அத்தியாயம் ஆறு -  அடுத்த நாள்

 " முதல் நாளைப் போல அதிகம் ஓடாமல் கிட்ட இருக்கிற சிறிய டவுண் பக்கம் போவோம் " என்றாள் பூமலர் . அவர்கள் சென்ற இடம் வூத்வில்  .  விவசாயப் பண்ணைகளிற்கு மையமாக இப்படி ஒரு  சந்தைகடை  ( ஃபாம் மார்க்கட்) , மற்றும்  வேறு சில கடைகளும் சேர்ந்த   தொகுதிகள் அங்காங்கே இருக்கின்றன . " நான் இந்த கடையிலே வந்து நல்ல காய்கறிகளை வாங்கிறேன்  " என்றாள்  பூமலர் . அந்த மார்க்கட் கடையில் வீட்டிற்கு வேண்டிய  சகலப் பொருட்களும்  நிறைந்த  பெரிய கடையாக இருக்கிறது . எல்லாம் மனித தயாரிப்புடைய பழமைச் சாயல் . அவற்றை ரசனையோடு பார்த்தார்கள் லொப்ஸ்டர் இடுக்கிகள்  தொங்கின்றன . நண்டு போன்ற (ஓடு) கோதுகளை உடைத்து சாப்பிடுவதற்கு உபயோகிக்கப்படுகிறது . இடுக்கிகளையும் வைக்கிறார்கள் . இங்கே , உணவகங்களில் லொப்ஸ்டர் பேகர்  சன்விச்கள் கூட  விற்கப் படுவதாக கேள்வி .

    பூமலர் சமைக்கிறதுக்கு  வாங்கி விட்டு  , ஐஸ்கிரீமையும்  வாங்கினார்கள் . பக்கத்தில் பூங்கா போல இருந்த இளைப்பாறும்  இடத்தில்  ஆடு  ,மாடு  , பறவைகளை  கம்பிக் கூண்டில் வைத்திருக்கிறார்கள் .  அவற்றிற்கு  போட உணவையும் மெசினில் டொலரைப் போட்டு எடுத்து சாப்பிட போடலாம் . வங்கிகள்  ,  மற்றும் ரொரொன்ரோவில் இருக்கிற மாதிரியான ஒரு கடையையும் கண்ணில்  காணவில்லை . எங்கையும் ஓரிரண்டு இருக்கலாம் . ஐரோப்பியர்கள் உணவை ரசித்து சாப்பிடுறவர்கள்  .  உணவகங்கள் வழியே இருந்து சாப்பிடுறவர்கள் இல்லை . குறைந்த வாழ்க்கைச் செலவு .  சிக்கனம் உள்ளவர்கள் .  சேவைப்பிரிவினரே கடையே தவம் என அலைபவர்கள்  .  இங்கே ஒரு கிராமியமே முழுதாய்  படர்ந்திருந்தது . வியாபாரம் இருந்தால் தானே கடைகள் பூக்கும் . தவிர , மக்கள் தொகையும் கூடுதலாக இருக்க வேண்டும் . இங்கே இரண்டும் இல்லை .

இன்னொரு நாள்

      " வீட்டிற்கு கிட்டவாக சில கிலோ மீற்றர் நடந்து விட்டு வரலாமே " என்று கிளம்பினார்கள் .ரோஜா  , அங்கே காட்டிலே தானாக வளர்கிற செடியாக இருக்கிறது . காட்டு ரோஜாவை பூமலர் காட்டினாள் . அது பூ பூத்து  தக்காளிப்பழம் போன்ற சிவப்புப் பழக்கொத்துடன் பார்க்க ஆச்சரியமாக இருந்தது . தில்லை இதுவரையில் இப்படி காய்த்தை , பூத்ததை  பார்த்ததேயில்லை . ஜெயந்தி " நான்  ஊரிலே பார்த்திருக்கிறேன் " என்றாள் . ரொரொன்ரோவிலும் பழங்களுடன் இருக்கிறது தான் அவன் அதை ரோஜாசெடி என  நினைத்திருக்கவில்லை , காட்டுச்செடியாக மல்பெரி , புளுபெரி கூட இருந்தன .  அதை பறித்து வாயில் லபக் என போட்டுக் கொண்டான் . சுவையாகத்தான் இருந்தது .  வீதியில் இருந்தால் தூசி படர்ந்திருக்கும்  . இது பசுமைப் பூங்கா .  நடக்கிற ' ட்ரெயில்'  பகுதி . அடிக்கடி பெயிற மழையால் கழுவி சுத்தமாகவே   இருக்கும் .  நீர் தேங்கிய குளம் ஒன்றிருந்தது . அதற்கு வருகிற வாய்க்கால் மீது பாலம் அமைத்து ஒரு வளையமாக குளத்தை சுற்றி வரலாம்  காலையில் நடை போடுறவர்கள்.  சிலர்  எதிர்பட்டார்கள் .

     சிரித்து " ஹலோ ! குட்மொனிங் ."என்று விட்டு போனார்கள் .  பதிலுக்கு சிரித்து கை காட்டினார்கள் . வழியில்  . வீதியை நோக்கி இருந்த  பழைய  வெயார்கவுஸின் ஒரு   சுவரில்   பழங்குடிமகனின்  படம்  வரைந்திருந்தது  .    சும்மா அதையும் ' கிளிக்' .    " நான் இங்கே அடிக்கடி நடக்கிறேன்"   என்கிறாள் பூமலர் . வீட்டிற்கு வர மழை பிடித்துக் கொண்டது . சூடான தேனீருடன்  அராலிக்கதை  , குடும்பக்கதை என பலதைக் கதைத்துக் கொண்டிருந்தார்கள் . இடி முழக்கத்துடன் மழையும் கொட்டியது .

 கலிபஸ் துறைமுகம்.

      காலை விடிந்தது .  பூமலர் தான் முதலில் எழும்பி விடுகிறவள் .   பூமலர் ,வீட்டினுள்  இருந்த சேதனக் குப்பையை  போட்ட மூடியுடன் கிடக்கிற  பச்சை பிளாஸ்டிக்  வாளியை  சரித்து  இழுத்துக் கொண்டு போய் வீதி ஓரத்தில் வைத்தாள் . முன்புறத்தில் புல் வெட்டப்பட்டிருந்தது . ஜேம்ஸ் அவர்கள் வீட்டு புல்லை வெட்டுற போது பூமலர் வீட்டுப் புல்லையும் வெட்டி விடுகிறான் .  அவற்றை  கம்பி விளக்கு மாறால்  கூட்டி அள்ளி எடுத்து புறோன் பையில் போட்டுக் கொண்டிருந்தாள் .   தில்லை , முகம் கழுவி விட்டு கீழே இறங்கி வந்தவன் , ஜன்னலூடாகப்  பார்த்து விட்டு  வெளியில் வந்தான் .  " இண்டைக்கு பச்சை குப்பை எடுக்கிற   நாள்   எடுதிட்டு போய் விட்டார்கள் . கொஞ்சம் , கொஞ்சமாக எடுத்து பையில் போடுவேன் . இனி அடுத்த கிழமை தான் எடுப்பார்கள் .அவசரப்படத் தேவையில்லை " என்றாள் .  " பெரிய வேலை தான் "  என்றான் . " இங்கே எல்லோரும் தாங்களே புல்லை  வெட்டிக் கொள்கிறவர்கள் . எனக்கு ஜேம்ஸ் தான் வெட்டி விடுறவன் . நான் ரொரொன்ரோவில் இருக்கிற போது தெரேசா வீட்டினர்  வீட்டை  நன்கு  பார்த்துக் கொள்வினம் . விமானத்தில் வார போது காரையும் கொண்டு வந்து தரிப்பிடத்தில் விட்டு விட்டு போய் விடுவினம் . நான் எடுத்து கொண்டு வருவேன் . போற போதும் தரிப்பிடத்தில் விடுவேன் . அவர்கள் வந்து எடுத்து  வந்து வீட்டிலே விடுவார்கள் .  ஜேம்ஸ் செய்யிற வேலைக்கு  பணமும் கொஞ்சம் கொடுப்பேன் . அவனும் சந்தோசப்படுவான் . " என்றாள் .

