பதிவுகள் முகப்பு

தொடர் கட்டுரை: மஹாகவியும் கட்டற்ற தேடலும் (8 -10)! - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஆய்வு
28 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- இலங்கையிலிருந்து வெளிவந்த 'நந்தலாலா' , 'தீர்த்தக்கரை' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான திரு. ஜோதிகுமாரின் கவிஞர் மஹாகவியைப்பற்றிய இக்கட்டுரையினை அவரிடமிருந்து பெற்றுப் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பியவர் எழுத்தாளர் ஆதவன். இருவருக்கும் நன்றி. - பதிவுகள்.காம் -


8
மஹாகவியின் கவிதை வெளிபாட்டில் காணக்கிட்டுவதாய் கூறப்படும் புதிய முறைகளும், சொல்வார்ப்புகளும், உவமானங்களும், உருவகங்களும் முற்றாய் புதியன எனவும் அதற்குரிய காரணம் அவரது கவிதை உள்ளமானது ‘கட்டற்ற ஓர் தேடலை’ கொண்டிருந்ததே என்பார் சண்முகம் சிவலிங்கம்.ப-49

‘கட்டற்ற தேடல்’ என்ற இச்சொற்பிரயோகம் சற்றே ஆபத்தானது. அல்லது அளந்து பிரயோகிக்கப்பட வேண்டியது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

சண்முகம் சிவலிங்கம் வரையறை செய்தாற்போலவே, மஹாகவி யாழ்பாணத்து கிராமமொன்றின் சாதாரண மத்திய தர வர்க்கத்தில் பிறந்து, பெரும்பகுதி காலமும் கொழும்பில் உத்தியோகம் பார்த்து,ஈற்றில் அரசாங்க நிர்வாக சேவையாளராகவும் தேறியுள்ளார். சுருக்கமாகக் கூறினால், ‘எமக்குத் தொழில் கவிதை’ என்பது போல் இல்லாமல், இவர்க்கு தொழில் அரச உத்தியோகம், நிர்வாக சேவை என்பன இருந்துள்ளன என்பது தெளிவு. இருந்தும், கூடவே, இதனுடன் சேர்ந்தாற் போல் கலை இலக்கிய ஆக்கங்களிலும் முழுமூச்சுடன் ஈடுபடுபட்டவர் என்றாகின்றது.

நிர்வாக பரீட்சையினை ஒருவர் தன் வாழ்வில் எழுதக் கூடாது என்பதுமில்லை, எழுதுவதால் குறைவடைய போகின்றார் என்பதும் இல்லை. இருந்தும், பிரச்சினை தருவது ‘கட்டற்ற தேடல்’ என்ற சொற் பிரயோகமே. வேறுவார்த்தையில் கூறுவதானால், இப்பின்னணியில் நோக்குமிடத்து, மஹாகவியின் ‘கட்டற்ற தேடல்’ என்பது தன்மீது தானே விதித்துக்கொண்ட அநேக எல்லைப்பாடுகளையும் கட்டுப்பாடுகளையும் உள்ளடக்கும் ஒரு வகையான கட்டற்ற தேடல்தான் என்பது தெளிவு.

மேலும் படிக்க ...

தற்கால சிறுகதை, புதினங்களில் காலத்தின் சுவடுகள்! - (மாலினி அரவிந்தன் – பீல்பிரதேச கல்விச்சபை, கனடா) -

விவரங்கள்
- (மாலினி அரவிந்தன் – பீல்பிரதேச கல்விச்சபை, கனடா) -
இலக்கியம்
28 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- தமிழ்நாட்டில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்ப்பண்பாட்டு மையம் நடத்திய 11 ஆவது பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்டு, ‘தற்கால இலக்கியங்களில் காலத்தின் சுவடுகள்’ என்ற பன்னாட்டு ஆய்வு நூல் - 2020 இல் இடம் பெற்ற கட்டுரை. -


சிறுகதை என்பதை மையக்கருவினைக் கொண்ட, திருப்பங்கள் உடைய அனுபவங்களை, நல்ல நடையில் சுருக்கமாக சொல்லும் உரைநடை இலக்கிய புனைவென்று எடுத்துக் கொள்ளலாம். வாசகரின் மனதில் சிறிய தாக்கத்தையாவது ஏற்படுத்தினால் அது நல்ல சிறுகதைக்கு அடையாளமாகும். புதினம் என்ற இலக்கிய வடிவத்தை எடுத்துப் பார்த்தால் உரைநடையில் அமைந்த நீண்டபுனைகதை என்று சொல்லலாம். அனேகமான புனைவுகளில் தளத்தையும், காலத்தையும் ஓரளவு அறிந்து கொள்ள முடியும்.

முன்பெல்லாம் வெளிநாட்டுக் கதைகளைத் தமிழில் மொழி மாற்றம் செய்தால்தான் அனேகமான வாசகர்களால் வாசிக்க முடியும். ஆனால் தற்போது அந்த நிலை மாறி, அதுபோன்ற தரமான கதைகளைத் தங்கள் அனுபவம் மூலம் தமிழில் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களே தருவதற்குத் தொடங்கி விட்டார்கள். இதனால் ‘புலம்பெயர் இலக்கியம்’ என்னும் இலக்கியத்தை தமிழ் உலகுக்குத் தந்தார்கள். தற்கால இலக்கியத்தில் காலத்தின் சுவடுகளை எடுத்துக் காட்டுவதற்காக, தீவிரவாசகி என்ற வகையில் இங்கே எழுத்தாளர் குரு அரவிந்தனின் சிறுகதைகள், புதினங்களில் இருந்து காலத்தின் சுவடுகளைக் காட்டும் சில சிறுகதைகளையும், புதினங்களையும் எடுத்துக் காட்ட விரும்புகின்றேன்.

தமிழ் இலக்கிய உலகிற்கு யுத்த காலச் சூழலில் எழுந்த கதைகள் மிகக் குறைவாகவே இருக்கின்றன. அந்தக் குறையை நிவர்த்தி செய்யும் வகையில் குரு அரவிந்தனின் புனைவுகள் பல பிரபல ஊடகங்களில் வெளிவந்துள்ளன. இந்தியா நாட்டுக்குத் தெற்கே அமைந்துள்ள இலங்கைத் தீவில் 1983 ஆம் ஆண்டு யூலை மாதம் ஏற்பட்ட இனவொழிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட போர்ச்சூழல் காரணமாக ஈழத்தமிழர்கள் பலர் தங்கள் பாரம்பரிய மண்ணான வடக்குக், கிழக்குப் பிரதேசங்களை விட்டுப் பல்வேறு நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தார்கள். அப்படிப் புலம் பெயர்தவர்களில் எழுத்தாளர் குரு அரவிந்தனும் ஒருவராவார். போர்ச் சூழலில் அவர் தாய் மண்ணில் வாழ்ந்த காலத்தையும், கனடா நாட்டுக்குப் புலம்பெயர்ந்த பின், 2009 ஆண்டு மே மாதம் இலங்கையில் போர் ஓய்ந்தபின் நடந்த சில சம்பவங்களையும் தனது அனுபவங்களைக் கருப்பொருளாகக் கொண்டு புனைவுகள் மூலம் பதிவு செய்திருக்கின்றார். தமிழகத்தில் இருந்து வெளிவரும் லட்சக்கணக்கான பிரதிகள் விற்பனையாகும் விகடன், கல்கி, குமுதம், கலைமகள், கணையாழி, இனிய நந்தவனம், யுகமாயினி மற்றும் இலங்கை, கனடா போன்ற நாடுகளில் இருந்து வெளிவரும் இதழ்களில் வெளிவந்த இவரது ஆக்கங்கள் மூலம் லட்சக்கணக்கான வாசகர்களைத் தனக்கென உருவாக்கிய இவரது சிறுகதைகள், நாவல்கள் சிலவற்றையும் எடுத்துப் பார்ப்போம்.

