நினைவுகளின் சுவட்டில் – (62)

வெங்கட் சாமிநாதன்உடையாளூரை விட்டு வேலை தேடி வெளியேறி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகியிருக்கும். இரண்டு வருடங்களில் ஏதும் உடையாளூரில் மாற்றங்கள் இல்லை. விடுமுறையில் வந்து மறுபடியும் நிலக்கோட்டை மாமாவை, பாட்டியை எல்லாம் பார்த்ததில் எனக்கு சந்தோஷமாக இருந்தது. என் தம்பி கிருஷ்ணன் நிலக்கோட்டையில் என் இடத்தை எடுத்துக் கொண்டிருந்தான். கற்பரக்ஷையின் வளர்ப்புத்தாயாரைப் பார்த்தது, ஷண்முகத்தை மீண்டும் சந்தித்தது எல்லாம் மனதுக்கு நிறைவாக இருந்தது. இதை எழுதும்போது நினைத்துக்கொள்கிறேன், ஷண்முகத்தை அதற்குப் பிறகு நான் பார்க்க நேரவே இல்லை. இப்;போது (2010 வருடக் கடைசியில்) ஷண்முகம் எங்கே இருக்கிறானோ, என்ன செய்கிறானோ, தெரியவில்லை. இவ்வளவு அன்னியோன்யமாக வும், பல விஷயங்களில், ஒத்த அக்கறையும் பார்வையும் கொண்டவர்களாக் இருந்த ஒரு நண்பனை பார்க்கவோ நட்பைத் தொடரவோ இல்லாது போகும் என்று அன்று  நினைக்கவில்லை. ஆனால் இப்போது அது பற்றி நினைக்கும் போது வருத்தமாகத் தான் இருக்கிறது. 

 நாற்பது வருட சில பழைய நட்புகளைத் திரும்பப் பெற்றிருக்கிறேன். அவ்வப்போது சில பத்து வருட இருபது வருட பழக்கங்கள் திரும்ப இணைந்து திரும்ப மறைந்தும் போயிருக்கின்றன. நட்பு முறிந்தல்ல. காலமும் இடமும் தான் பிரித்திருக்கின்றன. இப்பிரிவுகள் நிகழும்போது நாம் நினைத்துப் பார்க்காமல் நிகழ்ந்து விடுகின்றன. பின்னா இம்மாதிரி நினைவு  களை அசை போடும்போது அப்பிரிவுகள் வேதனையாகத் தான் இருக்கின்றன.

‘’அடிக்கடி வந்துண்டு போயிண்டு இருடா. வந்தா வரதுக்கு முன்னாலே ஒரு கார்டு போட்டு வரேன்னு சொல்லக் கத்துக்கோ. இப்படி திடீர்னு வந்து நிக்கறதை வழக்கமா வச்சுக்காதே.” என்று அம்மா எத்தனை தடவை சொல்லி யிருப்பாளோ தெரியாது. திரும்ப ஹிராகுட்டுக்கு கிளம்பும் போதும் சொன்னாள். “பணம் அனுப்ப மறந்துடாதே. கொஞ்சம் சேத்தும் வச்சுக்கோ” என்று திரும்பத் திரும்ப சொல்ல மறந்துவிடவில்லை. “சரி போறுமே, எத்தனை தடவை சொல்லுவே அதையே” என்று சிரித்துக்கொண்டே சொன்னார் அப்பா.