      அந்த குடும்பம், எவ்வளவு உதவியாய் இருக்கிறது .  "  மீள்சுழற்சி குப்பையை எடுக்கிறதில்லையா ? " என்று கேட்டான் . இங்கே எல்லா வீடுகளில் ,  அப்பார்ட்மெண்டுகளில் இரண்டு குப்பைகள் தான் இருக்கின்றன . " இல்லை . அது சேர , நாம் தாம்  எடுத்துக்  கொண்டு போய் அந்த மையத்தில் போட வேண்டும் . கொஞ்சம் தூரத்தில் இருக்கிறது . அது சேர கன நாள் எடுக்கும் " .  ரொரோன்ரோவில் இரண்டையும் நகரசபையே எடுக்கிறது .  " இப்படி குறைத்ததாலே ,  இங்கே ( சோலை) வரியும்  குறைவு  " என்று சிரித்தாள்  . அவனும் உதவ விரும்பினான்  " நான் என்ன செய்ய வேண்டும் " என்று கேட்டான் ." விளக்குமாறால் அழுத்திக் கூட்டாமல் மெதுவாகக் கூட்டு . புல்லு சேதம் அடைந்து விடும் " என்று தந்தாள் . அவன் கூட்டி உருட்டி விட அவள் எடுத்துக் கொண்டு போய் பையில் போட்டு வந்தாள் .  

அரைமணி நேரம் வரையில் செய்திருப்பார்கள் ." இன்றைக்கு இது போதும் " என்றாள்  .
                                                                                                                                                      
      வடையும் , தென்னம் சீனீ போட்டு தயாரித்த எள்ளுருண்டையையும் , தேனீர்க் குடுவையில் தேனீரையும் நிரப்பி எடுத்துக் கொண்டு  தயாரானார்கள் . அந்த குறுகிய நேரத்திலும் தில்லை பொன்னியின் செல்வனில் ஒரு பக்கத்தை வாசித்து விடுகிறான் .  வந்திய தேவன் எப்பவும் வாய் சவாடல்காரன் . முதலில் இவன் நீரில் குதித்த போது , நீச்சல் தெரிந்ததால் தான் குதிக்கிறான்  என பூங்குழலி  பாட்டை முணுமுணுத்துக் கொண்டிருப்பாள் . இவன் நீரைக் குடித்து மேலே வரவே ... பாய்ந்து அவன் முகத்திலே ஒரு குத்து  போட்டு  மயக்கமுற  காப்பாற்றுவாள் . வந்தியதேவன் மன்னார் செல்லும் கப்பலில் சென்று கொண்டிருக்கிறான் .  இளவரசன் சென்று கொண்டிருக்கிறான் என்று தவறாக நினைத்து ஏறி விட்டான் . ரவிதாசன்  தான்  அதில்  இருக்கிறான் .  அவன் இவனைக் கண்டு  கட்டிப் போட்டு விடுகிறான் .  கப்பலுக்கும்  தீ வைத்து விட்டு படகில் இறங்கி  போய் விடுகிறான் .

       பூங்குழலியுடன் வரும்  இளவரசர் ,  தீப்பற்றி எரியும் கப்பலிலிருந்து   காப்பாற்ற கடலில் குதிப்பார் .  இவருக்கும் நீச்சல் தெரியாது .  பூங்குழலி  இருவரையும்  காப்பாற்றுவாள் . இப்படி கதை போகும் .  வந்தியதேவனை வீராதி வீரன் என்று நினைத்து விடாதீர்கள் . கத்திச் சண்டையில் மல்யுத்தத்தில்   வீரன் தான் , ஆனால் , கத்தியால் முதுகில் குத்து வாங்குவான் , எக்கச் சக்கமாக எல்லாம் போய் மாட்டிக் கொள்வான்  . நம்பியோடு நெடுக கொளுவிக் கொண்டே இருப்பான் .  நம்பி , காப்பாற்றி  , காப்பாற்றி விடுவார் . இதற்கிடையிலே  , வந்திக்கு குழலி மேலே ஒரு கண் . அவள்  ஒரு  விளையாட்டு வீராங்கணை  .  அவளுக்கு இளவரசர் மேலே கண் .  நாவலில் வரும் பல பாத்திரங்களுக்கு  வந்தி  மேல் ஒரு பிடிப்பு . காப்பாற்றி , காப்பாற்றி  விடுவார்கள் .  இப்படிப்பட்ட ஒரு  தொடர் தான் . இவன் பார்வையிலேயே சோழ இராட்சியத்தையேப் பார்த்து விடுகிறோம் .

      வாகனத்தில்  ஏறி ,  மாகாண கைவேக்கு சமாந்தரமாகச் செல்கிற ஒரு லோக்கல் கைவே 14 இலக்க வீதியில்  செலுத்தினான் .  அது போக , வர  ஒருலேனிலே ஓடுது .  வேக எல்லை 70  ,80  ,90  என   மாறிக்கொண்டிருந்தது  . மூன்று கிலோ மீற்றர் தூரத்திற்கொரு தடவை லேன் இரண்டாகி  ஒரு கிலோ மீற்றர்  ஓடும் . அதில் விலத்த விரும்புறவர் விலத்திக் கொள்ளலாம் .  இவர்களுக்கு  அவசரமில்லையே . பின்னாலே போய்க் கொண்டிருந்தார்கள் .  இருபுறங்களிலும் மரங்கள் உடையதாக ,  சமயங்களில் விவசாயப்பண்ணைகள் தென்பட சுமார் நூறு கிலோ மீற்றர்  ஓடிச்  சென்று  மாகாணக் கைவே 103 இலே ஏறி , கிழக்குப்  பக்க இரண்டாவது வெளியேறலில் வெளியேறி  சாதாரண வீதியில் தெற்கு நோக்கி இறங்கி விட்டார்கள் . பிறகு , அவ்வளவு தூரமில்லை  . கலிபஸ் பெரிய துறைமுகம் . வாகனத்தை தரிப்பில் நிறுத்தி விட்டு ( பணம் செலுத்த  வேண்டும்  ) சனநெரிசலே  காணப்படுகிறது .  போர்ட்வோக்கில்  ,   மரத்தாலான பாதையில் கீழே தண்ணீர் அடிக்கிறதைப் பார்த்து  நடந்தார்கள்

       இந்த கடலுக்கு அண்மையில் தான்  , "    பிரிட்டனின் பெரிய   சுற்றுலாக் கப்பலான " டைடானிக் கப்பல்  .....   ( நியூபவுண்ட்லாண்டிலிருந்து  இருநூறு மைல்  தூரத்தில் )   தாண்டது  .   