மேலும் படிக்க ...

அஞ்சலி: இசைக்கலைமணி வர்ண இராமேஸ்வரன்! - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
குரு அரவிந்தன்
28 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இசைக்கலைஞர் இனிய நண்பர் வர்ண இராமேஸ்வரன் அவர்களின் மறைவு (செப்ரெம்பர் மாதம் 25 ஆம் திகதி 2021) எமக்கு அதிர்ச்சி தருவதாக இருந்தது. எம்முடன் நன்கு பழகிய சில நண்பர்களை, உறவுகளை கொரோனா பேரிடர் காலத்தில் காலன் எம்மிடம் இருந்து திடீரெனப் பிரித்துவிட்டது மட்டுமல்ல, கடந்த சில காலமாக, உறவினர்களின், நண்பர்களின் இறுதிச் சடங்குகளில்கூட பங்குபற்ற முடியாத இக்கட்டான சூழ்நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டிருக்கின்றோம்.

மகாஜனக்கல்லூரி பழைய மாணவரான, இசைக் குடும்பத்தில் பிறந்த இவரை எங்கள் பழைய மாணவர் சங்க நிகழ்ச்சிகளில் அடிகடி சந்தித்திருக்கின்றேன். இதைவிடக் கலைவிழாக்களிலும், பல அரகேற்ற நிகழ்ச்சிகளிலும் பலமுறை சந்தித்தித்து உரையாடியிருக்கின்றேன். ஆரம்ப கல்வியை ஞானோதய வித்தியாசாலையிலும், உயர் கல்வியை மகாஜனக் கல்லூரியிலும் கற்றவர். மிகவும் அன்பாகப் பழக்ககூடிய நல்ல நண்பர். கனடாவில் உள்ள வர்ணம் இசைக்கல்லூரி அதிபரான இவர், படித்த கல்லூரிக்குத் தன்னால் இயன்ற அளவு உதவ வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்தார். இவரது தந்தைதான் அளவெட்டியைச் சேர்ந்த கலாபூசணம் வர்ணகுலசிங்கம் அவர்கள். தாயாரின் பெயர் மகேஸ்வரி. இராமேஸ்வரன் பண்ணிசையில் மட்டுமல்ல, மிருதங்கம், ஆர்மோனியம் போன்ற இசைக் கருவிகளை வாசிப்பதிலும் கைதேர்ந்தவர். இவர் யாழ்பாணம் பல்கலைக்கழகத்தில் இராமநாதன் நுண்கலைப்பிரிவில் இசைபயின்று ‘இசைக்கலைமணி’ என்ற பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து விரிவுரையாளராகவும் அங்கு பணியாற்றினார்.

தாயக நினைவுகளை மீட்கும் ‘தாயகக் கனவுடன் சாவினைத்தழுவிய சந்தனப் பேழைகளே, இங்கே கூவிடும் எங்கள் குரல் மொழி கேட்கிறதா?’ போன்ற பல பாடல்களை இவர் பாடியதன் மூலம் தமிழ் சமூகத்தில் நன்கு அறியப்பட்டவராக இருந்தார். கனடா நாட்டுக்குப் புலம்பெயர்ந்தபின் இங்கே ஒரு இசைக்கல்லூரியை ஆரம்பித்து, அதன் மூலம் தமிழ் இசைத்துறையில் பல இளம் தலைமுறையினரை உருவாக்கி இருந்தார்.

மேலும் படிக்க ...

ஜீவநதி வெளியீடாக வெளிவந்துவிட்டது வ.ந.கிரிதரனின் 'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்' (சிறுகதைத்தொகுதி) !

விவரங்கள்
- வ.ந.கி -
வ.ந.கிரிதரன் பக்கம்
27 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஜீவநதி பதிப்பகத்தின் 194ஆவது வெளியீடாக எனது சிறுகதைத்தொகுப்பான 'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்' வெளியாகியுள்ளது. இது பற்றிய ஜீவநதி பதிப்பகத்தின் அறிவிப்பை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். ஜீவநதி பதிப்பகம் முன்னர் அறிவித்திருந்தபடி நூல் வெளியாகியுள்ளது. அதற்காகப் பதிப்பக உரிமையாளர் பரணீதரனுக்கும், நூலைக் குறித்த தினத்தில் வெளியிட உதவிய அனைத்துத் தொழிலாளர்களுக்கும் நன்றி.

மேலும் படிக்க ...

'தேசபக்திக்கும் இனவாதத்துக்குமிடையிலான எல்லையினை நிர்ணயித்தல்' (Demarcating Patriotism and Racism ) - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
26 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

'தேசபக்திக்கும் இனவாதத்துக்குமிடையிலான எல்லையினை நிர்ணயித்தல்' (Demarcating Patriotism and Racism ) என்னும் கட்டுரையினை 'சிலோன் டுடே' (Cedylon Today) பத்திரிகையில் அமா ஹெச். வன்னியராச்சி ( Ama H. Vanniarachchy) எழுதியிருக்க்கின்றார். நல்லதொரு கட்டுரை. தற்போதுள்ள சூழலில் அனைவரும் வாசிக்க வேண்டிய கட்டுரை.

இக்கட்டுரை சிங்களக் கவிஞை சந்திரசிறி சுதுசிங்கவின் (Sandarasee Sudusinghe ) புதிதாக வெளியான கவிதைத்தொகுதியான 'எரிந்த சிறகுகள்' ('ஹினி வான்டு பியாபத்' - Gini Wandu Piyapath) பற்றியது.

இக்கட்டுரை இக்கவிதைத் தொகுதியை வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துகின்றது.

இக்கவிதைகள் இலங்கையில் இன்னும் நீறு பூத்த நெருப்பாக எரிந்துகொண்டிருக்கும் இனப்பிரச்சினை, பதவிக்காக இனவாதத்தைத் தேசபக்தி என்னும் போர்வையில் பேசும் அரசியல்வாதிகள், யாழ் நூலக எரிப்பு , தீண்டாமை மற்றும் வரதட்சணைச் சமூகக்கொடுமைகள் போன்றவற்றை மிகவும் கடுமையாக விமர்சிக்கின்றது என்பதை இக்கட்டுரைவாயிலாக அறிந்துகொள்ள முடிகின்றது.

பதவிக்காக தேசபக்தி என்னும் போர்வையில் இனவாதம் பேசும் ஆட்சிக்கட்டிலிருக்கும் அரசியல்வாதிகளை 'ஆளும் நரிகள்' என்று கவிஞை வர்ணிக்கின்றார் என்பதையும், அந்நரிகளே சொர்க்கத்தீவின் சீரழிவுக்குக் காரணமென மேலும் அவர் குற்றஞ் சாட்டுகின்றார் என்பதையும் மேற்படி கட்டுரை வெளிப்படுத்துகின்றது.

மேலும் படிக்க ...

மெய்நிகர் அரங்கு: மொழிபெயர்ப்பு இலக்கியத்தில் தமிழ்!

விவரங்கள்
- தகவல்: முருகபூபதி -
நிகழ்வுகள்
26 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அஞ்சலிக்குறிப்பு: பாரதி சொற்பயிற்சி மன்றம் நடத்தியவர் பாரதி நினைவு நூற்றாண்டில் மறைவு ! கொழும்பு சிலம்புச்செல்வர் ம. பொ. சி. மன்றத்தின் நிறுவனர் த. மணி விடைபெற்றார். - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
26 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஏற்கனவே “ சமகாலம் அஞ்சலிக்குறிப்புகள் எழுதும் காலம் “ என்று ஒரு பதிவில் எழுதியிருந்தேன். இந்தக்கொரோனோ காலத்தில் இந்தத் துயர்பகிரும் காலமும் இணைந்துவருகிறது. கொழும்பில் ஆறு தசாப்தங்களுக்கு முன்பே பாரதி சொற்பயிற்சி மன்றம், மற்றும் இலங்கை ம. பொ. சி. மன்றம் முதலானவற்றை உருவாக்கி தமிழ்ப்பணியாற்றிவந்த தமிழ் மொழி, கலை இலக்கிய உணர்வாளர் , சொற்பொழிவாளர் த. மணி அவர்கள் அண்மையில் மறைந்துவிட்டார் என்ற செய்தி என்னை வந்தடைந்தபோது, அவர் பற்றிய பல பசுமையான நினைவுகள் மனதில் சஞ்சரிக்கத் தொடங்கின.