திரும்பும் போது சென்னையில் இரண்டு நாள் அத்திம்பேர் இருந்த இடத்தில் தங்கினேன். மாம்பலத்தில் ஒரு வீடு எடுத்திருந்தார். எதிர்த்தாற்போல் ஒரு தியேட்டர். மதுபாலா நடித்த ஒரு படம் ஓடிக்கொண்டிருந்தது. மதுபாலா அப்போது டாப் ஸ்டார். என்ன படம் என்று நினைவில் இல்லை. அத்திம்பேர் ப்ராட்வேயில் ஏதோ ஒரு கம்பெனியில் வேலை தேடிக்கொண்டுவிட்டார். சிறு வயதிலேயே அவரும் வேலை தேடி லாகூரே போனவராயிற்றே. லாகூரிலிருந்தும் முஸ்லீம்கள் கலவரம் தொடங்குவற்கு முன்னரே பாதுகாப்பாக குடும்பத்தோடு ஊருக்கு வந்தவராயிற்றே.
முதல் தடவையாக மாம்பலம், தி. நகர், ப்ராட்வே என்று அந்த இரண்டு நாட்களில்தான் சென்னையைச் சுற்ற ஆரம்பித்திருந் தேன். ப்ராட்வேயில் அவர் வேலை பார்த்துக்கொண்டிருந்த இடத்துக்குப் போனேன். “எப்படிடா வந்தே?” என்று கேட்டார். மாம்பலத்திலிருந்து மின்சார ரயில் ஏறி ஃபோர்ட்டில் இறங்கி நடந்து வந்தேன். என்றேன். “ஏண்டா மாம்பலத்தில் பஸ் ஒடறதைப் பாத்திருக்கே இல்லியா. இங்கேயும் ஹை கோர்ட் வாசல்லேயும் பஸ் ஓடறதே. இந்த பஸ்ஸெல்லாம் எதுக்கு ஒடறதுன்னு யோசிக்க மாட்டியா?” என்று கேட்டார். இரண்டு பக்கங்களிலும் நடையைக் குறைத்திருக்கலாமே என்ற எண்ணம் அவருக்கு.. எனக்கு சென்னையில் அது தான் இரண்டாவது நாள். இப்படியெல்லாம் சோதனை முயற்சிகளில் இறங்கத்தோன்ற வில்லை எனக்கு. சென்னையின்  பிரும்மாண்டத்தை மலைத்து கண்விரிக்காமல் பழகிக்கொள்வதற்கு இன்னம் காலம் தேவை ப்பட்டது.

அப்போதெல்லாம் தான் ரிஸர்வேஷன் என்கிற சமாசாரமே கிடையாதே. ரயில் கிளம்புவதற்கு சற்று முன் டிக்கட் வாங்கிக் கொள்ளலாம். கிடைத்த இடத்தில் உட்கார்ந்து கொள்ளலாம். அது ஒரு மாதிரி சௌகரியம். கல்கத்தா மெயிலில் தான் திரும்ப ஹிராகுட் போக டிக்கட் எடுத்தேன். சாமல்கோட் என்ற ஸ்டேஷனுக்கு மதியம் சாப்பாடு நேரத்துக்குப் போகும் இந்த மெயில். சாமல் கோட் வந்ததும் எல்லோரும் இறங்கி ஸ்டேஷனிலேயே இருந்த ஒரு சாப்பாட்டு ஹோட்டலுக்கு விரைவார்கள். பெரிய கூடம். ஐம்பது அறுபது பேர் கீழே இலைபோட்டு சாப்பாடு போடுவார்கள். நாலைந்து வரிசைகள் இருக்கும். அங்கு போய்ச் சேரும் சமயம் முதலில் வந்தவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தால். காத்திருக்கவேண்டும். அடுத்த பந்திக்கு. விஷயம் என்னவென்றால் அடுத்த பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டு திரும்ப ரயிலில் அவரவர் இடத்துக்கு வரும் வரை ரயில் காத்திருக்கும். அவசர அவசரமாகத்தான் எல்லாம் நடக்கும். இருப்பினும் காத்திருந்து சாப்பிட்டு வர நேரம் இருக்கும். இப்போது நினைக்கும்போது இதெல்லாம் எனக்கு வேடிக்கையாகத் தான் இருக்கிறது. எவ்வளவு தூரப் பிரயாணமானாலும் சாவகாச யுகம் தான் அது.

இப்போது தான் ஞாபகம் வருகிறது. கல்கத்தா மெயிலில் வந்ததால் கரக்பூர் இறங்கி, பம்பாய் மெயில் பிடித்து ஜார்ஸகுடா- சம்பல்பூர் மார்க்கமாகத்தான் ஹிராகுட் போனேன். வந்த ஒரு சில நாட்களில் திருமலை அய்யங்கார் புதிய சீஃப் எஞ்சினீயராக பதவி ஏற்றிருந்தார். ஒன்றும் வேலை நடக்கவில்லை என்று முதலில் ஆர்.பி. வசிஷ்ட்டை அகற்றியிருந்தார்கள், திருமலை அய்யங்கார் துங்கபத்ரா அணைக்கட்டு வேலை முடிந்ததும் அவரை இங்கு மாற்றியிருந்தார்கள். அவர் வந்து சேர்ந்ததும் அணைக்கட்டு வேலைகள் துரிதமாக நடக்கத் தொடங்கின. ஆரம்பித்த முதல் வேலை என்னவென்று எனக்கு நினைவில் இல்லை. ஆனால் நாங்கள் அனைவரும் இரவும் பகலுமாக குளிப்பதற்குத் தவிர வேறு எதற்கும் வீட்டுக்குப் போகாமல் அலுவலகத்திலேயே வேலையில் மும்முரமாக இருந்தோம். அது ஒரு புதிய அனுபவம். சுவாரஸ்யமாகவும் விளையாட்டாகவும் இருந்தது. அந்த வேலைப் பளுவை பளூவாகவோ, கஷ்டமாகவோ யாரும் உணரவில்லை.