      சிறுவர்களுக்கான திடல் . ஐஸ்கிரிம் , சொக்கிலேற் கடைகள் . " பாடியோ "  மரத்தளங்களுடன் உணவகங்கள்.  பிரெஞ்சுக்காரர்கள் போல வைன், பியருடன் உணவை ரசித்து உண்ணும் கூட்டம் . நடை தளத்தில் பாலம் போன்ற ஓரிடத்தில் கீழாலே நீர் அடிக்க மறுபுறத்தில் கற்குவியல் வரம்பு ஒன்று காணப்படுகிறது . துறைமுகத்தில்  இரண்டொரு சிலைகளுடன் குறிப்பும் கிடக்கிறது .  உடைந்த சுவரின் நிமிர்ந்து நிற்கிற  சிதைவு பிறிம்பாகத் தெரிய , பக்கத்தில் கடை ஒன்றும் இருக்கிறது . இந்த துறைமுகம் இரண்டாம் உலகப் போரிற்கு முதல் ஒரு பெரும் துன்பியல் நிகழ்வை சந்தித்திருக்கிறது .

      கொரோனாவிற்கு முதல் உரத்தை ஏற்றி வந்த ஒரு கப்பல் லெபனான் துறைமுகத்தில் நிறுத்தி வைக்க அது வெடித்து ஏறத்தாழ அரைவாசி துறைமுகமே அழிந்த்துடன் 200ற்கு மேலானவர்கள் இறந்து போனதை தொலைகாட்சித் திரைகளில் பார்த்திருக்கிறோம் . இங்கே நடந்தது அதை விட பல மடங்கு பெரிய வெடி விபத்து . அன்று உடைந்த கற்சிதறல்களைச் சேர்த்து  தான்  ஞாபகர்த்ததுக்கு  வரம்பிலே ... வைத்திருகிறார்கள் . இடிந்த சுவரும் அன்று எஞ்சியது தான் . ஜேர்மனியர்களின் கறுப்புத் திமிங்கலம் என்கிற நீர்மூழ்கிகள்  , கப்பல்களை மோசமாக வேட்டையாடிக் கொண்டிருந்த காலம் .நாஜிகளுக்கு உலகமே நடுங்கிக் கொண்டிருந்தது .

       பிரான்ஸ் கப்பல் ( மொன்ட்)  ஒன்று டன் கணக்கில் வெடிமருந்துகளை   கலிபஸ் துறைக்கு வருகிறது . கரையை ஒட்டி நிற்கிறது . அதேசமயம் நோர்வேயின் சிறிய கப்பல்( இமோ) நியூயோர்க்கிற்கு நிவாரணப் பொருட்களை ஏற்ற போய்க் கொண்டிருக்கிறது  துறைக்குள் வருகிறது .  கொஞ்சம் நெரிசல் இருந்திருக்க வேண்டும் . சென்றது பிரான்ஸ் கப்பலுடன் சிறிது உராய்ந்து விட்டது .கப்பலின் மேல் தளத்தில் இருந்த பரல்களில் ஒன்று உருண்டு விழ்ந்து தீ பிடிக்க ஒரு வெடிச் சத்தம் . துறைமுகத்திற்கு அண்மையிலிருந்த ரிச்மெண்ட் வீதியில் இருந்த குடும்பத்தில் பார்பரா என்ற  சிறுமி  துறைமுகத்தை ஜன்னலினூடாக கவனித்துக் கொண்டிருந்தவள்  "  ஏதோ வெடி விபத்து  "  என்று  இறங்கி வீதிக்கு ஓடி இருக்கிறாள் . பத்து நிமிடத்திற்குப் பிறகு பெரும் வெடியில் துறைமுகமே அதிர்ந்து தகர்ந்து போய் விட்டது . சிறுமி நிலத்தில் வீழ்ந்து விட்டதால்  தப்பினாள் .  அக்குடும்பமே இறந்து போய் விட்டது . தூர இருந்து ஜன்னலினூடாகப் பார்த்த சிலர் கண் பார்வையை முழுமையாகவே இழந்து போனார்கள் . உடனடியாக அமெரிக்கா  , தீயணைப்பு படையினரை , மருத்துவர்களை , நிவாரணப் பொருட்களை  அனுப்பி தோள் கொடுத்தது  . அந்த நன்றிக்காக நோவாகோர்ஸியா இன்றும்  நியூயோர்க் மாநகரசபைக்கு கிரிஸ்மஸ்  அன்று  நிறுத்துவதற்கு பெரிய கிரிஸ்மஸ் மரம் ஒன்றை  அலங்காரத்துடன் அன்பளிப்பு  செய்து வருகிறது .  இவ்விரு நாடுகளுக்குமிடையில் .... இப்படி பல நட்புக்கைகள் கிடக்கின்றன . நோர்வேக் கப்பலின் கப்டன் ஜேர்மனியர் . எனவே சதியாய் இருக்குமோ ? என்ற சந்தேகத்தில் பொலிஸ் , கலிபஸிலே இருந்த ஜேர்மனியரைப் பிடித்து  சிறையில் அடைத்து விட்டது . எட்டு நாள் விசாரணையின் பிறகே .... உண்மையை அறிந்து  மன்னிப்புகோரி விடுவித்தது .

      கலிபஸ்  துறைமுகத்திலிருக்கிற பிரமாண்டமான  மெரிட் டைம்  மியூசியத்தில்  இதை எல்லாம் அறியலாம்  . இவர்களுக்கு  இங்கேயும்  கொஞ்சம் அதிருஸ்டமும் இருக்கிறது. கொரோனா உபயத்தால் நுழைவு இலவசம் . வக்சின் எடுத்ததை  மட்டுமே செக் பண்ணினார்கள் . கடலிருந்து  சேகரிக்கப்பட்ட  டைடானிக்   சேகரிப்புக்கு என்று  ஒரு தனிப்பிரிவையே  ஏற்படுத்தி   வைத்திருக்கிறார்கள் .   டைடானிக்கை பற்றி முழுமையாக அறிய சிறு மாதிரிகளை  கூடுதலாக  செய்தும்   வைத்திருக்கிறார்கள்  .

     துறைமுகத்திற்கு அண்மையில் இருந்த ஒருகிராமத்தில் பழங்குடியினர் இருந்தனர் . முந்தி  , மாகாணவரசு , அவர்களுக்கு ஆசை வார்த்தைகளைக் கூறி எழுப்ப   முயற்சித்து  வந்திருக்கிறது .   அவர்கள் மசிந்து கொடுத்திருக்கவில்லை . துறைமுகத்திலிருந்து எழுந்த சுனாமி அலை அக்குடியிருப்பு முழுதையும் வாரிக் கொண்டு சென்று விட்டது .  இன்று    ஒருத்தரும் தப்பவில்லை என்ற பதிவு  இருக்கின்றது . ஆனால் , ஒரு சிலர் தப்பியே இருக்கிறார்கள் . அச்செய்தியை மறைத்து விட்டார்கள் .  அக்கிராமம் மீள கட்டி  கொடுக்கப்படவில்லை . துறைமுகம் அப்பகுதியை எடுத்துக் கொண்டிருக்க லாம் .