மேலும் படிக்க ...

தொடர்கதை: ஒரு கல் - கரைந்தபோது (7) - ஸ்ரீராம் விக்னேஷ், நெல்லை வீரவநல்லூர் -

விவரங்கள்
- ஸ்ரீராம் விக்னேஷ், நெல்லை வீரவநல்லூர் -
நாவல்
26 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 அத்தியாயம் 7

பொழுது விடிந்தபோது, மனதுக்குள் இனம்புரியாத பரபரப்பு. நேற்று முழுவதும், வாற்சப் வீடியோ காலில் பார்த்துப்,பேசிப்,பழகிய போதிலும் இன்று நேரிலே சந்திக்கப்போகின்ற அனுபவம், புதிதானதுதானே.

ஏற்கனவே பேசிவைத்தபடி, அம்மாவும் நானும் அக்காளிடம் அதிகாலையிலேயே விவரத்தைக் கூறியபோது, அக்கா உண்மையிலேயே அதிர்ந்துபோனதை அவளின் முகத்திலே கண்டுகொண்டேன்.

ஆனாலும், அதைக் காட்டிக்கொள்ளாமல் போலி மகிழ்ச்சியை வைத்துக்கொண்டு, புன்னகைத்தாள்.

அந்தப் புன்னகைக்குள்ளே பொதிந்து கிடக்கும் வேக்காடு, “இதை எப்படியாவது கெடுத்துவிட வேண்டுமே….” என்றே கொதிக்கும் என்பது எனக்குத் தெரியும். அத்துடன் அந்தக் கொதிப்பு எந்தக் கணமும் சீறி வெடிக்கலாம் என்னும் எதிபார்ப்பு எனக்குள் கலக்கத்தை ஏற்படுத்தத் தவறவில்லை.

“சந்தோசமான சமாச்சாரந்தான்…. ஆனா, இது எப்பிடி ஏற்பாடாயிச்சு….? நானும் சம்மந்தப் படல்ல….. என் வீட்டுக்காரரும் பஜார் பக்கம் போறதே அத்தி பூத்த மாதிரி…. ஏம்மா உனக்கு கோயிலையும் வீட்டையும் விட்டால் யாரையுமே தெரியாதே…. அப்புறம் எப்பிடி இது சாத்தியப் பட்டிச்சு…..”

இந்த ஏற்பாட்டுக்கான அடிப்படைச் சூத்ரதாரி யார் என்பதைத் தெரிந்து, அவரைச் சுட்டெரித்துவிடவேண்டும் என்று உள்ளுக்குள்ளே அவள் துடிப்பது எனக்குப் புரியாமல் இல்லை.

அம்மா பதில் சொன்னாங்க.

“நீ சொல்றது நெசந்தாம்மா….தக்க சமயத்தில ஒதவிபண்ண யாருமே இல்லைண்ணாலும், தெய்வத்தோட ஒதவியும், உங்கப்பா ஆத்மாவோட ஆசீர்வாதமும் இருக்கிறப்போ, அந்த ரெண்டுமே ஒரு கலியாணத் தரகரை பெரிய கோயில்ல வெச்சே அறிமுகப்படுத்தி, என்னய பேசவெச்சு சாத்தியப் படுத்திச்சுங்க….”

“சரிதாம்மா…. மாப்பிளை என்னவேலை…. அவுங்க குடும்பம் எப்பிடி…..?”

மேலும் படிக்க ...

தொடர் நாவல்: கலிங்கு (2009 -6) - தேவகாந்தன் -

விவரங்கள்
- தேவகாந்தன் -
தேவகாந்தன் பக்கம்
26 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர்  தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி  பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது.  'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com


2009 - 6

விடிந்திருந்த பொழுதும் விடியாததாக, மாசி மாதத்தின் ஊசிப் பனி குத்துகிற ஒரு அதிகாலைவேளையில் படுக்கையிலிருந்து எழுந்து வீட்டு வேலைகளில் மும்முரமாயிருந்த செம்பவளம் உணர்ந்துகொண்டிருந்தாள். கிழக்குத் திசைக் களர் நிலத்திலிருந்து சூரியன் பனித் திரையைக் கிழித்து பிரகாசமாய்க் காலித்துக்கொண்டிருந்தும் அந்தளவான ஒரு மனமூட்டம் அவளிலிருந்தது. ஏனென்று அவளால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. முன்னனுபவமற்ற ஒரு மந்த உணர்வு.

வித்தியா எழுந்து குளிக்க கிணற்றடி சென்றபோது கூடத்துள் அப்பா இன்னும் தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டாள். மீண்டும் மஹாபாரதத்துள் அப்பாவின் வாசிப்பு சென்றிருந்தது. இரவு வாசித்த தடித்த அந்தப் புத்தகம் மேசையில் கிடந்தது. வாசித்துவிட்டு எத்தனை மணிக்கு தூங்கினாரோ? அவள் குளித்து வந்து அறைக்குள் வேலைக்கு வெளிக்கிட்டுக்கொண்டு இருந்தாள்.

அவளிடத்திலும் கலகலப்பான மனநிலையில்லை. வீட்டில் அம்மா கலகலப்பாயில்லாவிட்டால் எல்லாவற்றிலுமே அதன் தாக்கம் தெரியும். ஆனால் அதுவேதான் அப்போது அவளில் பிரதிபலித்துக்கொண்டு இருந்ததெனச் சொல்லமுடியவில்லை. உலகளாவிய தமிழரிடத்தில் அப்போது கொதித்துப் பொங்கிக்கொண்டிருந்த ஏக்கத்தின் கையறுநிலைபோலும் அது இருக்கவில்லை. எழுபத்தைந்து சதுர கிமீக்குள் அடங்கிவிட்ட போரின் இறுதி நோக்கிய நகர்வு எழுதக்கூடிய தோல்வியின் நடுக்கமும் இல்லை அது. அவையல்லாத இன்னும் ஏதோவொன்று.

வித்தியா சமையலறை போய் கருப்பட்டித் தேநீர் குடித்தாள். காலைத் தேநீர் எப்பொழுதும் அங்கே அப்பாவுக்காக கருப்பட்டியோடுதான். செம்பவளம் அவசரமாய் தேநீரோடு கணவரை அணுகினாள். அன்றைக்காவது தெண்டித்து அவரை ஆஸ்பத்திரி செல்லவைத்துவிட வேண்டுமென்று எண்ணிக்கொண்டாள். கடந்த ஒரு வாரமாக கையுழையுதென்று அமுக்கி அமுக்கிப் பிடித்துக்கொண்டு திரிந்தவர், இரண்டு மூன்று நாட்களாக நெஞ்சைத் தடவிக்கொண்டு அல்லல்படுகிறார். ‘நெஞ்சுக்க என்ன செய்யிது?’ எனக் கேட்டு செம்பவளம் முகத்தில் ஏக்கம் விரிக்க, ‘அதொண்டுமில்லை. வாய்வாயிருக்கும். இந்தளவு நாளும் கையில நிண்டது இப்ப நெஞ்சுக்குள்ள இறங்கியிட்டுதுபோல’ என்றிருந்தார். ‘ரா ராவாய் அவளையே யோசிச்சுக்கொண்டு கிடந்தா? சண்டை முடிய நிஷா வருவாள்தான. நாங்களேன் அதையிதை யோசிச்சு அந்தரப்படவேணும்?’ என்று நெஞ்சை அவர் அழுத்தித் தேய்க்கிறவேளையிலெல்லாம் அவளும் சொல்லிக்கொண்டிருந்தாள். ‘அது வாய்வா இருந்தா இருக்கட்டும், எதுக்கும் நீங்கள் நாளைக்கு ஆஸ்பத்திரியில ஒருக்கா காட்டியிட்டு வந்திடுங்கோ’ என்று முதல்நாள் படுக்கப் போகிறபோது சொல்லியிருந்தாள். ‘ஓ’மென்று அவரும் தலையசைத்தார். ‘வித்யா வெளிக்கிடேக்க நீங்களும் கூடிக்கொண்டு போங்கோ’ என படுத்த பின் அவள் சொன்னதற்கும் ‘சரி’ என்றிருந்தார். ஆனால் இன்னும் எழும்பவில்லை. அவள் தேநீரை மேசையில் வைத்தபடி, “வித்யா வெளிக்கிட்டிட்டாள், எழும்புங்கோ’ என்றாள்.