இன்னுமொரு மிகவும்  சந்தோஷமாக அனுபவித்த விஷயம் அடிக்கடி சம்பல்பூருக்கு சினிமா பார்க்கப் போய்வருவது ஒரு வழக்கமாகி வந்தது. ஒரு வங்காளி படம் மிக நன்றாக நினைவில் இருக்கிறது. யாத்ரிக் (யாத்ரீகன்) என்றோ அல்லது மஹா  பரஸ்தானேர் பாதே (ஒரு தீர்த்த யாத்திரையின் வழியில்) என்றொ அந்தப் படத்துக்குப் பெயர். அப்போதும் சரி, இப்போது அதை நினைத்துப் பார்க்கும் போதும் மனம் சலனம் அடையத்தான் செய்கிறது. பெண்கள் கூட்டம் ஒன்று காசிக்குத் தான் என்று நினைக்கிறேன் யாத்திரை போகிறார்கள். ஒரே கிராமத்தவர். பெரும்பாலோர் விதவைகள் அல்லது வயதானவர்கள். அதில் ஒரிரு இளம் வயதுப் பெண்களும் இருக்கிறார்கள். வயதானவர்களாகவும் விதவைகளாகவும் இருந்த காரணத்தால் யாத்திரை சிரமம் தருவதாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் புண்ய யாத்திரை.சிரமப் பட்டாலும் அதை அதிகம் பாராட்டுவதில்லை. அவ்வப்போது வழியில் சாப்பிட வழி கேட்க, ஏதும் தகவல் விசாரிக்க என்று சிரமங்களை அவர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள். வழியில் அவர்களுக்கு விவேகானந்தர் போன்று காவி வர்ண தலைப்பாகையும் நீண்ட அங்கியும் அணிந்த ஒரு இளம் துறவியுடன் பழக்கம் ஏற்படுகிறது. அந்த இளம் துறவி இவர்களுக்கு அவ்வப்போது தன்னாலான உதவிகள் செய்கிறார். பெண்களுக்கு ஏதோ பேச்சுத் துணையாயிற்று. கூட்டத்தில் இருக்கும் இளம் பெண்களில் ஒருத்திக்கு அந்த இளம் துறவியிடம் ஒட்டுதலும் பாசமும் ஏற்படுகிறது. ஏதோ காரணம் வைத்துக்கொண்டு அவள் துறவியிடம் நெருங்கிப் பழக வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்கிறாள். யாருக்கும்  சந்தேகம் ஏற்படாத வகையில் அதுஅந்தக் கூட்டத்திற்கு ஏதும் உதவி தேவையென அந்தத் துறவியிடம் போய்ச் சொல்லும் முகாந்திரம் அவளுக்குக் கிடைக்கிறது. துறவிக்கும் அவர்கள் அவ்வப்போது தங்கள் உணவைப் பகிர்ந்து கொள்ளும் முகமாகவும் புண்ய யாத்திரையாயிற்றே துறவி தரும் உபதேசங்களை, புண்ய கதைகளைக் கேட்பதாகவும் அவர்கள் நெருக்கம் யாத்திரையில் தொடர்கிறது. அந்தத் துறவி எப்போதும் போல எந்த பாதிப்பும் இல்லாது, இவர்கள் நெருக்கத்தால், இளம் பெண் தன்னிடம் ஏக்கம் கொண்டிருப்பதையும் அறியாதவராகவே இருக்கிறார்.

யாத்திரை முடிந்து திரும்புகிறார்கள். ரயில் பிரயாணத்திலும் அவர்கள் ஒன்றாகவே பயணம் செய்கிறார்கள். பாசம் வசப்பட்ட அந்த இளம் பெண் தன் விருப்பத்தைத் தெரிவிக்கவும் முடியாது கூட்டத்தில் இருக்கும் மற்றவர்கள் தன்னைச் சந்தேகிக்கவும் இடம் தவறாது தன்னுள்ளேயே புழுங்கித் தவிக்கிறாள். மேலும் அவர் துறவி. எல்லாம் தன் காதலுக்கு எதிராக இருந்த போதிலும் அதை அவளால் மறக்கவும் முடியவில்லை. அதை நினைத்து உருகுவதிலும் ஒரு சந்தோஷம் இருக்கிறது தெரிகிறது. 