      இன்று , கனடிய சிறைகளில் இருக்கிற கைதிகளில் முற்பது வீததிற்கு மேலானவர்கள் இப்பழங்குடியினர் என்று ஒர்  கணிப்பு இருக்கிறது . அவர்களில் பலர்  போதைப் பொருள் பாவிப்பு , குடியில் வீழ்ந்தவர்...என பலவீனமான நிலையில் சீரழிகிறார்கள்   .  மத்தியரசில் ஒப்பந்தங்கள் மூலமாக சட்ட வரைபுகள் இருந்தாலும் மாகாண அரசுகளில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுற போது சட்டவிரோதமாகப் பார்க்கப்படுகின்றன . இல்லாவிட்டால் எப்படி சிறைகளில் நிரம்பி வழிவார்கள் . அகதி மக்களை விட கல்வி அறிவு ..எல்லாவற்றிலும் தாழ் நிலையில் இருக்கிறவர்கள்  ஒரு காலத்தில் சிறப்பான நாகரீகத்தைக் கொண்டிருந்த மக்கள் என்றால் நம்புவீர்களா ? .  இன்று வடக்கில் நிகழ்றதைப் பார்க்கிற போது ...அரசின் பின்னணியிலே  நடகின்றன என கூறி விடலாம் . இவர்கள் உலகத்திற்கு  வழங்கிய  அறிவியல்கள் அனேகம் . இன்று , எல்லாவற்றையுமே வர்த்தக நிறுவனங்கள் கைப்பற்றி விட்டன .  இயற்கையை காப்பாற்ற  முன்வைக்கிற விதிகள் அனைத்துமே இவர்கள்  முன்பு கூறியவை தாம் . மரங்களை நடுங்கள் . பறவை . உயிரினங்களை பாதுகாக்குங்கள் . சங்கரின்  , " எந்திரன் இரண்டை "  இன்னொரு தடவையும் பார்க்க வேண்டும் . இப்படி துணிச்சலாக படம் எடுத்திற்கு இயக்குநரைப்  பாராட்டவே வேண்டும் .

     அந்த விபத்தில் 3000 இற்கும் மேலானவர்கள் இறந்து போய் விட்டார்கள் . 9/11 ஐ விட அதிகம் .9000 இற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தனர் .  துறைமுகத்தில் கரைத்தடுப்புகளாக இருந்த வளைக்க முடியாத இரும்புக் கிராதி , உருகி வழிந்து மொட்டையாகிய துண்டொன்றையும் வைத்திருக்கிறார்கள்.  அன்று , உடனே துப்பரவு படுத்த முடியாததால்  தற்காலிகமாக நிலமட்டதோடு பென்னாம் பெரிய கோவில் மணிகளை அமைத்திருக்கிறார்கள். பல மைல் தூரத்தில் இருப்பவருக்கும் கேட்பதற்காக அமைத்திருக்க  வேண்டும் .  அதை அப்படியே பாதுகாக்கிறார்கள் . " பார்பரா "  என்ற அந்த  சிறுமி 90 வயது வரையில் வாழ்ந்திருக்கிறார் . இறக்கும் வரையில்   ஒவ்வொரு வருசமும் தவறாது  வந்திருக்கிறார் .  சில தகர்ந்த தேவாலயங்களை மீள அதே மாதிரியே  கட்டி எழுப்பியும் இருக்கிறார்கள் .

      இச் செய்திகளை அறிய   இவர்களுக்கும் வருத்தமாக இருகிறது . இலங்கையிலும் நிகழந்த  துன்பியல் நினைவுகளையும்  நினைவு படுத்தி  விடுகிறது .  சூரிய அஸ்தமனம் பார்க்கும் பெகிமுனை சிறிது தூரத்தில் தான் இருக்கிறது .

பெகிமுனை  ,  செல்கிறார்கள் .
                                                                                                                                  
       ஐஸ்கிரீமையும்  ஆளுக்கொன்று சாப்பிட்டு விட்டு வாகனத்தில் ஏறி  ,  குறுக்கலான டவுண் வீதிகளில் ஓடியும் , ஏறியும்  பெகிமுனை என்கிற பாறைக்  குவியலுக்கு வந்து சேர்ந்தார்கள் . பென்னம் பெரிய குவியல் மலை . இப்படியான பகுதிகளில் தான் வெளிச்ச வீடுகளை வைப்பார்களோ ?   மலுங்கலான இந்த படுக்கைப் பாறைகள் எப்படி உருபெற்றிருக்கும் ?  தெரியவில்லை .   அதற்கும் ஒரு புவியியல் வரலாறு  இருக்கும் .   அங்கு சூரிய அஸ்தமனத்தைப் பார்க்கிறதுக்கு சனம்  அள்ளுபடுகிறது . இதை  ஒட்டி சிறிய துறையும் இருக்கிறது . அவற்றில் மீன் பிடிக்கிறவர்களுடைய  படகுகள்  காணப்படுகின்றன . அவ்விடத்தில் இருந்த   இயற்கை உபாதை கழிக்கும்  கழிநீர் கழிப்பிடத்திற்கு  செல்கிறான்  . கீழே நீர் தெரிகிறது  .  அதற்கு முதல் நீல உப்பு சேர்க்கப்பட்டு வெளியேறுகிறது . இருந்தாலும் இப்படியேயா  கடலில் கொட்டுவது  ? .  

     சூராதி சூரர்களாக மலையுச்சிக்கு ஏறிய போது  சனம் எந்த வித சிரமுமின்றி அவ்விடத்திற்கு வீதியிலிருந்து  சரிவில்  சுலபமாக  வருகிற வழி இருக்கிறது  தெரிகிறது .  அந்தப் பாறையிலும்  பங்களா கவுஸ் போல  ஒர்  உணவகம்  கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது . அதில்  சூரிய அஸ்தமனத்தைப் பார்க்கிறது என்று   பெரிய  சமதள மரமேடை கிடக்கிறது . " இந்த வழி தெரியாமல்  முந்தியும்  சிரமப் பட்டு தான் வந்தோம் " என்கிறாள் பூமலர் . சூரியன் விடை பெறுவதற்கு நிறைய நேரம் இருந்தது . அதுவரையில் சுற்றி வர , கலங்கரை விளக்கம் தெரிய  பல கிளிகள் . எல்லாருமே போஸ் கொடுத்துக் கொண்டு நிற்க , கத்தரி வெருளியாக அவன் நிற்கிறான் . சூரியன் , சிவப்புப் பந்தாக அழகாக கடலினுள்   அமிழ்கிறான் . பலர் மெல்ல , மெல்ல  வீடியோ ... எடுத்துக்   கொண்டிருந்தார்கள்  . ஜெயந்தியின்  ஒரு  சின்ன ஆசை நிறைவேறுகிறது . மனிதருக்கு தான் எத்தனை  சின்ன , சின்ன ஆசைகள் .  அவனைக் கேட்டால் நீர்ப்பரப்பில் படகில் நின்று ஈழப்பாட்டு பாட வேண்டும் என்பான் . வீட்டிலே சொன்னால் அடிக்க வருவார்கள்  . ஆசையை   அடக்கு, அடக்கு .. !

     இருண்டிட வீதியை முளித்து  ,  முளித்துப் பார்த்து , பார்த்து  வாகன வெளிச்சத்தில்  ஓடி வீடு வந்தது  ஒரு சாதனை தான் . முளிகள் இரண்டும் வெளிய வந்து விட்டது .போங்கள் .
                                                                                                  
 ஆடி அம்மாவாசை

       பூமலருடன் படித்த சுந்தர் குடும்பம் , " ஆடி அம்மாவாசை தினத்தில் , உங்கள் சகோததர் குடும்பத்தையும் கூட்டி  வாருங்களன் " என அழைத்திருந்தது .அப்பாவை இழந்தவர் கடைப்பிடிக்கிற விரத நாள் . சைவ சமயத்தோடு தொடர்பு பட்டது . அம்மாவை இழந்தவர் சித்திரா பெளர்ணமி அன்று விரதம் இருக்கிறார்கள் . ஊரிலே ,  அம்மாட நாள் தெரியாது . அன்று  உறவினர்களை  ,நண்பர்களை அழைத்து விருந்தோம்பல் நடைபெறும் . இங்கே உள்ளவர்கள் பொட்லக்  பார்ட்டி போல ஒரு கறியோ , பலகாரமோ செய்து கொண்டு போய் ...எல்லா நிகழ்வுகளையும் கடை பிடிக்க முயல்கிறார்கள் . பூமலர் , ரைஸ் புடிங்கை ஜெயந்தி சொல்ல , சொல்லத் தயாரித்தாள் .
 