மேலும் படிக்க ...

தொடர் கட்டுரை: மஹாகவியும் கட்டற்ற தேடலும் (4-7)! - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஆய்வு
26 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- இலங்கையிலிருந்து வெளிவந்த 'நந்தலாலா' , 'தீர்த்தக்கரை' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான திரு. ஜோதிகுமாரின் கவிஞர் மஹாகவியைப்பற்றிய இக்கட்டுரையினை அவரிடமிருந்து பெற்றுப் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பியவர் எழுத்தாளர் ஆதவன். இருவருக்கும் நன்றி. - பதிவுகள்.காம் -


4
இலக்கிய வரலாற்றில் யதார்த்த நெறியின் முக்கியத்துவம் குறித்து ஏங்கெல்சாலும், கைலாசபதியாலும், கார்க்கியாலும், லெனினாலும் அவ்வவ் காலப்பகுதிகளில் தொட்டுக்காட்டப்பட்டே வந்துள்ளது. கற்பனாலங்காரத்திற்கும் (Romanticism),  இயற்பண்பு வாதத்திற்கும் (Naturalism) யதார்த்த வாதத்திற்கும் (Realism) இடையே உள்ள வித்தியாச வேறுபாடுகள் மேற்படி அறிஞர்களால் தெளிவுற படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளன.

டால்ஸ்டாய் பொறுத்த லெனினின் கூற்று வருமாறு:

“மொத்தமாகவும் சில்லறையாகவும் காணக்கிட்டும் சகல முகத்திரைகளையும் பிய்த்தெறியும் நிதானமிக்க யதார்த்த வாதம் அவரது…”
“டால்ஸ்டாயின் எழுத்துக்களைக் கற்பதற்க்கூடு, ரஷ்ய தொழிலாளி வர்க்கமானது, தன் எதிரிகள் பொறுத்த அறிவை மேலும் அதிகமாகக் கூட்டிக் கொள்ளும்…” ப-31 63

இதனை கார்க்கி பின்வருமாறு தெளிவுப்படுத்துவார்:

“எழுத்தாளன் என்பவன் அனைத்தையுமே அறிந்து வைத்திருக்கும் கடமை பூண்டுள்ளான் - வாழ்க்கை எனும் பெருநதியின் பிரதான சுழிப்புகளையும், கூடவே, அதன் அற்ப ஓட்டங்களையும், அன்றாட வாழ்வின் அனைத்து முரண்களையும் அதன் வீறுகளையும், எழுச்சிகளையும், வீழ்ச்சிகளையும், செழுமைகளையும் அதன் கீழ்மைகளையும், அதன் உண்மைகளையும் பொய்மைகளையும் அவன் அறிந்தே வைத்திருக்க வேண்டிய பொறுப்பு கொண்டுள்ளவனாகின்றான்…” 

“கூடவே, குறித்த ஓர் நெறிமுறையானது, அஃது அவனது தனிப்பட்ட பார்வையில் எவ்வளவுதான் அற்பமாயும் முக்கியத்துவம் இழந்தும் போயிருப்பினும், அது அழிபடும் ஒரு பழைய உலகத்து சிராய்பு துண்டங்களா (Fragments) அல்லது ஒரு புதிய உலகை நிர்மாணிக்க வந்திருக்கும் புதிய முளைகளின் கூறுகளா என்பதனையும் சேர்த்தே அவன் தெரிந்து வைத்திருக்கும் கடமை பூண்டுள்ளான்” 

மேலும் படிக்க ...

இசைக்கலைஞர் வர்ணவர்ணகுலசிங்கம் ராமேஸ்வரன் மறைவு! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
Administrator
கலை
26 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வர்ணம் இசைக்கல்லூரியின் இயக்குநரும் இசைக்கலைஞருமான வர்ணகுலசிங்கம் ராமேஸ்வரன் கோவிட் காரணமாக மறைந்த செய்தியினை முகநூல் மூலம் அறிந்தேன். துயருற்றேன். இவரை நான் சந்தித்ததில்லை. ஆனால் இவரது இசை நிகழ்ச்சிகளை யு டியூப் காணொளிகள் மூலம் பார்த்து மகிழ்ந்திருக்கின்றேன். தனது இசைக்கல்லூரி மூலம் இளங்கலைஞர்களை உருவாக்கி வந்துள்ளதை அறிந்திருக்கின்றேன். சந்திக்காமலேயே எப்பொழுதும் சிரித்த முகத்துடன் காணப்படும் இவரது தோற்றம் ஊடகங்கள் வாயிலாக நினைவில் பதிந்துள்ளது. இவர் என் முகநூல் நண்பர்களிலொருவர்.

மேலும் படிக்க ...

சிறுவர் மனங்களை வென்ற செந்தமிழறிஞர் த. துரைசிங்கம்..! - பத்மா இளங்கோவன் (பத்மபாரதி) -

விவரங்கள்
- பத்மா இளங்கோவன் (பத்மபாரதி) -
கவிதை
24 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

வண்ண மொழி பேசும் வாடாமலர்கள்
சிங்காரப் பாட்டிசைக்கும் சுந்தர மழலைகள்
சிரித்தே மகிழ்ந்திட சின்னச்சின்னப் பாடல்கள்
சித்திரமாய்ப் புனைந் தெடுத்த அழகுதமிழ்க்
கவிஞனே உன் பணிக்கு எம்வணக்கம்..!

துள்ளி வரும் புள்ளி மானை
தோகை விரிக்கும் கோல மயிலை
இன்னிசை பாடும் இளங் குயிலை
எழிலாய் மிதந்திடும் உதய நிலவை
மெல்லத் தழுவிடும் இளந் தென்றலை
பாடும் கவிஞர் கூட்டத்தின் நடுவே
பாடிடத் தேடினாய் குழந்தை மனங்களை..
ஞானக்கவியே.. உன் பணிக்கு எம்வணக்கம்..!

மேலும் படிக்க ...

