அறிஞர் அண்ணா ஓர் ஓவியர்!
மரணித்தும் மறையாத மகாராணி! - சக்தி சக்திதாசன் - இலண்டன் -
ஒரு நாடு ஸ்தம்பித்து போய்விட்டது என்பதை வெறும் கதைகளிலும், கட்டுரைகளிலுமே கண்டு வந்த எமக்கு அதன் தாத்பரியத்தைக் கண் முன்னால் காணும் நிலை இப்போதுதான் ஏற்பட்டிருக்கிறது. நான் இங்கிலாந்துக்குள் காலடி வைத்து இப்போது 47 வருடங்கள் ஒன்பது மாதங்கள் ஆகின்றன. நான் காலடி வைத்த நாள் முதல் நேற்றுவரை இங்கிலாந்தில் மாற்றமின்றி நான் கண்ட ஒரேயொரு அடையாளம், ஒரேயொரு மனிதர் இங்கிலாந்தின் இரண்டாவது எலிசபெத் மகாராணியார் என்றால் அது மிகையில்லை. இவர் யார் ? இவர் இத்தகைய ஒரு இடத்தை இங்கிலாந்து மக்கள் மத்தியில் மட்டுமல்ல உலக மக்கள் மத்தியிலும் பெற்றிருக்கக் காரணம் என்ன ? இங்கிலாந்து மகாராணியார் எனும் பதவி ஒன்றினால் மட்டும் எமது மகாராணியார் இத்தகைய பெரு மதிப்பை உலகளாவிய ரீதியில் பெற்றிருக்க முடியுமா ? இக்கேள்விகளுக்கு விடைகாண முயலும்போதுதான் இவரின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. மகாராணி எனும் பதவியிலிருக்கும் போதும் மனிதத்துவத்தை இழக்காமல் கலாச்சார அடையாள விழுமியங்களைப் பாதுகாத்து வாழ்ந்த இவரின் அயராத சேவையைப் புரிந்து கொள்ள முடிகிறது.
இனவாதத்தைக் கையிலெடுக்கும் வீரவன்ச! - நந்திவர்மன் -
ஐபிசி தமிழில் ஒரு செய்தி வந்திருந்தது. அது இதுதான்: "சிறிலங்காவில் அரச கட்டமைப்பை வீழ்ச்சியடையச் செய்து, வடக்கு கிழக்கை பிரிப்பதே காலி முகத்திடல் போராட்டத்தின் பின்னணி என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவசன்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகால சட்டம் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய அவர், அரசை வீழ்த்தும் திட்டத்தின் பின்னணியில் அமெரிக்கவே உள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்."
ஏற்கனவே ராஜபக்சாக்கள் நாட்டின் சில பகுதிகளைப் பிரித்துச் சீனாவிடம் தாரை வார்த்து விட்டார்கள் என்பதை விமல் வீரவன்ச மறந்து விட்டது ஆச்சரியம்தான். அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை ராஜபக்சாக்களும், ரணிலும் 99 வருடக் குத்தகைக்குக் கொடுத்து விட்டதை நாடே அறியும். கொழும்புத் துறைமுகத்தில் உருவாக்கப்பட்ட நிலப்பரப்பு சீனாவுக்குத் தாரை வார்க்கப்பட்டதும் அனைவரும் அறிந்ததொன்று. இவற்றையெல்லாம் மறந்து விட்டு வடகிழக்கைப் போராட்டக்காரர்கள் பிரித்து விடுவார்கள் என்பதன் மூலம் இனவாதத்தை விமல் வீரவன்ச கையிலெடுத்துள்ளார்.
நினைவு கூர்வோம்: கறுப்பு ஜூலை 83! - வ.ந.கி -
எம் தலைமுறையைப் பொறுத்தவரை 1983 முக்கியமானதோர் ஆண்டு. குறிப்பாக ஜூலையில் நடைபெற்ற தமிழர்களுக்கெதிரான கொடிய இனக் கலவரம் இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு அழிக்க முடியாத களங்கம். இக்கலவரம் தமிழர்களை உலகின் நானா பக்கங்களுக்கும் அகதிகளாக ஓட வைத்தது. இக்கலவரம் தமிழர்களின் ஆயுதரீதியிலான விடுதலைப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியது. இக்கலவரம் ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்களைக் குடித்தது. இக்கலவரம் தமிழர்களின் உடமைகளைச் சூறையாடியது. பல்வகை வன்முறைகளையும் தமிழர்கள் மேல் ஏவிவிட்டது.