      அங்கு சென்றார்கள் .  ஒவ்வொருவரும் ஒன்றை செய்து கொண்டு வந்திருந்தார்கள் .  ஜீவி  , இரண்டு கறிகளை சமைத்து வந்தார் . மாங்காயைப் போட்டு ...என்னவோ சுப்பரானது . சுந்தர்  , தன் கையாலே சமைக்க ... பிடிவாதம் பிடித்து ஒரு நள மகராசனாகவே சமைத்திருக்கிறார் . தில்லை சமைத்தால் அவன் மட்டுமே சாப்பிட முடியும் . சமையல் என்பது ஒரு கலை . அது  பள்ளிப் பாடமாக இருபாலருக்கும்  சொல்லிக் கொடுக்கப் பட வேண்டிய ஒன்று . நாம் வீட்டிலேயும் கூட  உரிமைகளை இழந்திருக்கிறோம் .  இதனால் தான் ராஜாஜி குலக்கல்வி முறையைப் பற்றியும் சிந்தித்திருக்கிறார்  போல இருக்கிறது .  படைத்து விட்டு  வாழை இலையில் , அப்பளப் பொறியலுடன்  மரக்கறிச் சாப்பாடு அந்த மாதிரி இருந்தது . சிறிது நேரம் இளைப்பாறி விட்டு காலாற கடற்கரைப் பகுதியில் நடந்தார்கள் .

       வழியில் பழைய பெண்டிகோஸ் தேவாலயம் தென்பட  ஜீவி  " கிருஸ்தவத்தில் ஆறு பிரிவுகள் இருக்கிறது " என்று ஜெயந்திக்கு கூறினாள் . " பிரதானமாக இருப்பவை இரண்டு . மற்றவை உப பிரிவுகளாக இருக்கலாம் " என்று   தில்லை  கூற , " இல்லை  ,  எல்லாமே தனிப் பிரிவுகள் . எனக்கே பலதைத் தெரியாது.. "  என்று கூறி  சிரித்தாள் . " ஜீவி , தெரியாட்டியும் ...தேடி , தேடி அறிந்து கொள்கிற புத்திசாலி " என்று பூமலர் தெரிவித்திருந்தது நினைவில் வந்தது . இவன்  அறிந்ததை வைத்து அசை போடுறவன் , சிந்திப்பவன் . போற போக்கில் கிரகரிக்கிற ரகம் . முகத்தில் மீசையுடைய சிறிய மிருகம் ஒன்று நீர்மட்டத்திற்கு மேலே எட்டிப் பார்த்து நீந்திக் கொண்டிருந்தது . இலங்கையில் காணாதவைகளை எல்லாம் இங்கே காணலாம் .  " நீர்ச் சிங்கம் " என்றார் சுந்தர் . வோல்ரஸ் , டொல்பின்  
 , திமிங்கலம்  ...என சுவாசப்பையுடைய கடல் உருப்படிககள் எல்லாம் இருக்கின்றன . சுறா , பயங்கரவாதியாய் பார்க்கப் படுகிறது . இதற்குப் போய்  இந்த பெயரை வைக்கிறார்கள் .
 
      ' முதலை ' டைனோசாருக்கு முற்பட்டது  என்றால் நம்புவீர்களா ? . கடலில் என்னென்னவோ எல்லாம் இருக்கின்றன . இயற்கை ஓர் பேரதிசயம் . கரையிலிருந்து  நீரிற்குள் நீட்டப்பட்டு கட்டப்பட்ட பழுதடைந்த சில கொட்டேஜ்  வீடுகள்  இருந்தன . " நீரும்  நிலப்பரப்பாக கருதப்பட்டு மலிந்த விலைக்கு விற்கப்படுகின்றன " என்றார் சுந்தர் . " இங்கே  ,  அமெரிக்கர் பலர் எயர் பி. என் பி .. என்கிற  புதிய வாடகை முறையில் கொட்டேஜ்களில் , வீடுகளில்   இருந்து விட்டு அவற்றை  வாங்கியும் விட்டிருக்கிறார்கள் " என்கிறார் . நியூயோர்க்கிற்கும் நோவாகோர்ஸியாவிற்கும் கடல் வழியில் சொந்த படகுகளில் பயணிக்கிறார்கள் . அத்திலாந்திக்கடல் , புயல் பயம் ...பற்றி அக்கறைப்படுறதில்லை . ஒருவேளை  எல்லைச் சோதனைகள்   இல்லையோ ? .

       மீள திரும்பி அவர்களுடைய கொட்டேஜ் வீட்டிற்கு வந்திருந்தார்கள் . இவர்களுக்கருகில் பெரிய வெயர்கவுஸ் போன்ற வாடிக் கொட்டில் ஒன்று கை விடப்பட்டிருக்கிறது .  அந்த வீதியிலும் சிறிது  நடந்தார்கள் . வீட்டை வாங்கிய போது முள்செடிகள் என இவர் வளவை  வெட்டி தள்ளி  சுத்தப்படுத்தியிருக்கிறார் . அயலில் இருந்தவர் , " வெட்டாதே  இது காட்டு ரோசா செடி  " என தடுத்ததில் இன்று  பூத்து அழகாக இருக்கிறது . ஒரு அப்பிள் மரமும் காய்த்திருந்தது . பச்சைக்காய்களை பிடுங்கி கொறித்தார்கள் .  ஒரு பழைய கொட்டிலும் இருந்தது . " அதை ( அவருடைய )நண்பர் ஒரே நாளில் திருத்திக் கொடுத்தார் "  என்கிறார் .

       " நேற்று நீங்கள் சென்ற பெகிமுனை , அதோ ...வெளிச்சவீடு தெரிகிறதே , அது தான்  ! " என்று சுட்டிக் காட்டினார் . நீலக்கலரில் குட்டித் தோற்றத்தில் தெரிகிறது . தேனீரையும் குடித்து விட்டு அவருடைய அப்பாவின் ஆசியையும் பெற்றுக் கொண்டு திரும்பினார்கள் .

மகோன் 'பே'  போகிறார்கள்.  
 