தொடர் கட்டுரை: மஹாகவியும் கட்டற்ற தேடலும் (1 - 3)! - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஆய்வு
24 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- இலங்கையிலிருந்து வெளிவந்த 'நந்தலாலா' , 'தீர்த்தக்கரை' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான திரு. ஜோதிகுமாரின் கவிஞர் மஹாகவியைப்பற்றிய இக்கட்டுரையினை அவரிடமிருந்து பெற்றுப் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பியவர் எழுத்தாளர் ஆதவன். இருவருக்கும் நன்றி. - பதிவுகள்.காம் -


1

பேராசிரியர் நுஃமான் அவர்கள், மஹாகவி குறித்து 1984இல் எழுதிய, தனது அறிமுகத்தில், அவரது உள்ளடக்கங்களின் சிறப்புகளைப் பின்வருமாறு பட்டிலிடுகின்றார்:

1. ஆழமான மனிதாபிமானம்.
2. வாழ்வின் மீதான நம்பிக்கையும் வாழ வேண்டும் என்ற முனைப்பும்.
3. ஏற்றத்தாழ்வின் மீதும், போலி ஆசாரங்களின்; மீதுமான அவரது எதிர்ப்பு. ப-21

இறுதியில் குறிப்பார்:

“இங்கு எடுத்துக்காட்டிய சிறப்புப் பண்புகள் சிலவற்றுக்கு எதிரிடையான சிலவற்றை அவரது கவிதையில் இருந்து நாம் எடுத்துக்காட்ட
முடியும்… ஆயின் அவை புறநடைகளே. புறநடைகளைக் கொண்டுன்றி பொது பண்புகளைக் கொண்டு ஒரு கவிஞனை நாம் மதிப்பீட
வேண்டும். எனினும் புறநடைகளை நாம் ஒதுக்கி விடவும் முடியாது. இந்த அறிமுகத்திலே அத்தகைய ஓர் ஆய்வு தேவையற்றது என கருதி தவிர்த்துக்கொண்டேன்”. ப-45

மேற்படி கூற்றில் ஓர் தள்ளாட்டம் தெரிகின்றது என்பது வெளிப்படை.

“புறநடைகளை நாம் ஒதுக்கி விடவும் முடியாது” என்று கூறும் அதே வீச்சில் “அது தேவையற்றது என்று ஒதுக்கியும் விடுவேன்” என கூறவும் தலைப்படுகின்றார் என்பதே இங்கே உறுத்தலான விடயமாக அமைந்து போகின்றது.

அதாவது, ஏன் இப்படி, ஒரே வீச்சில் 'ஒதுக்கி விடுவும் முடியாது' என்று கூறும் அதே கணத்தில் 'ஒதுக்கியும் விட்டேன்' என கூற நேர்கின்றது என்ற கேள்வி அனைவரையுமே ஈர்க்கக் கூடிய ஒன்றுதான்.

ஆனால், சற்று நிதானித்துப் பார்க்கும் போது, மஹாகவியை சிலாகிக்க முற்படும் எவர்க்கும் இச்சிக்கல் தவிர்க்கப்பட முடியாத ஓர் அம்சமாகவே இருந்து போகக் கூடும் - அதாவது, ஒருவர் மஹாகவியின் ஆக்கங்கள் பொறுத்து முழுமையாக கதைப்பதானாலும் சரி அல்லது அதனை விடுத்து பேராசிரியர் நுஃமான் அவர்களின் “புறநடையை ஒதுக்கி விடும்” அணுகுமுறையைக் கைக்கொண்டாலும் சரி – மேற்படி தள்ளாட்டம் ஏதோ ஒரு வகையில் வந்து சேர்ந்து விடும் என்பது பிறிதொரு விடயம்.

மேலும் படிக்க ...

ME TOO இயக்கச் செயற்பாட்டாளர்களுக்கும் சக படைப்பாளிகளுக்கும்…. - லதா ராமகிருஷ்ணன் -

விவரங்கள்
- லதா ராமகிருஷ்ணன் -
சமூகம்
24 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 இருபது வயதுப் பெண்ணாக ஒரு ஊடகவியலாளராக பணிபுரிந்து கொண்டிருந்த சமயத்தில் இன்று திரைப்பட இயக்குநராக உள்ள ஒருவரால் தனக்கு நேர்ந்த பாலியல் ரீதியான அச்சுறுத்தல் குறித்து சக கவிஞர் லீனா மணி மேகலை மீ டூ இயக்கம் தந்த உலகளாவிய ஆதரவுக்கரங் களின் தோழமை அளித்த தெம்பில் பொதுவெளியில் பேசியதற்காக சம்பந்தப்பட்ட நபர் அவர் மீது மானநஷ்ட வழக்கு போட்டிருக்கிறார்.

நீதிமன்றத்தில் லீனாவின் ஒழுக்கத்தைக் கேள்விக்குட்படுத்தியும், தன் திறமைக்குக் கிடைக்கும் அங்கீகாரமாக அயல்நாடுகளிலிருந்து வரும் அழைப்பை லீனா மணி மேகலை ஏற்க முடியாமல் அவருடைய வெளிநாட்டுப் பயணங்களைத் தடைசெய்யக் கோரி வழக்கு தொடுத்தும் சக கவிஞர் லீனாவின் படைப்பெழுச்சிக்குப் பலவகையிலும் முட்டுக்கட்டை யிட்டுக்கொண்டிருக்கிறார்.

மான நஷ்ட வழக்கு போட யாருக்கும் உரிமையிருக்கிறது. அதே சமயம், அவரவர் மனசாட்சிக்குத் தெரியும் தன் மீது சுமத்தப்படும் குற்றம் உண்மையா, பொய்யா என்று.

அப்படி ME TOO இயக்கப் பின்னணியில் குற்றம் சுமத்தப் பட்ட ஆண்களில் சிலர் பல வருடங்கள் முன்பு தாம் அப்படி நடந்துகொண்டது உண்மை தானென்றும் அதற்காக வெட்கப்படுவதாகவும் மன்னிப்பு கேட்டதும் நடந்தது.

ME TOO இயக்கப் பின்புலத்தில் ஓர் ஆண் மீது ஒரு பெண் பொய்யாக குற்றம் சுமத்த் வாய்ப்பிருக்கிறது என்றாலும் ஒரு பெண் தன் பாதிப்பு குறித்துப் பேசும்போது அவர் உண்மை பேசுகிறாரா அல்லது பொய்யுரைக்கிறாரா என்பது நம் உள்ளுணர்வுக்கு எளிதாகப் புலப்பட்டுவிடும்.

பொய்யாக ஒருவர் மீது பழிசுமத்தி அதில் பிராபல்யம் தேடிக்கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தால் அதற்கு சம்பந்தப்பட்ட நபரை லீனா குறிப்பிட்டிருக்க மாட்டார் என்பது தெளிவாகவே விளங்குகிறது. தவிர, இத்தகைய ஒரு குற்றச்சாட்டை அவர் வேறெப்போதும் வேறெந்த நபர் மீதும் சுமத்தியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க ...

கனடா தேர்தல் முடிவுகள் - 2021: லிபரல் கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. - குரு அரவிந்தன் -

விவரங்கள்
- குரு அரவிந்தன் -
அரசியல்
23 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இம்முறையும் கனடா தேர்தல் முடிவுகள் ஜஸ்ட்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்குச் சாதகமாக வந்திருக்கின்றன. இப்படித்தான் வரும் என்று முன்பு எழுதிய கட்டுரையிலும் குறிப்பிட்டது போலவே, நடந்திருக்கின்றது. 170 ஆசனங்கள் இருந்தால்தான் இங்கு தனியாக ஆட்சி அமைக்க முடியும். லிபரல் கட்சிக்கு 156 ஆசனங்களே கிடைத்திருக்கின்றன. ஏனைய எதிர்கட்சிகள் கொள்கையின் அடிப்படையில் ஒன்றுசேர வாய்ப்பில்லை என்பதால், லிபரல் கட்சிதான் இம்முறையும் கனடாவில் சிறுபான்மை ஆட்சி அமைக்க இருக்கின்றது.