கடைசிக் காட்சியில் ரயில் வண்டியில் இரவுப் பிரயாணம். எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்க அவளால் தூங்க இயலவில்லை. தூங்கிக் கொண்டிருக்கும் துறவியைப் பார்த்துக் கொண்டே இரவு கழிந்து கொண்டிருக்கிறது. அவள் அறியாது கண்ணயர்கிறாள் உட்கார்ந்தவாறே. அவர்கள் எல்லாம் இறங்கும் ஸ்டேஷன் வந்துவிட்டது. இன்னும் பொழுது புலரவில்லை. எல்லோரும் இறங்குகிறார்கள். இறங்கும் போது இவளையும் எழுப்பிவிடுகிறார்கள். விழித்துக்கொண்ட அவள் துறவியைப் பிரியும் நேரம் வந்துவிட்டது தெரிகிறது. துறவி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார். இவளுக்கு அவரிடம் ஒரு வார்த்தை சொல்லிக்கொண்டாவது போகவேண்டும் என்று ஒரு துடிப்பு. அவரைத் தொட்டு எழுப்பவும் முடியவில்லை. மகராஜ் என்றோ ஸ்வாமிஜி என்றோ மெல்ல சன்னமாக கூப்பிட்டு எழுப்பப் பார்க்கிறாள். அவர் எழுகிறவராக இல்லை. கீழேயிருந்து, வாயேம்மா, அங்கே என்ன பண்றே, வண்டி கிளம்பிடும்” என்று திருபத் திரும்ப சத்தமாகக் கூப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். துறவி எழுந்திருக்க வில்லை. வண்டி கிளம்பிவிடும். எவ்வளவு நேரம் தான் காத்திருக்கமுடியும். ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் அவர் முகத்தை, ஏக்கத்தோடு பார்த்த வாறே அவள் இறங்குகிறாள். வண்டியும் கிளம்புகிறது. உள்ளிருந்து குமுறிக் குமுறி வரும் துக்கத்தை அவள் முகம் வெளிக்காட்டாதிருக்க தலையைக் குனிந்து கொண்டே அவர்களைத் தொடர்ந்து செல்கிறாள்.

இது 1951-ல் சம்பல்பூரில் பார்த்த வங்காள் மொழிப் படம். இளம் பெண்ணின் சொல்லவும் முடியாத, அடக்கவும் முடியாது உள்ளுக்குள்ளேயே புழுங்கும் காதல உணர்வுகளை ஒரு தலையாகவே எழுந்து மடிவதை இதை விட குரல் எழுப்பாது ஒரு கவிதை போலச் சொல்லும் ஒரு படத்தை எப்படி மறக்க முடியும்?.

பாட்டு இல்லை. டான்ஸ் இல்லை. காதல்மொழி பேசும் வசனங்கள் இல்லை. அழுகை இல்லை. கதறல் இல்லை. சாதாரண அன்றாட பேச்சைத் தவிர அதை மீறிய காட்சியோ பரிமாறலோ எதுவும் இல்லை. கண்கள் தான் அந்த இளம் பெண்ணின் உள்ளே நடக்கும் நாடகத்தைச் சொல்லும். இந்த மாதிரியான ஒரு படம் தமிழ் சினிமாவின் சரித்திரத்திலேயே இது வரை சாத்தியமாகவும் இல்லை. சாத்தியமாகும் என்ற நம்பிக்கையும் இல்லை.

1951-ல் ஒரு மஹா ப்ரஸ்தானேர் பாதேயைத் தந்த வங்க சினிமாவால், அது அமைத்துக் கொடுத்திருந்த பாதையில் தான் பின்னர் இரண்டு மூன்று வருடங்களில் ஒரு சத்யஜித் ரே அதன் பின்னர் ஒரு ம்ருணால் சென் தோன்ற முடிந்திருக்கிறது.