      மகோன்பே' க்குப்  போய்  லுனன்பேர்க்கிற்கு போகப் போகிறார்கள். " இரண்டுமே யுனெஸ்கோவினால் குறிப்பிடப்படும்  பழைய துறைமுகங்கள்  " என்கிறாள் பூமலர் . பரவாயில்லை  . நம்ம குட்டித் தங்கச்சி பெரிய சுற்றுலா வழிகாட்டியாய் மாறி விட்டிருக்கிறாள் . ' லுனன் ' என்ற ஜேர்மன் சொல்லுக்கு அர்த்தம் தெரியவில்லை ." பேர்க்' என்றால் மலை என்று அர்த்தம் . ஜேர்மனியில் இருந்த உறவினர் பலபேர்கள்  இங்கே இருக்கிறார்கள் . அத்தியம்பேர் ( அக்காவின் கணவர் ) தான் கூறினார் . கலிபஸிற்கு சென்ற அதே லோக்கல் கைவேயில்  ( 14ம் இலக்கம்)  சென்று  , 103 மாகாண கைவேயில் ஏறி இம்முறை மேற்கு திசையை எடுத்து 5  , 6 வது இல் வெளியேறி அதே போல தெற்கு லோக்கல் வீதியை எடுக்க ,  வளைந்து , வளைந்து ஓடுகிறது . மலைப்பாங்கான நில அமைப்பு .    சிறுபிள்ளைக்கு சொல்லிக் கொடுக்கிறது போல , ' மலைகள் எல்லாம் தீவுகளில் நடுப்பகுதியில் இருப்பதில்லை ' . யாழ்ப்பாணத்தில் கூட கீரிமலை , திருவடி முழுதும் காலை  கிழிக்கும் கூர் கல்லாக  கடற்கரையில்  கிடக்கிறது . இந்தியாவின் நிலம் கடல்கோளலால் துண்டுபட   ஏற்பட்டது . அங்கே எரிமலை கிடையாது . இது எரிமலை  வெடித்து  ஏற்படுத்திய தீவு . ஆனால் எரிமலை ஒன்றும் கிட்டடியில் எங்குமே இல்லை . மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் ....இருந்தது எல்லாமே வெடித்து சம பூமியாகி போய் விட்டிருக்கிறது போல இருக்கிறது . ஆனால் ,  தென் அமெரிக்காவில் எரிமலைகள் கிடக்கின்றன . இருக்கிறதா ? .

       மகோன் பே ,சிறிய நகரம் . இங்கே வாகன தரிப்பிற்கு பணம் அறவிடுகிறார்கள் . கோவிட் ஏற்பட்டு மீள்கிற தளர்வால்  அற விடப்படவில்லை .  நிறுத்தி விட்டு அவ்விடத்து  இருக்கை  ஒன்றில் இருந்து தேனீருடன்  எள்ளுருண்டையை சாப்பிட்டார்கள் . ' மகோன் பே  இலே  தில்லையிற்கு    , வாகனங்கள் முன்பக்க  இலக்கத் தகடு  இல்லாது ஓடித்திரியிறது கண்ணில் படுகிறது . பின் இலக்கக்தகட்டில்  'நோவா'  குறிப்பிடப்பட்டிருக்கின்றது . பூமலரின் வாகனத்திற்கும்  கூட  கிடையாது . எங்கே  கவனித்தான்? .  இங்குள்ள வீடுகள்  பிரத்தியேகமான உள்ளே பழமைச் சாயல் கொண்ட பொருட்களின் பாவனைக் கொண்டவை  . வந்த முதல் நாளே அதை கவனித்திருக்கிறார்கள் .  வாழ்க்கைச் செலவு மிக  குறைந்த மாகாணம் . சிக்கனமாக அரசியலையும் வைத்திருக்கிறார்கள் . இலங்கையை நினைத்துப் பார்த்தான் . அங்கே மத்திய அரசு  இருக்கிறது . மாகாண அரசு இருக்கிறது . அதை விட அரச நிர்வாக அமைப்பு ஜி .எ  /  எ .ஜி .எ / ஜி .எஸ் ...என பெரிய கட்டமைப்பே கிடக்கிறது . அதுக்கு சிக்கனம் என்பது என்ன என்றே தெரியாது . புதிதாக தெரிவாகிற சிங்கள அரசியல்வாதிகள்  , ஈழத்தமிழர் மாகாண அரசின் உரிமைகளை பற்றி பேசினால் " பிரிவினை பேசுகிறார்கள் " என்கிறார்கள் . நகரக்காவலர்  பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் பிடித்து சிறையிலே வேறு அடைக்கிற அநாகரீகம் தொடர்கிறது . அதனால் தான்  பிச்சைக்கார நாடாகக் கிடக்கிறது புரிய  மனசு வலிக்கிறது .

     மற்றைய மாகாண  , அமெரிக்க வாகனங்களுக்கு இருபுறமும் இலக்கத் தகடுகள்   கிடக்கின்றன . " அழகி" பட்டத்தை நோவாவேயே தட்டிக் கொள்கிறது . இது பரவாய்யில்லையே ! இல்லாத போது தான்  வாகனங்களின் வடிவும்  தூக்கலாகத் தெரிகிறது . சொல்ல  , ஜெயந்தி , " உனக்கு ரொரொன்ரோவை விட மற்றறைய   இடத்திலிருக்கிற எல்லாமே அழகு தான் "என்று கேலி   பண்ணுகிறாள் . அவளுக்கு  இடங்களைப் பார்ப்பதில் விருப்பம் . கரை நகரத்தை வேடிக்கை பார்க்க  வீதியில் இறங்கி நடந்தார்கள் .  பழைய வீடுகள் .  சில உப்பரிகைகளுடன் கூடியவை . அந்தக் கால மர வேலைப்பாட்டை இன்று யார் செய்வார்கள் .   தூக்கலாகவேத் தெரிகின்றன . தூரத்தில் நிறுத்தி வைத்திருக்கிற படகுகளை பூமலர் காட்டி " இப்படித்  தள்ளி தான் நிறுத்தி   விடுகிறார்கள் .  கரைக்கு வர சிறிய மிதவைகளைப் பயன்படுத்துகிறார்கள் " என்றாள் . வீடு போன்ற கொட்டில் ஒன்றும் மிதந்து கொண்டிருந்தது .  அதன் குட்டி வாராண்டாவில் இருந்து மனிதர் ஹாய்யாக சுருட்டு புகைக்க விரும்புகிறார் போல இருக்கிறது . கரையில் ஏற்றப்பட்ட படகு ஒன்றையும் பார்த்தான் .

       சுக்கானில் வெட்டப்பட்ட மரச்சட்டம் போன்ற  சிறிய பகுதி தான் ஓட்டத்தை தீர்மானிக்கிறதா ? போலவே  இருக்கிறது . விமானங்களிலும் விரிந்த செட்டையில் இப்படி  ....சிறிய  பகுதிகள் இருப்பதைப் பார்த்திருக்கிறான் .  பறக்க அவை உதவுகின்றன போலும் . கப்பல் , விமானம் பற்றிய அறிவு எம்மவர்களுக்கு எவ்வளவு தூரம் இருக்கும் ? அறிவைக் கூட்ட சாதியும் தடையாய் இருக்கிறது

      கரையிலிருந்து கடலுக்கு செல்லும் ஒரு அகண்ட மரப்பாதைத் தளம் . பிறகு   இதனுடனே யே தொடர்பு பட்ட  பல  மைய மிதவைகள்  ,  இருபுறங்களும் நீட்டல்கள் , அவற்றில்  மிதவைகளை கொண்டு வந்து கட்டி விட்டு ,  பிடிக்கிறவையையும் இப்படி தான் கொண்டு  கரைக்கு  வருகிறார்களோ ? கடலைப்பார்த்து  நீரின் மேல் பாடியோ தளங்களைக் கொண்டிருக்கும் உணவகங்கள் .  அதில் ஒன்றில் நுழைந்து கடலுணவு போட்ட ( சவுடார்) சூப்புகளை எடுத்தார்கள் . கடலுணவு எப்பவும் சுவையானது தான்  .  சாப்பிட்ட  பிறகு வீதியில் இறங்கி மேலும் நடந்தார்கள் இரண்டொரு தேவாலயங்கள் பக்கத்திலும்  நின்று  " கிளிக் "  கள் .  சந்தியிலும் பூங்கா போன்ற அமைப்பு இருந்தது .  காட்டு ரோசாகள்  பூத்துக் கிடந்தன . அதிலிருந்தும் காட்சிகளோடு படம் பிடித்துக் கொண்டார்கள் .  கார் நிறுத்ததிற்கு வந்து ஏறி லுனன்பேர்க் நோக்கி விரைகிறார்கள் .