இச்சந்தர்ப்பத்தில் நடந்த இந்தத் தேர்தல் பற்றி குறிப்பிடலாம் என நினைக்கின்றேன். செப்ரெம்பர் மாதம் 15 ஆம் திகதி 6மணி வரை முற்கூட்டியே வாக்களிக்கும் வசதிகளை தேர்தல் கனடா ஏற்பாடு செய்திருந்தது. அதனால் முற்கூட்டியே வாக்களித்தவர் தொகை 5.8 மில்லியனாக இருந்தது. இதைவிட சுமார் ஒரு மில்லியன் மக்கள் தபால் மூலமும் வாக்களித்திருக்கிறார்கள். 2019 ஆண்டு நடந்த தேர்தலைவிட இம்முறை அதிகமாக வாக்களித்திருந்தனர். இம்முறை சுமார் 37 மில்லியன் வாக்காளரின் பெயர்கள் பட்டியலில் பதிவாகி இருந்தது. கோவிட் - 19 காரணமாக கடைசிவரை காத்திருப்பதை தவிர்ப்பதற்காக முற்கூட்டியே அதிக மக்கள் வாக்களித்திருந்தனர். இறுதி நாளான 20 ஆம் திகதி மாலை 9:30 வரை வாக்குச் சாவடிகள் திறந்திருந்தன. எந்தக் கட்சியாக இருந்தாலும், தனியாக அரசமைப்பதற்குக் குறைந்தது 170 ஆசனங்கள் தேவை. முதலாவது தேர்தல் முடிவு சுமார் 7:10 மணியளவில் வெளிவந்தபோது லிபரல் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தபால் வாக்குகள் எண்ணப்பட்டால், முடிவுகளில் சிலசமயம் மாற்றங்கள் ஏற்படலாம்.

மேலும் படிக்க ...

ஆய்வு: பாரதியார் கவிதைகளில் மனித உயிர் நேயம்! - - முனைவர் பெ.கி. கோவிந்தராஜ் -

விவரங்கள்
- முனைவர் பெ.கி. கோவிந்தராஜ், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, மஜ்ஹருல் உலூம் கல்லூரி, ஆம்ப10ர் 635 802 -
ஆய்வு
21 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை
‘வற்றிப் போன உடலோடு, வெற்றுக் கனவுகளை விழியோரம் சுமந்து கொண்டு சுற்றித் திரியும் கோடிக்கணக்கான ஏழைகளுக்காகக் குரல் கொடுக்கும் கவிஞனே மக்கள் கவிஞனாக மதிக்கப்படுவான். இவ்வாறு மெலிந்தவர்களுக்காகக் குரல் கொடுப்பதென்பது எல்லாருக்கும் இயலக் கூடியதன்று. திட்டமிட்டுச் செயலாற்றும் ஒருவரால் மட்டுமே செயற்கரிய செயலை செய்ய முடியும். இதைச் செய்பவர்களின் போலிச்சாயம் காலப் போக்கில் கரைந்துவிடும். அருவியிலிருந்து பாயும் நீரைப்போல் அகத்திலிருந்து மனித உயிர் நேயம் தன்னியல்பாகப் பெருக வேண்டும். உதைத்தவனுக்குக் கால் வலிக்குமே என்று கவலைப்படாமல் உதைபட்டவனுக்கு உடம்பிலும் மனதிலும் காயம்பட்டு விட்டதே என்று கவலைப்படுவதே மனித உயிர் நேயம் ஆகும் அத்தகு மனிதநேயம் பாரதியின் ஊனும் உயிரும் கலந்த பாக்களுக்குள் இழையோடுகிறது.

    சமூக விடுதலையோடு, அடிமைப்பட்ட இந்தியத் தாய்த்திருநாட்டின் விடுதலையை பாடிப் பறந்த குயில் பாரதியார் ஆவார். அவருடைய கவிதைகளில் மணம்வீசும் மானித உயிர் நேயத்தை காண்பதே இக்கட்டுரையின் நேக்கமாகும்.

மனிதம் - சொல்விளக்கம்
மானுடநேயம், மானுடம், மனிதம் என்று மனிதநேயத்தைக் குறிப்பிடுவார்கள். அன்புதான் மானுட வளர்ச்சியின் ஆணிவேர். எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டும் பண்பாடு தமிழகத்தில் ஆதிகாலம் தொட்டே இருந்து வருகிறது. தனக்கென வாழாமல் பிறர் நலனுக்காகவே வாழ்ந்து வரலாறாகி மிளிர்பவர்கள் பலர். சமயங்கள் பற்பல தோன்றிய தமிழ் நிலத்தில், யாவரும் கேளிர் என்ற நன்னெறியும் தழைத்து விளங்கியது.

    ‘மனம் என்ற சொல்லின் அடியாகவே மனிதன் என்ற சொல்லும் தோன்றியிருக்க வேண்டும். மனத்தை உடையவன் மனத்தன் என்றிருந்து பின்பு மனிதன் என்றாகியிருக்கலாம். அதுவே முதல் நீண்டு மானிடன் என்றும் ஆகியிருத்தல் வேண்டும்” (டாக்டர் அ. ஜெகந்நாதன், பாரதிதாசனில் மார்க்சியம், ப.48)என்று கரு.நாகராசன் ‘தமிழர் கண்ட மனம்” நூலில் கூறியதை சி.இராகவேந்திரன் வழிமொழிகிறார். மனிதன் என்ற சொல் ‘மனிதம்” ஆக மாறி மனிதநேயத்தைக் குறிக்கிறது என்பர்.

மேலும் படிக்க ...

முனைவர் தெ.வெற்றிச்செல்வனின் 'ஈழத்தமிழர் புகலிட வாழ்வும் அனுபவமும்' - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
21 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

புகலிடத் தமிழ் இலக்கியம் பற்றிய நல்லதோர் ஆய்வு நூல் முனைவர் தெ.வெற்றிச்செல்வனின் 'ஈழத்தமிழர் புகலிட வாழ்வும் படைப்பும்'.
இதுவரை நான் வாசித்த புகலிடத் தமிழ் இலக்கியம் பற்றி வெளியான ஆய்வு நூல்களில் சிறந்த நூலாக இந்நூலையே கருதுகின்றேன். ஏன் கருதுகின்றேனென்பதற்கான காரணத்தை இப்பதிவை முழுமையாக வாசித்தால் புரிந்து கொள்வீர்கள்.

மேலும் படிக்க ...

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' - வ.ந.கி -

விவரங்கள்
Administrator
வ.ந.கிரிதரன் பக்கம்
20 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



எனது 'அமெரிக்கா' , சிறுநாவலின் திருத்திய பதிப்பு தனி நூலாக 2019இல் இலங்கையிலிருந்து மகுடம் வெளியீடாக வெளிவந்தது. இலங்கைத் தமிழ் அகதி ஒருவனின் நியூயோர்க் மாகநகரத்தின் புரூக்லீன் தடுப்பு முகாம் அனுபவங்களை வெளிப்படுத்தும் ஒரெயொரு தமிழ் நாவல்.இதன் முதற்பதிப்பு தமிழகத்தின் ஸ்நேகா மற்றும் கனடாவின் மங்கை பதிப்பகங்களின் இணை வெளியீடாக வெளியான 'அமெரிக்கா' தொகுப்பு நூலில் இடம் பெற்றிருந்தது. அது வெளிவந்த ஆண்டு 1996.

மேலும் படிக்க ...

பேராசிரியர் அ.ராமசாமியின் புலம்பெயர் தமிழர்தம் எழுத்துகள் பற்றிய கூற்றுகள் பற்றிச் சில கருத்துகள்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
20 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பேராசிரியர் அ.ராமசாமியின்  'அ.ராமசாமி எழுத்துகள்' வலைப்பதிவில் புலம்பெயர் எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றி, இணைய  இதழ்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துகள் பற்றிச் சில கருத்துகளைக் கூறலாமென்று கருதுகின்றேன். புலம்பெயர் தமிழர்களின் ஆரம்பகாலப் படைப்புகளைப்பற்றி அவர் கூறுகையில் பின்வருமாறு கூறியுள்ளார்:

1. "தமிழின் தொடக்க நிலையில், புலப்பெயர்ந்த எழுத்தாளர்களின் புனைவுப் பனுவல்கள் அவர்களின் வாழிடத் தேச அடையாளங்கள் எதுவும் இல்லாமலேயே வெளிப்பட்டன. எழுதியவர்களின் உடல்கள் புலம்பெயர் நாடுகளில் - ஐரோப்பிய/ஆஸ்திரேலிய/ கனடிய நாடுகள் - ஏதாவதொன்றில் இருந்தபோதிலும் மனம் முழுவதும் இலங்கையில் தமிழர்கள் வாழும் பரப்பிலேயே இருந்தன."