நினைவுகளின் சுவட்டில் – 63

வெங்கட் சாமிநாதன்இப்போது அந்த நாட்களை நினைத்துப் பார்க்கும்போது, ஹிராகுட் அணைக்கட்டுத் திட்டத்தில் வேலை பார்த்த நாட்கள், முதலில் ஹீராகுட்டில் ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டுகளும் பின்னர் மஹாநதிக்கு எதிர்க் கரையில் கட்டப்பட்டு வந்த  புர்லா என்ற புதிய காம்பில் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டு காலமும் எனது உலகம் விரிந்து கொண்டே போனது தெரிகிறது .அந்த நாட்களின் அனுபவங்கள் ஒவ்வொன்றும் எனக்கு புதியனவாகவும் நினைத்துப் பார்க்க மிகவும் சந்தோஷம் தருவதாகவும் இருந்தது தெரிகிறது. ஒரு சில அனுபவங்கள் ஹிராகுட்டிலா அல்லது புர்லாவிலா என்பது நினைவில் இல்லை. அந்தக் குழம்பும் நாட்கள் ஹிராகுட்டின் கடைசி மாதங்கள் அல்லது புர்லாவில் குடியேறிய ஆரம்ப மாதங்களைச் சேர்ந்தனவாக இருக்க வேண்டும். என்னவாக இருந்தால் என்ன? புர்லாவிலோ அல்லது ஹிராகுட்டிலோ எதுவாக இருந்தால் என்ன தான். ஆனாலும் முடிந்த வரை நினைவுகள் இருக்கும் வரை தெளிவாகச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். (1952 ஆரம்ப மாதங்களில் நடந்தவற்றை இப்போது 60 வருடங்களுக்குப் பிறகு நினைவு கூர்வதென்றால் இம்மாதிரி மயக்கங்கள் இருக்கத் தான் செய்யும். நாட்குறிப்புகள் பற்றிய சிந்தனை பின்னால் புர்லா போனபிரகு எழுந்தது தான். 1953-ல் என்று நினைக்கிறேன். நாட்குறிப்புகள் தினமும் எழுதுவது என்று ஆரம்பித்து அதை வீட்டில் இருந்தவர் படித்து அது ஒரு சங்கடத்தில் ஆழ்த்தியதும் (சங்கடத்தில் ஆழ்ந்தது நானா அவரா, இல்லை இருவருமா என்பதை நான் பின்னர் எழுதும் போது படிப்பவர் தீர்மானத்துக்கு விட்டு விட வேண்டிய விஷயம் அது. ஒரு சில மாதங்களுக்குப் பின் அதைக் கைவிட்டேன். அப்போது கைவிட்டது தான். பின்னர் தினக்குறிப்பு எழுதுவது என்ற எண்ணமே எழவில்லை. அது பற்றி பின்னர் அந்த சம்பவத்தை எழுதும்போது சொல்கிறேன்.

