எம்ஜிஆர் பற்றி அண்மையில் அரசியல் லூசு என்றழைக்கப்படக்கூடிய ஒருவர் 'லூசு'  என்றழைத்து மேடையில் பேசியது தற்போது எம்ஜிஆர் மீது அபிமானம் கொண்ட அனைவரையும் ஆத்திரமடைய வைத்துள்ளதை சமூக ஊடகங்களில் வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தப் பேச்சு மூலம் இவரின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இதனை ஆளும் திமுக கட்சி கண்டிக்காது விட்டால் அடுத்துவரும் சட்டசபைத் தேர்தலில் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால் களத்தில் தமிழக வெற்றிக் கழகம், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், நாம் தமிழர் ஆகிய கட்சிகள் வாக்குகளைப் பிரிக்கவுள்ள சூழலில் இவ்விதமான பேச்சானது ஆளும் திமுகவுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கப் போகின்றது.

தமிழக முதல்வர்களில் தொடர்ச்சியாகப் பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்த ஒரே முதல்வர் எம்ஜிஆர். அவ்வளவுக்குத் தமிழக மக்களின் பேராதரவையும் , பேரன்பையும் பெற்றவராக விளங்கியவர் அவர். உலகத்தமிழர்கள் மத்தியிலும் அவர் அதே வகையான ஆதரவையும், அன்பினையும் பெற்றவர். கலைஞர் கருணாநிதி திமுக தலைவராக வருவதற்கு அன்று எம்ஜிஆரின் ஆதரவில்லாமலிருந்தால் சாத்தியப்பட்டிருக்காது. அது அனுபவ அடிப்படையில் நெடுஞ்செழியனுக்குச் சென்றிருக்க வேண்டிய பதவி.

திமுக 67இல் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரண அப்போது சுடப்பட்டிருந்த எம்ஜிஆர் மீது தமிழகத்தில் வீசிய அலை.  கலைஞர் கருணாநிதி, முரசொலி மாறன் ஆகியோர் பெரும் கடன் சுமையால் பாதிக்கப்பட்டிருந்த சூழலில் 'எங்கள் தங்கம்' படத்தில் இலவசமாக நடித்ததுடன், கூட நடித்த ஜெயலலிதாவையும் இலவசமாக நடிக்க வைத்து  கலைஞர் குடும்பத்தினரை  கடனிலிருந்து மீட்டவர் எம்ஜிஆர்.

சத்துணவுத்திட்டம் என்னும் மிகச்சிறந்த திட்டத்தினை, அதிகாரிகளின் எதிர்ப்புகளையும் மீறி, நடைமுறைப்படுத்தி இன்று வரை இலட்சிக்கணக்கான குழந்தைகள் பயன்பெறும்படி செய்தவர் எம்ஜிஆர்.
ஐம்பதுகளிலிருந்து தொடர்ச்சியாகத்  தனது திரைப்படங்களில் மானுட வாழ்வுக்கு ஆரோக்கியமான எண்ணங்களை விதைக்கும் கருத்துகளை வெளிப்படுத்தும் பாடல்களை வழங்கி மிகச்சிறந்ததொரு சேவையினைச் செய்தவர் எம்ஜிஆர். அத்துடன் தான் சார்ந்திருந்த திமுக கட்சியினைத்  தமிழகத்தின் மூலை, முடுக்குகளுக்கெல்லாம் கொண்டு சென்றவர் எம்ஜிஆர்.

தனது அரசியல் காலத்தில் எந்தவொரு சொத்தையும் வாங்காதவர் எம்ஜிஆர். தான் இறந்த பின்னர் தனது சொத்துகளை விழிப்புலன் இழந்தோர், செவிப்புலன் இழந்தோர்  பயன்படப் பள்ளிக்கூடங்களாக்கி , அவற்றைப் பராமரிக்க அவரது ஏனைய சொத்துகளிலிருந்து வரும் வருமானத்தைப் பயன்படும்படி சட்டரீதியாக வழிமுறை செய்தவர் எம்ஜிஆர்.

மறைந்து 37 வருடங்கள் கழிந்த நிலையிலும் இன்னும் மக்கள் அவரை நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள்.

இவ்விதமான ஒரு தலைவரை, நடிகரை, முன்னாள் தமிழக முதலமைச்சரைப்பற்றி ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளாகி , சிறையிலிருந்து மீண்ட செம்மல் இவ்விதம் வார்த்தைகளை உளறிக்கொட்டியிருக்கத் தேவையில்லை.