லுனன்பேர்க்

     " இதோ கிட்ட ...வருகிறது " என்றாள் பூமலர் . ஆனால் வீதி நீள , நீள ஓடிக் கொண்டிருந்தது . ஒரு மாதிரியாக துறைமுகத்தை அடைந்தார்கள் . வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு ( இங்கும் கட்டணம் இல்லை  ) வீதியிலிருந்த உணவகத்தில் ஏறி தேனீருடன் கேக்கையும் சாப்பிடுகிறார்கள் . வேடிக்கை பார்த்து  நடக்க பெரிய தேவாலயத்தின் உச்சி  ஒன்று தெரிகிறது உயரமான பகுதியில் இருக்கிறது . "  ஐயோ நான் வரவில்லை " என்றஜெயந்தி  மெல்ல  , மெல்ல நடந்து வருகிறாள் . ஏற்ற , இறக்கம்  அவளுக்கு காலை  நோக வைக்கும் .  அந்த ஏற்றம் தில்லையையே மூச்சிறைக்க வைத்தது . ஏன் , சாமிகளை மலையிலே கொண்டு போய்  வைக்கிறார்கள் . மலையிலே கட்டுவதே சிரமம் . தாமும் கஸ்டப்பட்டு மற்றவர்களையும் சிரமப்பட வைக்கிறார்கள் . ஒருவேளை மேலே இருந்து கீழே பார்க்கிற அழகிலே கிறங்கிப் போய் விட்டார்களோ ? . அவனுக்கு எந்த உயரமும் ஒ.கே . தான் . பூமலரும் அதைப் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை .

      தேவாலயத்தைக் கண்டு  விட்டு இறங்கி வார போதே படிக்கட்டுகளுடன் இலகு வழியும் வைத்திருக்கிறது தெரிய வர பத்திக் கொண்டு வருகிறது , அந்த நகரத்தின் வரைபடத்தை முதலில் பெற்றிருக்க வேண்டும் .எங்கே கிடைக்கும் ? .  தெரியவில்லை . வழி தானே தெரிந்து விட்டது . அதில் இருந்த இருக்கை ஒன்றில் இருந்து வேடிக்கை பார்த்தார்கள் . ஒரு பெரிய குடும்பம் சிறுவர் , சிறுமிகளின்  தமிழ்க்கலவைக்குரல்களுடன் இறங்கி  வந்து கொண்டிருந்தது .  காதிலே தேன் வந்து பாய்ந்தது போல இருந்தது .
                                                                        
     பாய்க்கப்பல்கள்  அகலமான ஆழமற்றக் கிடங்கைக் கொண்டது  . கல்லுக்குள் துறுத்திக் கொண்டிருக்கும்  பாறை கூர் , ஓரங்களை , பனிப்பாறைகளை கருத்தில் கொண்டு , அன்றைய மனிதனின் மேலான கண்டுபிடிப்பாக இருக்கவேண்டும் .  பாய்  காற்றில் வேகமாக ஓட்டியது ...ஆழக்கடலுக்குள்ளும்  இழுத்துச்  சென்றது , புயல்கள் , மேலும்   தள்ளிச் சென்று பல தீவுகளை , கடல் நிலங்களை கண்டறிய  வைத்திருக்கிறது .  பிறகு  , போர்க்கப்பலாக வடிவம் எடுத்ததிருக்கிறது  .  லுனன்பேர்க்கில்  ,  ஜேர்மன் சகோதரர்கள்  கப்பல்கட்டும் தொழிற்சாலை ஒன்றை   ஏற்படுத்தி பல பாய்க்கப்பல்களை கட்டியிருக்கிறார்கள்  .  பல பாய்க்கப்பல்கள் வெளியேறி இருக்கின்றன  .

     ஜேர்மனியரே கப்பல்களை கட்டுவதில்  சிறந்து விளங்கி இருக்கிறார்கள் போலவும் படுகிறது . ஆங்கிலேயர் சோழச் சுவடிகளை எரிக்கிற போது , ஜேர்மனியர் பொறுக்கி எடுத்து சோழ தொழிற்நுட்பங்களை  அறிந்து  பயன்பாட்டில் கொண்டு வந்திருக்கிறார்கள் போலவும் படுகிறது . நிலவளவையிலும் ...இவர்கள் சிறந்து விளங்கி இருக்கிறார்கள் . அது சோழர்களுடைய முறையாக கூட இருக்கலாம் என படுகிறது . ஆங்கிலேயர்  , ஒருமுறை லுனன்பேர்க்கில் சிறைக்கைதியாக வைத்திருந்த ஒர் ஜேர்மனியரை கப்பல் கட்டுவதில் ஈடுபடுத்தி  இருக்கிறார்கள் . முடிப்புக்கு முன்னால் அவரது தண்டனைக் காலம் முடிந்து விட்டது . நீதிமன்றம் அவரை ஜேர்மனிக்கே செல்லும்படி உத்தரவிட்டு விட்டது .  அவருக்கு  குறையில்  ...விட்டுச் செல்ல  விருப்பமில்லை . " கப்பலைக் கட்டி விட்டே போகிறேன் " என்று    கேட்டிருக்கிறார் . அனுமதி வழங்கப்படவில்லை . அவருக்கு  கோபம் ஏற்பட்டு விடுகிறது .  அன்று , நோவாகோர்ஸியாவில் சிறைக்கூடம் என்று  பெரிய மதில் சுவர்களுடன் இருக்கவில்லை . மரியாதைக்குரியவர்கள்  , திறமைசாலிகளுக்கு  அறைகள்  கொட்டேல் அறையில் இருப்பது போல  வசதி  செய்து வேறு  கொடுக்கப்பட்டிருக்கிறது .  துறைமுகப்பகுதியிலும்  , நகரத்திலும் திரியவும் அனுமதிக்கப்படுவது வழக்கம் .  " நீ கட்டுற கப்பலை ஆசை தீர பார்த்து விட்டுப் போ "  என்று விட்டு விட்டார்கள் . ஆங்கில நண்பருடன் லுனன்பேர்க் நகரத்தில் நடந்து கொண்டிருந்தார் . எப்படி குறை  வேலையை முடிக்க வேண்டும் என்று பல தடவைகள் அவருக்கு படம் போட்டு எல்லாம் விளங்கப்படுத்தி விட்டிருந்தார் . கவனரின் வீட்டிற்கு எதிரில் வந்தார்கள் .  அப்ப தான் அவருள் இருந்த நாகேஸ் வெளியே வந்து குதித்தான் . நண்பரைப் பார்த்து....  முகத்தில் ஒரு சிரிப்பு . வீதியில் இருந்த கல் ஒன்றை எடுத்தார் . கவனர் வீட்டு ஜன்னலை நோக்கி எறிந்து விட்டார் . கண்ணாடி உடைந்தது . நகரக்காவலர் வந்து பிடிக்க " நான் தான் எறிந்தேன் " எனக் கூற குற்றம் பதியப் பட்டது . கொல்லும் நோக்கத்துடன்  இல்லை என்பதால் அவருக்கு  நீதிமன்றம் சிலநாள்கள் சிறைவாசத்தை நீடித்தது . , கப்பலைக் கட்டி முடித்த போது  மேயர் வந்து கை குலுக்கி அவருக்கு பாராட்டுகளைத்  தெரிவித்தார்  .  கடலில் இறக்கி ஓடுவதையும் பார்த்து விட்டே சிதம்பரம்  சென்றார் . எப்படி  இருக்கிறது  இந்தக் கதை ? . இப்படி ... ஏதாவது  நடந்தால் தான் நம் ஈழப்பிரச்சனையும் தீரும் போல இருக்கிறது .
                                                                                                                                                
