேளையில் இலங்கை வானொலியில் தான் நடத்தும் விடியும் வேளை நிகழ்ச்சிக்கு வந்து நேர்காணல் தருமாறு கோரியிருந்தார். எனது வடபகுதி பயணவேலைகளில் அதனை முற்றாக மறந்திருந்தேன். அவர் எனது நீண்ட கால நண்பர். இலங்கையில்  நலிந்துபோன  தமிழ் திரைப்படத்துறை பற்றி நூல்கள் எழுதியிருப்பவர். இலங்கையில் வெளியான அனைத்து தமிழ்த்திரைப்படங்களும் எந்த தியேட்டரில் எத்தனை நாட்கள் ஓடியிருக்கின்றன என்ற தகவலையும் துல்லியமாகச்சொல்லும்  ஆற்றல் மிக்கவர். ஆசிரியப்பணியிலிருந்த காலத்திலேயே இலக்கியப்பிரதிகளும் எழுதியிருப்பவர். கருணாசேன ஜயலத் எழுதிய கொளுஹதவத்த என்ற பிரபல நாவலை சிங்களத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தவர். இந்தக்கதையை அதே பெயரில் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் இயக்கியிருக்கிறார். தம்பிஐயா தேவதாஸின் தமிழ் மொழிபெயர்ப்பை வீரகேசரி பிரசுரம் வெளியிட்டிருக்கிறது.  கே. ஜயதிலக்கவின் மூன்று பாத்திரங்கள் என்ற நாவலையும் தமிழுக்கு தந்திருப்பவர்.

இவர், எழுதிய நூல்கள் சில:  இலங்கைத்தமிழ்ச்சினிமாவின் கதை, பொன்விழாக்கண்ட சிங்கள சினிமா, இலங்கை திரையுலக முன்னோடிகள், இலங்கை திரை உலக சாதனையாளர்கள், குத்துவிளக்கு - மீள் வாசிப்பு, இலங்கை திரை இசையின் கதை,  இலங்கை வானொலியின் இனிய ஒலிபரப்பாளர்கள். தேர்ந்த சிறுகதைகளும் நாகம்மாள் நாவலும், சிங்களப்பழமொழிகள், புங்குடுதீவு வாழ்வும் வளமும் என்பன  இவரது பிறநூல்கள். நீண்டகாலமாக இலங்கை வானொலியிலும் தொலைக்காட்சிகளிலும்  நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்குகிறார். எனது எழுத்துலக வாழ்வில் சமகால நண்பர். எனக்கிருக்கும் பயணங்கள் பற்றி அவரிடம் சொல்லி  அந்த நேர்காணலை தவிர்க்கவே பெரிதும் விரும்பினேன்.

" என்ன மச்சான் நான் கேட்டால் வரமாட்டாயா...? " என்று உரிமையுடன் அழைத்தார்.

கருணாகரனுக்கு நான் அண்ணாச்சி என்றால்,  தம்பிஐயா தேவதாஸிற்கு மச்சான். இலக்கிய வாழ்வில்தான் எத்தனை சொந்தங்கள்.

எங்கள் ஊருக்கு வந்துசேர்ந்ததும் இந்த வானொலிக்கலைஞருடன் தொடர்புகொண்டேன். அந்த நேரடி ஒலிபரப்பு நிகழ்ச்சி மறுநாள் காலை   7 மணி செய்திக்குப்பின்னர்  தொடங்குகிறது என்று சொல்லி அதிர்ச்சியை தந்தார்.

அப்படியாயின் அதிகாலையே எழுந்து கொழும்பு சென்று சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் அமைந்துள்ள இலங்கை வானொலி கலையகத்திற்கு செல்லவேண்டும். இந்த மச்சானை  என்ன செய்வது...?

மீண்டும் ஒரு அதிகாலை  எழும்படலம் தொடங்கியது.

(பயணங்கள் தொடரும்)

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R