எங்கள் அலுவலகம் புர்லாவுக்கு மாறினாலும், எங்களுக்கெல்லாம் வீடு கொடுக்கப்படும் வரையில் நாங்கள் ஹிராகுட்டிலேயே இருந்தோம். தினமும்  அலுவலகம் போய் வருவதற்கான போக்குவரத்துக்கான ஏற்பாடுகளை அலுவலகம் செய்திருந்தது.  அதுவும் ஒரு விதத்தில் சௌகரியமாகத் தான் இருந்தது. ஹிராகுட்டில் பாலக்காடு ஐயர் மெஸ் இருந்தது. அவருக்குத் தான் என்ன செய்வதென்று தெரியவில்லை. ஹிராகுட்டில் இருந்த வாடிக்கை குறைந்தது. ஆனாலும், புதிய இடத்தில் எவ்வளவுபேர் சாப்பிட வருவார்கள் கட்டுபிடியாகுமா தெரியவில்லை. மேலும் ஊரிலிருந்து தன் மருமகனை அழைத்து வந்து அவனுக்கு வேலை வாங்கிக் கொடுத்துவிட்டால் அவன் பெயரில் ஒரு வீடும் கிடைக்கும். அதில் தன் மெஸ்ஸையும் நடத்தலாம். வீட்டு வாடகை ஐந்து ரூபாய் தான். சௌகரியமாக இருக்கும். ஆனால் அதற்குக் காத்திருக்க வேண்டும்.
ஒரு மாத காலத்தில் எனக்கும் ஒரு வீடு கிடைத்தது. நான் புர்லாவுக்கு வந்து சேர்ந்தேன். என்னோடு சிவராம கிருஷ்ணன் என்று என் வயதுப் பையனும், அவனுக்கும் எனக்குமாகத் தான் அந்த வீடு கொடுக்கப்பட்டது. ஆளுக்கு இரண்டரை ரூபாயாக வாடகையைப் பகிர்ந்து கொள்ளலாம்.  பின் போகப் போக, என் வீட்டிற்கு நிறைய நண்பர்கள் வந்து சேர்ந்து கொண்டார்கள். முதலில் வந்து சேர்ந்தது கற்பரக்ஷையும் அவளது கணவரும் தான். எஸ்.என்.ராஜா தான் சொல்லி அனுப்பினார். அவருக்கு வேலை ஹிராகுட்டில் தான் என்றாலும், வீடு கிடைக்கவில்லை.. என்னிடம் எந்த தொந்திரவும் இல்லாமல் அவருக்கு வீடு கிடைக்கும் வரையில் இருந்து கொள்ளலாம் என்ற அவர் நினைத்தார். கற்ப ரக்ஷையின் கணவருடன் எனக்கு முன்னரே ஹிராகுட்டில் பரிச்சயம் இருந்தது. ஏதோ ஒரு சமயம் என்னிடமிருந்து அவசரத் தேவை. சம்பளம் வந்ததும் தந்துவிடுகிறேன் என்று சொல்லி ரூபாய் ஐந்து கடன் வாங்கிச் சென்றவர். சம்பளம் கிடைத்ததும் ஏதோ தீயில் நிற்பவரைப் போல ஓடோடி வந்து சாமிநாதன், இப்போதான் சம்பளம் கிடைத்தது, முதலில் உங்களுக்குக் கொடுத்தால் தான் நிம்மதி என்று சொல்லிக் கொடுத்தபோது அவருக்கு மூச்சு இறைத்தது. ஏன் இப்படி, நான் என்ன காபூலிக்காரனா? இப்பவும் அவசரமில்லை, மெதுவாகக் கொடுங்கள், கொடுக்காவிட்டாலும் ஒன்றும் கெட்டு விடவில்லை என்று சொல்லி அவரை ஆசுவாசப் படுத்தினேன். ‘”சே அது மகா தப்பு. சொன்ன வாக்கைக் காப்பாத்தணும்” என்றார். “சரி, அதுக்காக இப்படியா காப்பாத்தணும்” என்றேன். அவர் என் வீட்டில் இருந்த வரை சந்தோஷமாகத் தான் இருந்தது. கற்பரக்ஷையும் என்னை தம்பி மாதிரி அதட்டியும், கேலி செய்தும், சில சமயம் வாத்சல்யத்துடனும் பேசிகொண்டு நாட்கள் கழிந்தன. ஒரு சின்ன குழந்தையும் ஒரு வயசிருக்குமோ என்னவோ அவர்களுக்கு.

ஒரு நாள் நான் சம்பல்பூரில் சினிமா பார்க்கவோ எதற்கோ  சுற்றி அலைந்து விட்டு வீட்டுக்கு இரவு 11.30- மணிக்குத் திரும்பினால், வீடு சோக மயமாகக் கிடந்தது. ராஜா வாசலில் உட்கார்ந்திருந்தார். குழந்தை இறந்து விட்டது என்றார். காலையில் அது ஏதும் நோய்வாய்ப்பட்டிருந்ததாகக் கூட இல்லை. பின் எப்படி திடீரென்று? அதிர்ச்சியாக இருந்தது.

முதல் குழந்தை. ஒரு வயதுக் குழந்தை. அவர்களால் அந்த இழப்பைத் தாங்க முடியவில்லை. குழந்தையை அடக்கம் செய்த மறு நாளே,  “கோபித்துக் கொள்ளாதீர்கள். இனி இங்கு இந்த வீட்டில் இருக்க முடியாது. குழந்தை ஞாபகமாகவே இருக்கும்” என்று சொல்லி வீட்டைக் காலி செய்து போய்விட்டார்கள். எங்கு போனார்கள் என்று தெரியவில்லை. பிறகு ஒரு நாள் ராஜாதான் “இங்கு இருக்கப் பிடிக்காமல் ஊருக்கே போய்விட்டார்கள். எங்கே இருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்று தகவல் ஏதும் கிடையாது என்று சொன்னார். அதன் பிறகு நான் கற்பரக்ஷை யைப் பார்க்கவில்லை. வருடங்கள் 60 உருண்டோடி விட்டன.