          அன்று ' மகோன் பே ' இலே  கப்பல் ஓட்டப்பந்தயம்  விமர்சிகையாக    நடைபெற்று   வந்தது  . போட்டிக்கு வந்த கப்பல்கள்   கலிபஸிலும் ,  லுனன்பேர்க்கேயிலும்  தரித்து நின்றன .  நீலமூக்கு என புகழப்படும்   பாய்மரக்கப்பல்  லுனன்பேர்க்கிலே கட்டப்பட்டது .  அக்கப்பலே  பந்தயத்தில்  சம்பியன் அடித்து கொண்டிருந்தது . கண்னூறு பட்டது போல  பந்தயமற்றக் காலத்தில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த போது  புயலில் சிக்குண்டு  கடலில்  தாழ்ண்டு போய் விட்டது . அவர்களுடைய இராசாத்தியை இழந்ததில் பெரும்  சோகத்தில் இருந்தார்கள் .  அதே மாதிரி  இன்னொரு கப்பலையும்   ( சிறிது  மேம்படுத்திக் )  கட்டி நீலமூக்கு இரண்டு என பெயரிட்டு    ஓட விடப்பட்டது . அதுவும் முதல் தடவை வென்றது . அவசரமாக கட்டியதாலோ  என்னவோ...அடுத்த பந்தயத்தில்  அமெரிக்க பாய்கப்பல்   வென்று விட்டது .   பெருமையை  அது  தங்க  வைக்கவில்லை . கப்பலுக்கும் கூட ராசி இருக்கலாம்  .  வெற்றி , தோல்விகள் மாறி , மாறி வரத் தொடங்கி விட்டன .  கனடிய பத்து சததிற்கு பின்னால்  முதல்  நீலமூக்கு ,  பாய்கள்  பட படக்க   பயணிக்கிறதை  நீங்கள் பார்க்கலாம் .

          கப்பல்கள் கட்டிற   போது பீரங்கி பொறுத்துற  ஏற்பாட்டை சேர்த்து  கட்டுவதை ஒரு விதியாகவும் கடை பிடிக்கப்பட்டிருக்கிறது போல இருக்கிறது .  பில்டிங் கோட் போல , கப்பல் கோட் . அதனால் , போர்க்காலத்தில் இலகுவாக அனைத்துமே போர்க்கப்பலாக மாற்றப்பட்டன . இல்லாத போது பீரங்கிகளைக் கழற்றி விட்டு வெறும் வர்த்தகக் கப்பல்களாக ஓடின .  இந்த புத்திசாலித்தனம் பல வெற்றிகளை அவர்களுக்கு  பெற்றுக் கொடுத்திருக்கிறது . அதனாலேயும்  நோவாகோர்ஸியாவை வெற்றி கொண்டிருக்கிறார்கள் .  உலோக நீராவிக்கப்பல் கண்டு பிடிக்கப்பட்ட பிறகு பாய்கள் மகிமையை   இழந்து விட்டன .  ஆனாலும் , இன்றும் பாய்களை வைத்து  கப்பல்களை செலுத்துவது அமெரிக்க , கனடிய  ஏரிகளில் நடைமுறையில் உள்ளன .  எரிபொருள் உயர்ந்து தொடர்ந்து பயமுறுத்துற போது  பாய்கள் தோள் கொடுக்கின்றன .  பழமையின் தேவை என்றும் இருந்து கொண்டே இருக்கிறது . முட்டாள்களால் உலகம் அழிந்து கொண்டிருந்தாலும் தமிழர் ,  சோழசுவடிகளை  தட்டிப் பார்த்து கப்பல்களை எல்லாம் கடலில் இறக்கி தாராளமாக விடலாம்  .  தமிழகம் கடல்புறாவையும்    கட்டி  கடலில் விட வேண்டும் . ஈழத்தமிழரும்   சாதியைத் தூக்கி கடலில் போட்டு விட்டு   கடலில் கண்டதையும் இறக்க வேண்டும் .  ....நம் படகுகளில் , கப்பல்களில் , வள்ளங்களில்  நெஞ்சங்களை நிமிர்த்திக் கொண்டு  நின்று  ஈழப்பாடல்கள் பாடி வரல் வேண்டும் .  

         கலிபஸ் துறைமுகத்தில் பழைய மீன் தொழிற்சாலை ஒன்றை மாற்றி கப்பல்களின் ஃபிசரி  மியூசியமாக்கி  இருக்கிறார்கள் .    திறந்திருந்தது  .  வழக்கமாக கட்டணம் இருக்கிறது . அன்று அனுமதி இலவசம் .உள்ளே சென்று பார்த்தார்கள் .  அங்கே  நீலமூக்கைப் பற்றி விபரமாக  அறியலாம் . பழங்குடியினர் மீன் பிடிப்பதிலிருந்து இன்று வரையிலான மீன் பிடிக்கும் முறைகளையும்  ...அறியலாம் . ஒருநாள் முழுதும் நின்று பார்க்க ...வேண்டிய  சமாச்சாரம் .
                           
       "  நீல மூக்கு  பாய்க்கப்பல் " ,   பார்வையிடுவதற்காக கரையில்  நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது  . மூன்று மணி வரையில் தான் பார்க்கும் நேரம் இருந்தது . திமிங்கலம் பார்வையிடும் டூரும்  மூன்று மணியோட முடிகிறது .  இவர்கள் தேவனைப் பார்த்து விட்டு  படிகளில் இறங்கி வந்த போது ,  நீல மூக்கை பார்ப்பதா   மியூசியத்தைப் பார்ப்பதா ? என்று  யோசித்துப் பார்த்திருந்தார்கள் .   

 கடைசி நாள்       

       " போட்ட உடுப்புகளை தோய்க்கலாமே " என்று பூமலர் சொல்ல ,  "  அங்கே   போய் தோய்ப்போம் " என்று விட்டு ஜெயந்தி எல்லாவற்றையும் சூட்கேசினுள் அடைகிறாள் . பிறகு நீண்ட நேரம் கதைத்துக் கொண்டிருந்தார்கள் .  நாளை , ரொரொன்ரோவிலே நிற்கப் போறார்கள் . பிறகு பழைய பல்லவி  தான் . இன்னம் கொஞ்ச நாள் நின்று விட்டுப் போகலாம் என்றிருக்கிறது .ரொரொன்ரோவில் இறங்கின போது பூமலரிடமிருந்து குறும் செய்தி ஒன்று வருகிறது  " திரும்பவும் தீவுக்கு வருக " . இனியொரு சந்தர்ப்பம் வருமா ? , பெருமூச்சு  வருகிறது .   


(  ஜெயமோகன் எழுதிய புல்வெளிதேசத்தை வாசித்த பிறகு , அப்படி  ஒரு பயணத் தொடரை   எழுதிப் பார்க்க வேண்டும்  என்று எண்ணம்  எழுந்தது  . அண்ணர் "  யோசிக்காமல்  எழுது   " என்றார் . .. எழுதுறது ஒரு  போராட்டமாகவே  இருந்தது . மரதன் ஓட்டம் போல ஓடி  ஒரு மாதிரி  கோட்டைக்  கடந்து விட்டேன். -  கடல்புத்திரன் - )   .

முற்றும்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.