2."புலம்பெயர் நாடுகளிலிருந்து அச்சிடப்பெற்ற சிற்றிதழ்களிலும், அந்தந்த நாடுகளில் தொடங்கப்பட்ட அமைப்புகளின் தொகைநூல்களிலும் வந்த கவிதைகளிலும் புனைகதைகளிலும் அவர்கள் எந்த நாட்டில் வாழ்கிறார்கள் என்ற பின் குறிப்புகள் மட்டுமே புலம்பெயர் அடையாளங்களாக இருந்தன. "

இவற்றில் முதற் கூற்றில் குறிப்பிடப்பட்டுள்ள 'தமிழின் தொடக்க நிலையில், புலப்பெயர்ந்த எழுத்தாளர்களின் புனைவுப் பனுவல்கள் அவர்களின் வாழிடத் தேச அடையாளங்கள் எதுவும் இல்லாமலேயே வெளிப்பட்டன.' என்னும் கூற்றினையும், இரண்டாவது கூற்றிலுள்ள 'கவிதைகளிலும் புனைகதைகளிலும் அவர்கள் எந்த நாட்டில் வாழ்கிறார்கள் என்ற பின் குறிப்புகள் மட்டுமே புலம்பெயர் அடையாளங்களாக இருந்தன' என்னும் கூற்றினையும் என்னால் ஏற்க முடியவில்லை. இம்முடிவுகளுக்கு அவர்  எவ்விதம் வந்தார் என்பதற்குரிய ஆதாரங்களை முன் வைக்க வேண்டும். அதற்கு அவர் ஆரம்பகாலப் படைப்புகளை உதாரணங்களாக முன் வைத்து ஏன் அவை 'வாழிடத்தேச அடையாளங்கள்' எவையுமில்லாமல் வெளிவந்தன ' என்னும் அவரது கூற்றை நிரூபிக்க வேண்டும்.

மேலும் படிக்க ...

என்னுரை! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
18 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இம்மாத இறுதிக்குள் ஜீவநதி பதிப்பக வெளியீடாக வெளிவரவுள்ள எனது சிறுகதைத் தொகுப்பான 'கட்டக்கா(கூ)ட்டு முயல்கள்' தொகுப்புக்காக நான் எழுதிய என்னுரையினைக் கீழே தருகின்றேன்.

"இத்தொகுப்பிலுள்ள சிறகதைகளில் இறுதியிலமைந்துள்ள சுமணதாஸ் பாஸ் குறுநாவலைத் தவிர ஏனையவை கனடாவிலுள்ள 'டொராண்டோ' மாநகரில் வாழும் இலங்கைத் தமிழ் அகதி ஒருவனின் பல்வேறு வகையான புகலிட அனுபவங்களை மையமாகக் கொண்டவை.  உண்மையில் சுமணதாஸ் பாஸ் குறுநாவல் கூடப் புகலிடத் தமிழ் அகதி ஒருவனின் நனவிடை தோய்தலாகத்தானமைந்துள்ளது. அவ்வகையில் அது கூடப் புகலிட அனுபவத்தின் வெளிப்பாடு என்றும் ஒருவகையில்  கூறலாம். ஏனென்றால் இழந்த மண்ணில் கழித்த நினைவுகளின்  நனவிடை தோய்தல் கூட புகலிடத் தமிழ் அகதி ஒருவரின் அனுபவங்களில் உள்ளடங்கிய ஒன்றுதான். மேற்கு நாடுகளை நோக்கிப் புகலிடம் நாடிச் சென்ற இலங்கைத்தமிழ் அகதிகளின் முதலாவது தலைமுறையினரின் அனுபவங்கள் அடுத்தடுத்து வரும் தலைமுறைகளின் அனுபவங்களிலிருந்து நிச்சயம் வேறானவை.   ஏனெனில் சொந்த மண்ணையிழந்து, உறவுகளை இழந்து, நண்பர்களை இழந்து, தம்மையே , தம் உழைப்பையே நம்பிப் புகலிடம் நாடி, புதிய நாடொன்றில் காலூன்ற முயற்சி செய்கையில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்பல. அப்பொழுது ஏற்படும் அனுபவங்களும் அடுத்தடுத்து வரும் தலைமுறையினரின் அனுபவங்களிலிருந்து வேறுபட்டவை. தனித்துவம் மிக்கவை. அவ்வகையில் அவை பதிவு செய்யப்பட வேண்டியவை. அதனைத்தான் இத்தொகுப்புக் கதைகள் செய்கின்றன.

இங்குள்ள  கதைகள் அனைத்துமே என் சொந்த அனுபவங்களின் அடிப்படையில், அல்லது நான் நேரில் பார்த்தறிந்த அனுபவங்களின் அடிப்படையில் உருவானவை. உண்மையில் கதைகள் அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால், வாசித்தால் இலங்கைத் தமிழ் அகதியொருவனின் வாழ்க்கையை விபரிக்கும் அனுபவங்களை உள்ளடக்கிய நாவலொன்றினை வாசித்த உணர்வினை நீங்கள் அடைவீர்கள் என்பது மட்டும் நிச்சயம்.

எழுத்தாளர் ஒருவரின் படைப்பு உருவாகுவதற்குப் பல அடிப்படைக்காரணங்களுள்ளன. அப்படைப்பானது அதனைப் படைத்தவரின் கற்பனையாகவிருக்கலாம். அல்லது நடைபெற்ற சம்பவங்கள் ஏதாவது ஏற்படுத்திய பாதிப்புகளின் விளைவாக இருக்கலாம். அல்லது பத்திரிகை , சஞ்சிகைகளில் வெளிவந்த செய்தியொன்றின் தாக்கத்தின் விளைவாகவிருக்கலாம். இவ்விதம் பல்வேறு காரணங்களிருக்கலாம். புகழ்பெற்ற எழுத்தாளர் ஏர்னஸ்ட் ஹெமிங்வேயின் மிகவும் புகழ்பெற்ற படைப்பான 'கிழவனும், கடலும்' நாவல் தோன்றியது ஒரு பத்திரிகைச்செய்தியின் விளைவாகவென்று ஹெமிங்வேயே ஒருமுறை கூறியிருக்கின்றார். பத்திரிகையொன்றில் வெளியான 'புளூ மார்லின்' மீனொன்றால் கடலில் பல நூறு மைல்கள் இழுத்துச் செல்லப்பட்ட போர்த்துக்கேய மீனவன் ஒருவன் பற்றி வெளியான செய்தியொன்றின் தாக்கத்தின் விளைவே அவரது 'கிழவனும், கடலும்' நாவலின் அடிப்படை.

மேலும் படிக்க ...

“ஒரு நாள் அவர்கள் எங்களைப் போல வேதங்ளை ஆக்கிக்கொள்வார்கள்” - சமூக இலக்கியப் போராளி நந்தினி சேவியர்! - செல்லத்துரை சுதர்சன் -

விவரங்கள்
Administrator
இலக்கியம்
17 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அஞ்சலிக் குறிப்பு

நள்ளிரவில் முருகபூதி அண்ணரின் திடீர் அஞ்சல் செய்தி என்னை அதிர்ச்சியுறச் செய்தது. ‘சேவியர் அங்கிள்’ என்று நாம் அன்பாக அழைப்பவர் எம்முடன் இனி இல்லை என்ற துக்கம் நெஞ்சழிக்கிறது.