இக்கலவரம் ஊதிப்பெருப்பிக்கப்பட்டதுக்கு முக்கிய காரணம் அன்று ஆட்சியிலிருந்த அரசியலில் குள்ளநரி என வர்ணிக்கப்படும் ஜே.ஆரின் அணுகுமுறை. முன்பு பண்டா& செல்வா ஒப்பந்தத்தைக் கிழிப்பதற்காகக் கண்டிக்குப் பாத யாத்திரை சென்றவர் சகல நிறைவேற்று அதிகாரங்களையும் கொண்ட 'த(ர்)ம்மிஷ்ட்ட' ஜனாதிபதியாகியிருந்தார். அவரது அமைச்சர்களான சிறில் மத்தியூ, காமினி திசாநாயக்க போன்றவர்கள் அவரது ஆட்சிக்காலத்தில் தமிழர்கள் மீதான இனவாதச் செயற்பாடுகளை ஊக்குவித்தனர்.
யாழ் நூலகம் எரிக்கப்பட்டது ஜே.ஆரின் ஆட்சியில்தான். பயங்கரவாதத்தடைச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு தமிழர்கள் மேல் பயங்கர வன்முறை ஏவிவிடப்பட்டது ஜே.ஆரின் ஆட்சியில்தான். 77, 81, 83 என்று தமிழர்கள் மீது இனக்கலவரங்கள் ஏவிவிடப்பட்டதும் ஜே.ஆரின் ஆட்சியில்தான். இவ்விதமான இனக்கலவரங்கள் ஏற்பட்டபோதெல்லாம் அவற்றை அடக்குவதற்குப் பதில் 'போரென்றால் போர். சமாதானமென்றால் சமாதானம்' என்று அவற்றை ஊதிப்பெரிதாக்கியவரும் ஜே.ஆர்.தான்.
தமிழர்கள் மேல் மட்டுமல்லாமல் தென்னிலங்கையிலும் தன் அரசியல் எதிரிகள் மீதும் தனது அடக்குமுறைகளை ஏவிவிட்டவர் ஜே.ஆர். சிறிமா அம்மையாரின் குடியுரிமையைப் பறித்தார். ஜே.வி.பி போன்ற இடதுசாரிக்கட்சிகளை 83 இனக்கலவரத்துக்குக் காரணமென்று பொய்க்காரணத்தை முன்வைத்துத் தடை செய்தார். ஜே.ஆரின் அணுகுமுறைதான் இந்தியாவையும் இலங்கை விவகாரத்தில் தலையிட வைத்து, உள்நாட்டுப் பிரச்சினையை உபகண்டப் பிரச்சினையாக, சர்வதேசப் பிரச்சினையாக உருவெடுக்க வைத்தது. இனக்கலவரக் காலத்தில் சிறைச்சாலையினுள் தமிழ் அரசியற் கைதிகளைக் கொன்று குவித்ததும் ஜே.ஆரின் அரசின் காலகட்டத்தில்தான். இன்று இலங்கை எதிர்கொண்டுள்ள நிலைமைக்கெல்லாம் அடிப்படை அன்று ஜே.ஆர் விதைத்த இனவாத விதைதான். அதுதான் வளர்ந்து , கிளைவிட்டு, நாட்டை வங்குறோத்தாக்கியுள்ளது.