அதன்  பின் புதிது புதிதாக வேலைக்கு வந்து சேர்பவர்கள் எனக்கு அறை நண்பர்களாகவும் ஆவார்கள். ஆபீஸிலேயே தான் அவர்களுடன் முதல் சந்திப்பு நிகழும். அவர்களுக்கு வீடு கிடைக்கும் வரை என்னுடன் தங்கலாம் என்று அழைத்து வருவேன். சிலரை ஹிராகுட்டிலிருந்து ராஜா அனுப்பி வைப்பார். ஆர். சுப்பிரமணியன் என்று ஒருவன். என்னை விட இரண்டு மூன்று வயது மூத்தவன். பின் ஜே. தேவசகாயம் என்று ஒருவர். திருநெல்வேலிக் காரர். கிறிஸ்தவர். இவரும் என்னை விட ஒன்றிரண்டு வயது மூத்தவர். அவருக்கு ஊர் நாஸரத் என்று சொன்னார். நாஸரத் திருநெல்வேலியிலும் இருப்பது எனக்களுக்கு ஆச்சரியம் அளித்த ஒரு புது விஷயம். அது போல அவருடைய திருநெல்வேலி தமிழும் எங்களுக்கு கேட்க தமாஷாக இருந்தது. அவருடைய பேச்சில் ‘எளவு, வெளங்காத,” போன்ற சொற்கள் நிறைய வந்து விழும். ஒரிஸ்ஸாவில் ஹிராகுட்டில் எங்களுக்கு திருநெல்வேலித் தமிழ் முதன் முறையாக அறிமுகமாவது வேடிக்கையாகத் தான் இருந்தது. கோபால கிருஷ்ணன் என்று ஒரு நண்பர். தான் பாட்டு எல்லாம் எழுதுவதாகச் சொன்னார். எங்கே ஒரு பாட்டு பாடுங்கள் என்று கேட்டோம். அப்போது தான் அவர் எங்கள் அறியாமையைக் கண்டு வியந்தார் என்று சொல்ல வேண்டும். “நான் சொல்வது கவிதை எழுதுவதை.” என்று ஐந்தாறு கவிதைப் புத்தகங்களை எடுத்து எங்கள் முன் போட்டு தான் எழுதிய ஒரு கவிதை ஒரு புத்தகத்தில் அச்சாகியிருப் பதைக் காட்டினார். எங்கள் ரூமில் ஒரு கவிஞரும் எங்களுக்கு நண்பராக வந்து சேர்ந்து இருக்கிறார் என்று எங்களுக்கு ரொம்பவும் பெருமையாக இருந்தது. ஒரு முறை அவருக்கு தபாலில் ஒரு புத்தகம் வந்தது. பிரித்துப் பார்த்தால் அது லா.ச.ராமாமிருதத்தின் முதல் சிறுகதைத் தொகுப்பு. பெயர் என்னவென்று நினைவில் இல்லை. லா.ச.ராமாமிதம் என்று அதில்தான் எழுதியிருந்த முன்னுரைக்கு அவரே கையெழுத்து இட்டிருந்தார் என்பதும் அந்த முதல் பதிப்பின் சிறப்பு. “எனக்குத் தெரியும்யா. நான் படிச்சிருக்கேன். எனக்கு ரொம்பப் பிடித்த ஆளுய்யா இவர்” அமுத சுரபியில் வரும். என்று அறையில் இருந்தவர்களிடம் எல்லாம் சொன்னேன். எனக்குத் தெரியாமல் போயிற்றே என்ற வருத்தம் இருந்தாலும், கோபாலகிருஷ்ணன் என்னும் கவிஞர் அந்தஸ்துக்கு நானும் அவர்கள் கண்களில் உயர்ந்து விட்டதாகத் தோன்றியது.

அப்போது நான் கலைமகள் பத்திரிகைக்கு சந்தா கட்டி தபாலில் வரவழைத்துக் கொண்டிருந்தேன். அதில் ந. பிச்சமூர்த்தி, தி. ஜானகி ராமன், சி.சு.செல்லப்பா லா.ச.ராமாமிருதமெல்லாம் எழுதிக் கொண்டிருந்தனர். இரட்டைக்கதைகள் என்ற வரிசையில் முதன் முதலாக தி.ஜானகி ராமனும், லா.ச.ராமாமிருதமும் கொட்டுமேளம் என்ற தலைப்பில் எழுதியிருந்தார்கள்.

தேவசகாயமும் பத்திரிகைகள் படிப்பதில் ஆர்வம் காட்டுவார். தான். ஆனால் அவர் விருப்பங்களே தனி ரகமாக இருக்கும். அவரது விமரிசங்களும் தனி ரகம் தான். “அட என்ன கதைங்க அது. கத எடுத்த உடனே கல்யாணமானவங்கன்னு சொல்லிப் போடடான்.. பொறவு என்ன எளவுக்கு  அதைப் போட்டு படிச்சிக்கிட்டு?. வெளங்கவா செய்யும்?” என்பார்  எங்களுக்கு சிரிப்பா இருக்கும். அவரும் சிரிப்பார். அவர் திருநெல்வேலித் தமிழும் குஷியாக இருக்கும். அவர் விமரிசனமும் குஷ்யாக இருக்கும்.