1996ஆம் ஆண்டு சேவியரை முதலில் சந்தித்தேன். பின்னர் கண்டியிலிருந்து திருமலை நகருக்கான என் பயணங்களில் நான் சந்திக்கும் முதல் ‘மனிதராக’ சேவியர் இருந்தார். பல சந்திப்பு வேளைகளில் ‘நீங்களும் எழுதலாம்’ ஆசிரியர் எஸ்.ஆர்.தணிகாசலம் அவர்களும் உடனிருந்தார். இலக்கிய உரையாடலைக் காழ்ப்புணர்வுகளற்றுச் சுவாரசியமாகவும் ஆதாரங்களுடனும் பேசுவதில் சேவியர் ஒரு விண்ணர். கேட்பவர் சலிக்காது உரையாடும் சுவையூறிய மொழியாளர், அவர். சமூக அக்கறையை, சமூக அடக்குமுறை வரலாற்றைப் பேசுகையில் அவர் வெளிப்படுத்தும் மொழி அவர் அனுபவித்த கொடுந்துயரங்களின் மொழி.

மறுமலர்ச்சி எழுத்துக்களைத் தேடி அலைந்த நாட்களில், அவர், தனது அலுவலகம் வெளியிட்ட அதுவும் தனக்கென்றே தனது சொந்தச் சேகரிப்பில் வைத்திருந்த மறுமலர்ச்சிக் கதைகள் பிரதியையும் வேறு சில நூல்களையும் எனக்கென்றே கையளித்தார்.

ஒரு சமூகப் போராளியாக அவரது வகிபாகம் முக்கியமானது. எழுத்தும் பேச்சும் சமூகக் கடமை என்று வாழ்ந்தவர். அக்கடமை அவருள் பேராவலுடன் பிரவாகித்துக்கொண்டே இருந்தது. சாதிசார் உரையாடல்களில் நேர்படப் பேசவும் எழுதவும்தான் சேவியருக்குத் தெரியும்.

சேவியர் அங்கிள் இனி எம்மோடு இல்லை.

தொலைபேசிக்கு ஓர் இலக்கத்தின் அழைப்பு இனி வராது போயிற்று.

அவருக்கு என் அஞ்சலி.

மேலும் படிக்க ...

பைந்தமிழ்ச்சாரல் வழங்கும் விமர்சன அரங்கு! - தகவல்: முருகபூபதி -

விவரங்கள்
- தகவல்: முருகபூபதி -
நிகழ்வுகள்
17 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

அஞ்சலி: எழுத்தாளர் நந்தினி சேவியர் மறைவு! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
16 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


உண்மையிலேயே எழுத்தாளர் நந்தினி சேவியரின் மறைவுச் செய்தி அதிர்ச்சியாகத்தானிருந்தது. தனது எழுத்துகளைச் சமூகச் சீர்கேடுகளைச் சுட்டெரிக்கும் போர்வாளாகப் பாவித்தவர் அவர். எப்பொழுதுமே தான் நம்பும் கோட்பாடுகள் விடயத்தில் , குறிப்பாக மார்க்சியக் கருத்துகள் விடயத்தில், சமரசம் செய்து கொள்ளாதவர். சமூக, அரசியுல் & பொருளியல் விடுதலைக்கான மார்க்சியக் கருத்துகள் ரீதியில் அமைந்த போராட்டம், அதனுடன் இணைந்த தீண்டாமைக்கெதிரான போராட்டம் என்பவற்றில் தெளீவான, உறுதியான  கருத்துகளைக் கொண்டிருந்தார்.

அண்மைக்காலமாக அவராற்றிய இன்னுமொரு விடயமும் என்னை மிகவும் கவர்ந்தது. தான் வாசித்த, தனக்குப்பிடித்த இலங்கைத்  தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகள் பற்றிய விபரங்களைச் சுருக்கக் குறிப்புகள் மூலம் ஆவணப்படுத்தியவர் அவர்.சிலர் அக்குறிப்புகளை உதாசீனப்படுத்தினர். அவை விமர்சனங்களல்ல என்றும் கிண்டல்  செய்தனர். ஆனால் அவர்கள் அவற்றின் நோக்கத்தை, முக்கியத்துவத்தைக் காணத்தவறி யானை பார்த்த குருடர்கள் என்பேன். அவற்றின் மூலம் அவர்  எழுத்தாளர்கள் பலரை ஆவணப்படுத்தியுள்ளார். அதுதான் அவரது நோக்கமும் கூட. அதனைக் காணத்தவறியவர்கள்தாம் அவற்றில் குற்றம் குறை கண்டார்கள். ஆனால் அதற்காக அவர் அதனை நிறுத்தவில்லை. தொடர்ந்தும் அறிமுகப்படுத்திக்கொண்டேயிருந்தார். இலங்கைத் தமிழ் இலக்கிய ஆய்வுகளுக்கு உதவும் ஆவணக்குறிப்புகளாக அவை எப்போதுமிருக்கும்.

மேலும் படிக்க ...

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் இணைய வழிக் கலந்துரையாடல்: கண்கவர் கலக்சிகள் - பேசுபவர்: திரு.சிவ.ஞானநாயகன்

விவரங்கள்
- தகவல்: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
14 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

'ஜீவநதி' பதிப்பக வெளியீடாக வெளிவரவுள்ளது வ.ந.கிரிதரனின் கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள் சிறுகதைத் தொகுப்பு!

விவரங்கள்
- வ.ந.கி -
நிகழ்வுகள்
13 செப்டம்பர் 2021
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


பல வருடங்களுக்குப் பின்னர் எனது சிறுகதைத்தொகுதியொன்று இலங்கையில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரவுள்ளது. ஜீவநதியின் 194 ஆவது வெளியீடாகக் 'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்' என்னும் தலைப்பில் எனது 27 சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுதி புரட்டாதி 25 அன்று வெளிவரவுள்ளது. நான் நினைத்தவாறு தொகுப்பு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நிலையில் வெளிவருகின்றது. இதற்காக ஜீவநதி பதிப்பகத்துக்கும், அதன் உரிமையாளர் பரணீதரனுக்கும் நன்றி.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. மட்டக்களப்பு 'கதிரவன்' வீதி நாடக அனுபவப் பகிர்வு! - தகவல்: எஸ்.ரி.குமரன் -
  2. ஞானத்தமிழ் மன்றம்: பாடலும் தேடலும் - என்றுமுள்ள செந்தமிழ்! - தகவல்: தேசபாரதி வே.இராசலிங்கம் -
  3. திருக்குறளில் கல்வியியற் கோட்பாட்டுச் சிந்தனைகள் பன்னாட்டுத் திருக்குறள் கருத்தரங்கம் -3! - தகவல்: பேராசிரியர் இ.பாலசுந்தரம் -
  4. விதை குழுமத்தின் செப்ரம்பர் மாத நிகழ்வுகள்! - விதை குழுமம் -
  5. ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
  6. திருப்பூர்இலக்கியவிருது 2021 ( 11ஆம்ஆண்டு ) - தகவல்: நடேசன் -
  7. கனடா அரசியலில் தமிழர்களின் பங்களிப்பு! - குரு அரவிந்தன் -
  8. எனது இரு இணைப்புகள் - தங்கள் பார்வைக்கு! - பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
  9. செப்டெம்பர் 11 பாரதியார் நினைவு தினம். மகாகவி பாரதி மறைந்து இன்றுடன் நூறு ஆண்டுகள் ! - முருகபூபதி -
  10. பாரதியை நினைவு கூர்வோம் - 3: பாரதி ஒரு மார்க்சியவாதியா? - வ.ந.கிரிதரன் -
  11. பன்முக நோக்கில் பாரதியாரின் படைப்புகள் ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா , மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் , மெல்பேண், அவுஸ்திரேலியா -
  12. பாரதியை நினைவு கூர்வோம்-2: பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு! - வ.ந.கிரிதரன் -
  13. குறுநாவல்: வேட்டை! - கடல்புத்திரன் -
  14. பாரதியை நினைவு கூர்வோம் -1. - வ.ந.கிரிதரன் -
பக்கம் 92 / 107
  • முதல்
  • முந்தைய
  • 87
  • 88
  • 89
  • 90
  • 91
  • 92
  • 93
  • 94
  • 95
  • 96
  • அடுத்த
  • கடைசி