ஐனநாயகச் சர்வாதிகாரம்! - சக்தி சக்திதாசன், லண்டன் -
ஐனநாயகம் என்பார்கள் இல்லை சர்வாதிகாரம் என்பார்கள். என்ன சக்திதாசன் ஐனநாயகச் சர்வாதிகாரம் என்கிறானே ! இவனுக்குப் புத்தி பேதலித்து விட்டதோ ? என்று நீங்கள் எண்ணத் தலைப்படுவது புரிகிறது. எனக்குத் தெரிந்த வரையில் புத்தி பேதலிக்கவில்லை என்றுதான் எண்ணுகிறேன். என்ன ! தற்போதைய உலக அரசியல் அரங்கில் நடைபெறும் காட்சிகள் அனைத்தையும் ஒருமுறை புரட்டிப் போட்டுச் சிந்திக்க வைக்கிறது. நான் வாழும், என்னை வாழவைத்துக் கொண்டிருக்கும் ஐக்கிய இராச்சியத்தில் கடந்த சில மாதங்களாக இடம்பெற்ற அரசியல் அரங்கக் காட்சிகள் ஒருபுறம், நான் பிறந்த மண்ணான சிறீலங்காவில் அரங்கேறிக் கொண்டிருக்கும் அரசியல் அல்லகல்லோலங்கள் ஒருபுறம் , உலக அளவிலே உக்கிரைன் நாட்டில்ஈடம்பெற்றுக் கொண்டிருக்கும் போரும் அதன் அவலங்களும் ஒருபுறம் என அனைத்து உலகிலும் அவசரம் அவசரமாக அரசியல் அரங்கங்களில் நாடகங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இலங்கையிலே தற்போது நடந்தேறியிருக்கும் விடயங்கள் மக்களின் வாழ்வின் அடிப்படை ஆதரங்களையே பாதித்திருக்கின்றன. வசதியுள்ளோரும், வசதியற்றோரும் ஏதேவொரு வகையில் பாதிப்படைந்திருக்கிறார்கள். அம்மக்களில் ஒருவனாக வாழாமல் அம்மக்களைப் பாதிக்கும் விடயங்களைப் பற்றிய கருத்தைப் புலம்பெயர் தேசத்தில் இருந்து தெரிவிப்பது அம்மக்களுக்கு எந்தவிதத்திலும் நியாயமாக இருக்காது என்பது என் கருத்தாகையால் அதைப்பற்றிய அலசலைத் தவிர்த்துக் கொள்கிறேன். சரி இனி ஐக்கிய இராச்சியத்தின் அரசியல் சதுரங்கப் பலகையைப் பார்ப்போம். எனது வாழ்வினை நேரடியாகப் பாதிக்கும் எனும் வகையில் இதைப் பற்றிய அலசலுக்குள் கொஞ்சம் புகுந்து கொள்கிறேன்.
எமது பிரதமர் பொரிஸ் ஜான்சன் பதவிக்கு வரும்போதே அவர் சராசரியான ஒரு அரசியல்வாதியைப் போல நடந்து கொள்ள மாட்டார் எனும் கருத்து அனைவரும் அறிந்த ஒன்றே. அவரது அசாதாரணமான பண்புகள், பழக்க வழக்கங்களை அவர் லண்டன் நகர மேயராக 8 வருட காலம் பதவி வகித்தபோதே மக்கள் தெரிந்து கொண்டிருந்தார்கள். மக்களின் மனங்களை ஈர்க்கும் ஏதோ ஒரு சக்தியை அவர் கொண்டிருந்தார் என்பதுவே உண்மை. அவரது 2019 அறுதிப் பெரும்பன்மை வெற்றி மக்களுக்கு அவர் மீதிருந்த ஈர்ப்பு என்று வாதிடும் பல அரசியல் அவதானிகள் உண்டு. அதே நேரம் ப்றெக்ஸிட் எனும் ஐரோப்பிய ஒன்றியத்தினிலிருந்து விலகுவது எனும் நிகழ்வு கிளப்பி விட்ட புரிந்துணர்வுக்கு அப்பாற்பட்ட ஒரு பிரிந்துணர்வினை ஊட்டும் வகையில் அவர் நடந்து கொண்டமையே அவரது வெற்றிக்குக் காரணம் எனும் வாதமும் பலமாக எழுந்ததுண்டு. எது எவ்வகை இருப்பினும் அமெரிக்கா ட்ரம்ப் அலையினால் தாக்கப்பட்ட சிறிது காலத்திலேயே இங்கிலாந்து பொரிஸ் அலையினால் தாக்கப்பட்டது என்பதுவே உண்மை. அப்போதைய அமேரிக்க ஐனாதிபதி ட்ரெம்ப் அவர்கள் பொரிஸ் ஜான்சனை ஆதரித்த தலைவர்களுள் முக்கியமானவர் என்பதும் குறிப்பிடப் பட வேண்டிய ஒன்றாகும். சிரிக்கச் சிரிக்கப் பேசி தனது காரியத்தை சாதித்துக் கொள்ளும் திறமை பொரிஸ் ஜான்சனிடம் இருந்தது. கேட்கப்படும் கேள்விகள் எத்தனை கடினமானதாக இருந்தாலும் சுற்றி வளைத்துப் பதிலளித்துத் தப்பித்துக் கொள்ளும் திறமை அவரிடம் இருந்தது. அவரிடமிருந்த ஏதேவொரு வசீகரம் அவரின் மீது ஆத்திரம் கொள்வதற்குப் பதிலாக அனுதாபம் கொள்ளத் தூண்டியது எனலாம்.