திருநெல்வேலியிலிருந்தே சாந்தி என்று இன்னொரு பத்திரிகை வெளிவரத்தொடங்கியது. சிதம்பர ரகுநாதன் அதன் ஆசிரியர். சின்ன பத்திரிகை. நாலணா என்று நினைவு. நான் ஒவ்வொரு மாதமும் நாலணா ஸ்டாம்பு வைத்து கடிதமும் அனுப்பி சாந்தி பத்திரிகை வரவழைக்க ஆரம்பித்தேன். புதிய பத்திரிகை, என்னவா இருக்குமோ என்ற சந்தேகம் தீர ஒன்றிரண்டு இதழ்கள் பார்த்துப் பின் வருடத்திற்குச் சந்தா அனுப்பலாம் என்ற நினைப்பில். இரண்டாவது மாதம் ரகுநாதனிடமிருந்து கடிதம் வந்தது. “எதற்கு ஒவ்வொரு மாதமும் இப்படி ஸ்டாம்ப் அனுப்புகிறீகள்? ஒரு வருட சந்தா அனுப்புவது சுலபமாக இருக்குமே என்று எழுதியிருந்தார். அதற்கும் இரண்டு இதழ்கள் பார்த்த எனக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. அந்த இரண்டு இதழ்களுக்குள் பல விஷயங்கள் எனக்கு அது ஒரு புதிய பார்வை கொண்ட பத்திரிகையாகத் தெரிந்து விட்டது.. கல்கியின் எழுத்துக்கள் பற்றி அதன் ஜனரஞ்சகம், பெரிது படுத்தப்பட்ட சரித்திரப் பெருமைகள், ஆங்கில நாவல்களையும் கதைகளையும் காப்பி அடிப்பது போன்ற பல விமரிசனங்களை  அதில் படித்ததில் எனக்கு மிகுந்த உற்சாகம். எனக்கு கல்கி காப்பி அடிப்பது பற்றியெல்லாம் தெரியாது. தமிழ் சரித்திரத்தை வைத்துக்கொண்டு வீண் பெருமை பேசுகிற குற்றச்சாட்டு பற்றியும் எனக்கு எதுவும் குதெரியாது. இந்த மாதிரி கருத்துக்களை நான் ரகுநாதனிடம் தான் முதன் முதலாகப் படிக்கிறேன். ஆனால் கல்கி எழுத்துக்கள் எனக்கு சுவாரஸ்யமாக இருந்ததே ஒழிய தி.ஜானகிராமன், செல்லப்பா, லா.ச.ராமாமிருதம் போன்றோர் எழுத்துக்களைப் படித்துவிட்ட பிறகு, கல்கி எழுத்துக்கள் ஒரே மாதிரியாக, வெகு சாதாரண எழுத்துக்களாகத் தோன்றின.  ஆனால் அதை யாரிடமும் நான் சொன்னதில்லை. ரகுநாதனைப் படித்த பிறகு இதெல்லாம் வெளீலே சொல்லலாம். இந்த மாதிரியான கருத்துக்கள் எனக்கு மாத்திரம் இல்லை. ரகுநாதனுக்கு இருப்பது எனக்கு வெளியில் சொல்லும் தைரியத்தையும் கொடுத்தது. ‘அந்த சாந்தி முதல் இரண்டு இதழ்களில் ‘தண்ணீர் என்ற தலைப்பில் சுந்தர ராமசாமி என்பவர் எழுதிய கதை வெளியாகியிருந்தது. அடுத்த இதழில் தி.ஜானகிராமனின்  கடிதம் எழுதியிருந்தார். “சுந்தர ராமசாமி உங்கள் டிஸ்கவரி போலிருக்கிறது.” என்று எழுதியிருந்தது எனக்கு நல்ல நினைவு இருக்கிறது. அதற்கும் மேல தொடர்ந்து அதைப் பாராட்டி என்ன எழுதியிருந்தார் என்பது நினைவில் இல்லை. பாராட்டாக இருந்தது என்பது மாத்திரம் நிச்சயம். ஒரு புதிய நல்ல எழுத்தை இனம் கண்டு அதைப்  பாராட்டவும்  செய்திருக்கும் தி.ஜ.வுக்கு எவ்வளவு நல்ல மனசு, என்று பின் வரும் நாட்களில் இது பற்றி நினைத்துக் கொள்வேன்.  . 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.